கடிகாரம் இரவு பத்தை கடந்து சில நிமிடங்கள் என நேரம் காட்டியது. லட்சுமி மௌனமாய் அடுக்களையில் நின்றுக்கொண்டிருந்தார். வீட்டில் வேலைக்கு இருக்கும் பெண், காய்ச்சிய பாலை அவரிடம் கொடுக்க, “வச்சுட்டு கிளம்பு, நான் எடுத்துக்குறேன்” என்று அவளை அனுப்பி வைத்தார்.
பின்னே, தனக்கும் கணவருக்குமாய் இரு குவளைகளை எடுத்துக்கொண்டு அவர் அறைக்குள் செல்ல, பீரோ லாக்கரில் எதையோ மும்மரமாய் தேடிக்கொண்டிருந்தார் ராஜகோபால்.
சத்தம் வரும்படி மேசை மீது குவளையை ‘டங்’கென வைத்தார் லட்சுமி. அவ்வொலியில் மனைவி வந்துவிட்டதை அறிந்ததும், “லட்சு, நம்ம நிலபத்திரம் எங்கன்னு பார்த்தியா?” என்றார் ராஜகோபால்.
பதில் சொல்லாது படுக்கை விரிப்பை சரி செய்துக்கொண்டிருந்தார் லட்சுமி.
“உன்கிட்ட தான் கேக்குறேன் லஷ்மி, காதுல விழலையா?” ஒருவேளை மனைவி சரியாய் கவனிக்கவில்லையோ என அவர் கேட்க, “எல்லாம் விழுந்துட்டு தான் இருக்கு” என அவரை பார்க்காமலே பதிலளித்தார் லட்சுமி.
“விழுந்துட்டு தான் இருக்கா? அப்போ பதில் சொல்றதுக்கென்ன?”
“நான் கேட்குறதுக்கெல்லாம் இந்த வீட்ல பதில் கிடைக்குதா என்ன? அப்புறம் நான் மட்டும் ஏன் எல்லாருக்கும் பதில் சொல்லணும்?” லட்சுமி இப்படி பேசுவது வெகு அரிது என்பதால், மனைவியின் மனத்தாங்கலை உணர்ந்து அவரிடம் சென்றார் ராஜகோபால்.
அவர் கையில் வைத்து மடித்துக்கொண்டிருந்த போர்வையை வாங்கி மெத்தையில் போட்டுவிட்டு அவர் தோள் தொட்டு தன் புறம் திருப்பிய ராஜகோபால், குனிந்திருந்த அவர் முகத்தை, தாடையில் விரல் கொடுத்து தூக்க, கவிழ்ந்து நிலம் பார்த்த கண்கள், தான் கலங்கியிருப்பதை சொல்லாமல் அவருக்கு உணர்த்தியது.
“ஏய் லட்சு, என்னப்பாரு?”
எச்சிலை விழுங்கிக்கொண்டு அப்படியே நின்றார் லட்சுமி. அவர் அழுகையை அடக்குவது தெரிந்து மனமுருகி போனார் ராஜகோபால்.
அவரை அப்படியே தன்னோடு அணைத்துக்கொண்டு, “என்னடா? எதுக்கு அழுகை?” என்று கேட்க, அவர் நெஞ்சில் புதைந்த லட்சுமி, “இந்த வீட்ல என்ன நடக்குது? யார் என்ன செய்யுறாங்க? எதுவுமே எனக்கு தெரிய மாட்டேங்குது! சமையல்கட்டுல நிக்கவும், உங்களுக்கெல்லாம் சாப்பாடு போடவும் மட்டும் தான் நான் இருக்கேன்னு தோணுது” என்று தேம்ப,
“அட பைத்தியமே! நீ இல்லன்னா இந்த வீடே வீடா இருக்காது! அது புரியலையா உனக்கு? இங்க ஒவ்வொருத்தர் தேவையும் உன்னை சார்ந்து தான் இருக்கு! நீ ஒருநாள் வீட்ல இல்லன்னா கூட எனக்கு வீட்ல இருக்க உணர்வே இருக்காது, ஏதோ ஒரு ஹோட்டல், லாட்ஜ்ல தங்கிருக்க பீல் தான் இருக்கும்! உன் பையன் ஒரு நாளைக்கு எத்தனை முறை உனக்கு கூப்புடுறான்! உன் பொண்ணு இந்த வீட்ல பேசுறதே உன்கிட்ட மட்டும் தான்!!!” என்று தேற்ற, அதுவே அவர் அடுத்து பொறிவதற்க்கு அடித்தளமாய் போனது.
“என்ன பேசுறா என்கிட்ட? சொல்ல வேண்டியது எதையும் சொல்றது இல்லை! பொண்ணுங்க அம்மாக்கிட்ட தான் எல்லாத்தையும் சொல்லுவாங்கன்னு சொல்றாங்க! இங்க என்ன அப்டியா நடக்குது? அவளைப்பத்தி எதுவுமே எனக்கு தெரியல” அவர் அழுகை இன்னும் அதிகமாக, அவரை எப்படி தேற்ற என்று ஒரு நொடி குழம்பியவர், மறுநொடியே,
“அவளால நீ, நான் அழுதா அது வேற! ஆனா, அவளால ஒருத்தன் பல வருஷமா அழுதுட்டு இருக்கான் தெரியுமா?” என சொல்ல, அவர் ஆயுதம் சரியாய் வேலை செய்து, லட்சுமியின் அழுகையை பட்டென நிறுத்தியது.
“என்னங்க சொல்றீங்க?” அழுகை நிற்க, அதிர்வாய் கேட்டார் லட்சுமி.
“என்னத்த சொல்ல, உன் பொண்ணு படிக்க போன இடத்துல ஒரு பையனை விரும்பிருக்கா! கொஞ்ச நாள்ல சண்டை வந்து ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டாங்க! அதான் அவ படிப்பை கூட விட்டுட்டு இங்க வந்து நின்னா!” என்று ராஜகோபால் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, “இன்னும் அந்த பையனை தான் இவ நினைச்சுட்டு இருக்கா போலங்க! அவன் யாரு என்னன்னு விசாரிங்க, உடனே நம்ம பேசி முடிச்சுடுவோம்” என லட்சுமி பரபரக்க,
“பொறு… பொறு…லட்சுமி!!! இப்போதைக்கு நம்ம எதையும் செய்ய முடியாது! பொறுத்தது பொறுத்தோம்… இன்னும் ஒரே மாசம் பாப்போம்!!! அதுக்கு பிறகு என்ன செய்யணுமோ செய்யலாம்”
“ப்ச்! எதுக்குங்க ஒரு மாசம் காத்திருக்கணும்?”
“நான் அந்த பையனுக்கு ப்ராமிஸ் பண்ணிருக்கேன்” என ஆரம்பித்தபோதே, லட்சுமி ஏதோ சொல்ல வர, “உஷ்!!! உஷ்!!! சொல்றதை முழுசா கேளு லட்சுமி, அந்த பையன் யாரு, எந்த ஊரு, என்ன பண்றான் எல்லாமே உனக்கு சீக்கிரமே நான் சொல்றேன்! இப்போதைக்கு உன் பொண்ணு கவலையை தூரப்போடு! அவளுக்கு சீக்கிரமே கெட்டிமேளம் கொட்டிடலாம்” என்றார் ராஜகோபால்.
நிறைய நிறைய கேட்க தோன்றினாலும், கணவரின் கண்களில் தெரிந்த வேண்டுதலில் சமாதானம் அடைந்த லட்சுமி, “சரி, உங்களுக்காக ஒரே மாசம் பல்லைக்கடிச்சுக்கிட்டு காத்திருக்கேன்” என்று சொல்ல, “பார்த்துடி, பல்லு கொட்டிட போகுது” என கிண்டலாய் சிரித்தார் ராஜகோபால்.
“ப்ச்..போங்க!!! ஹும்ம்! இவளுக்கு ஒரு நல்லது நடக்க போறமாறியே நம்ம சுரேனுக்கும் ஒரு நல்லது நடந்தா மனசு திருப்தியா போய்டும்!” என்று சொல்ல,
“இந்த அம்மாக்களுக்கு மட்டும் எப்படிதான் புலம்பித்தள்ள நிமிஷத்துக்கு ஒரு காரணம் சிக்குதோ? தெரியலைப்பா” என்ற ராஜகோபால் மீண்டும் பீரோ பக்கம் தன் தேடலை துவங்கச்செல்ல, “உங்களுக்கென்ன, ஆபிஸ், பிசினஸ், மீட்டிங்ன்னு ஆயிரம் வேலை இருக்கு! எனக்கு என் புள்ளைங்களை பத்தி நினைக்கிறது மட்டும் தான் வேலையே” என்றார் லட்சுமி.
[the_ad id=”6605″]
“அவனுக்கும் பொண்ணு பார்த்துட்டு தானே இருக்கோம்! பொண்ணுங்க சரின்னு சொன்னாக்கூட இவன் அவங்கக்கிட்ட என்னத்த பேசுவானோ, அஞ்சே நிமிஷத்துல வந்து ‘இந்த பொண்ணு வேண்டாம்’ன்னு சொல்லிடுறான்” என்று ராஜகோபால் சடைக்க,
“அவன் என்ன சொல்லிடப்போறான்? அவனை விரும்பி ஏத்துக்குற பொண்ணு தான் வேணும்ன்னு நினைக்குறான்! அவ்ளோதானே? அவனுக்குன்னு வர வரன் எல்லாம், நம்ம காசு பணத்தை பார்த்து தானே அவனை கட்டிக்க சம்மதிக்குறாங்க!” என மகனுக்காக துணைக்கு வந்தார் லட்சுமி.
“ஹும்! நீ உன் புள்ளைங்க பாட்டை ஆரம்பிச்சா ராத்திரி முழுக்கக்கூட பேசுவ! இப்போ வந்து எனக்கு நம்ம நிலபத்திரத்தை எடுத்துக்குடு” என்றார் லாக்கருக்குள் துலவியபடி.
“எந்த பத்திரம்?”
“அதான், நம்ம பூர்வீக நிலப்பத்திரம்”
“அது எதுக்குங்க இப்போ?”
“மறந்துட்டியா? நாளைக்கு ஹியரிங் இருக்கு!” என்ற ராஜகோபால் சற்று ‘உர்ரென’ இருந்தார்.
லட்சுமியோ ஆர்வமாய், “அண்ணன் வருவாராங்க?” என வினவ, அவரை சட்டென விழி கனலால் சுட்ட ராஜகோபால், “அவன் என் துரோகி! அவனோட உறவு கொண்டாடதன்னு பலமுறை சொல்லிருக்கேன்” என்றார் காட்டமாய்.
அவர் சினத்தில் சற்று பயந்த லட்சுமி, அமைதியாய் அவர் கேட்டதை தேட ஆரம்பிக்க, சில நிமிடங்களிலேயே, “ஏங்க, போன முறை அதை நீங்க கொண்டு போயிட்டு, திருப்பி எடுத்துட்டு வரலையே! ஆபிஸ்ல இருக்குன்னு தானே சொன்னீங்க?” என்று நியாபகப்படுத்த, அதை நினைவுக்கூர்ந்த ராஜகோபாலும், “சரி, நாளைக்கு ஆபிஸ்ல இருந்து எடுத்துட்டு கோர்டுக்கு போய்க்குறேன்” என சொல்லிவிட்டு நித்திரைக்கு சென்றார்.
மாடியில், தன்யா குளித்து முடித்து இரவு உடைக்கு மாற வேண்டி தன் கப்போர்டை திறந்தாள். விதவிதமாய் உடைகள் இருந்தும், குறிப்பிட்ட நான்கு ஐந்து இரவு உடைகளையே அவள் திரும்ப திரும்ப போட்டுக்கொண்டிருப்பது அப்போது பார்த்து அவளுக்கு நினைவு வர, புதியாய் ஒன்றை எடுப்போம் என அடுக்கி வைத்திருப்பதை கலைக்க ஆரம்பித்தாள்.
வரிசையாய் பார்த்துக்கொண்டே வந்தவளுக்கு அடுக்கின் அடியே இருந்த உடுப்பு கருத்தை கவர, அதை வேகமாய் வெளியே உருவினாள் தன்யா.
[the_ad id=”6605″]
அவள் உருவிய வேகத்திற்கு அந்த உடையின் கீழே இருந்த பொருள் ஒன்று மின்னல் வேகத்தில் பறந்து தரையில் விழ, எதார்த்தமாய் ‘என்ன அது?’ என பார்த்தவளின் விழிகள் நிலைக்குத்தின.
பார்த்தது பார்த்தபடி அப்படியே நின்றவளுக்கு விழுந்ததை சென்று எடுக்க வேண்டும் என்பது கூட சில நிமிடங்களுக்க்கு பின்னரே தான் உரைத்தது. இரண்டடி தொலைவில் கிடந்த அப்பொருளை அடைவதற்குள் பல யுகங்கள் கடப்பதை போல உணர்ந்தாள் தன்யா.
தன் காலடியில் கிடப்பதை தரையில் அமர்ந்து அவள் தன் வலக்கரத்தால் எடுக்க, அந்த வெள்ளிக்கம்பியில், பவளமும், முத்தும், கருகமணியும் கலந்து சேர்த்து வித்தியாசமான அமைப்பில் கோர்க்கப்பட்டிருந்த அந்த ‘மாலை’ அவள் கழுத்தில் கிடந்து உறவாடிய நாட்களை தெள்ளத்தெளிவாய் உணர வைத்தது.
அதிலும் அந்த மாலையின் மத்தியில் தங்கத்தால் ஆன, மீனாட்ஷி சுந்தரேஸ்வரர் பொன்தாலி அந்த மாலையின் மதிப்பை உயர்வுப்படுத்தியிருக்க, அதை ஒட்டிய அவள் சம்பாஷனை கனவு போல சிந்தையில் தோன்றியது.
“அதான் நமக்கு கல்யாணம் ஆகிடுச்சே தேவா….! இன்னும் என்ன?” ஆதித்யாவின் தோளில் செல்லமாய் தொங்கிக்கொண்டு சிணுங்கினாள் தன்யா.
அவள் கேட்டதற்கு பதில் சொல்லாமல், “எக்ஸாம் எப்படி பண்ண?” என்றான் ஆதி. அப்போது ‘ஈவன் செமெஸ்டர்’ தேர்வுகள் நடந்துக்கொண்டிருந்தது. அன்று இரண்டாம் வருட படிப்பின் இறுதித்தேர்வை முடித்திருந்தாள் தன்யா.
“ம்ச்! நீ டாப்பிக் மாத்தாத! ஒரு வருஷமா லவ் பண்றோம்! எங்கயாவது கூட்டிட்டு போயிருக்கியா நீ? செம்….ம போர்” முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு ‘பொத்’தென கல்பெஞ்சில் உட்கார்ந்தாள் தன்யா.
“டெய்லி காலேஜ்ல மீட் பண்றோம், அது போதாதா உனக்கு?”
கோவமாய் அவனிடம் ஏதோ சொல்ல உதடு வரை வந்த வார்த்தைகளை சட்டென சடன் ப்ரேக் போட்டு விழுங்கிக்கொண்டு அவனை ஆனமட்டும் முறைக்க மட்டுமே செய்தாள் தன்யா.
“இப்ப எதுக்கு இந்த லுக் விடுற?”
“என்கிட்ட எதுவும் கேட்காத, ஏதாவது சொல்லிடுவேன்” என்றாள் எரிச்சலாய்.
ஆதி அதற்குமேல் பேசாமல் தன் பைக் சாவியை சுழற்றிக்கொண்டே, “சரி நான் கிளம்புறேன், ஆபிஸ் வேலை வேற இருக்கு!!! அப்பா திரும்பி வரவரைக்கும் நான் தான் பார்க்கணும்” என சொல்லி எழுந்துக்கொள்ள, ‘உம்மென’ இருந்தாள் தன்யா.
“தனுஊஊ…. உன்கிட்ட தான் சொல்றேன்! கிளம்புறேன்னு” ஆதி சொல்ல, “போறதுனா போ ஆதி” என்றாள் தன்யா.
அவள் ‘ஆதி’ என்றதுமே, “யப்பா! மேடம் என்ன செம்ம காண்டுல இருப்பீங்க போல?” என்றான் ஆதி.
“……..” முறைப்பு மட்டுமே வந்தது.
“சரி, நீ எப்போ ஊருக்கு கிளம்புற?” ஆதி அப்படி கேட்டதும் கொதித்தெழுந்தாள் தன்யா.
“இந்த வருஷ லீவை உன்கூட ஸ்பென்ட் பண்ணணும்ன்னு நான் என் அப்பாகிட்டக்கூட ஸ்பெஷல் கிளாஸ், ப்ராஜெக்ட் அது இதுன்னு ரீசன் சொல்லி, சென்னை போறதுல இருந்து ‘எஸ்’ ஆகிருக்கேன்…. நீ என்னவோ அசால்ட்டா என்ன பார்த்து, ‘எப்போ கிளம்புற?’ன்னு கேக்குற?”
இப்போது தன்யாவை முறைத்த ஆதி, “உன்கிட்ட எத்தனை முறை சொன்னேன்! அப்பாகிட்ட பொய் சொல்லாதன்னு! இன்னும் எனக்கு இங்க ஒரு வருஷ படிப்பிருக்கு, உனக்கு ரெண்டு வருஷ படிப்பிருக்கு! அதுவரைக்கும் நம்ம டெய்லி மீட் பண்ணிக்க தான் போறோம்! அப்புறம் என்ன உனக்கு?” கடுகடுவென அவன் கேட்க, அப்படியே அடங்கிப்போனாள் தன்யா.
“தேவா! ஐ வான்ன பீ வித் யூ!!!” குரல் குழைய, அவனை நெருங்கி சட்டை பொத்தானை திருகிக்கொண்டே அவள் கெஞ்ச, சற்றும் இளகாமல் பிடித்த பிடியில் நின்றான் ஆதி.
“உன்கூட ஊர் சுத்தவோ கம்பெனி குடுக்கவோ எனக்கு இப்ப டைம் இல்ல தனும்மா! அப்பா அம்மா தங்கச்சி மூணு பேரும் கம்பெனி பொறுப்பை என் தலைல கட்டிட்டு, ஜாலியா அண்ணனை பார்க்க அமெரிக்கா போய்ட்டாங்க… அவங்க டூர் முடிஞ்சு வர மினிமம் த்ரீ மந்த்ஸ் ஆகும். அதுவரைக்கும் எல்லாத்தையும் நான் தான் மேனேஜ் பண்ணனும்” என்று பொறுமையாய் ஆதி எடுத்து சொல்ல, என்னவோ இதை முதல் முதலாய் கேட்பதை போல பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்தாள் தன்யா.
“அதுக்கு தான் சொல்றேன்! எனக்காக நீ இங்க இருக்கப்போ உன்கூட என்னால இருக்க முடியாம ஆபிஸ் வேலை இருக்கும்! அப்புறம் ‘நீ என்னை கண்டுக்க மாட்டேங்குற, நீ முன்ன மாறி இல்லை, யூ ஆர் சோ மீன் தேவா’ ன்னு சினிமா ஹீரோயின் மாறி பேச ஆரம்பிச்சுடுவ” என்று ஆதி கிண்டல் கலந்து சொல்ல,
“அதுக்கு தான் நான் சொல்யூஷன் சொல்றேனே தேவா! நான் உன் வீட்டுக்கு வந்துடுறேன்… நீ எப்பவும் போல ஆபிஸ் வொர்க் பாரு! நான் உன்னை பார்க்குறேன்!” என தன்யா கண்ணடிக்க,
அவளை முன்பை விட அதிகமாய் முறைத்த ஆதி, “என்ன? லிவிங் டுகெதர் மாறியா?” என கேட்டதும்,
“ச்சீ! ச்சீ!!! கல்யாணம் ஆகாம ரெண்டு பேரு ஒண்ணா இருந்தா தானே அந்த பேரு! ஆனா நமக்கு தான் இப்போ கல்யாணம் ஆகிடுச்….சே!!” என குதூகலமாய் தனது குர்தியின் உள்ளே ஒளிந்திருந்த கருமணிகளால் ஆன மாலையை கொஞ்சமாய் அவனிடம் எடுத்துக்காட்ட, தலையில் அடித்துக்கொண்டான் ஆதி.
“ஏய், இன்னுமா இதை நீ கலட்டல? அது என்னவோ தெரியாம நடந்த ஒரு விஷயம்! இதெல்லாம் ‘தாலி’ன்னு சொல்லிட்டு இருக்காத” என்றதும், மழைக்கால மேகமென இருண்டுப்போனது அவள் முகம்.
“என்ன தனு?”
“இது உனக்கு எப்படியோ தேவா… என்னைப்பொறுத்த வரை இது தாலி தான்!!! அந்த ஊருல இருக்க பொண்ணுங்க எல்லாம் இதை தானே தாலி’யா போட்டுருக்காங்க? தங்கத்துல இருந்தா தான் தாலியா என்ன? நம்ம குடுக்குற மதிப்புல தான் அந்த தாலிக்கே மரியாதை இருக்கு” அவள் பேசும்போதே விழிகளில் இருந்து இரு முத்துக்கள் உருண்டு கன்னம் தாண்டி அவள் கரத்தில் விழுந்திருந்தது.
அதை கண்ட ஆதி திகைத்துப்போய், “தனு? ஆர் யூ சீரியஸ்?” என்றான்.
கலங்கி சிவந்திருந்த விழிகளோடு அவனை ஏறிட்டவள், “உனக்கு நான் இங்க இருக்க கூடாதுன்னா சொல்லு, இப்போவே ஊருக்கு கிளம்புறேன்! அதை விட்டுட்டு என் செண்டிமெண்ட்சை கொச்சைப்படுத்தாத! இட் ஹர்ட்ஸ் மீ அ லாட்” என்றவள் கண்களை துடைத்துக்கொண்டு,
“நீ எப்டி வேணா நினைச்சுக்கோ தேவா! என்னை பொறுத்தவரை உனக்கும் எனக்கும் போன மாசமே கல்யாணம் முடிஞ்சுடுச்சு! நீதான் என்னோட ஹஸ்பென்ட்! அந்த உரிமைல தான் உன்கூட இருக்கனும்ன்னு ஆசைப்பட்டு கேட்டேன்!!!” என்றாள் தன்யா.
அவள் முகத்தை மௌனமாய் வெறித்த ஆதி, “திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணிட்டு ரெடியா இரு, ஊருக்கு போலாம்… நானே வந்து பிக்கப் பண்ணிக்குறேன்” என்றுவிட்டு அங்கிருந்து சென்றான்.
செல்பவனை ஒருவித நிராசையுடன் பார்த்துக்கொண்டு நின்றாள் தன்யா.
சென்றவன் சொன்னது போல அவளை அழைத்து செல்ல ஒருமணி நேரத்தில் திரும்ப வந்திருக்க தனது சொற்ப லக்கேஜுகளோடு பைக்கில் அவன் பின்னே அமர்ந்துக்கொண்டாள் தன்யா.
இருவர் நடுவிலும் பேச்சே இல்லை! பைக்கை வேகமாய் செலுத்திக்கொண்டிருந்த ஆதி, திடீரென சடன் பிரேக் போட, பைக் நின்ற இடத்தின் அருகே இருந்தது ஓர் ‘துர்க்கா மந்திர்’. அதை பார்த்துக்கொண்டிருந்த தன்யாவிடம், “இறங்கு” என ஆணை போல சொன்னான் ஆதி.
மறுமொழி இல்லாமல் அவள் இறங்கிக்கொள்ள, அவள் பையை எடுத்துக்கொண்ட ஆதி, கோவிலுக்குள் நுழைந்தான். தன்யாவும் உடன் செல்ல, ஒவ்வொரு பிரகாரமாய் நின்று நிதானமாய் வணங்கிகொண்டிருந்தான் ஆதி. அடுத்து துர்கையின் பிரகாரத்தை இருவரும் அடைகையில், சன்னதியில் இவர்களை கண்ட புரோகிதர், ஆராதனை தட்டோடு வந்தார்.
வந்தவர் பல மந்திரங்களை உச்சரிக்க, அப்போது தான் அவரது தட்டில் இருந்த பொன்தாலி’யை கவனித்தாள் தன்யா. அவளுக்கு மூளை மழுங்கிய நிலை.
[the_ad id=”6605″]
அடுத்த சில நொடிகளில் தட்டில் இருந்த தாலியை எடுத்து ஆதியின் கரத்தில் கொடுத்தார் புரோகிதர். அதை பவ்வியமாய் வாங்கிய ஆதி, அவளை நோக்கி திரும்பி தன் வசீரக புன்னகையுடன்,
“உன்னை பொருத்தவரைக்கும் உன் கழுத்துல இப்போ இருக்குறதே தாலி தான்!!! ஆனா, எனக்கு இதை உன் கழுத்துல கட்டுனா தான் கல்யாணம் ஆன பீல் வரும்…! சோ….ஓஓ….” என அவள் முகம் பார்த்து இழுத்தவன், தாலியை அவள் கழுத்தருகே கொண்டு சென்று, “மே ஐ?” என அனுமதி கேட்க, வெட்கம் மேலிட, ஆனந்த புல்லரிப்பில் உதடு கடித்து குனிந்துக்கொண்டாள் தன்யா.
அவள் வெட்கத்தையே சம்மதமாய் கொண்டவன், நிதானமாய் மஞ்சள் கயிறில் கோர்த்திருந்த பொன்தாலியை அவள் கழுத்தில் மும்முடிச்சிட்டு அணிவிக்க, புரோகிதர் மலரிதழ்களை அவர்கள் மேல் சாரலென தூவினார்.
“இந்த தாலியையும் உன்னோட கருகமணி தாலியோட சேர்த்து கோர்த்துக்கோ!!! இப்போவே நமக்கு ரெண்டு முறை கல்யாணம் ஆகிடுச்சு!!! அடுத்து ஊரறிய ஒருமுறை ஆகும்!!! எல்லாத்துக்கும் கணக்கு பண்ணா, மொத்தமா மூணு ‘பர்ஸ்ட் நைட்’ல நமக்கு?” என ஆதி விஷமமாய் கேட்க, “ச்ச்சீ… கோவில்ல வச்சு என்ன பேச்சு இது?” செல்லமாய் அவனை அடித்த தன்யாவின் கரத்தை வேகமாய் பற்றிய ஆதி,
“கோவில் வேணாம்! நம்ம பிளாட்டுக்கு போவோம்!!! அங்…க போய் வச்சுக்கலாம்” என ஒரு மர்மமான சிரிப்புடன் அவளிடம் ரகசியம் சொல்ல, முகம் சிவக்க நின்றிருந்தாள் தன்யா.
‘அதற்குமேல் எதையும் நினையாதே மனமே!’ என பலமுறை ஜபம் போல சொல்ல ஆரம்பித்தாள்.
தாலியை கையில் எடுத்ததுமே பழைய நினைவுகள் பசுமையாய் அவளை சூழ்ந்து வர, அதற்குமேல் நடந்தது எதையும் நினைக்காமல், நினைக்கவும் துணிவில்லாமல், வலுக்கட்டாயமாக தன் மனதை திசை திருப்பி அதில் பெரும்பாடுபட்டு வெற்றி பெற்றாள் தன்யா.