ஜெய் ஸ்ரீ ராம்
EPI-30
மது சக்தியை பார்த்தது பார்த்தது போலே நின்றிருந்தாள். இவர்களின் இந்த பிரிவினால் யெல்லாம் சக்த்தியின் தோற்றத்தில் எந்த மாற்றமும் வந்து விட வில்லை. முன்பை விட இன்னும் வசீகரமாய் மாறி விட்டிருந்தான்.
ஆனால் அவன் மனதில் பெரும் மாற்றம் வந்து விட்டிருந்தது என்னவோ உண்மை.
மற்ற அனைவரும் அதிர்ச்சியாய் வாயிலை நோக்க, கைதட்டிக் கொண்டே முகம் முழுவதும் புன்னகையோடு மதுவை நெருங்கினார் . அக் கல்லூரியின் நிறுவனர்.
“நான் கூட சக்தி சொல்லும்போது சின்ன பொண்ணா இருக்கியே!! சமாளிப்பியானு யோசித்தேன். சக்தியோட முடிவு தப்பில்லை என்று நிரூபிக்கற மாதிரி , இங்க இருக்கிற அத்தனை பேரும் உன்ன தப்பானவளா பார்த்தாலும் அதை பத்தி கவலைபடாமல் அதேசமயம் உன்னோட சுயமரியாதையும் காப்பாத்திட்டு கண் கலங்காம எதிர்த்து நிக்கிறயே!! இதுவே சொல்லுது நீ ஆளப்பிறந்தவ தான்னு”
சக்தியை நோக்கி திரும்பி “எவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தையும் உன் மனைவிய நம்பி ஒப்படைக்கலாம். ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் “என்று சிரித்து விட்டு பின் தன்னை புரியாமல் நோக்கும் பிரின்சிபல் மற்றும் பேராசிரியர்களை நோக்கியவர் .
மீட் மிஸ்டர். சக்திப்ரியன் என்று சக்தியின் கல்லூரியின் பெயரைக் கூறி விட்டு துணை வேந்தர் மற்றும் பங்குதாரர் என்றவர். ” என்னோட சர்விஸ்ல நான் பார்த்து வியந்த மாணவன் . அப்படின்னா சக்தியைத் தான் சொல்லுவேன்.
எம்பிஏ முடித்து விட்டு சேத்துல இறங்கி விவசாயம் பண்ண போறேன்னு சொல்லும் போது நான் நம்பலை . ஆனால் அதை அவர் நிரூபித்துக் காட்டும் போது நான் அசந்து போய்ட்டேன் . அதோட படிச்ச படிப்பையும் விடாமல் அமெரிக்கால கொஞ்சநாள் ஒர்க் பண்ணிட்டு இப்போ திரும்பவும் இயற்கை விவசாயம் பண்ணிட்டு இருக்காரு.
இவரோட மனைவி தான் மதுஸ்ரீ அவங்க காலேஜ்ல சேர்மன் சீட்டில் உட்காரும் முன்னே ஒரு எக்ஸ்பீரியன்ஸ் காக நம்ம காலேஜ்ல ஒர்க் பண்றாங்க, ” என்று அறிமுகப்படுத்த,
அந்த அறையில் அப்படி ஒரு நிசப்தம் பின் திரும்ப” நம்ம காலேஜ்ல ஒர்க் பண்ண வந்தவங்கள, அவமானப் படுத்துற மாதிரி இருந்த உங்க எல்லாருடைய நடவடிக்கையையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
என்றவர் பிரியாவை பார்க்க , பிரியா மட்டும் இன்றி அங்கிருந்த அனைவரும் பிரின்சிபல் உட்பட மதுவிடம் மன்னிப்பை யாசித்தனர். இவர்களோடு நிறுவனரும் ”
எங்கள் ஸ்டாப்னால் நீங்க பட்ட மன உளைச்சலுக்கு நானும் மன்னிப்பு கேட்கிறேன் மா, வருங்காலத்துல உங்களுக்கு எந்த ஹெல்ப் வேணும்னாலும் தயங்காமல் கேட்கலாம் . ”
மதுவின் ரிஷிகினேஷன் லட்டர் ஐ வாங்கி தன் கையோடு கொண்டு வந்திருந்த எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட்டை அளித்து அவர்களை வாயில் வரை வந்து வழி அனுப்பினார்.
இதுதான் சக்தி வந்ததிலிருந்து வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சென்ற நிமிடம் வரை தன்னை அலட்சியமாய் ஏளனமாய் பார்த்தவர்களை மரியாதையை பார்க்க வைத்துவிட்டான் .
மது கல்லூரியை விட்டு வெளியேறும் கடைசி நொடியில். நேற்று நான் சொன்ன மாதிரி எனக்கு ஒரு பிரச்சனைனு . நான் சொல்லாமலே தெரிஞ்சுகிட்டு உனக்கு நான் இருக்கேன்னு வந்து நின்னாரு பார்த்தியா, என்று பார்வையாலே பிரியாவிற்கு உணர்த்தி விட்டிருந்தாள்.
கல்லூரியை விட்டு கிளம்பிய சக்தியின் காரில் ஒரு அசாத்திய அமைதி நிலவியது. எப்போதும் அவனை சீண்டி கொண்டு இருக்கும் மது இன்று அமைதியாய் அமர்ந்திருந்தாள்.
கணவனைப் பற்றிய புரிதல் வந்த பிறகு அவன் எது செய்தாலும் சரியாக இருக்கும் என்ற பக்குவமும் சேர்ந்து வந்து விட்டிருந்தது. அதோடு ஒரு பெரிய தயக்கம் அவளின் மனதில் குடிகொண்டு இருந்தது . அதனால் அவளால் சகஜமாக பேச முடியவில்லை.
இவளின் மௌனத்தை கண்டு கொண்டாலும் சத்தியும் வாய் திறந்து எதுவும் பேசவில்லை. அவளிடம் அட்ரஸ் கூட கேட்காமல் சரியாய் அவளின் ஹாஸ்டல் வாயிலில் கார் நின்ற உடன் சக்தியின் பார்வை அவளை ஊடுருவ,
இந்த முறை எப்போதும் போல் உன் விழிகளின் மொழி என்னவோ என்று கேட்டு வைக்காமல். அவன் விழிகளின் மொழியை புரிந்தவளாய் அறைக்கு சென்று உடமைகளை பேக் செய்து வார்டனிடம் சொல்லிவிட்டு வெளியே வர,
மிகவும் கஷ்டமாக இருந்தது நேற்றுவரை எப்போதடா கணவன் வந்து அழைத்துச் செல்வான் என்று இருந்தவளுக்கு , இப்போது இங்கிருந்து செல்ல கஷ்டமாக இருந்தது.
மனித மனமே இப்படித்தானே நம்மிடம் ஒன்று இருக்கும் வரை பெரியதாய் எண்ண மாட்டோம். அதை விட்டுப் பிரிகிறோம் எனும் போது மிகவும் வேதனை படுவோம்.
மதுவும் அப்படியே !! அதுவும் வருணியை போன்று ஒரு சுயநலமில்லா நட்பு இனி தன் வாழ்நாளில் கிடைக்குமா என்று தெரியவில்லை. அவளிடம் சொல்லாமல் போவது வேறு மிகவும் வலித்தது. கணவனிடம் கேட்டால் நிச்சயம் அவள் பணிபுரியும் இடத்திற்கு அழைத்துச் செல்வான். ஆனால் கேட்க மனமில்லை . காரில் ஏறியதும் கண்மூடி அமர்ந்து விட்டாள். காரும் உடனே கிளம்பியது.
அனால் மது அவள் கூறாமலே அவள் மனதை படிக்கும் திறன் உடையவன் அவள் கணவன் என்பதை மறந்து விட்டிருந்தாள் . கிளம்பிய சிறிது நேரத்திலேயே ஓரிடத்தில் கார் நிற்க,
மது என்னவென்று விழி திறந்து பார்த்தாள். வருணி பணிபுரியும் மருத்துவமனை. அவளால் தன்னவனை பார்வையால் மெச்சாமல் இருக்க முடியவில்லை .
வேகமாக இறங்கி வருணிக்கு அழைத்தாள் . அடுத்த நிமிடம் வெள்ளை கோட் அணிந்து டக் டக் என்று சத்தம் எழுப்பி கம்பீரமாக நடந்து வந்த பெண்ணை கண்டதும் சக்தியின் மனம் தானே பைந்தமிழிற்கு பொருத்தமாக இருப்பாள் என்று எண்ணியது.
உருவப் பொருத்தம் மட்டும் போதாதே அதையும் தாண்டி மணபொருத்தம் வேண்டுமே!! என்று நினைத்தவன். வருணி” ஹாய் அண்ணா ”
என்றதும் யோசனையைக் கைவிட்டு அவளிடம் புன்னகைத்தான். சிறிது நேரம் அளவளாவி விட்டு கிளம்ப எத்தனிக்கும் சமயம் வருணியும் மதுவும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு நிற்க, எங்கு வந்தாலும் பூனைக்குட்டி மாதிரி யாரையாவது கட்டிகிட்டே திரியுவா என்று எண்ணியவன்.
மதுவிடம் கார் சாவியை கொடுத்து” காரில் ஒரு பார்சல் வச்சிருக்கேன். போய்க் கொண்டு வா, ”
கணவன் தன்னோடு பேசி விட்ட மகிழ்ச்சியில் தலையசைத்து விட்டு வேகமாய் சென்றாள் . அவள் சென்ற திசையை நோக்கி பார்த்தவன். வருணியிடம் “ரொம்ப தேங்க்ஸ் மா, அவளுக்கு ஹாஸ்டல் லைப் எல்லாமே ரொம்ப புதுசு.
அவளை பத்திரமா பார்த்து கிட்ட, இந்த 10 மாசமா அவ ஹாப்பியா இருந்ததற்கு காரணம் நீதான். ”
வருணி “என்ன அண்ணா நீங்க, என் பிரண்டு நான் பார்த்துக் கேட்டேன். அதுக்கு போய் தேங்க்ஸ் சொல்லுவீங்களா, நீங்க ரெண்டு பேரும் ஹாப்பியா இருந்தா எனக்கு அது போதும்” என்று புன்னகைத்தாள்.
“நிச்சயமா சந்தோசமா இருப்போம் என்று கூறி புன்னகைத்துவிட்டு அவளின் வேலையை பற்றி பேச ஆரம்பிக்க , மதுவும் அங்கு வந்து சேர்ந்து விட்டிருந்தாள்.
பார்சலை சக்தியின் கையில் கொடுக்க “வருணிட்ட குடு” என்று சக்தி சொல்லவும் மதுவும் மகிழ்ச்சியாய் அவளிடம் நீட்டினாள். இது எல்லாம் வேண்டாம் என்று வருணி உறுதியாய் மறுக்க,
“பிரிச்சு பாரு பிடிக்கலன்னா எங்ககிட்டே குடுத்துடு என்று சக்தி இலகுவாய் கூறியதும் வருணி, மது இருவரும் சேர்ந்தே பிரித்தனர் .
அதிலிருந்த பொருளைக் கண்டு வருணி தான் இருக்கும் இடத்தையும் தன் பொறுப்பான பணியையும் மறந்து , மதுவை கட்டிக் கொண்டு அங்கேயே ஒரு குத்தாட்டம் போட்டு விட்டாள் . இருவரும் எப்படி தெரியும் என்பதுபோல் சக்தியை பார்க்க “தமிழ் தான் உனக்கு இது ரொம்ப பிடிக்கும்னு சொன்னா , ”
அந்த பார்சலில் அப்படி என்ன இருந்தது என்றால். . . கண்ணன் குழல் ஊத, அந்த குழலோசையில் மயங்கி ராதா அவன் தோளில் சாய்ந்திருக்க,
அவர்களின் பின்னால் கண்ணனையே பார்த்து நின்றிருந்தது ஒரு பசு. ரேடியத்தால் ஆனா ஒரு ராதாகிருஷ்ணனின் சிலை. வருணிக்கு கிருஷ்ணர் என்றால் மிகவும் விருப்பம் .
அவளிடம் விடைபெற்று கிளம்பி சக்தியின் வீடு வர கிட்டத்தட்ட 5 மணி நேரம் ஆனது. இந்த ஐந்து மணி நேரமும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவே இல்லை. பயணம் ஒருவித அமைதியிலே கழிந்தது. ஒரு வழியாய் வீடு வந்து சேர மதுவை திடீரென்று கண்டதும் காவேரிக்கும் கங்கா விற்கும் கால் பூமியில் படவில்லை
அவளை விட்டு அவர்கள் விலகவே இல்லை. அத்தனைபேருக்கும் அவள் வந்ததில் அவ்வளவு மகிழ்ச்சி. தமிழ் அர்ஜுன் கூட சென்னையில் இருந்து இன்னும் ஒரு வாரத்தில் வருவதாக இருந்தது
அவளை இறக்கிவிட்டு அறைக்குள் சென்றவன் வெளியில் வரவே இல்லை. அவனிடம் போய் பேசு என்று ஒரு மனம் அதட்டினாலும் உண்மையில் பயமாயிருந்தது.
அப்படியிருந்தும் சென்று பேசப் போக அவளைப் புறக்கணித்து சென்றுவிட்டான். இரவு வரையில் காத்திருக்க தோட்டத்து வீட்டில் தங்கி விட்டான். அடுத்து வந்த இரு தினமும் பகலில் கல்லூரி செல்பவன்.
இரவுகளில் தோட்ட வீட்டில் தங்கி விட்டான் . அதுவும் இன்று வருடத்தின் கடைசிநாள் அதோ இதோ என்று புது வருடம் பிறந்து விட்டது. உலகமே இந்த நிமிடத்தை கொண்டாட,
இரவு ஒரு மணி ஆகியும் அவளை வாழ்த்த அவன் வருவது போல் தெரியவில்லை. உண்மையில் தன்னை வெறுத்து விட்டானோ! என்று தாள முடியாமல் வேதனையில் துடித்தவள் .
இதற்கு மேல் ஒரு நிமிடம் கூட அவன் இல்லாமல் கடக்க முடியாது என்று தோன்றவும் வீட்டினரிடம் கூறாமல் தோட்டத்திற்கு சென்று விட்டாள் .
அங்கு சென்று சேர ஆன அடுத்த பத்து நிமிடமும் 10 யுகம் போல் ஆனது.
மூன்றாம் பிறையை வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்த அவனை நோக்கி ஓடியவள் அவனைக் கட்டிக்கொண்டு நெஞ்சில் முகம் புதைத்தாள் . அடுத்த நொடி தன்னிடமிருந்து பிரித்து கீழே தள்ளி விட்டு இருந்தான் அவளின் ஆருயிர் கணவன்.
அவனிடமிருந்து இந்த கோபத்தை எதிர்பார்த்து வந்ததால் இதைப் பெரிதாக எண்ணாமல் மீண்டும் கட்டியணைக்க , மீண்டும் பிடித்துத் தள்ளி விட்டான். கீழே விழுந்ததில் உண்டான காயத்தையும் வலியையும் பொருட்படுத்தாமல் திரும்பவும் அவனிடமே சரண்புக,
ஒரு கட்டத்தில் அவனே அமைதியாகி, ஊர் எல்லையில் காவல் காக்கும் அய்யனாரை போல் விரைத்துக் கொண்டு நின்றிருந்தான்.
அதனை உணர்ந்தவள் நெஞ்சிலிருந்து முகத்தை நிமிர்த்தி அவனை முத்தமிட முனைய , அடுத்த நொடி அவளின் கன்னம் தீப்பற்றியது போல் எரிந்தது. ஆம் அவளை அறைந்திருந்தான்.
உடனே அவளின் கன்னத்தை குளிர் நீரில் கழுவி விட்டு , “ரொம்ப வலிக்குதா , இந்த மாதிரி நடந்து விடுமோ என்று பயந்து தானடி ரெண்டு நாளா உன் கண்ணில் படாமல் இருந்தேன். “என்று புலம்ப ,
மது அதை பொருட்படுத்தாமல் மேலும் முத்தமிட வர அவளிடம் இருந்து ஒரு நொடி விலகி நின்றான்.
பார்ரா அய்யனார் ரொம்பத்தான் முறுக்கிட்டு நிக்கிறாரு , ஆண்டவா எப்படி இவன கரெக்ட் பண்ணுவேன். கொஞ்சம் மனசு வச்சி மலையை இறக்கி விடு என்று அவசர வேண்டுதல் வைத்து.
திரும்பவும் அவனிடம் நெருங்க , கையை உயர்த்தி அவளை தடுத்து “வீட்டுக்கு கிளம்பு” என்று உரும ,
“இப்போ எதுக்கு ஓவரா பண்றீங்க, நான் பண்ணது தப்புத்தான் ஆனா இந்த மாதிரி பேசாம இருக்காதிங்க எனக்கு ரொம்ப வலிக்குது. என்று தன இதயத்தை சுட்டி காட்டி உறைக்க,
“குட் ஜோக் “என்று வாய்விட்டு சிரித்தவன். “உன்னால எப்பவும் எனக்கு தான் வலி பேசாமல் வீட்டுக்கு போ , எவ்ளோ நேரம் என் கோபத்தை கண்ரோல் பண்ணமுடியும்னு தெரியலை “என்க
“என்னால உங்களுக்கு வலியா நீங்க தான போனு அணுப்பி விட்டீங்க, தெரியாமல் தான் கேக்கறேன் . அப்படி வலிக்கிற மாதிரி உங்களை என்ன பண்ணேன். “என்று சண்டையை வளர்க்கும் விதமாய் கேட்டுவைக்க,
அவ்வளவு தான் சக்தி பொங்கி விட்டான் . எவ்வளவு நாள் மனதை அடக்கி வைக்க முடியும். அவனையே அறியாமல் மனதின் பாரம் அனைத்தும் வெளியில் வர துவங்கியது.
“வலிக்கிற மாதிரி என்ன பன்னியா ஆறு வருஷமா உன்னையே நெனச்சு உனக்காக ஏங்கி , நீ வேணும் வேணும்னு சொல்ற மனதின் உணர்வுகளை அடக்க பெரும்பாடுபட்டு அதுவும் முடியாமல் தண்ணி அடிச்சு, உயிரா நினைக்கிற உன் வாயால குடிகாரன் என்ற பட்டம் வாங்கி,
அதை விட அந்த ப்ரியாவை நினைத்து நான் குடிக்கிறேன் என்று சொன்னப்போ எப்படி வலிச்சது தெரியுமா, அதைத் தாங்க முடியாமல் உன்ன அடிச்சி ஹாஸ்பிடல்ல படுக்க வச்சி உறவுகள் யெல்லாம் கொலைகாரன் ரேஞ்சுக்கு பார்க்கும் போது எவ்வளவு வலி அதையும் விட,
என் வாயாலேயே டிவோர்ஸ்க்குடுக்கறேன்னு சொல்ல வைத்து , அம்மா அப்பா விட்டு சொந்த ஊரை விட்டு மூன்று வருஷம் வனவாசம்.
இங்க வந்த பின்னாடி என் வீட்டில், என் ரூம்ல, என் ட்ரெஸ உடுத்தி கிட்டு , கழுத்துல நான் கட்டின தாலிய போட்டுட்டு,
அதுவும் தூக்கத்தில் கூட என் தொடுகையை உணர்ந்து ஒவ்வொரு நிமிஷமும் நீ என் மனசுல இருக்கடான்னு உணர்த்தும் போது. உன் கிட்ட வர முடியாமல் துடித்த போது எனக்கு எப்படி வலிச்சுசு தெரியுமா,
இதுக்கு மேல அன்னைக்கு நைட்டு பீச்சுல , நான் சென்னையில இல்லைன்னு தான் உனக்கு தெரியும் ஆனால் நான் கட்டிப்பிடிச்சதும் முத்தமிட்டதும் நான் தான்னு உணர்ந்து என் கிட்டே வந்து கேட்ட பாரு ,
அப்போ உண்மையா நான் பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை. நான் உன் மேல வச்சி இருக்க அளவு காதல் நீயும் என் மேல வச்சிருக்கே !!அந்த நொடி எப்படி இருந்தது தெரியுமா , அப்படியே ஜிவ்வுன்னு வானத்துல பறக்குற மாதிரி அதுக்கு அப்புறம் எல்லாம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத பொன்னான நாட்கள்
அப்பவும் நீ ஆசைப்பட்டதை எல்லாம் உனக்கு கிடைக்க நினைச்சது தப்பா, அதற்கு அடிக்கடி என்ன கேட்ட பிடிக்கலையா பிடிக்கலையானு ,
பிடிக்காதவன் இப்படித்தான் அவன் பெத்த புள்ள மாதிரி எல்லாம் பார்த்து பார்த்து செஞ்சிகிட்டு. கெஞ்சி , கொஞ்சி சோறு ஊட்டி தூங்க வைப்பானா ,
அப்புறம் தான்டி ஹைலைட்
நம்ம கல்யாண ஆன அன்றைக்கும் சரி நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்த பின்னாடி இன்றைக்கும் சரி எவ்வளவு ஈசியா டைவர்ஸ் தரேன்னு சொல்றே ,
என்னால அப்படி ஒன்னு யோசிக்க கூட முடியல, நம்ம வாழ்ந்த பின்னாடியும் அந்த வார்த்தை எவ்வளவு வலிக்குது தெரியுமா, அப்படியே செத்துடலாம் போல இருக்கு என்று கண்கலங்கி ஆக்ரோஷமாய் கத்தி அவளை உலுக்கியவன்.
என் இதயத்த ரத்தம் வழிய வழிய குத்தி வெளிய எடுத்தது போல் வலிக்குது . உனக்கு மாடர்னா டிரஸ் பண்ணி கையில பொகேவோட வந்து ஸ்டைலா ப்ரொபோஸ் பண்ணா தான் பிடிக்கும் இல்ல,
இந்த கிராமத்துகாரன் , காட்டான் , ஐயனாருடைய காதல் புரியல இல்லை. தயவு செஞ்சி இங்க நிக்காத போடி என்று அவளை விலக்கி விட்டு தோப்புக்குள் நுழைந்து விட்டான்.