மழைத்துளி 17
பரணியோடு விக்ரம் வீட்டிற்கு வந்த வரு விக்ரமின் நினைவில் அமைதியாக வர , அவளது அமைதிக்கு காரணம் கனி என்று எண்ணிக் கொண்ட பரணி அவளை சமாதானப் படுத்தும் விதமாக பேசிக் கொண்டே வந்தார்.
அனைத்திற்கும் பதில் பேசாது தலையை தலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தாள்.
அவர் அறியவில்லை ,
‘மோகம் வந்ததும், மௌனம் வந்ததை ‘
பார்த்த பரணிக்கு வருத்தமாகிப் போயிற்று வீட்டிற்கு வந்ததும் தன் கணவரிடம் புலம்பித் தள்ளி விட்டார்.
இன்பராஜும் ‘அப்படியா ., அப்படியா, ‘ என்று மட்டும் கேட்டுக் கொண்டிருந்தார் . படுக்கையை உதறிக் கொண்டே , லேப்டாப்பில் வேலை செய்துக்கொண்டிருந்தவரிடம் ,
“என்ன அப்படியா அப்படியனுட்டு… எங்கம்மா செய்றது சரியேயில்ல … நானே எங்கண்ணன அப்படி இப்படினு பேசி மனச கரைச்சு இங்க வர வச்சுருக்கேன் … கல்யாணம் வரைக்குமாவது பேசாம இருங்கனு சொல்லிட்டு வந்துருக்கேன் . சின்ன புள்ளய என்ன சொல்லி வருத்தப்படுத்தினாங்களோ … என் மருமக என்னையப் போல நல்லாப் பேசுறானு நினைச்சேன். ஆனா இப்போ கலகலனு நல்லா பேசிட்டு இருக்கிற புள்ள வாயே பேசாம அமைதியா இருக்கு…, இதுல ப்ரீக்குட்டிய வேற அங்க கட்டிக் கொடுக்கிறோம் …நல்ல வேளை அவ ஒரு வாரம் தான் இங்க இருப்பா அப்புறம் அமெரிக்கா போயிருவா…..”
“ஆமா… ஆமா” என்ற இன்பராஜிடம் ,
“இப்பக்கூட ஏன் மா அண்ணன் பொண்ண டார்ச்சர் பண்றனு கேட்டா …., நான் இப்படித்தான் நாளைக்கு உன் மவ இங்க வந்தாலும் சேலையதான் கட்டணும்னு சொல்றாங்க …..”
“ஏங்க உங்களுக்குத் தெரியுமா , நான் நம்ம வீட்டுக்கு கல்யாணம் ஆகி வர்ற வரை பாவாடை சட்டை , இல்ல தாவணி தான்… அதுல இடுப்பு தெரியுதோ , முன்னால ஒதுங்கிட்டோனு அதை இழுத்து விடுறதுல தான் பாதி கவனம் , இதுல எங்கம்மா பாளையங்கோட்டைலயே தினமும் சேலைக் கட்டுற காலேஜ்க்குத் தான் அனுப்புனாங்க…. கீழ விழாம இருக்க நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும் … நம்ம வசதிக்கு ட்ரஸ் போடுறதுல என்னத் தப்பு ….சும்மா திட்டிக்கிட்டு இருக்காங்க .”
“ஓ” என்றவர் வேலையைப் பார்க்க , இன்பா அருகில் வேகமாக வந்த பரணி , லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு ,
“நான் புலம்பிட்டு இருக்கேன் …நீங்க அமைதியா இருக்கீங்க … உங்க அப்பாக்கூடப் பிறந்த தங்கச்சி தானே….. மாமாவ கொஞ்சம் எங்கம்மாட்ட சொல்லச் சொல்லுங்க….”
இன்பா திரும்பி மனைவியைப் பார்த்தவர் , “பரணி நீ திட்டுறது உங்கம்மாவ … நான் ஏதாவது சொன்னா … நான் எங்கம்மாவ என்ன வேணாலும் சொல்லுவேன் …நீங்க எப்படி பேசலாம்னு சண்டைக்கு வருவ… அமைதியா இருந்தாலும் சண்டைக்கு வர … எங்கத்தை இப்படித்தான்னு தெரிஞ்சப் பிறகு என்ன செய்ய சொல்ற … அது தான் நீ எல்லாருக்கும் சேர்த்து வச்சுப் பேசுறியே அது போதும் … ”
எழுந்து மனைவியின் தோளில் கைப்போட்டவர் ,” என் பொண்ணு எந்தங்கச்சி மாதிரி … அங்க போனதும் எங்கத்தைக்கு தக்க அவ மாறிக்கலயா… அது போல நம்ம ப்ரீக்குட்டியும் அட்ஜெஸ்ட் பண்ணிக்குவா…” என்றவர் மனைவிக் காதுக்கருகில்,
“எந்தங்கச்சி கல்யாணத்துல தான் உன்னையப் பார்த்தேன் . மெட்ராஸ் பொண்ணுங்களா பார்த்த எனக்கு தாவணி கட்டிட்டு நின்ன நீ தான் மனசுல பச்சக்குனு பதிஞ்ச …. நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் சுடிதார் போட்டுக்கோனு சொல்லிக் கூட நீ மாறல… காரணம் நான் உனக்கு புடவை தான் அழகாருக்கனு சொன்னதால … ” என விஷம புன்னகையுடன் கூற , வெட்கத்துடன் அவரை தள்ளி விட்டு நகர்ந்த பரணி ,
“அதெல்லாம் இல்ல … எ… எனக்கு பழகிப்போச்சு அதுதான் காரணம்….மகள கல்யாணம் பண்ணிக் கொடுக்கப் போறோம் … இப்ப போய் பேச்சப் பாரு… ”
” எனக்கு பேரன் பேத்தி வந்தாக் கூட பேசுவேன் பரணி … ப்ரீக் குட்டிக்கும் மருமகன் அப்படி சொல்லிட்டாரோ என்னமோ … உன்னையப் போலவே என் பொண்ணும் சேலையக் கட்டி நடந்துட்டுருக்கா.” என சிரிக்க , போலிக் கோபத்தோடு ,
“இப்ப எதுக்கு இந்தப் பேச்சு ….”
பலமாகச் சிரித்தவர் , “அதுதான் பரணி, நம்ம பிள்ளைங்க வளர்ந்துட்டாங்க , அவங்களுக்கு தெரியும் எங்க எப்படி நடந்துக்கனும்னு … அதனால சரி..சரினு போயிட்டே இருப்போம்… கல்யாணம் முடியறவரை தானே அதுக்கப்புறம் எல்லாரும் அவரவர் வேலையைப் பார்க்க கிளம்பிடுவோம் .அதுவரை அத்தைய அவங்க போக்குல விடுங்க …. மாமா இருந்தா அவருகிட்ட பேசிட்டு இருப்பாங்க … இல்லாததால இப்படி நம்ம கிட்ட அவங்க ஆதங்கத்த வெளிப்படுத்துறாங்க.. சரி தூங்கு , அண்ணன் மட்டும் சென்னைக்கு கிளம்புறார். ஆதியும் இல்ல நானும் அப்பாவும் தான் இங்க வேலைகள் பார்க்கணும்.” என்றவாறு படுத்துக் கொண்டார்.
அங்கு வித்யாவுடன் அறையில் படுத்திருந்தவளும் ,
” வித்யா புதன்கிழமை எல்லாரும் கல்யாண புடவை எடுக்கப் போறோம்னு பெரியம்மா சொன்னாங்க… நாம எல்லாரும் போவோம் தானே…..” என்ற வருவிடம்,
அரவிந்தும் வருவான் என்ற நினைவில் சிவந்த முகத்தோடு ,
“ஆமா வரு…. நாமனா நாம மட்டுமில்ல இந்த ஊர்ல முக்கால்வாசிப் பேர் வருவாங்கனு அம்மா சொன்னாங்க , யாரெல்லாம் வருவாங்கனு பேசிட்டு இருந்தப்போ கவனிச்சேன்.
“ஓ … அப்ப எனக்கு இங்க போட்டுக்கிற போல பாவாடை ,சட்டை தாவணிலாம் செலக்ட் பண்ணித் தருவியா… பாட்டி ரொம்ப ஆசைப்படுறாங்க ….”
“ஹேய் எடுக்கலாம் … ஆனா இப்பலாம் அது கம்ஃபர்ட்டா இருக்காது டி ஏதாவது விசேஷம்னா போடுவோம்.”
“இல்ல வித்யா பாட்டி மட்டும் சொன்னா பரவாயில்லயே, இங்க நிறைய பேர் என்னோட ட்ரஸ்ஸ விமர்சிக்கிறாங்கடி ….” மனதினுள் விக்ரமின் வார்த்தைகள் வர , அது வாயிலும் வந்தது .
“ஊருக்கு தகுந்தாப் போல நாமளும் மாறிக்குவோம்…”
“போடி … சினிமால மட்டும் தான் கிராமத்து பொண்ணுங்க தாவணி கட்டிட்டு வரது போல காட்டுறாங்க , இங்கேயே பிறந்து , இங்கேயே படிக்கிற நம்ம ஈஸ்வரியப் பாரு , சுடிதார் , ஜுன்ஸ் டாப்ஸ்னு இருக்கா….”
” என்னவோ பாட்டி என்னைய குறை சொன்னாலும் பரவாயில்லயே, உலகத்திலயே இல்லாத எங்கம்மா தான் அடிக்கடி திட்டு வாங்குறாங்க … அம்மாவ சொன்னா அப்பாவுக்கு கோபம் வருது … அப்புறம் ரெண்டு பேரும் சண்டைப் போட்டுக்கிறாங்க…. அதுதான் அவங்க எதிர்பார்ப்ப நானாவது பூர்த்தி செய்துக்கிறேன்.”
“வரு… டோன்ட் ஃபீல் … பார்த்துக்கலாம்” என்று சமாதானப்படுத்தினாள்.
மறு நாளிலிருந்து அரவிந்த் தங்கைமார்களை கோவிலுக்கு அழைத்துச் சென்றான். ஆம் சாருலதா , அமுதா அவர்களோடு இன்னும் உறவில் உள்ள சிறுவர்கள் , கூடவே வித்யாவும் கிளம்பினாள்.
கோவில் வந்து இறங்கியவன் வருவும் அமுதாவும் படித்துறை அருகே செல்லவும் ,சாருவிடம் சொல்லி சிறுவர்களை கடைக்கு அழைத்துச் சென்று தின்பண்டங்கள் வாங்கிக் கொடுக்கச் சொல்லி , வித்யாவை யாரும் பார்த்தால் தெரியாதபடி கைப்பிடித்தழைத்துச் சென்று பிரமாண்ட ஆலமர மறைவில் அமர்ந்துக் கொண்டான்.
” எல்லாரும் தேடப் போறாங்க … ” என பயத்திலும் வெட்கத்திலும் வித்யா சொல்ல ,
“தினமும் நீ இங்க வரும் போது என்னப் பண்ணுவ , மற்றவங்க என்னப் பண்ணுவாங்க எல்லாம் எனக்கு அத்துப்படி …தினமும் உன்னைப் பத்தி அம்மு சொல்றத கேட்கிறதுக்காகவே அவளுக்கு ஃபோன் பண்ணுவேன்….” எனப் புன்னகைத்தவன்,.எந்தங்கச்சிக்கு பிள்ளையாருனா உயிர். அங்க டெல்லில, அவ ஃபிரன்ட்ஸ் கணபதி பப்பா கணபதி பப்பானு சொல்லி அவர் மேல ரொம்ப பக்தி , எப்படியும் அவ ஸ்லோகம் சொல்லி வேண்டுதல் முடிச்சு வர நேரமாகும் … அந்தக் கொஞ்ச நேரம் தான் நமக்கான நேரம் கேண்டி … சோ… நம்மளப் பத்திப் பேசுவோம்…. என்ன முடிவு பண்ணியிருக்க படிக்க….”
இப்படியாக அரவிந்தும் வித்யாவும் தங்கள் சந்திப்புகளை திலீபனின் திருமணம் வரையிலும் நடத்திக் கொண்டனர் என்றால் , வரு விக்ரமை நேரில் காணும் ஆவலை, ஆசையை நிறைவேற்றும்படி பிள்ளையாரிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.
விக்ரமை சந்திக்கும் முன் அவன் தன் தங்கைகளிடம் வீடியோ காலில் பேசும் போது கண்டுக்கொள்ளாது ஒதுங்கிய வரு , இப்போதெல்லாம் அவன் பேசும் நேரத்தில் அங்கு தான் இருப்பாள். அவன் காணமுடியாது மறைவில் இருந்து அவனை , அவன் பேச்சைக் கண்டு ரசிக்க ஆரம்பித்தாள்.
பெரும்பாலும் தன் வேலையைப் பற்றித்தான் அவன் பேச்சிருக்கும் , தன் கனவு லட்சியம் அனைத்தும் அவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளும் விக்ரம் , சங்கீதாவும் கட்டிடக்கலை சம்பந்தமாகப் படிப்பதால் அவளிடம் தன் கருத்துக்களைக் கூறி அவள் சொல்லும் யோசனைகளையும் ஏற்றுக் கொள்வான்.
“வாவ்… விக்கி உன் பிஸ்னஸ் மேல உனக்கு இவ்வளவு லவ்வா … சீக்கிரம் வா விக்கி ஐ மிஸ் யூ … “. இப்படி விக்ரமனைப் பற்றிய அனைத்து தகவல்களையும் அவர்கள் வீட்டினர் மூலம் பொதுவாக கேட்பது போல் கேட்டுத் தெரிந்துக் கொண்டாள்.