செங்கதிரோன் தன்னுடைய ஆட்சியை இப்புவியில் செலுத்த ஆரம்பிக்கும் அழகான காலைப் பொழுது. பறவைகள் வான வீதியில் தன்னுடைய இரையைத் தேடி பறந்து கொண்டிருந்தன. மிதமான தென்றலுக்கு ஏற்ப மரங்கள் தலையசைத்துக் கொண்டிருந்தன.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்பிக் நகர் பகுதியில் கம்பீரமாக வீட்டிருந்தது அந்த பெரிய வீடு. குட்டி அரண்மனை போல அழகாக இருந்த அந்த வீட்டில் பல வகையான மரங்களும் பூச்செடிகளும் வளர்ந்திருந்தன.
“கடவுளே உலகத்துல இருக்குற அத்தனை ஜீவ ராசிகளையும் நீ தான் பா காப்பாத்தணும்”, என்று வேண்டிக் கொண்டே திருநீரை எடுத்து நெற்றியில் பூசி விட்டு குங்குமத்தை எடுத்து நெற்றி வகிட்டில் வைத்துக் கொண்டிருந்தாள் மங்கையர்க்கரசி.
“அரசிசிசிசி…… அரசி எங்க டி இருக்க?”, என்ற கணவனின் கோபக் குரல் கேட்டதும் ஒரு நொடி பயந்து விட்டாள் அரசி. பின் கடவுளை பார்த்து புன்னகைத்து விட்டு பூஜை அறையிலிருந்து வெளியே வந்தாள்.
வரவேற்பறையில் கோபமான முகத்துடன் நின்றிருந்தான் மங்கையர்க்கரசியின் கணவன் சரவணன். ஐம்பது வயதிலும் நாற்பது வயது தோற்றத்தில் இருக்கும் தன்னுடைய ஆருயிர் கணவன், முகத்தில் கோபத்தோடு அங்கே நிற்கவும் வேகமாக அவரை நெருங்கினாள் அரசி.
“என்னங்க என்ன ஆச்சு? வாக்கிங் போயிட்டு வந்துட்டீங்களா? எதுக்கு உங்க முகம் ஒரு மாதிரி இருக்கு?”, என்று அவள் கேட்டதும் சாந்தமான அரசியின் முகம் பார்த்து அவர் கோபம் கொஞ்சம் தணிந்தது.
ஆனாலும் அவளை முறைத்த படியே இருந்தார். “இவருக்கு என்ன ஆச்சு?”, என்று எண்ணிக் கொண்டே அவள் குழப்பமாக அவரைப் பார்க்க அவரோ மற்றொரு பக்கம் பார்த்தார்.
சரவணன் பார்வை போன இடத்தை அரசியும் பார்த்தாள். அங்கே தலையை விரித்துப் போட்டு, நைட் டிரஸோடு சோபாவில் குத்துக்காலிட்டு அமர்ந்து காபியை ரசித்து ருசித்துக் குடித்துக் கொண்டிருந்தாள் அவர்களின் இளைய மகள் ஜானகி.
அவளைக் கண்டதும் திக்கென்று அதிர்ந்து போனாள் அரசி. “ஐயையோ இவ எப்ப எழுந்து வந்தா? பல்லைக் கூட விளக்காம காபியை குடிச்சீட்டு இருக்குறதைப் பாரு? அதுவும் உக்காந்திருக்குற பொசிசனைப் பாரு? இவளால மட்டும் தான் ஷோபால கூட இப்படி உக்கார முடியும்? தினமும் இந்த கழுதையால இந்த மனுஷன் கிட்ட நான் தான் பேச்சு வாங்குறேன்”, என்று எண்ணிக் கொண்டு கணவனையும் மகளையும் மாறி மாறி பார்த்தாள் அரசி.
தன்னுடைய தந்தையின் முறைப்பான பார்வை தன் மேல் தான் இருக்கிறது என்று ஜானகிக்கு புரிந்தது. ஓரப் பார்வையில் அவரைக் கண்டவளுக்கு தந்தையின் கோபம் புரிந்தாலும் அவள் அமர்ந்திருந்ததில் எந்த மாற்றமும் இல்லை. “ம்ம் காபினா இது தான் காபி”, என்று முணுமுணுத்துக் கொண்டே மேலும் காபியை அவள் ரசித்துக் குடிக்க சரவணனின் ரத்த அழுத்தம் எகிறியது.
கணவன் எந்த நேரம் வேண்டும் என்றாலும் மலை ஏறலாம் என்று எண்ணிய அரசி மகளை அந்த நிலையில் இருந்து கலைக்க “ச் ச்”, என்று சத்தம் கொடுத்தாள். அவள் கொடுத்த அந்த சத்தம் கேட்க வேண்டியவளுக்கு கேட்காமல் அருகில் நின்றிருந்த சரவணனுக்கே கேட்டு வைத்தது.
இப்போது மகள் மேல் இருந்த முறைப்பான அவரது பார்வை அரசி மேல் திரும்பியது. கணவனின் பார்வையில் நடுங்கிப் போனவள் மகள் இங்கே திரும்புவாளா என்று பார்க்க அவளோ டிவியை விட்டு தலையை திருப்பவே இல்லை.
தூத்துக்குடியில் மூன்று இடங்களில் மிகப் பெரிய ஜவுளிக்கடையை வைத்திருந்தார் சரவணன். சரவணன் மங்கையர்க்கரசி தம்பதிக்கு இரண்டு மகள்கள். மூத்தவள் யமுனா தேவி. வயது இருபத்தி ஐந்து. பெயருக்கு ஏற்றார் போல நதி போன்ற அமைதியானவள். மென்மையே உருவானவள். டிகிரி முடித்து விட்டு தந்தையுடன் சேர்ந்து ஜவுளிக் கடையை பார்த்துக் கொள்கிறாள்.
அவளுக்கு அடுத்து இரண்டு வருடங்களுக்கு பிறகு பிறந்தவள் தான் ஜானகி தேவி. ராமர் சீதை பக்தரான சரவணன் தன்னுடைய இளைய மகள் அந்த சீதையை போல இருக்க வேண்டும் என்று எண்ணி அவளுடைய மறுபெயரான ஜானகி என்ற பெயரை மகளுக்கு வைத்தார். ஆனால் அவளோ அமைதி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவளாக இருந்தாள். விவரம் தெரிந்ததில் இருந்து சரவணனை தலையால் தண்ணீர் குடிக்க வைத்த பெருமை அவளையே சேரும்.
ஜவுளிக் கடை வைத்திருப்பதால் கடைக்கு வரும் புது புடவைகளை மகள்களுக்கு என்று வீட்டுக்கு எடுத்து வருவார் சரவணன். யமுனா ஆசையாக அதை பார்ப்பாள் என்றால் ஜானகியோ அவர் கொண்டு வரும் புடவைகளை தொட்டுக் கூட பார்க்க மாட்டாள். அவளுக்கு புடவை கட்ட தெரியுமா தெரியாதா என்று கூட அவருக்கு தெரியாது.
வெளியே போகும் போது ஜீன்ஸ் டீஷர்ட் என்றால் வீட்டில் இருக்கும் போது மற்ற பெண்களைப் போல நைட்டி கூட அணியாமல் டிஷர்ட், ஷார்ட்ஸ், த்ரீ ஃபோர்த் பேண்ட் என்ற உடை தான் அவளது உடலை தழுவியிருக்கும். யமுனா ஆர்ட்ஸ் காலேஜ் படிக்க ஜானகியோ இன்ஜினியரிங் தான் படிப்பேன் என்று அடமாய் நின்றாள். சரி என்று சொன்ன சரவணன் அவளை டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படிக்கச் சொன்னால் அவளோ எலெக்ட்ரிக்கல் எடுத்துப் படித்தாள்.
படிக்கும் போதே அவளுக்கு வேலை கிடைக்க அதில் போய் சேரச் சொன்னால் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்க போறேன் என்று சொல்லி வீட்டில் இருந்தாள். சில நேரம் அவளால் சரவணன் தான் மூச்சு முட்டிப் போவார்.
“இவளுக்கு போய் இந்த பேரை வச்சோமே?”, என்று அவர் நொந்து போகாத நாளே இல்லை. ஆனால் அவளோ அவரை பொருட்டாகவே மதிக்க மாட்டாள்.
“காலங்காத்தால எப்படி உக்காந்துருக்கு பாரு? தறுதலை தறுதலை. எனக்குன்னு வந்து பிறந்திருக்கே? எருமை எருமை”, என்று சரவணன் கத்த ஜானகி அவரை திரும்பி பார்த்தாள்.
சரவணனின் கோபத்தைக் கண்டதும் மகள் எழுந்து கொள்வாள் என்று அரசி எதிர் பார்க்க மகளோ மீண்டும் நிதானமாக டிவியை பார்க்க ஆரம்பித்தாள். அவளுடைய உதாசீனத்தில் சரவணன் பி.பி எகிறியது. அரசிக்கே அவரைக் கண்டு பாவமாக இருந்தது.
மகள் மேல் உள்ள கோபத்தில் “என்ன டி பிள்ளை வளத்துருக்க?”, என்று சரவணன் அரசியிடம் எகிற “சின்ன திருத்தம். பத்து வயசு வரைக்கு என்னை வளத்தது நீ தான் பா. எதுக்கு அம்மாவை சத்தம் போடுற? என்னை ஒழுங்கா வளக்காததுக்கு அம்மா தான் உன்னைத் திட்டணும்”, என்று கவுண்டர் கொடுத்தாள் மகள். அவள் சொன்னதைக் கேட்டு கோபத்தில் புசுபுசுவென்று மூச்சு விட்டார் சரவணன்.
“ஏய் வாயை மூடேன் டி”, என்றாள் அரசி.
“வாயை மூடினா எப்படி காபி குடிக்கவாம்? உனக்கு அறிவே இல்லை மா”, என்று ஜானகி சொல்ல தாய் தந்தை இருவரும் அவளை முறைத்தார்கள்.
“சரி சரி என்னையே பாத்து ரசிக்காம உன் புருசனுக்கு அந்த அருகம்புல் ஜூசைக் கொடு. அப்பவாது அவருக்கு டென்ஷன் குறையட்டும். நான் போய் பல்லு விளக்குறேன்”, என்று சொல்லி விட்டு அவரை முறைத்துக் கொண்டே சென்றாள் ஜானகி.
போகும் மகளையே சரவணன் எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருக்க சிறிது தூரம் போனவள் திரும்பி அவர் அருகில் வந்து நின்றாள்.
அவர் முறைப்பாக அவளையே பார்க்க “அப்பா ரொம்ப அருகம்புல் ஜூஸ் குடிச்சேன்னா உனக்கும் கொம்பு வந்து நீயும் மாடா ஆகிருவ. சும்மாவே டெரரா இருக்க. இதுல கொம்புன்னா பாக்க சகிக்காது. அதனால ஜூசை கொஞ்சமா குடிப்பா. உன் நல்லதுக்காக தான் சொல்றேன். கொஞ்சம் பெரிய மனுஷி சொன்னா கேளு என்ன?”, என்று சொல்ல “அடி கழுதை”, என்று சொல்லிக் கொண்டே அவர் அவளை அடிக்க போவதற்குள் சிட்டாக பறந்து போனாள்.
தன்னைக் கொம்புடன் கற்பனை செய்து பார்த்த சரவணனுக்கே சிரிப்பு வந்து விட்டது. இது வரை இருந்த கோபம் கூட அவரை விட்டுச் சென்றிருந்தது. இப்போது கணவனின் சிரிப்பைக் கண்டு அரசி அவரை முறைத்தாள்.
மனைவியின் முறைப்பைக் கண்டு “என்ன டி பார்வை எல்லாம் பலமா இருக்கு?”, என்று கேட்டார் சரவணன்.
“இப்ப எதுக்கு இந்த இளிப்பாம்?”, என்று எரிச்சலுடன் கேட்டாள் அவள்.
“மக சொன்னதை கேட்டு சிரிப்பு வந்துருச்சு டி”, என்று பெருமையாக சொன்னார் சரவணன்.