“சாப்பிட்ட உடனே குளிச்சா செமிக்காது மா. அப்புறம் குளிக்கிறேன். இந்தா என் போனை சார்ஜ்ல போட்டுரு”, என்று சொன்னவள் சோபாவில் படுத்த படியே காலாட்டிக் கொண்டு டிவி பார்க்க ஆரம்பித்தாள்.
அன்று மாலை சரவணன் டீ குடிப்பதற்காக வீட்டுக்கு வரும் வரை ஜானகி குளிக்க வில்லை என்பது குறிப்பிட பட வேண்டிய விஷயம். அவளை அவர் முறைத்துப் பார்க்க “சாயங்காலம் குளிச்சா தான் பா பிரசா இருக்கும்”, என்று சொல்லி அவருக்கு டென்ஷன் கொடுத்து விட்டே குளிக்க சென்றாள் ஜானகி.
********
“இவ்வளவு கொஞ்சமா சாப்பிட்டா எப்படி கண்ணு? இன்னும் கொஞ்சம் வச்சிக்கோ. கொரிச்சிட்டு இருக்காத. இந்தா இன்னொரு பீஸ் கரி வச்சிக்கோ”, என்று சொல்லி தன்னுடைய மகனுக்கு ஆவலாக பரிமாறிக் கொண்டிருந்தாள் ஜெயா.
மீன், முட்டை, சிக்கன், மட்டன் என்று குவிந்திருக்க ஒவ்வொன்றையும் ஆவலாக ஒரு வெட்டு வெட்டிக் கொண்டிருந்தான் ஸ்ரீராம்.
“அம்மா போதும் மா, இப்படி தின்னா என்னோட சிக்ஸ் பேக்ஸ் என்ன ஆகுறது?”, என்று கேட்ட ஸ்ரீராம் ஜெயா அந்த கரியை எடுக்கப் போகவும் “சரி சரி வச்சிட்ட, அதனால சாப்பிடுறேன். திருப்பி எல்லாம் எடுக்காத”, என்று சொல்லி அவள் வைத்த கடைசி துண்டையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அவனையே முறைத்து பார்த்த படி அமர்ந்திருந்தார் அவனுடைய தந்தை ரகு. தந்தையின் முறைப்பைக் கண்டாலும் அவரை அவன் கண்டு கொள்ளவே இல்லை.
“நீ எவ்வளவு சாப்பிட்டாலும் உனக்கு ஒண்ணும் ஆகாது தங்கம். நீ அப்படியே உன் தாத்தா மாதிரி”, என்று சொன்ன அவனது பாட்டி அம்பிகா ஜெயா புறம் திரும்பி “மருமகளே, இன்னொரு முட்டையை பேரனுக்கு எடுத்து வை”, என்று சொல்லிக் கொண்டே அவன் தலையை வாஞ்சையாக தடவி விட்டார்.
“போதும் அன்பு, என்னால இதுக்கு மேல முடியாது. வயிறு புல்”, என்றான் ஸ்ரீராம்.
“டேய் அம்மாவை அன்புன்னு சொல்லாத, பாட்டி இல்லைன்னா அப்பத்தான்னு சொல்லிப் பழகு”, என்று அவனை அரட்டினார் ரகு.
“போடா, என் பேரன் என்னை அப்படியே கூப்பிடட்டும். அவன் கூப்பிடுறது எனக்கு உங்க அப்பாறு கூப்பிட்ட மாதிரியே இருக்கு தெரியுமா?”, என்று கண்களில் கனவுடன் அம்பிகா மகனைக் கடிய ஸ்ரீராம் தன்னுடைய தந்தையைப் பார்த்து கண்ணடித்தான். அவனை கொலை வெறியோடு முறைத்தார் ரகு.,
“என்னங்க பையனை வெறிச்சு பாக்குறீங்க? கண்ணு வைக்காதீங்க”, என்று ஜெயா வேறு ரகுவை கடுப்படிக்க “வாயை மூடிட்டு போ டி. என் மூத்த பிள்ளைங்க ரெண்டு பேரும் எவ்வளவு பொறுப்பா இருக்காங்க. ஆனா இவனும் இருக்கானே தறுதலை. என் பேரைக் கெடுக்கன்னே வந்துருக்கு. இதுல ரெண்டு பேரும் சேந்து அவனுக்கு ஊட்டி விடாத குறையா தாங்குறீங்க? இதைப் பாத்து எனக்கு வயிறு எரியுது”, என்று கத்தினார் ரகு.
“இதுக்கு தான் குழம்பு அதிகமாக சாப்பிடாதீங்கன்னு சொன்னேன். காரமா இருந்தா அந்த தயிரை ஊத்திக்கோங்க மாமா”, என்று ஜெயா சொல்ல மனைவியை தீ பார்வை பார்த்தார் ரகு.
அம்மாவும் பாட்டியும் சேர்ந்து அப்பாவை ஒரு வழி செய்து கொண்டிருப்பதை கண்டு ஸ்ரீராம் முகத்தில் புன்னகை உறைந்தே இருந்தது.
ரகுவோ அவனை தீப் பார்வை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.
தூத்துக்குடியில் ரகு கிரானைட், டைல்ஸ் தொழில் செய்பவர். ரகு ஜெயா தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவள் அருணா தன்னுடைய கணவனுடன் சென்னையில் வசிக்கிறாள். அவளுக்கு அடுத்து பிறந்தவன் கிரிதரன். அப்பா பேச்சை தட்டாத பிள்ளை. தந்தையுடன் சேர்ந்து தொழில் செய்கிறான். அவனுக்கு அடுத்து ஸ்ரீராம் இன்ஜினியரிங் படித்து விட்டு வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறான்.
ரகுவின் தாய் அம்பிகா, ஜெயா, கிரிதரன் கொடுக்கும் அளவுக்கு அதிகமான செல்லம் தான் ஸ்ரீராம் இப்படி இருப்பதற்கு காரணம்.
ஏனென்று தெரியாமல் சிறு வயதில் இருந்து ஸ்ரீராம் ரகு இடையில் சின்ன விரிசல் இருந்து கொண்டே இருக்கிறது. அவர் எப்போதும் அவனை மட்டம் தட்டிக் கொண்டே இருக்க அவனும் வேண்டும் என்றே அவருக்கு பிடிக்காததை செய்ய ஆரம்பித்தான்.
அம்பிகா, ஜெயா, ஸ்ரீராம் மூவரையும் ரகு முறைத்துப் பார்க்க “அம்மா, அப்பாக்கு வச்ச மட்டனை எடுத்துரு மா. ஏற்கனவே அவருக்கு கொலஸ்ட்ரால் அதிகம். அவருக்கு வெறும் தயிர் சாதம் மட்டும் போடு”, என்று சொன்னான் ஸ்ரீராம்.
“ஆமா ஜெயா, அவனுக்கு வைக்காத”, என்றார் அம்பிகா. ஜெயாவும் அவர் தட்டில் இருந்த கரியை எடுத்து விட்டு தயிரை ஊற்றினாள்.
“என்னை பெத்ததும் சரி இல்லை, எனக்கு வாச்சதும் சரியில்லை, நான் பெத்ததும் சரியில்லை. எல்லாம் என் நேரம். எனக்கு அறுபதாவது பிறந்த நாளுன்னு சொல்லி காலைலே கடைக்கு போய் மட்டன் சிக்கன்னு வாங்கிட்டு வந்தா எனக்கு தயிர் சாதமா?”, என்று புலம்பிய படியே தயிர் சாதத்தை உள்ளே தள்ளியவருக்கு கடுப்பாக வந்தது.
ஸ்ரீராமை முறைத்து பார்த்த படியே உண்டார். அவருக்கு அவனைக் கண்டாலே வேப்பங்காய் தான். தங்களின் சம்பாத்தியத்தை நண்பர்களுடன் சேர்ந்து கரைத்துக் கொண்டிருந்ததால் ஸ்ரீராமைக் கண்டாலே ரகுவுக்கு கடுப்பாக இருக்கும். அதுவும் தன்னுடைய மனைவியும் அம்மாவும் சேர்ந்து கொடுக்கும் செல்லத்தைக் காணும் போது வயிறு எரிந்து போவார்.
அப்போது கடைக்கு கிளம்பி கீழே வந்த கிரி “தம்பி சாப்பிடும் போது எதுவும் சொல்லாதீங்கப்பா. கொஞ்ச நாள் அவன் இஷ்டப் படியே இருக்கட்டுமே? கடைகளைப் பாத்துக்க தான் நாம ரெண்டு பேரும் இருக்கோமே?”, என்றான்.
“அப்படிச் சொல்லுண்ணா”, என்று சிரித்தான் ஸ்ரீராம்.
“நீங்க மூணு பேரும் தான் இவன் கெட்டுப் போக காரணமே. சரி காலைலே நல்ல விஷயம் சொல்ல வந்தேன். இவனால டென்ஷன் ஆகிருச்சு. கிரி உனக்கு ஒரு வரன் பாத்துருக்கேன் பா”, என்றார் ரகு.
“நிஜமாவாப்பா, பொண்ணு பேர் என்ன? எந்த ஊர்? என்ன படிப்பு? பொண்ணு அழகா இருக்குமா?”,. என்று அவசரமாக கேட்டது ஸ்ரீராமே தான்.
“பறக்காவெட்டி நான் பொண்ணு பாத்துருக்குறது உன் அண்ணனுக்கு தான். உனக்கு இல்லை”, என்றார் ரகு.
“ஓ அப்படியா? என்னை திருத்துறதுக்கு எனக்கு தான் பொண்ணு பாத்துருக்கீங்களோன்னு நினைச்சேன்”, என்று ஸ்ரீராம் சொன்னதும் தலையில் அடித்துக் கொண்டார் ரகு.
“உன்னை நம்பி வரவ பாவம் டா. வாயை மூடிட்டு தின்னு”, என்று அவர் சொல்ல “வாயை மூடிட்டு எப்படி திங்குறதாம்? இன்னும் சின்னப் பிள்ளையாவே இருக்கீங்களே?”, என்று சொல்லிக் கொண்டே முட்டையை எடுத்து வாயில் அடைத்தான் ஸ்ரீராம்.
“அப்பாவை சும்மா டென்ஷன் பண்ணாத டா”, என்று சொன்ன கிரி ரகு புறம் திரும்பி “இப்பவே கல்யாணம் பண்ணனுமாப்பா? கொஞ்ச நாள் ஆகட்டுமே”, என்றான்.
“உனக்கு வயசு இருபத்தி எட்டு ஆகுது டா. இதுக்கு மேல தள்ளிப் போட வேண்டாம்;. இதோ இருக்கானே, இவன் எப்ப எவளை இழுத்துட்டு வருவானோன்னு எனக்கு பக்கு பக்குன்னு இருக்கு. அதுக்கு முன்னாடி உனக்கு முடிச்சிறனும்”, என்று ரகு சொன்னதும் தன்னுடைய தந்தையை முறைத்தாம் ஸ்ரீராம்.
அவன் எதுவோ பதிலுக்கு சொல்லப் போக அவனை அம்பிகாவும் ஜெயாவும் தான் அமைதியாக இருக்க சொன்னார்கள். ஆனாலும் தந்தையே முறைத்துக் கொண்டே இருந்தான்.
“என்ன டா முறைக்கிற? உண்மையை தானே சொன்னேன்? (Klonopin) ”
“ஏங்க அவனை வம்புக்கு இழுக்காம நீங்க பொண்ணைப் பத்தி சொல்லுங்க”, என்றாள் ஜெயா.
“ஆமா ஆமா உன் மவன் கிட்ட வம்புக்கு நிக்குறது தான் எனக்கு வேலை பாரு”, என்று எரிந்து விழுந்த ரகு யமுனாவின் புகைப்படத்தை எடுத்து ஜெயா கையில் கொடுத்தார்.
“பொண்ணு பேர் யமுனா, டிகிரி படிச்சிருக்கு. அவங்க அப்பா மூணு ஜவுளிக் கடை வச்சிருக்காங்க. கடை கூட உங்களுக்கு தெரியுமே? நம்ம அளவுக்கு வசதி தான். கூடப் பிறந்தது ஒரு தங்கச்சி மட்டும் தான். ஜாதகமும் நல்லா பொருந்தி வந்திருக்கு. கிரிக்கு புடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்”, என்றார் ரகு.
அன்னையின் கையில் இருந்த யமுனாவைப் பார்த்தவன் “அண்ணி சூப்பரா இருக்காங்க. நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு. கிரி உனக்கு பொருத்தமா இருப்பாங்க டா”, என்றான் ஸ்ரீராம்.
“ஆமா எனக்கும் புடிச்சிருக்கு. நீங்க என்ன அத்தை சொல்றீங்க?”, என்று கேட்டாள் ஜெயா.
“லட்சணமா தான் இருக்கா. கிரி கிட்ட காட்டுங்க. அவன் சொல்லட்டும். வச்சி வாழப் போறது அவன் தானே?”, என்று அம்பிகா சொல்ல கிரி கையில் யமுனா புகைப்படம் கொடுக்கப் பட்டது.
போட்டோவைப் பார்த்த கிரி அப்படியே அசந்து விட்டான். அளவான அதே நேரம் இயல்பான புன்னகையில் அழகாக இருந்தாள் யமுனா.
“என்ன அண்ணா உனக்கு புடிச்சிருக்கா?”, என்று கேட்டான் ஸ்ரீராம்.
“உங்க எல்லாருக்கும் புடிச்சிருந்தா எனக்கும் ஓகே தான்”, என்று சொல்லி சிரித்தான் கிரி. அவன் புன்னகையே அவன் மனதை அனைவருக்கும் தெளிவாக உணர்த்தியது. அனைவருக்கும் அவன் சம்மதம் சொன்னது சந்தோஷமாக இருந்தது.
அப்போது “அப்பா எனக்கு பணம் வேணும்”, என்று கேட்டான் ஸ்ரீராம்.
அவனை முறைத்துக் கொண்டே “எதுக்கு டா?”, என்று கேட்டார் ரகு.
“என் பிரண்ட்ஸ்க்கு டிரீட் கொடுக்க?”\
“எதுக்கு டா?”
“உங்க பிறந்த நாளுக்கு”
“என் பிறந்த நாளுக்கு நான் தானே டிரீட் கொடுக்கணும்?”
“உங்களுக்கு தான் எந்த பிரண்ட்சும் இல்லையே? அதான் நான் என் பிரண்ட்ஸ்க்கு கொடுக்குறேன்”
“கொடுக்க முடியாதுன்னா என்ன பண்ணுவ?”
“நீங்க மட்டும் கொடுத்தா ரெண்டாயிரம் தான் செலவு. நீங்க கொடுக்கலைன்னா அன்பு, அம்மா, அண்ணா மூணு பேர் கிட்டயும் தனி தனியா வாங்கிக்குவேன். எப்படி வசதி?”
“அதுவும் என் பணம் தான் டா”
“அந்த பயம் உங்களுக்கு தான் இருக்கணும்”
“நீயெல்லாம் திருந்தவே மாட்ட. பாப்போம் எத்தனை நாள் இப்படி ஆடுறேன்னு”, என்று சொன்னவர் ஒரு இரண்டாயிரம் ரூபாய் தாளை எடுத்து நீட்டினார்.
“ஹேப்பி பெர்த்டே பேபி”, என்று சொல்லி அவரைப் பார்த்து கண் சிமிட்டி விட்டே அங்கிருந்து சென்றான்.
அவர் அவனையே முறைத்த படியே இருக்க “அவனை விடுங்க. நீங்க பொண்ணு வீட்ல பேசுங்க. என்னைக்கு பொண்ணு பாக்க வரட்டும்னு கேளுங்க”, என்று ஜெயா சொன்னதும் தரகர் கொடுத்த சரவணனின் எண்ணுக்கு அழைத்தார் ரகு.