பிரபுவின் அக்கா ஒரு மனநல மருத்துவர் என்பது அஜய்க்கு நன்றாக தெரியும். சில முறை சந்தித்தும் இருக்கிறான். மாதங்கவதனாவின் வீட்டை விட்டு வந்தவன், யோசிக்காமல் அவர் மருத்துவமனைக்கு சென்று அப்பாய்ன்ட்மென்ட் வாங்கிக்கொண்டு காத்திருக்க, அதிக நேரம் கடத்தாமல் உள்ளே அனுப்பப்பட்டான்.
இயல்பாய் பேசக்கூட வரவில்லை அவனுக்கு. சாதாரண நலவிசாரிப்பு கூட இல்லாமல், நேரிடையாய் விஷயத்தை சொன்னான்.
முழுவதுமாய் கேட்டு முடித்தவர், “சில பெண்கள் இப்படிதான் அஜய்… வெளில தைரியமானவங்க போல தெரிவாங்க! ஆனா, சின்ன சின்ன விஷயத்துக்கு கூட மனசளவுல உடைஞ்சு போய்டுவாங்க…
அதுலயும் நம்ம நாட்ல ‘மணமுறிவு!’ அவ்ளோ சுலபமா கடந்து வர விஷயமே இல்லை! நீங்க சொல்றதை வச்சு பாக்கும்போது, அந்த பொண்ணுக்கு ‘மாரல் சப்போர்ட்’ கிடைக்காம பிடிக்காத ஒரு வாழ்க்கைல இருந்து வெளில வரவும் முடியாம ரொம்ப மனதளவுல போராடிருப்பாங்க!
ஊர் என்ன சொல்லும்… பெத்தவங்க என்ன நினைப்பாங்க… கேட்குறவங்களுக்கு பதில் சொல்லணுமே!!! இந்த மாதிரி விஷயங்கள் மட்டும் தான் ஒரு பொண்ணு பிடிக்கலன்னா கூட மண வாழ்க்கையை பொறுத்துக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்குது.
இதெல்லாம் தாண்டி, அவ தைரியமா ‘டிவோர்ஸ்’ங்குற ஒரு விஷயத்தை கையில் எடுக்குறதே பெருசுங்குறப்போ, டிவோர்ஸ் வாங்கிய சூட்டோட ‘இரண்டாம் திருமணம்!!!’
அந்த பொண்ணுக்கு பிடிச்சே அது நடந்தாலும் அது ஒருவித மிரட்சியை, ஒவ்வாமையை, பிடித்தமின்மையை உண்டாக்க ஏகப்பட்ட வாய்ப்பிருக்கு!” என்றார்.
“ஆனா, மாதுவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் அக்கா” என்றான் அஜய்.
முதல் திருமணம் கொடுத்த வலி, ரணம், காயம் எல்லாம் இப்போ பசுமையா அப்படியே இருக்கும்! அதோட இப்போ இரண்டாம் திருமணம்’ன்னா அவங்களை அறியாம ஒரு பயம் உள்ளுக்குள்ள இருக்கும்.. ‘எங்க இதுவும் நெகடிவ்’வா போய்டுமோன்னு!’
உங்களுக்குள்ள சின்ன சின்னதா வாக்குவாதம் எழுந்தா கூட அவங்களால இயல்பா இருக்க முடியாது… ஒருவேளை இது பெருசாகி விவாகரத்து வரைக்கும் போய்ட்டா…?
இந்த பயம் அவங்களுக்கு இருந்துட்டே இருக்கும்… ஒருமாதிரி ‘இன்செயூர்’ரா இருப்பாங்க!” என்றார்.
சோர்ந்துப்போனவன், “எனக்கு அவ வேனும்க்கா! நான் என்னதான் பண்றது இப்போ?” என்றான்.
“இதுக்கு ரெண்டு வழி இருக்கு அஜய்! ஒன்னு, அவங்க மனசுல இருக்க பயத்தை மீறி உங்க மேல இருக்க ஆசை, காதல் வெளில வரணும்… அவங்க தன்னோட கூட்டை உடைச்சுட்டு வந்து உங்களை அக்சப்ட் பண்ணிக்கணும்!
இன்னொன்னு, பிடிக்குதோ பிடிக்கலையோ நீங்க உடனடியா அவங்களை கல்யாணம் செஞ்சுக்கணும்! நீ காட்டுற அன்புல, உங்க புரிதல்ல, உங்களுக்குள்ள இருக்க அன்னியோன்யத்துல அவங்க தன் பயத்தை கொஞ்சகொஞ்சமா விட்டு விலகனும்!” என்றவர்,
“முதல்ல சொன்னது நடக்க எவ்ளோ நாள் ஆகும்ன்னு தெரியாது… அது உங்கமேல அவங்க வச்சுருக்க காதலை பொருத்து! சொல்ல முடியாது, நாளைக்கே கூட அவங்க உங்களை தேடி ஓடி வரலாம்!” என்று சிரிக்க, அவனும் லேசாக சிரித்தான்.
“இரண்டாவது வழி, ‘கேட் ஆன் தி வால்’ மாதிரி… நீங்க ‘இம்ப்ரெஸ்’ பண்ண நினைச்சு சொதப்பி அவங்களை அது ‘டிப்ரெஸ்’ ஆக்கிட கூடாது!” என்று சொல்ல,
“அக்கா?” என்று பொய்யாய் முறைத்தான் அஜய்.
சிரித்தவர், “அவசரப்படாத அஜய்! பொண்ணுங்க மனசு கடல் மாதிரின்னு சொல்லுவாங்க! வெளில பாக்க ஒண்ணுமே இல்லாத இருக்கும், ஆனா உள்ள போனா ஏகப்பட்டது கொட்டிக்கடக்கும்!” என்றார்.
“உண்மை தான் க்கா! அன்னைக்கு என்கிட்ட கடைசியா வெட்கத்தோட சிரிச்சுக்கிட்டே ‘பை’ சொன்னது இன்னும் என் கண்ணுக்குள்ள நிக்குது! இன்னைக்கு கழுத்தை புடிச்சு தள்ளாத குறையா பேசுறா! உப்ப்ப்…. இந்த பொண்ணுங்களை புரிஞ்சுக்கவே முடியல!!!” நெற்றியை தேய்த்தான்.
“புரிஞ்சுக்கணும்’ன்னு நினைக்காத! புரியாத புதிரா இருப்பாங்க! அவங்க போக்குல போ! எல்லாம் அதுபோல நடக்கும்!” என்றார்.
ஒரு தெளிவு வந்தது அவனிடம்!
‘நன்றி’ சொல்லிவிட்டு எழுந்தவன், “அக்கா… இது!!” என்று இழுக்க, “பேஷன்ட் டீடைல்ஸ் யாருக்கும் சொல்றதில்லை! ஹாஸ்பிடல் ரூல்ஸ்!” என்று சிரித்தார் அவர்.
அவனும் அங்கிருந்து வந்தவன் அதன்பின் அவளை சென்று பார்க்கவில்லை. பிரசன்னாவின் நியாபகம் வரும்போதெல்லாம் ஆன்ட்டிக்கு வீடியோ காலில் அழைத்து மாது இல்லாத நேரம் பேசிக்கொள்வான்.
இப்படியாக, ‘அவள் வருவாளா?! என் உடைந்து போன நெஞ்சை ஒட்ட வைக்க அவள் வருவாளா!?’ என்று நாட்கள் ஓட, அவன் கேபின் கதவை திறந்தான் குரு.
‘வா!’ என தலையசைத்தவன், அருகில் இருந்த மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்ய பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.
வந்த வேகத்தில் அதன் ஒலியை குறைத்தான் குரு.
“உன் மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்க நீ? சொந்த விஷயம் ஒன்னும் சொல்றதில்லை… அந்த அளவுக்கு நாங்க அந்நியமா போய்ட்டோம்… சரி ஆபிஸ் விஷயம் பேசலாம்’ன்னா அதையும் நேரா சொல்லாம, ஆள் விட்டு சொல்ற!
எல்லாத்தையும் மீறி நாங்களா பேச வந்தா பாட்டை போட்டுக்கிட்டு கண்ணை மூடி உட்காந்துக்குற! ஏன்டா இப்படி எங்களை சாவடிக்குற!”
அவனது இந்த தெய்வீக சிரிப்பு கூட எரிச்சல் மூட்ட, கையில் இருந்த பத்திரிக்கையை அவன் முகத்தில் வீசினான் குரு.
கையில் எடுத்து படிக்க ஆரம்பித்தான் அஜய்.
குரு, “நாங்க வீடு வாங்கிருக்கோம் சார்! நாளைக்கு கிரகபிரவேஷம்! நீங்க அவசியம் வரணும்!” என்று யாரோ போல கைகூப்பி முறையாய் அழைக்க, வெகு நாட்களுக்கு பிறகு வாய்விட்டு சிரித்தான் அஜய்.
“சிரிக்காத டா இடியட்!!!”
இன்னும் சிரித்தவன், “எல்லாம் நன்மைக்கே டா! நாளைக்கு முதல் ஆளா நான் தான் இருப்பேன்! கடைசி ஆளா நான் தான் போவேன்! வேலை முழுக்க என் பொறுப்பு… ஓகே?” என்று கேட்க, அவன் சிரித்ததே போதும் என ஒன்றும் சொல்லாமல் தலையாட்டிவிட்டு சென்றான் குரு.
அவன் போனதும் பாடலுக்கு ஒலியை கூட்டிவிட்டு சேரில் சாய்ந்தான் அஜய்.