எழிலின் பதிலுக்காக காத்திருந்தவர்களுக்கு அவ்வறைக்குள் தாராவின் வருகை சிறிது பயத்தை உண்டாக்கியது. இனியனுக்கும் ஒருவாறு பதட்டம் உண்டாவதற்கு காரணம் தாராவின் வருகைதான். தாராவிற்கும் தலையங்கத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதை இனியனால் அந்த நொடிக்குள் ஊகிக்க முடியவில்லை என்பதே நிதர்சனம்.
“நான் சொல்லித்தான் இனியன் தலையங்கத்தை இவ்வாறு கொடுத்தான். ஆம், நானும் இனியனும் 3 வருடங்களாக விரும்புகிறோம். எனது அண்ணா எதிர்கட்சியின் இளைஞர் அணித்தலைவர். இந்தாண்டு சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வரும் தேர்தலில் இந்த தொகுதியில் எனது அண்ணா வெற்றி பெற வேண்டும் என்று இனியனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அதற்காகத்தான் இனியன் இவ்வாறு தலையங்கத்தை மாற்றிக்கொடுத்தான். அப்போது தான் எனது அண்ணா திருமணத்திற்கு சம்மதிப்பார் என்று இனியன் என்னிடம் கூறினான்”… என்று தாரா சொல்லி முடிப்பதற்குள்…..
ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் இனியனை அடிக்கச் சென்றிருந்தனர். கல்லூரி முதல்வரின் வேண்டுகோளினாலும், இனியனின் மன்னிப்புக் கடிதத்தினாலும் கல்லூரியில் இருந்த கலவரம் சிறிது சமாதான நிலவரமாக மாறியது. இனியனின் மீது இருந்த அலாதி நம்பிக்கையினால் துறைத்தலைமை ஆசிரியரும் எதுவும் பேசாமல் எழுந்து சென்றுவிட்டார்.
இவை அனைத்தும் ஐந்து நிமிடத்திற்குள் நடந்து முடிந்திருந்த போதும் இனியனால், ஏனோ ஐந்து மணிநேரம் ஆகியும் அந்த நிகழ்வில் இருந்தும், தாராவின் பதிலில் இருந்தும் மீண்டுவர இயலவில்லை.
வீட்டிற்கு சென்ற இனியனிடம் யாரும் எதுவும் கேட்காமல் அவனை தனிமையில் விட்டிருந்தனர். புகழின் நம்பிக்கை சிறிதளவு இனியனுக்கு ஆறுதல் தந்தது. அதற்குள் இனியனின் வீட்டின் முன்பு தாராவும், அவள் அண்ணனும் நின்றிருந்தனர். இனியனிடமும் அவன் குடும்பத்தாரிடமும் பெருங்கலகத்தை ஏற்படுத்திவிட்டு, நீ எப்படி என் தங்கையை விரும்பலாம் என்று இனியனை மனதால் பெரும்பாதிப்புக்கு உள்ளாக்கிவிட்டனர். அக்கம் பக்கத்திலும் இனியன் தனது தங்கையை காதலித்து ஏமாற்றுவதாக அவதூறுகளையும் அள்ளி வீசினார்.
எதிலும் இனிமையான நேர்மையையும், எழுத்தில் உண்மையையும் கடந்து வருபவனுக்கு எழில் செய்த இந்த செயல் மிகவும் ஏற்றுக்கொள்ளமுடியாத கசப்பான அனுபவம் மிகுந்ததாக இருந்தது. வீட்டிலும் தான் காதலிக்கவில்லை என்பதை இனியன் கூறவுமில்லை. சிறிது சிறிதாக தன் கசப்பான அனுபவங்களில் இருந்து பல புத்தகங்கள் மூலம் இனிப்பான அனுபவங்களைப் பெற்றான் இனியன். அதன்பிறகு கல்லூரியில் எழிலிடம் ஒரு வார்த்தை கூட இனியன் பேசியதாக தெரியவில்லை. கல்லூரி படிப்பும் முடிந்துவிட்டது.
தலையங்கம் என்பது இனியனுக்கு வெறும் எழுத்தாக மட்டும் அல்லாமல் அதன் நுணுக்கங்கள் மூலம் வரும் காலங்களில் வருடாவருடம் சென்னையில் நடைபெறும் “சிறப்பு தலையங்க கருத்தரங்கம்” என்ற பட்டியலில் தலையங்க எழுத்தாளர் இனியன் என்ற அழைப்புடன் விருது பெற்று அதன் பிறகு “ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில்” தமிழ் தொடர்பான ஆராய்ச்சிகளை வெளியிட வேண்டும் என்பதே அவன் குறிக்கோளாகக் கொண்டிருந்தான். தலையங்கம் எழுதுவது இனியனுக்கு அவன் வாழ்வின் அங்கமான ஒன்று. ஆனால், இந்த நிகழ்விற்குப் பிறகு எழுத்து என்ற ஒன்றே இனியனின் வாழ்வில் இல்லாமல் போய்விட்டது. களஆய்வுகளில் பங்குபெறுவதையும் தவிர்த்திருந்தான்.
கல்லூரி படிப்பு முடிந்த சில மாதங்களில் “நறுமுகை பதிப்பகம்” என்ற பதிப்பகத்திற்கு பகுதி உரிமையாளராகும் வாய்ப்பு கிடைத்தது. இனியனை மீண்டும் தலையங்கம் எழுத வைக்க வேண்டும் என்று அனைத்து வழிகளிலும் புகழ் முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. இரண்டு வருடங்கள் ஆகியும் இனியனின் ஆழ்மனதில் இருந்த கசப்பான வேரூன்றி நிற்கும் இந்த நினைவுகளால் அவன் தலையங்கம் தொடர்பான செய்திகளை பத்திரிக்கை ஆசிரியராக மட்டுமே அவனது “நறுமுகை பதிப்பகத்தில்” பதிப்பித்துக் கொண்டிருக்கிறான்.