“இது எங்க அத்தைக்கு சொந்த கார பொண்ணு. சும்மா ஊரை சுத்தி பாக்க வந்துருக்கு”
“சரி மாமா, அடிக்கடி வீட்டு பக்கம் வாங்க என்ன?”
“சரி வள்ளி”, என்று சொல்லி விட்டு நடந்தாள். சிறிது தூரம் சென்ற பிறகு மித்ராவை பெருமையாக பார்த்தான் பார்த்திபன்.
அவள் அதை கவனிக்காமல் நடந்தாள்.
அடுத்தும் அவர்கள் ஊரில் உள்ள சுப்பு என்ற பெண்ணும் இதே போல பேச, அவளிடமும் “நீ தான் என் கனவில் வந்த”, என்று சொன்னான் பார்த்திபன்.
“என்னமோ சொன்ன? இப்ப பாத்தியா? வர பொண்ணு எல்லாம் ஐயாவுக்காக தவம் இருக்காங்க”, என்றான் பார்த்திபன்.
“வர பொண்ணுங்க கிட்ட ஒரே டையலாகை சொல்றது, எல்லாம் ஒரு பொழப்பு. இதுல பெருமை வேற?”, என்று காரி துப்பினாள் மித்ரா.
“ச்சே அசிங்க படுத்திட்டாளே”, என்று நினைத்து கொண்டு நடந்தான்.
“அது எப்படி எல்லா பொண்ணுங்க கிட்டயும் டோன் மாறாம பேசுற? அப்படியே உருகுற மாதிரி. இவளுகளா உன் கனவுல வந்தாங்க”
“இவங்க எங்க வர? நம்ம வீட்டு கிழவி தான கனவுல வந்துச்சு”
“இருந்தாலும் சார் மன்மதன்னு ஒத்துக்க தான் செய்யணும்”, என்று சிரித்து கொண்டே அவனுடன் நடந்தாள் மித்ரா.
“ஹ்ம்ம்”, என்று பெருமையாக காலரை தூக்கி விட்டுக்கொண்டு சிரித்தான் பார்த்திபன்.
“நான் உங்க அத்தைக்கு தான் சொந்த கார பொண்ணா பார்த்திபன்? உங்களுக்கு சொந்தம் இல்லையா?”, என்று ஆழ்ந்த குரலில் கேட்டாள் மித்ரா.
இதற்கு என்ன பதில் சொல்ல தெரியாமல் அவள் முகத்தை பார்த்தான் பார்த்திபன். அவனையே ஒரு நிமிடம் ஊன்றி பார்த்தவள் எதுவும் சொல்லாமல் நடக்க ஆரம்பித்தாள்.
எதிரே இவனுடைய நண்பர்கள் கூட்டம் நின்றார்கள்.
“ஐயோ இவனுங்க இங்க நிக்குறாங்களே. கண்ணால கற்பழிப்பாங்க. இங்க இவளை கூட்டிட்டு போக கூடாது”, என்று நினைத்து கொண்டு, “இந்த பக்கம் வேண்டாம் மித்ரா. நாம வேற பக்கம் போவோம்”, என்று சொன்னான் பார்த்திபன்.
அதுக்குள்ள அங்கே இருந்து ராசு குட்டி கையை காட்டி விட்டான்.
“உங்களை கூப்பிடுறாங்க பார்த்திபன். உங்க பிரண்ட்ஸ் போல? வாங்க ஒரு ஹாய் சொல்லிட்டு போகலாம்”, என்று சொல்லி முன்னே நடந்தாள்.
“வேண்டாம் மித்ரா. அவனுங்க ஒரு மாதிரி”
“ஒரு மாதிரின்னா?”
“லூசுங்கன்னு அர்த்தம்”
“எதுக்கு அப்படி சொல்றீங்க?”
“அங்க ஊதா சட்டை போட்டுட்டு நிக்கானே. அவன் பேரு ராசு குட்டி. ஆனா பண்ணி குட்டின்னு தான் நாங்க கூப்பிடுவோம். பொண்ணுங்களை பாத்தா போதும் ஈ ன்னு இளிப்பான்”
“எப்படி? நீங்க இளிச்ச மாதிரியா?”
…..
“சரி சரி கோபம் வேண்டாம் பார்த்திபன். அடுத்து சொல்லுங்க”
“அடுத்து அவன் பக்கத்துல நிக்கானே. அவன் பேரு ஊளை மூக்கன் கோபாலு. எப்பவும் மூக்கை சீந்திகிட்டே இருப்பான்”
“அடுத்து?”
“கடைசியா கரடி மாதிரி இருக்கானே, அவன் பேரு தொந்தி கணபதி. எப்படி வயிறை வளத்து வச்சிருக்கான் பாரு. இவனுங்களை போய் நீ பாக்கணுமா?
“கண்டிப்பா பாக்கணும்”, என்று சொல்லி கொண்டே அவர்கள் அருகில் சென்றாள்.
“டேய் பார்த்தி இவங்க தான் நீ சொன்ன மாமா பொண்ணா? நீ சொன்ன மாதிரி அப்சரஸ் மாதிரி தான் டா இருக்காங்க”, என்று சொன்னான் ராசு குட்டி.
“பார் டா, மாமா என்னை சைட் அடிச்சிருக்கான்”, என்று நினைத்து கொண்டு “ஹாய் பண்ணி குட்டி”, என்று ராசுவை பார்த்து சொன்னாள் மித்ரா.
பார்த்திபன் திகைத்து விழித்தான். ராசு அவனை தீ பார்வை பார்த்தான்.
“பார்த்தி மாமா உங்களை பத்தி எல்லாம் சொன்னாரு. நீங்க ஊளை மூக்கன் கோபாலு தான? அப்புறம் நீங்க தொந்தி கணபதி கரெக்ட்டா? நீங்க எல்லாம் சரியான பொறுக்கிங்க ன்னு பார்த்தி மாமா சொன்னாங்க. மாமா உங்க பிரண்ட்ஸ் கிட்ட பேசிட்டு வாங்க. நான் அதோ தெரியுதே அந்த கோயிலை பாத்துட்டு இருக்கேன்”, என்று சொல்லி விட்டு சிரிப்புடன் நகர்ந்து விட்டாள்.
கொஞ்ச தூரம் போன பிறகு திரும்பி பார்த்த மித்ரா சிரித்தாள். அங்கே பார்த்திபன் முதுகில் மூவரும் கும்மி கொண்டிருந்தார்கள்.
“டேய் அவ பொய் சொல்றா டா. நான் அப்பவே சொல்லலை. இப்படி தான் வீட்ல என்னை மாட்டி விட்டு அம்மா கிட்ட அடி வாங்க வச்சா”, என்று நடந்ததை அனைத்தையும் சொல்லி அவர்களை சமாளித்து விட்டு மித்ரா அருகில் சென்று அவளை முறைத்தான்.
“ஏய் அங்க இருந்து எல்லாருகிட்டயும் எனக்கு அடி வாங்கி கொடுக்க தான் வந்தியா? இந்த ஊர்ல ஹீரோ மாதிரி இருந்தேன் டி. நீ எப்ப வந்தியோ அப்பத்துல இருந்து காமெடி பீசா மாறிட்டேன்”, என்று கோபமாக கத்தினான் பார்த்திபன்.
“சும்மா விளையாட்டுக்கு பார்த்தி. அடுத்து எங்க போறோம்?”
“பாத்தது போதும். வீட்டுக்கு போகணும். அப்பா பேங்க்கு போக சொன்னாங்கள்ல? இப்பவே மணி பதினொன்னு ஆகிட்டு. வீட்ல போய் குளிச்சிட்டு கிளம்பி சாப்பிட்டு ரெண்டு மணிக்கு கிளம்புனா தான் சரியா இருக்கும்”
“ஹ்ம்ம் சரி”, என்று அவனுடனேயே நடந்தவள் “இப்ப எதுக்கு பார்த்தி லோன்?”, என்று கேட்டாள்.
“எதாவது வேலை செய்யணும்ல?”
“மாமா மாதிரி விவசாயம் செய்யலாம்ல?”
“செய்யலாம் தான். எனக்கு அது புடிச்ச வேலையும் கூட. ஆனா இங்க என்னால சுதந்திரமா செய்ய முடியாது. அப்பா எனக்கு சொல்லி கொடுக்குறேன்னு பேர்ல அவர் தான் அந்த வேலையை பாப்பாரு. அதனால எனக்கு செய்ய தோணலை. அதான் எதாவது கடை வைக்கலாம்னு நினைச்சேன்”
“எங்க கடை வைக்க போறீங்க?”
“டவுன்ல தான். அங்க இடம் எல்லாம் இருக்கு. முன்னாடியே அங்க வாங்கி போட்டது. வேற கடை வச்சிருந்தாங்க. இப்ப அவங்க காலி பண்ணி சும்மா தான் கிடக்கு. நம்ம கடை ஆரம்பிக்கனும்னா பொருள் வாங்க பணம் வேணும்ல? அதான் இத்தனை நாள் இழுத்தடிச்சிட்டு இருந்தது”
“ஆனா மாமாவை பாத்தா, உங்களை எல்லாம் பாத்தா நல்ல பணக்காரங்க மாதிரி தான இருக்கு? அப்புறம் எதுக்கு லோன் வாங்கணும்?”
“இது எங்க அப்பா வேலை தான். சொந்த காசுன்னா நான் ஊதாரியா செலவழிப்பேனாம். இதுவே கடன்னா பொறுப்பு வருமாம். என் மேல அவ்வளவு நம்பிக்கை. வேலைக்குன்னு இறங்குன பிறகு பொறுப்பில்லாமல் இருப்பேனா மித்ரா? ஆனா அதை அவருக்கு யாரு புரிய வைக்க? எனக்கு அவர் கிட்ட எதுத்து பேச சின்ன வயசில் இருந்தே பயம்”
“ஆமா எதுக்கு நீங்க பள்ளி கூடம் போகாம இருந்தீங்க? படிச்சிருக்கலாம்ல?”
“அது மண்டைல ஏறலை. இப்ப பாத்தியே மூணு பேரு. இன்னும் சிவான்னு ஒருத்தனும் இருக்கான். நாங்க அஞ்சு பேரு தான் செட்டு. படிப்பு ஏரலைன்னு ஊரை சுத்தி, திருட்டு தனமா படம் பாக்க போய் அப்படியே ஜாலியா போய்ட்டு”
“என்னைக்காவது படிக்கலைனு பீல் பண்ணிருக்கீங்களா?”, என்று கேட்டாள் மித்ரா.
அவளை கூர்மையாக ஒரு பார்வை பார்த்தவன், “இந்த கேள்விக்கு பதிலை இன்னொரு நாள் சொல்றேன். இப்ப வீடு வந்துட்டு”, என்று சொன்னான்.
“என்னையும் பேங்க்கு கூட்டிட்டு போறீங்களா ப்ளீஸ்?”
“என்ன விளையாடுறியா? அதெல்லாம் முடியாது”
“டேய் கூட்டிட்டு போவியா? இல்லை நேத்து செஞ்ச மாதிரி எதாவது செஞ்சு கூட்டிட்டு போக வைக்கவா?”
“என்ன டா, இவ்வளவு நேரம் மரியாதையா வாங்க போங்கன்னு பேசறாளேன்னு ஆச்சர்ய பட்டேன். மறுபடியும் எதையும் ஆரம்பிச்சிறாத தாயே. இப்ப என்ன கூட்டிட்டு போகணும் அப்படி தான? ரெண்டு மணிக்கு கிளம்பி இரு. போகலாம்”, என்று சொல்லி கொண்டே உள்ளே சென்று விட்டான்.
சிரித்து கொண்டே நந்தினி அறைக்கு போனாள் மித்ரா. அங்கே நந்தினி கட்டிலில் கால் நீட்டி அமர்ந்து கையில் மோகனின் புகை படத்தை வைத்து கொண்டு கண்களை மூடி ஒரு மோன நிலையில் அமர்ந்திருந்தாள்.
அதை கெடுக்க தோன்றாமல், “மாமியார் கிட்ட வம்பு இழுப்போம்”, என்று நினைத்து கொண்டு பார்வதியை தேடி போனாள்.
மித்ராவை கண்டதும் பார்வதி முறைத்தாள்.
“என்ன அத்தை முறைக்கிறீங்க? நான் என்ன உங்களுக்கு முறை பெண்ணா?”
“ஏய் எதுக்கு டி என்கிட்ட வந்து வம்பு இழுக்குற? நீயா வம்பு பேசிட்டு, அப்புறம் நந்தினி கிட்ட என்னை மாட்டி விடுவ. எனக்கு தேவையா?”
“உங்க பையனை விட நீங்க உஷாரு தான் அத்தை. அது சரி எங்க அம்மான்னா அவ்வளவு பயமா உங்களுக்கு”
“அவ ஒன்னும் உன் அம்மா இல்லை. உன் அம்மா ஊருல இருக்கா. இங்க இருக்குறது என்னோட நாத்தனா நந்தினி. நீ அவளை அம்மான்னு சொல்றதே எனக்கு பிடிக்கலை”
“இதை அப்படியே போய் நந்தினி அம்மா கிட்ட சொல்றேன் சரியா?”
“ஐயோ தாயே வாயை மூடு மா. அப்புறம் என்கூட சண்டை போட ஆரம்பிச்சிருவா. அவ சட்டுன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டான்னா எனக்கு மனசே ஆறாது”
“நீங்க ரொம்ப கிரேட் அத்தை. யாரும் இப்படி நாத்தனா மேல பாசம் வச்சிருக்க மாட்டாங்க. கூட பிறந்த உங்க தம்பியை பகைச்சிக்கிட்டு, நேர்மை தான் முக்கியம்னு இருக்கீங்க பாத்தீங்களா? உங்களை பத்தி நான் கேள்வி பட்ட உடனே உங்களுக்கு நான் விசிறி ஆகிட்டேன். அதனால என்னோட அத்தைக்கு பரிசா ஒன்னு கொடுக்க போறேன்”, என்று சொல்லி விட்டு பார்வதியின் கன்னத்தில் முத்தத்தை பதித்தாள்.
“ச்சி, என் கன்னத்தை எச்சி பண்ணிட்டு இருக்க? உன் பாசம் எல்லாம் வேண்டாம். போ இங்க இருந்து. எனக்கு வேலை கிடக்கு”, என்றாள் பார்வதி.
“அது எப்படி நீங்க சொல்லலாம்? நான் என்னோட அத்தைக்கு எத்தனை முத்தம் வேணும்னாலும் கொடுப்பேன். இப்ப இன்னொன்னு கொடுக்க போறேன்”, என்று சொல்லி பக்கத்தில் வந்தாள்.
“ஏய் கிட்ட வந்த சூடு வச்சிருவேன். போடி அங்குட்டு”
“இப்ப நீங்க என்னோட முத்தத்தை வாங்கலைன்னா, அப்புறம் அதோ வராரே உங்க பிள்ளை. அவருக்கு கொடுத்துருவேன் பாத்துக்கோங்க”, என்று அங்கு வந்து கொண்டிருந்த பார்த்திபனை கை காட்டினாள் மித்ரா.
“யாரு நீ தான? அவனுக்கு நீ முத்தம் கொடுக்க போறியா? நீ அப்படி மட்டும் கொடுத்து பாரு, உன்னை கொன்னே போட்டிருவான்”, என்று பெருமையாக சொன்னாள் பார்வதி.
“யாரு உங்க பிள்ளை என்னை அடிப்பாரா? ஆன்னு வாய் பிளந்துட்டு நிற்பார்”
“அதெல்லாம் கிடையாது. அடி பிச்சிருவான்”
“வேண்டாம் அத்தை. என்கிட்ட பந்தயம் கெட்டாதீங்க”
“பந்தயம் னா பந்தயம் தான். அவன் உன் செவுட்டில் ஒரு அடி வைக்கிறானா இல்லையான்னு பாரு?”
“அதெல்லாம் செய்ய மாட்டார். பாக்கலாமா?”
“பாக்கலாம்”
“அம்மா என்னோட வெள்ளை சட்டை எங்க மடிச்சு வச்சிருக்க?”, என்று கேட்டான் பார்த்திபன்.
சரியாக அந்த நேரம், அவன் கன்னத்தில் தன் இதழ்களை பதித்தாள் மித்ரா.
திகைத்து விழித்தாலும் “இப்ப அவ கன்னத்தில் ஒரு அடி வைக்க போறான்”, என்று நினைத்து அவனையே பார்த்தாள் பார்வதி.
“ஆ”, என்று வாய் பிளந்து அதிர்ச்சியாக நின்றான் பார்த்திபன்.
அவனுக்கு முத்தம் கொடுத்து விட்டு நிமிர்ந்த மித்ரா, “என்ன அத்தை? உங்க பையன் என்னவோ செய்வாருன்னு சொன்னீங்க? இப்ப நீங்க ஆன்னு வாய் பிளந்துட்டு நின்ன மாதிரி நிக்குறாரு. அவர் கிட்ட கேளுங்க. நான் பேங்குக்கு கிளம்ப போறேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
அங்கு இருந்த தோசை கரண்டியை எடுத்த பார்வதி, “எடு பட்ட நாயி, அவ கன்னத்தை கடிச்சிகிட்டு இருக்கா. நீ மெய் மறந்து நின்னுட்டு இருக்கியோ?”, என்று கேட்டு கொண்டே முதுகில் நாலு அடி கொடுத்தாள்.
“எம்மா அவ கன்னத்தை கடிக்கவே இல்லைம்மா”, என்று சொல்லி இன்னும் ரெண்டு அடியை பெற்று கொண்டான்.
“அவளை சப்புன்னு நாலு அடி வைப்பன்னு பாத்தா, வாயை பொளந்து கிட்டு இருக்க?”
“நல்லா ஆசையா ரசிக்கும் போது அடிக்க தோணுமா? இந்த அம்மாக்கு மூளையே இல்லை“, என்று நினைத்து கொண்டு, “பொம்பளை பிள்ளையை எப்படி அடிக்கன்னு தான் அமைதியா இருந்தேன் மா. இப்ப சொல்லிட்டல்ல. இரு இப்பவே போய் அவளை எப்படி அடிச்சிட்டு வரேன்னு பாரு“, என்று கிளம்பினான் பார்த்தி.
“நீ ஆணியே புடுங்க வேண்டாம். எப்படி அடிச்சேன்னு தான் பாத்தேனே. இங்க பாரு பார்த்தி. அவ கிட்ட கொஞ்சம் உஷாரா இரு. உன்னையே வளைச்சிருவா. என்ன என் வாழ்க்கையோ? சே, இத்தனை வருசமா உங்க அப்பனை காவல் காக்க வேண்டி இருந்தது. இப்ப உன்னை எல்லா பொண்ணுங்க கிட்ட இருந்தும் காவல் காக்க வேண்டி இருக்கு. எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம்“, என்று சொல்லி கொண்டே, “பாட்டி துணியோட உன் துணியை வச்சிட்டேன் போல. அங்க போய் பாரு உன் சட்டையை“, என்று சொல்லி விட்டு வேலையை பார்த்தாள்.
இருவரும் எல்லாரிடமும் சொல்லி விட்டு பேங்க் கிளம்பி போனார்கள்.
நேராக பேங்கில் போய் வண்டியை நிறுத்தினான் பார்த்திபன்.
அவனுடன் சிரித்து கொண்டே நடந்து போனாள் மித்ரா.
பேங்க் மேனேஜர் முன்பு இருவரும் அமர்ந்திருந்தார்கள்.
“எப்படி இருக்க பார்த்தி? ஆமா இது யாரு?”, என்று மித்ராவை பார்த்து கேட்டார் மேனேஜர்.
“நல்லா இருக்கேன் சார். இது என்னோட மாமா பொண்ணு”, என்று பதில் சொன்னான் பார்த்திபன்.
“ஒரு நிமிசம் இருங்க. ஹெட் ஆபிஸ்க்கு ஒரு போன் பேசிட்டு வரேன்”, என்று எழுந்து போனார் மேனேஜர்.
“பரவால்லயே அத்தையோட சொந்த கார பொண்ணுல இருந்து, மாமா பொண்ணுன்னு உங்க மனசுல இடம் பிடிச்சிட்டேனே”, என்று சிரித்தாள் மித்ரா.
“நீ தான அன்னைக்கு கவலை பட்ட? அதான்”, என்று சிரித்தான் பார்த்திபன்.
“நான் ஒண்ணும் கவலை படலையே”
“அப்படியா நம்பிட்டேன். அதை விடு. நீ எதுக்கு அம்மா முன்னாடி முத்தம் கொடுத்த?”
‘அப்ப முத்தம் கொடுத்தது பிரச்சனை இல்ல. அத்தை முன்னாடி கொடுத்தது தான் உங்களுக்கு பிரச்சனையா?”, என்று அவனை வாரினாள் மித்ரா.
“என்ன சொல்ல?”, என்று அவன் விழிக்கும் போதே மேனேஜர் உள்ளே வந்தார்.
“நேத்து அப்பா கிட்ட எல்லாம் பேசிட்டேன் பார்த்தி. அப்புறம் நீ என்ன கடை போட போற?”, என்று கேட்டார் மேனேஜர்.
“இங்க இருக்குற எங்க இடத்துல பூச்சி மருந்து கடை, அப்புறம் உரம் எல்லாம் வைக்கலாம்னு யோசிச்சேன். இங்க அந்த மாதிரி கடை எதுவும் இல்லை. லோன் கிடைச்சிருமா சார்?”
“ஹ்ம்ம் கண்டிப்பா கிடைச்சிரும் பார்த்தி. இப்ப பேப்பர்ஸ் எல்லாம் வந்துரும். அதுல கை எழுத்து போட்டுட்டேன்னா, அப்புறம் ஒரு வாரத்தில் பணம் வந்துரும். ஆனா வட்டி மட்டும் சரியா கட்டிரனும்”
“சரிங்க சார்”, என்று அவன் சொல்லி முடிக்கும் போது “ஒரு நிமிசம் சார்”, என்று ஆரம்பித்து இங்கிலீஷில் பேச ஆரம்பித்தாள் மித்ரா.
அவளை புரியாத பார்வை பார்த்தார்கள். அடுத்து அந்த மேனேஜரும் அவளிடம் இங்கிலீஷில் பேச ஆரம்பித்தார்.
“என்ன பேசுறாங்க?”, என்று தெரியாமல் விழித்தான் பார்த்திபன்.
பேசி முடித்த பின் “இல்லை பார்த்தி இந்த லோன் உனக்கு கிடைக்காது. நான் அப்பாகிட்ட பேசிக்கிறேன்”, என்றார் மேனேஜர்.
அவள் லோன் கிடைக்க விடாமல் செய்தது மட்டும் புரிந்தது. “ஏன் இப்படி செஞ்சா?”, என்று நினைத்து கொண்டு “என்ன ஆச்சு சார்?”, என்று கேட்டான் பார்த்தி.
“சும்மா தான் பா. சரி கிளம்புங்க. எனக்கு வேலை இருக்கு”, என்று சொல்லி விட்டு தன் வேலையை பார்க்க ஆரம்பித்தார் மேனேஜர்.
கோபத்தை அடக்கி கொண்டு வெளியே வந்தான். அவருக்கு நன்றி சொல்லி விட்டு, அவன் பின்னே வந்த மித்ரா “அடுத்து எங்க பார்த்தி போறோம்?”, என்று கேட்டாள்.
“ஹ்ம்ம் தொங்க போறோம். ஒழுங்கா வாயை மூடிட்டு வண்டில ஏறு”, என்று கத்தினான் பார்த்திபன்.
“எதுக்கு இவ்வளவு கோபம் பார்த்தி?”
“கொலை வெறில இருக்கேன். மூடிட்டு ஏறு டி”, என்று சொல்லி விட்டு வண்டியை கிளப்பி விட்டான்.
காதல் தொடரும்….