Priya Mirvannan’s யாழினியன் – 04
- … தோழியாய்! என் உயிர்த்தோழியாய்…
தளிர் நடையிட்ட பருவம் முதல் சிந்தியாவை சந்தித்ததாய் பெருமிதம் கொண்டிருந்தாள் யாழினி. ஆம், யாழினி தன் நடையிட்ட பருவம் முதல் சிந்தியாவின் நட்புடனான நினைவலையில் மூழ்கியிருந்தாள். ஐந்தாம் வகுப்பு வரை அருகருகே இருந்த அவர்களின் இல்லம், ஒரே வகுப்பறை (வகுப்பறை என்பதைவிட நட்பறை என்பதே பொருத்தமாக இருக்கும்) என இருந்த இவர்களது நட்பின் பயணங்கள் யாழினி தந்தையின் பணியிடமாற்றத்தால் 2006-ல் வெவ்வேறான துருவங்களின் ஊடே பயணித்தன. ஸ்ரீவில்லிப்புத்தூர் கிழக்கு வீதியில் பயணித்த நட்பின் நினைவலைகள், யாழினி தஞ்சாவூர் சென்றதிலிருந்து நினைவுகளில் மட்டுமே நிறைந்திருந்தது.
இல்லத்திலிருந்து பார்த்தால் பரவசமாகும் ராஜராஜன் நிலைநிறுத்திய பிரமாண்டம், கண்களில் ஆழ்ந்த அதிசயம், பச்சை நெற்களஞ்சியங்கள், கரைபுரளும் காவிரி என யாழினியின் பார்வையில் ஒன்று விடாமல் தினமும் கடிதம் சென்றது சிந்தியாவின் சிந்தனைகளுக்கு. புது வகுப்பறை, புதிய பாதைகள், புதிய இல்லம் என தன் வாழ்வின் புது அத்தியாயத்தை தன் பன்னிரண்டாம் வயதில் புத்துணர்ச்சியுடன் வரவேற்றுக்கொண்டாள் யாழினி.
Advertisement
ஆறாம் வகுப்பு யாழினியின் சிந்தனையினுள் என்றும் புதைந்திருந்த சிந்தியாவின் நினைவுகள் தினக்கடிதத்திலிருந்து வாரக்கடிதம் பின்பு மாதக்கடிதம் ஆகியதை நினைவுப்படுத்தின. எட்டாம் வகுப்பில் எட்டு கடிதம் கூட எட்டாத அளவுக்கு மாறியது இவர்களின் நட்பு.
Advertisement
பத்தாம் வகுப்பில் 10 எண்கள் உள்ள சிந்தியாவின் அலைபேசி எண் கிடைத்தபோது பத்து நிமிடத்திற்குள் அழைப்பு வழி நட்பு மலர்ந்தது… இருவரின் நட்புடன் பொதுத்தேர்வுக்கான பயிற்சியும் ஆழமாகியது. பொதுத்தேர்வும் கடந்தாகிவிட்டது. வாழ்வில் அனைத்தையும் வண்ணமுடனும், வளமுடனும் நோக்கும் பக்குவம்…. யாழிசை போல் வாழ்விற்கு உருவகம் கொடுக்காமல் இசை தென்றலாய் சிறகடித்து கொண்டிருந்தாள் யாழினி,
Advertisement
தூரிகை கைகளுடன் தாரிகை அமர்ந்திருந்தாள். தன் விடுமுறையை ஓவிய வகுப்பில் வண்ணங்களுடன் தீட்டிக் கொண்டிருந்தாள் தமிழ் யாழினி. அவளது ஓவிய கலைக்கு ஆர்வம் “அருள்மொழி வர்மன்” என்ற ராஜராஜன் நிலைநிறுத்திய எழில் ஓவியம்…. ஆம், தினமும் கண் விழித்ததும் தன் வீட்டு மொட்டை மாடியிலிருந்து, முதல் பார்வையும் இரவு வணக்கமும் பெருவுடையார் கோபுரத்துக்கு என்றானது யாழினியின் நாட்கள். கோபுரம் மட்டும் அல்லாது ராஜராஜனும் இவள் மனதில் விண்ணளவு உயர்ந்திருந்தார்.
தன் கண்ணாடி ஓவியங்களை தீட்டி கொண்டிருந்தவள் தன் கண் அசைவுகளை அனிச்சையாக வாசலை நோக்கி செலுத்திக்கொண்டிருந்தாள். அவளின் மனதும் கண்ணசைவும் தத்தம் மொழியால் பேசிக்கொண்டிருந்தன. ஆம், நாம் எதிர்பார்த்தது போல் சிந்தியாவின் வருகைதான்… ஸ்ரீவில்லிப்புத்தூர் கிழக்கு வீதியில் ஆரம்பித்த இவர்களின் நட்பு ஐந்து வருட பிரிவிற்கு பின்பு துளிர்க்க துவங்குகிறது.
Advertisement
(பூத்துக் குலுங்கும் நந்தவனமா அல்லது இருள் சூழ்ந்த வானமா என்பது இனிமேல் தான் யாழினிக்குள்ளும் துளிர்க்கும்)
– இசைக்கும்
