ஒரு சிண்ட்ரெல்லா கதை 6
செளமி அந்த முகப்புத்தக நட்பு அழைப்பை ஏற்றுக் கொண்ட அடுத்த நொடியே, அவனிடமிருந்து “நன்றி” செய்திகள் வரத் துவங்கியிருந்தன. இது போல ஏதேணும் நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த செளமிக்கு அவனது விளையாட்டுத்தனம் கண்டு மனதில் ஒரு சிரிப்பு எழுந்தது.
முகப்புத்தகத்தில் முன்னர் அவள் பதிவிட்டிருந்த பல புகைப்படங்களுக்குத் தாராளமாக லைக் மற்றும் இதய சமிக்கைகள் வாரி வழங்கியிருந்தான்.
இவள் பள்ளியில் இறுதியாண்டு பிரிவு உபச்சார விழாவிற்கு முதல் முறையாக அம்மாவின் நீல வண்ணச் சேலையில், கண் நிறைய மையைத் தீட்டிக் கொண்டு, திருட்டு முழியுடன் தோழிகளின் மேல் கைபோட்டு எடுத்துக் கொண்ட புகைப்படத்திற்கு இதய சமிக்கை செய்திருந்தான். அத்தோடு, அந்த புகைப்படத்தின் கீழே, “வெரி ப்ரிட்டி”என்று செய்தி வேறு சொடுக்கியிருந்தான்.
இதைக் காணவும், செளமிக்கு எந்த அளவு உவப்பாக இருந்ததோ அதே அளவில் பயமாகவும், தயக்கமாகவும் இருந்தது. “ரவி சார்! என் தம்பியும் ஃபேஸ்புக்ல என் ஃப்ரெண்டா இருக்கான். நீங்க விடற ஹார்டும், லைக்கும் அவன் பார்த்தான்னா அவளோ தான். ப்ளீஸ் என்னை வம்பில மாட்டி விட்டுடாதீங்க” என்று செளமி இவனுக்குச் செய்தி அனுப்பினாள்.
அவள் செய்தி அனுப்பிய மறுநொடியே, மறுமுனையில் அவன் ஆன்லைனில் வந்துவிட்டான். அவள் சொல்லிய விஷயத்தை அரவே விடுத்து, அவள் திரும்ப அவனை “ரவி சார்” என்று அழைத்த விதத்தை மட்டுமே பிடித்துக் கொண்டான் அவன்.
“மறுபடியும் சார்ன்னு சொல்லி என்னை ரொம்ப அந்நியமா ஃபீல் பண்ண வைக்கறீங்க. நான் எவளோ உரிமையா மெசேஜ் பண்ணறேன். ஆனா நீங்க என்னடான்னா” என்று கேட்டுவிட்டிருந்தான்.
முன்பின் அவ்வளவு பழக்கமில்லாத ஒருவனைப் பேர் சொல்லி அழைப்பது தவறு, அதே நேரம், அவளது பள்ளி அல்லது கல்லூரி கால தோழமைகளைப் போல, வா போ என்று கூப்பிடவும் முடியாது என்பாதலேயே “சார்” என்று விழித்திருந்தாள்.
“என்னை எதுக்கு சார்ன்னு கூப்பிட்ட?” என்று உரிமையாக வினவ, செளமி, தன் மனதில் தோன்றிய பதிலைச் சொல்வதா வேண்டாமா என்று குழப்பத்துடன் பதில் அனுப்பாமல் காத்திருந்தாள்.
“சொல்லு,செளமி, எதுக்கு சார்ன்னு கூப்பிட்டு என்னை கஷ்டப்படுத்தற?” என்று திரும்பத் திரும்ப அந்த விஷயத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தான்.
“வேற எப்படி கூப்பிடறதுன்னு தெரியலைங்க. அதான் சார்ன்னு கூப்பிட்டேன்” என்று பொதுப்படையாக பதில் சொல்லியிருந்தாள் இவள்.
“ஓ” என்று மட்டுமே அவனிடமிருந்து ஒற்றை வார்த்தையில் பதில் வரவும் செளமிக்கு சங்கடமாகிப் போனது. “அடடா, இவளோ ஹர்டிங்கா எடுத்துக்கறானே! நான் எப்படிக் கூப்பிட்டா என்ன இப்போன்னு நினைக்காம, இதென்ன இவளோ சங்கடப்படறான்?” என்று எண்ணம் கொண்டாள்.
சிறிது நேரம் அவன் எந்த செய்தியும் அனுப்பவில்லை. ஆனால் ஆன்லைனில் தான் இருந்தான் என்பதை பச்சை நிற உருண்டை காட்டிக் கொண்டே இருந்தது. அந்த “ஓ”விற்குப் பிறகு அவன் எந்த செய்தியும் அனுப்பாதது செளமிக்கு ஏனோ சங்கடமாக இருந்தது. அந்த தினம் முழுக்கவே அவன் மறுமொழி அனுப்பவில்லை. இவள் ஆன்லைலின் இருக்கும் போது, ஏதோ டைப் செய்வதும், பின்னர் அதை அழிப்பதுமாக இருந்தான். ஆனால் ஒரு செய்தியும் அனுப்பவில்லை.
அடுத்த தினமும் இதே கதை தொடற, செளமி மிகவும் சங்கடப்பட்டாள். தன் வார்த்தைகள் அவனை காயப்படுத்திவிட்டதோ! தான் எதுவும் தவறாகப் பேசிவிடவில்லையே என்று எண்ணினாள்.
அவனைப் பேச வைக்கும் ஒரு முயற்சியாக, அவன் பாணியிலேயே, “சாரி, சாரி, சாரி” எனச் சில முறை அனுப்பினாள். அவள் தன்னைச் சமாதானப்படுத்த எடுத்துக் கொள்ளும்முயற்சியைப் பற்றித் தெரிந்து கொண்டவன், “இரு சிரிப்பு பொம்மை ஸ்மைலிக்களை” பதிலாக அனுப்பினான்.
“என் தம்பி, கசின்ஸ்னு நிறைய பேர் என் ஃபேஸ் புக் ஃப்ரெண்ட்ஸா இருக்காங்க. சோ, ஃபோட்டோக்கு கீழ கமெண்ட் பண்ணாதீங்க ரவி. தம்பி பார்த்தான்னா, என்ன ஏதுன்னு ரொம்ப விசாரிப்பான்” என்று செளமி திரும்பவும் தான் கூற விளைந்த விஷயத்தைப் பற்றிச் சொல்லியிருந்தாள்.
“ஒ.கே ஒ.கே ரிலாக்ஸ். பப்ளிக்கா கமெண்ட் பண்ணல. அந்த கமெண்ட்டை ரிமூவ் பண்ணிடறேன் போதுமா?”என்றான்.
“ம்ம். சரி. தேங்கியூ” என்றாள் செளமி.
“புரியுது. பப்ளிக்கா கமெண்ட் சொல்லலை. ஆனா, உன்கிட்ட தனிய சொல்லலாம்ல.” என்று சற்றே வழிசலாக வினவினான்.
அப்போது இருந்த இனிய மனநிலையைக் கெடுத்துக் கொள்ள விருப்பம் இன்றி, “ம்ம்ம்” என்று செளமியுமே பதிலளிக்க,
“ அந்த சாரி பிக்சர் ரொம்ப க்யூட்டா இருக்கு செளமி. பொம்மை மாதிரி ரொம்ப அழகா அப்பாவியா இருக்க அந்த ஃபோட்டோல. ரெண்டு நாளா அந்த ஃபோட்டோவைத் தான் வெறிக்க வெறிக்க பார்த்துட்டு இருந்தேன். சோ ப்ரிட்டி” என்று வெளிப்படையாக ரவி புகழ்ந்திருக்க, செளமிக்கு வெக்கம் வந்து அப்பிக் கொண்டது முகத்தில்.
“தேங்கியூ” என்று மட்டுமே அவள் பதிலனுப்பியிருந்த போதும் மனதிற்குள் என்னவோ சின்ன குறுகுறுப்புடன் மகிழ்ச்சி பொங்கியது அவளுக்கு. ஆண்களின் மெச்சும் பார்வைகள் செளமிக்கு புதிதல்ல தான். பள்ளியிலும் கல்லூரியிலும் இருபாலரும் பயின்றனர் அவளுடன்.
அவ்வப்போது “ஏ, அவன் உன்னைத் தான் பார்க்கறான்டி. அவன் உனக்காகத் தான் நம்ம பஸ்ல வர்றானாம்.” என்பது போன்ற அந்த இளமை பருவத்திற்கே உரிய சம்பாஷனைகள் நடந்தேறும். இந்த பேச்சுகளும் பார்வைகளும் கடந்து வந்திருந்தாள் செளமி. பள்ளியில் உடன் பயின்ற ஒரு மாணவன் மீது கொஞ்சம் அவளுக்கும் ஈர்ப்பு இருந்தது நிஜம். ஆனால் அதற்கு மேல் அங்கே சொல்லும் படிக்கு எதுவும் நிகழ்ந்ததில்லை.
இன்று, ரவீந்திரனின் புகழ்ச்சியை இந்த சினேகமான மனோபாவத்துடன் எடுத்துக் கொள்ள செளமியால் முடியவில்லை. அவன் வார்த்தைகளின் கோர்வை, அவளுக்கு அலாதியான மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஒரு சின்ன விஷயத்தை ரசித்து, மேலும் இனிமை சேர்த்து அவன் மெச்சுதலாகக் கூறிய விதம் அவளுக்கு ஒரு கிளுகிளுப்பைக் கொடுத்திருந்தது.
அவனுடன் பேசுவது மனதிற்கு இனிமையாக இருந்த போதிலும், மேலே பேச்சை வளர்பது ஆபத்து என்ற எச்சரிக்கை மணியும் அவ்வப்போது மூளையில் அடித்துக் கொண்ட இருக்க, “சரிங்க ரவி, எனக்கு வேலை இருக்கு. டேக் கேர். பை” என்று செய்தி அனுப்பிவிட்டு, கைப்பேசியின் டேட்டாவை அணைத்து விட்டாள் செளமியா.
அன்றைய இரவு, கட்டிலில் கிடந்தவளுக்கு ரவீந்திரனின் செய்கைகள் ஒன்றின் பின் ஒன்றாக மனதில் வட்டமடித்தன. அவன் பெண் பார்க்க வந்து சென்ற தினம் முதல் நடந்த நிகழ்வுகள் பற்றி ஒவ்வொன்றாக சிந்தித்துப் பார்த்தாள். அவனைப் பற்றிய அவளது கருத்து என்ன என்று யோசித்தாள்.
”சட்டென சிரிக்க வைத்துவிடுகிறான் தான். ஆனால், அவன் நடவடிக்கையில் ஒரு விதமான சுயநலம் அதீதமாகக் காணப்பட்டது. தான் நினைத்ததை மட்டுமே நிறைவேற்றப் பார்க்கிறான். அதில் மற்றவரின் நிலைபாடு என்னவென்று கொஞ்சமும் நினைத்துப் பார்ப்பதில்லையே என்று தோன்றியது.
“கோவில்ல, அவன் மனசில தோணினதையெல்லாம் பேசி என்னைச் சங்கடப்படுத்தினான். அதுக்காக மன்னிப்பு கேட்கணும்னு அவனுக்கு தோணவும் அதையும் செஞ்சான். அந்த மன்னிப்பை நான் முழுமனசா ஏத்துக்கலைன்னு தெரியவும், என்னை ஏத்துக்கவைக்க என்ன பண்ண முடியுமோ அதெல்லாம் செஞ்சு ஏத்துக்க வச்சான். அவனுக்கு ஃப்ரெண்ட்ஸ் ஆகணும்னு எண்ணம் இருந்ததால ரெக்வெஸ்டை அக்செப்ட் பண்ண வைக்க என்ன முடியுமோ அதெல்லாம் பண்ணினான்.”
“ இதெல்லாம் செய்யறப்போ ஒரு நொடி கூட எனக்கு விருப்பம் இருக்கா? முழு மனசோட நான் மன்னிச்சுட்டேனா? எனக்கு பிடிச்சு தான் அவன் ஃபேஸ்புக் ரிக்வெஸ்டை அக்செப்ட் செய்யறேனான்னு அவன் யோசிக்கவேயில்லையே” என்று ரவீந்திரனின் செய்கைகள் குறித்து சிந்திக்கலானாள்.
சிந்துவிடமும் ரம்யாவிடமும் இதெல்லாம் சொல்ல ஏனோ மனம் தடுத்தது. ரம்யா இப்போதெல்லாம் அவ்வளவாக பேசுவது கூட இல்லை. சிந்துவிடம் கூறினால்,”அவன்கிட்ட நீ ஏண்டி வழியற?” என்று செளமியைத் தவறாக நினைத்துக் கொள்வாளோ என்ற எண்ணம் தோன்றியிருக்க, சிந்துவிடம் மெசஞ்சரில் இவ்வளவு பேசியிருக்கிறேன் என்பதை மட்டும் சொல்லாமல், “அவன் ரிக்வெஸ்டை அங்கீகரித்துவிட்டேன்” என்று மட்டும் கூறினாள்.
சிந்துவிடம் இதைச் சொல்லாமல் இருக்க இயலாது. ஏனென்றால் ரவி லைக் செய்திருந்த பள்ளிக் கால புகைப்படத்தில் சிந்துவும் உடன் இருக்கிறாள். அவளின் பெயரும் டேக் செய்யப்பட்டிருக்க, அவனது செய்தி அவளுக்கும் சென்றிருக்கும். அதனால் சொல்லிவிடுவது நல்லது.
முகப்புத்தகம் பற்றி எண்ணும் போதே , தன் தம்பி சங்கர், ரவீந்திரன் போட்டிருந்த கமெண்ட்டைப் பார்த்துவிடுவானோ? ஏதேணும் கேட்டுவிடுவானோ? என்ற லேசான அச்சம் அவள் மனதில் படறவே செய்தது. அவள் பயந்தது போலவே, அடுத்த தினம் மாலை, செளமி மாடியில் துணி உலர்த்திக் கொண்டிருந்த சமயம்,
“ஏ, செளமி, அந்த ரவிகிட்ட நீ ஃபேஸ்புக்ல பேசிட்டு இருக்கியாடீ?”என்று கேட்டுக் கொண்டே மாடியேறியிருந்தான் சங்கர். அவனது நேரடிக் கேள்வியால் சற்றே பதட்டமடைந்த போதும், “ஆமா, ரிக்வெஸ்ட் குடுத்தான் அக்செப்ட் பண்ணேன். ஏண்டா? என்ன விஷயம்?” என்று தம்பியிடம் தன் திடுதிடுத்த மனதை மறைத்து சகஜமாகவே கேட்டாள்.
“அந்தாள் ரெக்வெஸ்ட் குடுத்தா உடனே நீ அக்செப்ட் பண்ணனுமா? எதுக்கு அக்செப்ட் பண்ண?” என்றாண் சங்கர் எரிச்சலுடன்.
“ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அக்செப்ட் பண்ணறதுல என்ன இருக்கு சங்கர்? இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?”
“ம்ம்ம்ம் நீ அக்செப்ட் குடுத்த உடனே அவன் எல்லா ஃபோட்டோக்கும் லைக் பண்ணியிருக்கான். ஸ்கூல் ஃபோட்டல அவன் போட்டிருக்க கமெண்ட் பார்த்தியா? “ப்ரிட்டி”ஆம்.”
“டேய் அதில ஒரு பதினைஞ்சு கமெண்ட்டுக்கு மேல இருக்கு. அவன் போட்ட கமெண்ட் தான் உருத்தலா இருக்கா. விடேண்டா”
“உனக்கு உருத்தலா இருக்காது டீ. நாளைக்கு வேற மாப்பிள்ளை பார்ப்போம், அவன் கூட கல்யாணம் ஃபிக்ஸ் ஆகும். அப்போ அவன் கேள்வி கேட்பான், இந்தாளு யாருன்னு? எப்படி பழக்கம்னு கேட்பான்.என்ன பதில் சொல்லுவ? என்னை பொண்ணு பார்த்துட்டு போனான், என் ஃபேஸ்புக்ல ஃப்ரெண்டானான்னு சொல்லு, ரொம்ப மெச்சுதலா இருக்கும்” என்று சங்கர் கூற, அவன் சொல்ல வந்த விஷயத்தின் உண்மைத் தன்மை செளமிக்கும் புரிபடவே செய்தது.
செளமியின் முக வாட்டத்தைக் காணவும் அதுவரையிலும் கத்திப் பேசிய சங்கர் சற்றே தணிந்து வந்தான்.
“செளமிக்கா, அந்தாளை உனக்கு மாப்பிளை பார்த்தோம் தான். நீ பிடிக்கலைன்னு சொல்லிட்ட, நாமளும் அதை விட்டாச்சு. அப்படியே மூவ் ஆன் ஆகிடணும். இந்த தேவையில்லாத வேலைலாம் பார்க்காத. நீ பண்ணறது நல்லாயில்ல. அவளோ தான் சொல்லுவேன்” என்று மிரட்டலாக எரிச்சலுடன் சொல்லியவன் வேகமாக கீழே இறங்கிச் சென்றிருந்தான்.
அவன் சென்ற வேகத்தில் எங்கே அம்மாவிடம் வத்தி வைத்து விடுவானோ என்று அச்சமாக இருந்தது செளமிக்கு. அவன் சொல்வதில் இருந்த நியாயம் கருதிய செளமி, ரவியிடம் இனி பேசுவது இல்லை என்று முடிவெடுத்துக் கொண்டு தன் வேலைகளை முடித்தாள்.
கீழே செல்லவே தயக்கமாக இருந்தது அவளுக்கு. “சங்கர் அம்மாகிட்ட ஏதாவது சொல்லியிருப்பானோ? அவனுக்கு ஏன் ரிப்ளை பண்ண? ஏன் பேசறன்னு அம்மா கேட்டா என்ன சொல்லி சமாளிக்க?” என்று யோசனையுடன் காலி பக்கெட்டை எடுத்துக் கொண்டு கீழே சென்றாள்.
ஆனால் அவள் பயந்தது போல கலா எதுவும் சொல்லவில்லை. சமையல் வேலை முடித்துவிட்டு ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். சங்கர் அவன் அறையில் இருந்தான் போல, அவன் அறைக்கதவு சாத்தப்பட்டிருந்தது.பெருமூச்சுடன் தன் அறைக்குள் சென்றவள், ரவியின் ஃபேஸ்புக் நட்பை அழித்துவிடலாம் என்ற எண்ணத்துடன் காலையில் அணைத்து வைத்த கைப்பேசியின் டேட்டாவை உயிர்ப்பித்தாள்.
அவள் எதிர்பார்த்தது போலவே ரவி மெசஞ்சரில் செய்தி அனுப்பியிருந்தான். “ஹாய்? வாட் டூயிங்? சாப்பிட்டியா? என்ன பண்ணற?” என்று பல நாள் பழக்கமானவன் போல செய்தி அனுப்பியிருந்தான். இதென்ன, காலையில இருந்து ஒரு இருபது மெசேஜ் அனுப்பியிருக்கான். இவனுக்கு வேலைவெட்டி எதுவும் இருக்காதா? என்று எண்ணினாள்.
அவன் கேட்ட கேள்வி எதற்குமே அவள் பதிலளிக்கவில்லை, இவள் ஆன்லைன் வந்த அடுத்த நிமிடம், “ஹாய் செளமி” என்று புதிதாக அனுப்பியிருந்தான். ரிக்வெஸ்ட் அக்செப்ட் செய்து இரு நாட்களுக்குள், “ஏங்க வாங்க போங்க”வில் இருந்து, “செளமி” என்று ஒருமையில் விழிக்கும் அளவிற்கு ஆகிவிட்டிருந்தான்.
“நீங்க போட்ட கமெண்டை டெலீட் பண்ணிடுங்க ரவி. என் வீட்டில திட்டறாங்க.” என்று பொதுவாக செய்தி அனுப்பினாள். அவன் மறுமொழி சொல்லுவான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அதற்கு மாறாக, அவன் மெசஞ்சரில் அழைத்திருந்தான்.
செளமி அழைப்பை ஏற்காமல் கைப்பேசியின் ஒலியைக் குறைத்துவிட்டு, “ப்ளீஸ் டோண்ட் கால். அந்த கமெண்டை டெலீட் பண்ணிடுங்க.” என்று செய்தி தட்டினாள்.
அதற்கும் மறுமொழியாக மற்றோரு முறை அழைப்பு வந்தது. இம்முறையும் செளமி அழைப்பை ஏற்கவில்லை. “அழைக்க வேண்டாம் என்று கூறினால் புரியாதா? டேண்ட் கால். டெலீட் தட் கமெண்ட்” என்று கூறியவள் செல்லின் டேட்டாவை அணைத்தாள்.
எந்த தேவையும் இல்லாமல் அவன் அழைத்தது அவளுக்கு அசூசையாக இருந்தது. அவன் பொருட்டு தன் கைப்பேசி டேட்டாவை அணைத்து வைத்தது வேறு எரிச்சலாக இருந்தது. கட்டிலில் படுத்துக் கொண்டு விட்டத்தைப் பார்த்த வண்ணம் சிறிது நேரம் படுத்திருந்தாள். அவள் அறையில் அவளுக்கு ஒரே பொழுது போக்கு அவள் கைப்பேசி மட்டுமே. பாட்டுகேட்க, படம் பார்க்க, தோழிகளுடன் அரட்டையடிக்கவென அவள் உற்ற துணையான கைப்பேசியை உபயோகிக்காமல் வெறுமனே இருக்க அவளால் இயலவில்லை.
“சே, இவனுக்காக நான் ஏன் உம்முனு இருக்கணும்” என்று நினைத்து கைப்பேசியின் டேட்டாவை துவக்கிய நிமிடம் திரும்ப அவனிடமிருந்து மெசெஞ்சரில் அழைப்பு வந்தது.
இதற்கொரு முடிவு ஏற்பட வேண்டும் என்ற எரிச்சலுடன் அவன் மெசெஞ்சர் அழைப்பை ஏற்றவள், எடுத்த எடுப்பிலேயே, “சொன்னா புரியாதா உங்களுக்கு? கால் பண்ணாதீங்கன்னு எவளோ தடவை சொல்லறேன். திரும்பத் திரும்ப கால் பண்ணிட்டே இருக்கீங்க? அந்த கமெண்டை டெலீட் பண்ணுங்க போதும்.கால் பண்ணற வேலையெல்லாம் வேணாம்” என்று கோபத்துடம் பேசியிருந்தாள்.
மறுமுனையில் சில நொடி நிசப்தமாக இருந்தது. இவள் பேச்சிற்கு மறுபேச்சாக அவனும் கத்துவான், அதற்கு பதிலடியாக முகத்திலடித்தாற் போல “இனி எனக்கு அழைக்காதே, செய்தி அனுப்பாதே” என்று கறாராகப் பேசிவிடலாம் என்று செளமி எண்ணிக் கொண்டிருக்க,
ரவியோ, “என்னாச்சு செளமி? வீட்டில என்ன பிரச்சனைம்மா? நான் உன் மெசேஜ் பார்த்து உனக்கு ஏதோ பிரச்சனைன்னு நினைச்சு தான் கால் பண்ணினேன். என்னாச்சு செளமி” என்று தன்மையாக, மிக மிக அடக்கமாக, ஒரு சங்கடத்துடன் அமைதியாகக் கேட்க, செளமிக்கு என்ன பதில் செல்ல என்றே தெரியவில்லை.
கோபமாக பேசுபவனிடம் தானும் பதிலுக்குத் தன் நியாயமான ஆத்திரத்தைக் காட்டலாம் என்று எண்ணியிருந்தவள், ரவியின் அமைதியான, அக்கறையான வார்த்தைகளால் பேச்சற்று தான் போனாள்.
“செளமி, ஏதாவது உடம்பு சரியில்லையா? என்ன பிரச்சனை செளமி? உன்னை டிஸ்டர்ப் பண்ண நான் கால் பண்ணலைம்மா. நீ ப்ராப்ளம்னு சொல்லவும், என்னவோ ஏதோன்னு தான் கால் பண்ணேன். வெரி சாரி” என்றவனின் சொல்லுக்கு பதில் மொழி சொல்லத் தெரியாமல் கைப்பேசியை காதில் பிடித்தபடிக்கே நின்றிருந்தாள் செளமி.