பூர்ணிமாவின் திருமணம் நடக்கவிருக்கும் அரண்மனைக்கு குடும்ப சகிதமாக மணமகள் குடும்பத்தினர் மொத்தமாக வந்து இறங்கினார்கள் .
தமயந்திக்கு பூர்ணிமாவின் கெஸ்ட் என்பதால் பூர்ணிமா உடனே துணைக்கு எப்போதும் இருக்கிறாள் என்பதால் பூர்ணிமாவுக்கு அடுத்த அறையில் தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்திருந்தார்கள். அறையின் விஸ்தாரமும் கைவினை அலங்காரங்களின் அழகும் தமயந்தியை மிகவும் கவர்ந்தது.
தமயந்தி “நம்ம ஊர்ல இவ்வளவு ராயலா எல்லாம் இருக்காங்களான்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு பேபி”
பூர்ணிமா சிரித்தாள் “இருக்காங்க தம்மு. எனக்கு கொடுத்திருக்கும் இந்த பாதுகாப்பு, இடம் எல்லாம் கம்மி. என்னை விடவும் ராயல் ட்ரீட்மெண்ட்டோட பிரின்சஸ் நம்ம நாட்ல இருக்காங்க. பணம், புகழ், பெருமை எல்லாம் எங்க என்ன வேண்டுமானாலும் ஈசியாக சம்பாதித்து கொடுக்கும். என் தாத்தா ஆர்மி ஜெனரலாக இருந்தார். என் கசின் ஒருத்தன் கார்கில் போர்ல சண்டை போட்டு வீரமரணம் அடைஞ்சான். எங்க குடும்பத்துல இருக்கிறவங்க எல்லாருமே ஆர்மில, நேவில, அரசியல்ல இருந்து ஏதோ ஒரு வகையில இந்த நாட்டுக்கு சேவை செஞ்சிட்டு இருக்காங்க. அதனால இன்னமும் எங்களை பத்தி வெளிய தெரியுது. கூடவே அந்த ராயல் பிரிவிலேஜ் எங்க குடும்பத்துக்கு கொடுக்கறாங்க இந்த ஏரியா மக்கள்” என்றாள்.
மேற்கொண்டு “எனக்கும் ஷூட் பண்ண வரும், சண்டை போட வரும், பல மொழிகளில் பேச தெரியும், இப்போ நான் கல்யாணம் பண்ணிக்க போறவரும் ஆர்மிலே இருக்கிறவர்தான். நேபால்ல தான் போய் இருக்கப்போறோம்ன்னு நேபால் மொழியும் கத்துக்கிட்டேன்.பார்க்கலாம் அவர்கூட போன அப்பறம் நினைச்சதை செய்ற சுதந்திரம் எனக்கு கிடைக்குதான்னு”
தமயந்தி பூர்ணிமாவின் நிலை அறிந்து கொண்டு மனம் இளகியவள் மனமாற “மிஸ் யூ பேபி” என்றாள்.
பூர்ணிமாவும் “நான் உன்னை எப்பவுமே மிஸ் பண்ணுவேன் தம்மு. நீ ஒரு நல்ல உழைப்பாளி. உன் உழைப்புக்கு உனக்கொரு நல்ல எதிர்காலம் காத்திருக்கு. மனச தளரவிடாத ” என்று மனதில் உள்ளதை பேசினாள்.
பூர்ணிமாவுக்கு எப்போதும் மனதில் இருப்பதை முழுதாக பேச முடியாத சூழல்தான் இருக்கும். எந்த விஷயம் எங்கே எப்படி பரவி வெடிக்குமோ என்ற பயம் உண்டு. இப்போது தமயந்தியிடம் மனம் விட்டு பேசியதில் கொஞ்சமே கொஞ்சம் என்றாலும் மனம் லேசானது. தமயந்திக்கு பூர்ணிமாவுடன் தனியாக இருப்பது இதுவே முதல்முறை, எப்போதும் துணைக்கு ஆட்கள் இருப்பார்கள் அல்லவா! இருவரும் பேசிக்கொண்டே இருந்தார்கள்.
பூர்ணிமா அவள் தம்பிகள் மற்றும் தங்கைகளை தமயந்திக்கு துணையாகவும் விழா முடியும் வரை அவளுக்கு தேவையானதை செய்து கொடுக்க துணையாகவும் இருக்க சொல்லி ஏற்பாடு செய்திருந்தாள்.கியுட் தம்பிகள் இருவர் தமயந்தியை ஊர் சுற்றி காட்டி, ஊர் பெருமையை பேசி, அவர்கள் குடும்பப் பெருமைகளை எல்லாம் பேசி அவர்கள் வீர தீர சாகசங்களை எல்லாம் அடுக்கி ராவ் ராவென்று ராவிருந்தார்கள். மூன்று நாட்களில் தமயந்திக்கு ஊர், மொழி, சாப்பாடு எல்லாம் ஓரளவு பழகியிருந்தது. தமயந்திக்கு எங்கு சென்றாலும் நல்ல உபச்சாரம் தான். விதவிதமான சாப்பாடு, பானம் மட்டும் கவனிப்பில் நிலை மறந்தாள்.
மூவர் கூட்டணி திருமணத்திற்கு முந்தைய நாள் மாலை வந்து சேர்ந்தார்கள். பூர்ணிமாவிற்கு நல்ல பாதுகாப்பு கொடுத்தார்கள் என்று பயங்கர உபச்சாரம். சிரஞ்சீவியின் ஒர்க் அவுட் செய்து வளர்த்திருக்கும் உடலை பார்த்து ஓவ்வொருவரும் நன்றாக இருக்கிறதென்று சொல்லி சென்றார்கள்.
அவர்களுக்கும் அரண்மனை வளாகத்திலேயே தனி கெஸ்ட் ஹவுஸ் கொடுத்தார்கள்.
‘ஆக்டகன்’ வடிவில் இருந்த அரண்மனையில் நீரூற்று, வண்ணமயமான பூக்களும் கொண்ட தோட்டம் மற்றும் அருங்காட்சியகம் இருந்தது. எல்லாவற்றையும் மூவர் கூட்டணியுடன் சுற்றி பார்த்தவள் தமயந்தி ” எவ்வளவு அழகா இருக்குல்ல இந்த இடம்! இங்கு ஒவ்வொரு ரூமும் ஒரு அரண்மனை போல விஸ்தாரமா இருக்குல்ல”
புவனும் “ஆமா ரொம்ப சூப்பரா இருக்கு” என்று சொல்ல,
சிரஞ்சீவி ” என்ன தம்ஸ் வேலைக்கு போன பின்னாடி இப்படி ஒரு அரண்மனை கட்டிடலாமா”
தமயந்தி “எனக்கு என் வீடு சின்னதா இருக்கணும். ஆனா ஃப்ரெண்ட்ஸ் ஃபேமிலி எல்லாரையும் வீட்டுக்குள்ள அடைச்சாலும் இடம் இருக்கணும். அப்படி இருக்கணும்” என்றாள் கண்கள் மின்ன
சிரஞ்சீவி ” அதெப்படி கட்டுறது”
தமயந்தி “அது தெரியல. ஆனா எல்லா வசதியும் இருக்கிற சின்ன வீடு ஒன்னு கட்டணும்ன்னு ஆசை இருக்கு”
சிரஞ்சீவி “அதென்ன எல்லா வசதியும்..லிஸ்ட் பண்ணு பார்ப்போம்”
தமயந்தி “வீட்டுக்கு நல்ல ஹை சீலிங் இருக்கனும், நடு வீட்ல வானம் தெரியணும், ஓபன் கிச்சன் இருக்கணும், சின்ன தேட்டர் ரூம் இருக்கணும், பேஸ்கெட் பால் விளையாட எடம் இருக்கணும், சின்ன ஜிம் இருக்கணும், அப்பறம் நாலஞ்சு கெஸ்ட் ரூம் இருக்கணும்”
சிரஞ்சீவி “ரைட்டு வா போய் இந்த அரண்மனையை விலை விசாரிப்போம்”
தமயந்தி ” இவ்வளவு பெரிசு வேணாம். ஆனா இங்க இருக்கிற வசதி எல்லாம் இருந்தா நல்லா இருக்கும்”
சிரஞ்சீவி ” ஓ டாய் ஹவுஸ் வாங்கலாமா”
தமயந்தி ” உனக்கு மூளை வளரவே இல்ல.. பாவம் அது இங்க இருக்கிறவங்களுக்கு தெரியல”
அருண் எதையும் கண்டுகொள்ளாமல் அந்த அரண்மனை அழகை ரசித்து கொண்டே அவர்களுடன் சேர்ந்து நடந்தான். தர்பார் நடக்கும் இடம் சென்றதும்,தமயந்தி “ச்ச இந்த கிளாஸ் பைன்டிங் எல்லாம் சான்ஸே இல்ல எப்படி அழகா இருக்கு பாரேன். அந்த காலத்துலயே கிளாஸ்ல எவ்வளவு அழகா அலங்காரம் செய்திருக்காங்க பாரேன்” என்று பார்ப்பதை எல்லாம் ரசித்து ரசித்து பேசினாள்.
மொத்த அரண்மனை சுற்றி பார்க்கவே அரை நாள் சென்றது. அன்று மாலை மெஹந்தி விழா நடந்தது. தமயந்தி பூர்ணிமாவுடன் மருதாணி இட்டுக்கொண்டு நடனமாடி சிரித்துக்கொண்டிருந்தாள். எல்லோரும் அவரவர் குஷியில் இருக்க ‘செதுக்கி வைத்த சிற்பம் போல இருந்தாலும் சிரிக்கவே மாட்டேன்ங்குறான்’ என்று அங்கே பெண்கள் கும்பல் பேசுவது தமயந்தி காதில் விழுந்தது.
பூர்ணிமாவின் தங்கை ஒருத்தி இவளிடம் வந்து ‘அக்கா நீங்கெல்லாம் பிரெண்ட்ஸ் தானே, அவனிடம் என்னை அறிமுகம் செய்’ என்று அருணை காட்டி கேட்டாள். சின்ன பெண் இன்னொருத்தி அருணை பற்றி நிறைய விசாரித்தாள். இவளும் ‘ரொம்ப கம்மியா பேசுவான், கொஞ்சமா சிரிப்பான், ஊர்ல அவங்களுக்கு தியேட்டர் இருக்கு’ என்று தெரிந்த விவரங்கள் எல்லாம் சொல்ல.., சில சில்லுவண்டு கும்பல் ‘ஹே அப்போ எல்லா படமும் மொத நாளே பார்த்துரலாம்’ என்று கிண்டலாக சொல்லி சிரிக்க தமயந்திக்கு அதிர்ச்சி ஆனது.
தமயந்தியும் அவர்களை அவனிடம் அழைத்து சென்று பேச எல்லோரிடமும் சின்ன சிரிப்புடன் பேசினான் அருண். தமயந்தி அவனை ஆச்சிரியமாக பார்க்க அவள் முகத்தை அவன் பார்க்கவே இல்லை. அருணில் தொடங்கி சிரஞ்சீவி புவன் என்று பெண்கள் எல்லோரும் அவர்களை சுற்றிக்கொள்ள பூர்ணிமா “உன்னை யாரு அவங்களுக்கு அவனுங்கள இன்ட்ரோ குடுக்க சொன்னது, பாரு கும்பல் எல்லாம் அங்க போய்ட்டாங்க”
அருண் அந்த பெண்களுடன் செல்ஃபி எடுப்பதும், சின்ன சின்ன சேட்டைகள் செய்வதும் பார்க்க தமயந்திக்கு இவன் ஏன் நம்மிடம் இப்படி இல்லை என்று எரிச்சல் உண்டானது. மனமோ “அதெப்படி இருப்பான், பர்த்டே அன்னிக்கு கஷ்டப்படுத்துற மாதிரி பேசிட்டு..” என்று சாடியது.
அருண் பெண்களிடம் பேசிக் கொண்டிருந்தாலும் கவனம் தமயந்தி மீதும் இருந்தது. எதுவும் நடக்காதது போல அவனால் இருக்க முடியவில்லை, தமயந்தி அவள் மனதை பேசி பல நாட்கள் ஆகிவிட்டிருந்தாலும் இதயமே சுக்கு நூறாகி போன வலி சற்றும் குறையவில்லை. இயல்பாக இருக்கும் தமயந்தி பார்க்கும்போது ஆறுதலாக இருந்தது. அதிலும் சுற்றி இருக்கும் பெண்கள் கலாட்டா பேச்சு அடுத்தடுத்த நிலை செல்ல பூர்ணிமா “ நாளைக்கு எனக்கு மட்டும்தான் கல்யாணம் நடக்குமா இல்ல அருணுக்கும் நடக்குமா” என்று கேட்க தமயந்தி அதிர்ந்ததை பார்த்து இவனுக்கு சிரிப்பாக இருந்தது.
சங்கீத் கலாட்டா எல்லாம் முடிந்து அறைக்கு திரும்பும்போது நடுராத்திரி ஒரு மணி ஆகியிருந்தது.
பூர்ணிமா அந்த நடுநிசியிலும் தமயந்தியிடம் இன்னொரு முறை “பேபி நாளைக்கு எட்டரை மணிக்கு எல்லாம் இங்கிருந்து கிளம்பு அப்பதான் பிளைட் புடிக்க முடியும் தாலி கட்டி அடுத்த பத்து நிமிஷத்துல ஃபோட்டோ எடுத்துக்க மேடைக்கு வந்துருவோம் அங்க என் கூட வந்து போட்டோ எடுத்துட்டு போ” என்றாள். தமயந்தியும் பூர்ணிமா நினைவுபடுத்தியதும் அவள் பொருட்கள் எல்லாவற்றையும் அப்போதே அடுக்கி வைத்துவிட்டு உறங்கச் சென்றாள். காலை எட்டு மணிக்கு எழுந்தவளுக்கு நேரமெல்லாம் பூர்ணிமா உடனே சென்றது. பூர்ணிமாவின் அலங்காரத்தில் துணைக்கு இருந்து மேலும் அவளை அவள் அலங்காரம் செய்துக்கொண்டு வைபவம் நடக்கும் இடத்திற்கு சென்று சேரும்போது மணி மாலை ஆறு என்றது கடிகாரம்.
தமயந்தி பூர்ணிமாவும் பூமிகாவும் டிசைன் செய்த லெஹங்கா அணிந்து திருமணம் நடக்கும் இடத்துக்கு வந்து நின்றதும் பூர்ணிமாவின் தம்பிகள் இருவரும் “அக்கா ரொம்ப அழகா இருக்கீங்க அப்ஸரஸ் போல இருக்கீங்க” என்று சொல்ல தமயந்தி சுற்றி முற்றி பார்க்க அங்கே இருப்பவர் எல்லோரும் அவளை தான் பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர், சங்கடமாக உணர்ந்தாள்.
அங்கே நண்பர்கள் கும்பலுடன் நின்றிருந்த கிஷோர் தமயந்தி பக்கம் வந்து “ரொம்ப அழகா இருக்க” என்று ‘காம்ப்ளிமென்ட்’ கொடுத்து விட்டுச் சென்றான்.
சிரஞ்சீவி “நான் எதோ பாலிவுட் ஹீரோயின்தான் வந்திருக்காங்க நினைச்சுட்டேன் தம்ஸ்” என்று சொல்ல
புவன் மட்டும் “யார் செலக்சன்” என்று கேட்டறிந்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
ஊரெல்லாம் பேபி பிங்க் மீது மோகம் கொண்டிருந்தால் பூமிகாவிற்கு ‘டல் பிங்க்’ மீது ஒரு ஆர்வம் எப்போதுமே உண்டு. வெங்காயம் கலர்ல டிரஸ் வாங்கணும் என்று சொல்வாள். இதோ தமயந்தி அணிந்திருக்கும் ஆனியன் பிங்க் கண்டிப்பாக அவளது தேர்வாக தான் இருக்கவேண்டுமென நினைத்தான். பூமிகாவின் தேர்வு மற்றும் அவளே தைத்தது என்று தெரிந்துகொண்டபின் உள்ளுக்குள் பெருமை உண்டானது.
அருண் தமயந்தியை பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் நகர்ந்து சென்றான். உள்ளம் தவித்தது இவளுக்கு.
உண்மையிலேயே அந்த வைபவத்தில் இவளது ஸ்டைல் மட்டுமே எளிமையாக இருந்தது.
தமந்தயிடம் வந்த பூர்ணிமாவின் தம்பிகள் “அக்கா வா வா ஸ்னாக்ஸ், ட்ரிங்க்ஸ் கவுன்ட்டர் ஓபன் பண்ணிட்டாங்க, நான் உனக்கு எங்க ஊர் ஸ்பெஷல் வாங்கி தரேன்” என்று அழைத்துச் சென்றார்கள்.
தம்பிகள் இருவரும் அழைத்துச் சென்ற கவுன்ட்டர் தனியாக இருந்தது. பானமும் பானையில் வைத்திருந்தார்கள் ஆளுக்கு ஒன்று வாங்கி குடித்தார்கள்.
தமயந்தி ” என்ன ஜூஸ் இது லெமன் ஜுஸ் போலவும் இல்ல இளநி போலவும் இல்ல ஆனா அதோட டேஸ்ட் எல்லாம் வருது” என்றவளிடம் தம்பிகள் “நல்லா இருக்குல்ல இன்னொரு கிளாஸ் குடிப்போமா” என்று சொல்லி இப்படியே நாலு கிளாஸ் குடித்தார்கள்.
பானம் கொடுக்கும் ஆள் தமயந்தியிடம் இனி குடிக்காதே என்று செய்கையில் சொன்னார். ஏன் என்று கேட்க தலை சுற்றும் செய்கையில் பேசினார்.
விலகி நடந்து வந்த தமயந்திக்கு அங்கே சீரியல் பல்புகள் வெளிச்சமும், பாட்டு சத்தமும் எரிச்சல் உண்டாக்கியது. அமைதியான இடம் சென்று தூங்க ஏங்கியது மூளை. கொஞ்சமாக சாய்ந்து படுத்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு பார்த்தால் பூர்ணிமா மேடைக்கு வந்துவிட்டது போல தெரிந்தது. சிறிது நேரம் கழித்து உற்று பார்த்தால் மாப்பிளை மட்டுமே மேடையில் உட்கார்ந்திருப்பது போல தெரிந்தது. சமாளித்துகொண்டு முதல் வரிசையில் சென்று உட்கார்ந்துகொண்டாள்.
கொஞ்சமாக தெளிவு பிறந்தது போல இருந்த நேரம் பூர்ணிமாவின் தம்பி தங்கைகள் அவர்களுடன் நடனமாட அழைக்க அவர்களுடன் சென்று நடனமாட கொஞ்சம் கொஞ்சமாக உயிர் வருவது போல உணர்ந்தாள். ஆனால் தமயந்தியின் கெட்ட நேரம் தண்ணீர் தாகத்திற்கும் அந்த ஜூஸே குடித்தாள். பூர்ணிமாவுக்கு மாங்கல்ய தாரணம் ஆனதும் காணவில்லை, ஏழரை மணிக்கு போட்டோ எடுக்கவும் செல்லவில்லை. எட்டரை மணிக்கு இன்னமும் டைம் இருக்கு என்று எண்ணிக்கொண்டு ஜோராக ‘டான்ஸ்’ ஆடிக்கொண்டிருந்தாள். ஒன்பது மணிக்கு கடிகாரம் பார்த்து அதிர்ச்சி ஆனது. அறைக்கு ஓடிச்சென்று பார்த்தால் அவள் சூட்கேஸ், பை எதையும் காணவில்லை. அதிர்ச்சியில் திரும்பவும் திருமணம் நடக்கும் இடம் தேடி வந்து எது எங்கிருக்கிறது என்று விசாரித்து கண்டுபிடிக்க முடியாமல் தவித்து நின்றாள். அதுவரை கவனிக்காத ஒரு விஷயத்தை கவனித்தால் அவளுக்கு தெரிந்த ஆட்கள் யாருமே இப்போது கண்ணில் விழவில்லை. அரண்மனை வளாகத்தை சுற்றி வந்து தேடி பார்த்தாள், அப்போதும் யாரும் கண்களில் படவில்லை.
மணமகன் மணமகளை ஊர்வலம் கூட்டிச்சென்று மணமகன் வீட்டார் இருக்கும் இடத்தில் விட்டுவிட்டு வருவார்களாம் அந்த ஊர்வலத்திற்கு பெண் வீடு சொந்தம் எல்லாம் சென்றிருக்கிறது. யோசித்தவள் அருண் புவன் இருக்கும் கெஸ்ட் ஹவுஸ் செல்லலாம் என நடக்க திரும்பினால் அவளுக்கு தகவல் சொன்ன ஆட்கள் அவள் கையில் இருக்கும் செல் போனை பிடுங்க எத்தனிக்கும் போது புரிந்தது ஆபத்து. அந்த இடத்தையே நான்கைந்து முறை சுற்றி வந்தாலும் அவளை துரத்திக்கொண்டே அவர்களும் வந்தார்கள். எங்கு ஓடுவதென தெரியாமல் இருட்டி இருக்கும் பக்கம் வேகமாக ஓடினாள். துப்பட்டா செடிகளில் மாட்டிக்கொண்டு கிழிந்து போனது. கால்களில் அணிந்திருந்த செப்பல் கழண்டு எங்கேயோ சென்று விழுந்தது. அந்த அரண்மனை வளாகத்திற்கு பக்கமே காடும், விலங்குகள் சரணாலயமும் உண்டு.., அங்கிருந்து கேட்கும் மிருகங்களின் சத்தம் இன்னமும் பயமுறுத்தியது. அங்கேயே பதுங்கி இருந்து தமயந்தி அருண் புவன் இருக்கும் அறை தேடி வரும் போது மிகவும் சோர்வாகி வந்து சேர்ந்தாள்.
அருண் திருமணம் முடிந்து பரிசு கொடுத்துவிட்டு சீக்கிரமே அறைக்கு வந்துவிட்டான். தூங்கவும் பிடிக்காமல் கூடத்தில் சோபாவில் கால் நீட்டி படுத்துக்கொண்டு லெஹங்காவில் தேவதை போல வலம் வந்த அழகியை பற்றியே சிந்தித்துகொண்டு படுத்திருந்தான்.
புவனும் சிரஞ்சீவியும் பூர்ணிமா ஊர்வலத்திற்கு சென்றிருக்க அருணுக்கு சூழல் அமைதியில் தமயந்தியின் குரல் கேட்பது போலவே பிரம்மையாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் அந்த எண்ணம் அதிகமாகிக்கொண்டே போக தாளமுடியாமல் கதவை திறந்துகொண்டு வெளியே நடந்து வந்தவன் மீது மோதினாள் தமயந்தி. முகம், கை, தோள் பட்டையெல்லாம் சிராய்ப்புகள் தென்பட “என் பிளைட் மிஸ் பண்ணிட்டேன் அருண்” என்று அவன் மீது சாய்ந்து அழுதாள். “என் போன் மிஸ் பண்ணிட்டேன். ஐயோ பாரு என் லெஹங்கா கிழிஞ்சு போச்சு அருண். நாளைக்கு நான் ஊருக்கு போயே ஆகணுமே நான் இப்ப என்ன பண்றது.என் பை எல்லாம் கூட காணலை அருண். நான் என்ன செய்ய போறேன் தெரியல. எனக்கு தலையெல்லாம் சுத்துது” என்றவள் சட்டென வாந்தி எடுத்தாள்.
அருண் நடப்பதை கண்டு வியந்தாலும் தமயந்தியை அழைத்து சென்று முகத்தை கழுவ செய்து அவன் டீஷர்ட் ஒன்றை அணிந்து கொள்ள கொடுத்தான்.
தள்ளாட்டத்தில் இருந்தவளை கூடத்தில் கூட்டி வந்து உட்கார வைத்ததும் சட்டென தமயந்தி “ஏன் அருண் எனக்கு மட்டும் இப்படி நடக்குது? நான் கொஞ்சம் சந்தோசமா இருந்தாலும் அடுத்து எழவே முடியாத மாதிரி அடிவாங்குறேன். ஏன் அருண் என்கிட்ட கோச்சுக்கிட்ட? உன்ன நான் ரொம்ப மிஸ் பண்றேன் தெரியுமா? உன்ன எனக்கு எவ்ளோ பிடிக்கும் தெரியுமா!? ஆனா நான் உனக்குல்லாம் செட்டே ஆகமாட்டேன். நீங்கெல்லாம் பரம்பரை பணக்காரங்க. நான் இனி வேலைக்கு போய் சம்பாதிச்சா தான் என்னால எனக்குன்னு ஒரு அடையாளத்தையே உருவாக்க முடியும்.ஆனா நீயெல்லாம் அப்படியில்ல. நீ பாரு எவ்ளோ தைரியமா போய் ப்ரொடக்ஷன் கம்பெனி ஆரம்பிச்சு சம்பாதிக்குற என்னால அது முடியவே இல்ல. உன் கம்பெனி நல்லா ஓடணும்ன்னு தினம் சாமிகிட்ட வேண்டிக்கிறேன் தெரியுமா. இன்னிக்கு இல்ல என்னிக்குமே நீ நல்லா இருக்கனும்ன்னு நான் வேண்டிப்பேன். ஆனா ப்ளீஸ் எதிர்காலத்துல ஹீரோயின் எல்லாம் கல்யாணம் பண்ணிக்காத அது நியூஸ்ல எல்லாம் வரும் நான் பாக்குற மாதிரி ஆகும்.நான் கொரியாவோ இல்ல தாய்லாந்தோ போய் அங்கேயே வாழ்ந்து அப்படியே செத்துடுறேன். ப்ளீஸ் என்ன மன்னிச்சிரு” என்றவள் அவன் கன்னத்தை இழுத்து அதில் முத்தம் வைத்தாள் “ஹேப்பி ஹேப்பி பர்த்டே அருண். நீ நல்லா இருக்க தினம் நான் வேண்டிக்குவேன்” என்றாள்.
அருண் அதிர்ச்சியில் இருந்து மீளும் நேரம் திரும்பவும் ஓடிச்சென்று வாந்தி எடுத்துக்கொண்டிருந்தாள் தமயந்தி. இந்த முறை ரொம்பவும் சோர்வாகி பாத்ரூம் விட்டு வெளியே வந்தாள். நன்றாக தண்ணீர் குடிக்க வைத்தவன் தனி அறையில் படுக்க ஏற்பாடு செய்துகொடுத்து வெளியே வரும்போது புவனும் சிரஞ்சீவியும் வந்தார்கள்.
புவன் அவன் அறைக்கு செல்ல போக அருண் அவனை தடுத்து “அங்க வேணா தமயந்தி தூங்குறா” என்றான்
சிரஞ்சீவி “தமயந்தியா ஊருக்கு போகலையா அவ”
அருண் “தெரியல லக்கேஜ் மிஸ் பண்ணிட்டாளாம்”
புவன் அச்சச்சோ என்று அறை கதவை திறக்க போக அருண் “அவ தூங்கட்டும் நீ சிரஞ்சீவி ரூம்ல தூங்கு” என்றான்
சிரஞ்சீவி “அப்போ நீ”
அருண் “நான் இங்க சோபாலே படுத்துக்குறேன்”
சிரஞ்சீவி “அதுசரி” என்றவன் அறைக்குள் புகுந்துகொண்டான்.