நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அவள் சந்துருவுடன் நடந்துகொண்ட விதத்தில்தான் தவறு இருப்பது போல அவள் மீது பழி போட்டான்.
அதைக்கேட்டு கோபப்படுவாள் என்று எதிர்பார்த்த விஜய்யை ஏமாற்றினாள் வெண்மதி.
நிதானமாக அவள் ஆரம்பித்தாள். “அன்று நான் கீழே விழ போனேன். அதனால சந்துரு என்னை தாங்கி பிடித்தான். இதை நீங்க கேட்டப்போ சொன்னா கோபப்படுவீர்கள் என நான் அதை அப்போ மறைத்தேன். மத்தபடி அதுல எந்த தப்பும் கிடையாது. இதுவும் உங்களுக்கு நல்லாவே தெரியும்.” என்று விளக்கம் கொடுத்தாள். மேலும் வெண்மதியே தொடர்ந்தாள்.
“இப்போ நான் உங்கள ஒரு கேள்வி கேட்கிறேன். யார் அந்த பொண்ணு? “எந்த பொண்ணு?” என்று ஒன்றும் தெரியாதவன் போல நடித்தான்.
“இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க கூட க்ளோசா இருந்தாலே. அந்த பொண்ணு.”
“உனக்கு எப்படி சந்துரு. அது மாதிரிதான் எனக்கு இவள்.” என்று மழுப்பினான்.
“இதை நான் நம்பணுமா. நான் அவ்வளவு பெரிய முட்டாள் இல்லை. சொல்லுங்க விஜய். நீங்களே சொல்றீங்களா இல்லை நான் நேரா அந்த பொண்ணுகிட்ட போய் கேட்கட்டுமா?”
“என்ன அவ்ளோ தைரியமா உனக்கு?”
“ஆமாம். நான் அவளை கேட்டா சும்மா கேட்கமாட்டேன். நம்ம காதல் கதையை சொல்லி விட்டுதான் கேட்பேன்.” என்று அழுத்தம் திருத்தமாக கூறினாள் வெண்மதி.
அதைக் கேட்டவன் அதிர்ச்சி ஆனான். இந்த காதல் கதை தெரிந்தால் அவள் இவனை விட்டுவிட்டு சென்று விடக்கூடும். அப்புறம் எப்படி இவனுக்கு அந்த ராஜ வாழ்வு கிடைக்கும்? என்று இவன் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே
“அவள் சரி. நான் அவளையே கேட்டுக்கொள்கிறேன்.” என்று கூறியபடி அவளை நோக்கி நடந்தாள்.
அவன் வேகமாக அவள் முன்பு வந்து நின்று
“இரு நானே சொல்றேன். நானும் அவளும் கல்யாணம் பண்ணிக்க போகிறோம். நீ சந்துருகிட்ட நடந்துக்கிற விதம் எனக்கு பிடிக்கல. அதே நேரத்தில் இவள் அவளுடைய காதலை என்னிடம் சொன்னா. அதனால நான் இவளுக்கு ஓகே சொல்லிட்டேன்.” என்று தவறு அவள் மீது இருப்பது போலவும் அதனால் அவன் அவளை மறுப்பது போலவும் மாற்றி கூறினான்.
இதைக்கேட்ட வெண்மதி “அப்போ எல்லா தப்புக்கும் காரணம் நான் தான். அப்படி தானே சொல்றீங்க?”
“ஆமாம். என்னோட கேரக்டர் எப்படின்னு நாம லவ் பண்ணும் போது தெரியலையா? அப்போ எல்லாம் ஆசையா இருந்துட்டு, இப்போ இப்படி மாத்தி பேசுறீங்க.”
“ அவன் அவன் லவ் பண்ணும் போது என்னென்னமோ பண்ணிட்டு கழட்டி விட்டுட்டு போறான். நமக்குள்ள தான் அப்படி எந்த தப்பும் நடக்கவில்லையே. அப்புறம் எதுக்காக இப்போ பிரச்சனை பண்ற?”
“ஆனா என்னோட மனசை கெடுத்தது நீங்கதானே.”
“அதுக்கு இப்ப என்ன செய்யப் போற? அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி கால்ல விழுந்து கெஞ்ச போறியா?”
“உன்னை மாதிரி ஒரு பச்சைத் துரோகி காலில் விழுந்து கெஞ்ச வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. . இனி எப்பவுமே என் முகத்துல முழிச்சிடாதே அப்படி முழிச்சேனோ, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. அப்புறம் ஒரு விஷயம். எல்லா தப்புக்கும் காரணம் என்னோட கேரக்டர் தான் அப்படின்னு நீ சொல்ற இல்ல, அதை நம்பிக்கிட்டு போறேன்னு மட்டும் நினைச்சுக்காத. எனக்கு எல்லாமே தெரியும்.
உன்னை நம்பற இந்த பொண்ணுக்காவது கடைசி வரைக்கும் உண்மையா இரு.” என்று கூறிவிட்டு அங்கிருந்து வந்தாள் வெண்மதி.
இவளை தேடிக்கொண்டிருந்த தாய் “என்னமா எங்க போயிட்ட? நான் சாப்பிட்டு முடிச்சிட்டேன்.”
“அம்மா. எனக்கு வயிறு சரியில்லை. எனக்கு சாப்பாடு வேண்டாம். அதனாலதான் நான் வரல. வீட்டுக்கு போகலாம்.”
“வெண்மதி” என்று கூறிக்கொண்டே லலிதா அங்கு வர
பெரியம்மாவை பார்த்து “நீங்க சொன்ன மாதிரி ஒரு மணி நேரம் ஆயிடுச்சு. நானும் அம்மாவும் வீட்டுக்கு கிளம்பறோம்.”
“இன்னும் நான் முக்கியமான சொந்தக்காரர்களுக்கு உன்னை அறிமுகப்படுத்தவே இல்லையே.” என்று லலிதா கூற
பெரியம்மா “அதை அப்புறம் எப்பயாவது பார்த்துக்கலாம்”. என்று சிறிது கோபமாக வெண்மதி முதன்முறையாக பெரியம்மாவிடம் பேச பெரியம்மா அமைதியானார்.
“வீட்டுக்கு செல்லும் வழியில் கவிதாவின் வீட்டை பார்த்த வெண்மதி தாயிடம் திரும்பி “அம்மா. நான் கவி கிட்ட ஒரு முக்கியமான புக் வாங்கணும். நீங்க வீட்டில போய் இறங்கிடுங்க. நான் கொஞ்ச நேரத்தில வந்துடறேன்.” என்று கூறினாள்.
“சரிமா சீக்கிரமா வந்துடு.” என்று கூறிவிட்டு சென்றார். கவிதாவின் வீட்டு கதவினை தட்டினாள். கதவை திறந்தது கவிதா தான். “என்னடி இந்த நேரத்துல வந்துருக்க. என்ன விஷயம்?” என்று பதட்டமாக கேட்டாள் கவிதா.
“நாம உன்னோட ரூமுக்கு போய் பேசலாமா?”
“பேசலாம். வா.” என்று அவளை தன் அறைக்கு அழைத்துக்கொண்டு சென்றாள். இருவரும் உள்ளே நுழைந்த பிறகு வெண்மதி அறையின் கதவை சாற்றி தாளிட்டாள்.
அவன் காலில் விழ போறியா? என்று கேட்டதும் அவளது தன்மானம் அவனிடம் அப்படி பேச வைத்தது. ஆனால் அவள் உண்மையில் உள்ளுக்குள் நொறுங்கி போயிருந்தாள். அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த அழுகையை அழுது தீர்த்தாள். இதற்கு முன்பு வெண்மதி எதற்கும் இப்படி அழுது கவிதா பார்த்தது கிடையாது. எனவே அவள் அழுத விதத்தை பார்த்து பதறி
“என்ன மதி என்ன ஆச்சு?” என்று வேகமாக துடித்த இதயத்தோடு கேட்டாள்.
“என்ன மன்னிச்சிடு கவி. நீ சொல்லும் போதெல்லாம் நான் உன் பேச்சைக் கேட்கவே இல்லை.”
“என்னடி சொல்ற?”
“ஆமாம் கவி.. நீ சொன்னது எல்லாமே உண்மைதான். அந்த விஜய் என்னை ஏமாத்திட்டான். அதை அவன் வாயாலேயே சொல்ல கேட்டேன். என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் உன்னை கூட நம்பாம அவனை நம்பினேன். எனக்கு இது தேவைதான். நான் புத்தி கெட்டுப் போய் நடந்துகிட்டேன். அவன் கூட பழகாத நீ அவனைப் பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருக்க. அவன் கூட பழகின நான் அவனைப் பத்தி தெரிஞ்சுக்காம இருந்திருக்கேன். நான் எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்திருக்கேன். பாருடி. அவனைப் பற்றி நீ எனக்கு சொல்லும் போதெல்லாம் அவன் மேலே இருந்த காதலால அவனை நம்பிக்கிட்டு உன்னை தப்பா எடுத்துக்கிட்டு உன் கிட்ட சண்டை போட்டிருக்கேன் எனக்கு சுத்தமா அறிவே கிடையாது. இவ்ளோ முட்டாளா இருக்கிற நான் எப்படி எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணி டிகிரி வாங்கி வேலையில் சேர்ந்து சம்பாதிக்க முடியும்? என்னால நாளைக்கு எக்ஸாம் எழுத முடியாது பாஸ் பண்ண முடியாது வேலை வாங்க முடியாது. என்னால எதுவுமே முடியாது. ஐ அம் பிட் பார் நத்திங்.” என்று கூறியபடி அழுதாள்.
“லூசு மாதிரி பேசாத மதி. கொஞ்சம் நான் சொல்றதை கேளு.”
“ஆமாம் கவி. நீ சொல்றது கரெக்ட்டு தான். நான் லூசு தான். எனக்கு கொஞ்சம் கூட மூளையே கிடையாது. இருந்திருந்தா இப்படி ஏமாந்து போய் இருப்பேனா? நான் எதுக்குமே பிரயோஜனம் கிடையாது. என்று
தலையில் அடித்துக்கொண்டு பிரமை பிடித்தவள் போல கதறினாள்.
“மதி மதி. நான் சொல்றதை கேளு.” என்று கவிதா கூறியது எதுவும் அவள் காதில் விழவில்லை.
வெண்மதி “நான் ஒரு முட்டாள்!.” என்று சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருந்தாள்.
கவிதா மதியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள். அப்போதுதான் வெண்மதி சுயநினைவுக்கு வந்தாள்.
“அடி நல்லா அடி. கவி” என்று கவிதாவின் கையை எடுத்து தன் கண்ணத்தில் தானே அறைந்து கொண்டாள்.
கவிதாஅங்கு இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வெண்மதி இடம் கொடுத்து குடிக்கச் செய்தாள். அதை வாங்கி வெண்மதி குடித்தாள்.
“நான் சொல்றதை கேளு. இனிமேதான் நீ சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. விஜய் பற்றி இப்பயாவது உனக்கு தெரிஞ்சிடுச்சு என சந்தோஷப்படு. இப்போ நீ கான்சன்ட்ரேட் பண்ண வேண்டியது உன்னோட படிப்புல தான். நாளைக்கு நமக்கு எக்ஸாம் இருக்கு.”
“என்னால எழுத முடியாது. கவி. என்னால எதுலயுமே போக்கஸ் பண்ண முடியல.லவ் பண்ணது தப்பா? சொல்லு கவி”
“லவ் பண்ணது தப்பு கிடையாது. ஆனா லவ் பண்றதுக்கு நீ தேர்ந்தெடுத்த ஆள் தான் தப்பு. லவ் பண்றதுக்கு முன்னாடி நாம லவ் பண்றவங்க கடைசி வரைக்கும் அந்த லவ்ல சின்சியரா இருப்பாங்களான்னு யோசிச்சு முடிவு எடுக்கணும். ஆனா நீ ஒழுங்கா யோசிக்காமல் முடிவு எடுத்துட்ட. அதனாலதான் உனக்கு இந்த கஷ்டம்.”
“இங்க பாரு” என்று வெண்மதி கண்ணம் தொட்டு தன் பக்கம் திருப்பினாள் கவிதா.
“என்னை பாரு நீ எவ்வளவு தைரியமான பொண்ணுன்னு எனக்கு நல்லா தெரியும். உன்னால இதுல இருந்து கண்டிப்பா வெளியே வர முடியும். அதுவுமில்லாம உனக்கு இந்த வேலை எவ்வளவு முக்கியம்னு கொஞ்சம் யோசிச்சு பாரு. அதுக்கு நீ நல்லா எக்ஸாம் எழுதணும். ஏற்கனவே நாம எக்ஸாம் எல்லாத்துக்கும் ரெடியா தான் இருக்கிறோம். எல்லாத்தையும் ஒரு தடவை ரிவைஸ் பண்ணனும். அவ்வளவுதான். அது உன்னால கண்டிப்பா முடியும் . உன்னை தூக்கி போட்டுட்டு போன அவனை நினைச்சு உன்னோட வாழ்க்கையை வீணாக்கி கொல்லாதே. அதுதான் பெரிய முட்டாள்தனம் .அதை நீ செய்திடாதே.