செழியன் சரிந்ததையும் அவர் தோளில் கத்தி குத்தியிருந்ததையும் பார்த்தவுடன் அனைவரும் பரபரப்பானார்கள்.
விஷாலி அலறத் தொடங்குவதற்கு முன் தேவி அவளைப் பிடித்துக் கத்தவிடாமல் தடுத்தாள்.
தேவையின்றி அனைவரின் கவனமும் அவர்கள் மீது விழுவதை அவள் விரும்பவில்லை. வேலைநாள் என்பதால் அருங்காட்சியகத்தில் அதிக கூட்டமின்றிதான் இருந்தது.
”விக்ரம் நீ செழியனக் கவனி…”
தேவி அவசரமாகக் கூறிவிட்டுச் சட்டென ஓடத் தொடங்கினாள்.
அவளது பார்வை எதிர்ப்புற வராண்டாவில் நின்றுகொண்டிருந்தவன் மீது இருந்தது. அவன் முகத்தை மறைத்திருந்தான்.
அவன்தான் கத்தியை எறிந்தவன் என்பதை அனைவரும் சட்டெனப் புரிந்துகொண்டார்கள்.
தேவி வருவதைப் பார்த்ததும் அவனும் ஓடத் தொடங்கினான்.
விக்ரமும் அருணும் ஒரு கணம் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர், விக்ரம் சட்டெனத் தேவியைத் தொடர்ந்து கத்தி வீசியவனைப் பிடிக்க ஓடினான்.
அருணும் பட்டியும் செழியனை நெருங்கிப் பிடித்துக்கொண்டனர்.
[the_ad id=”6605″]
பட்டி செழியனின் தோளில் சொருகியிருந்த அந்தச் சிறிய கத்தியை மெள்ள உருவி எடுத்தான். அது அதிக ஆழம் சென்றிருக்கவில்லை.
விஷாலியும் செழியன் அருகில் குனிந்து அமர்ந்தாள்.
செழியன் மெள்ளக் கண்களைத் திறந்து பார்த்தார், இறுக்கமான முகத்துடன் ஒரு புன்னகை புரிந்துவிட்டுத் தனது கைக்குட்டையை எடுத்து விஷாலியிடம் நீட்டினார்.
அவள் புரிந்துகொண்டு அதை வாங்கி அவரது கையில் இறுக்கிக் கட்டி இரத்தக்கசிவை நிறுத்தினாள்.
பட்டி அவரது கையில் ஏதோ ஒரு மருந்தைப் போட முனைய, செழியன் ’வேண்டாம்’ என்று தலையசைத்து அவன் கையைச் சற்றே வெறுப்புடன் தட்டிவிட்டார்.
செழியன் மெள்ள எழுந்து நின்றார், அவரது அசைவில் இலேசான தள்ளாட்டம் இருந்தது, அருண் அவரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டான்.
ஆனால், அவரது முகம் மெள்ளத் தெளிவு பெற்றது.
“போலிசுக்கு ஃபோன் பண்ணலாமா?”
விஷாலி அருணைக் கேட்டுக்கொண்டிருக்கும் போதே தேவியும் விக்ரமும் திரும்பி வந்தார்கள்.
“நான் சொல்லிட்டேன்! அவனைப் பிடிக்க முடியல, அவன் எங்க போனான்னே தெரியல, ஆச்சரியமா இருக்கு!”
தேவி இலேசாக மூச்சு வாங்கினாள்.
”அவன் வெறும் நிழல்! உங்களால் நிழலைப் பிடிக்க இயலாது!”
குரல் கேட்டு அவர்கள் திரும்பிப் பார்த்தபோதுதான் அந்த நபர் அவர்கள் அருகில் நிற்பதைக் கவனித்தனர்.
’யார் இவர்? தீடிரென எங்கிருந்து வந்தார்?’ என்ற கேள்வி அனைவர் முகத்திலும் தோன்றியது.
விக்ரம் ஒரு கணம் குழம்பிச் சட்டென அவரை அடையாளம் கண்டுகொண்டான்.
உணவக வாயிலில் நின்றவரும் அவனது படுக்கை அறைக்கே வந்தவரும் இவர்தான்.
’இவர் பேரு என்னவோ சொன்னாரே…’ என்று விக்ரம் நினைவுகூர முயன்றான்.
“என் பெயரைப் பிறகு சொல்கிறேன் விக்ரமா, இப்போது நாம் இங்கிருந்து செல்வது நல்லது!”
அவர் முன்வந்து செழியனுக்கு அருகில் சென்றார்.
செழியனுக்கு அருகில் இருந்த பட்டி அசௌகரியமாய் நகர்ந்துகொண்டான்.
திடீரென்று வந்தவர் செழியனுக்கு அருகில் செல்ல, பட்டி தலையைக் குனிந்தபடியே பின்னால் நகர்ந்துகொண்டான்.
[the_ad id=”6605″]
வந்தவர் செழியனின் கையைப் பிடித்துக் காயத்தைப் பார்வையிட்டார், செழியன் ஏதும் சொல்லாமல் அவரையே வியப்பாய்ப் பார்த்துக்கொண்டு நின்றார்.
அவர் விஷாலி கட்டிய கட்டை அவிழ்த்துவிட்டுச் செழியனின் சட்டையையும் விலக்கி உறைந்தும் உறையாமலும் இருந்த அந்தக் காயத்தின் மீது தனது உள்ளங்கையால் தடவினார்.
இரண்டு மூன்று முறை அவ்வாறு அவர் மெள்ளத் தடவிவிட்டு நகர்ந்து கொண்டார்.
செழியனின் கையில் காயமில்லை. உறைந்த இரத்தக் கறையைத் தவிர கத்தி குத்தியிருந்த காயம் சுத்தமாய் அவர் கையில் இல்லை!
அனைவரும் வியப்புடன் அவரைப் பார்க்க அவர் ’செல்வோமா?’ என்பதைப் போலச் செய்கை செய்துவிட்டு நடக்கத் தொடங்கினார்.
அவரைப் பின் தொடரலாமா வேண்டாவா என்று அவர்கள் தயங்கி நிற்க, செழியன் எதுவும் நடக்காததைப் போலப் பழைய உற்சாகத்துடன் அவரைப் பின் தொடர்ந்து நடக்கத் தொடங்கினார்.
தேவி விக்ரமை ஒரு முறை பார்த்துத் தன் தோளைக் குலுக்கிவிட்டுச் செழியனைப் பின் தொடர்ந்தாள்.
”என்ன டா நடந்துச்சு இங்க?”
அருண் வியப்புடன் கேட்டான்.
“அவர உனக்கு முன்னாடியே தெரியுமா விக்ரம்?”
விஷாலி முன்னால் செல்பவர்களைப் பார்த்துக்கொண்டே கேட்டாள்.
விக்ரம் ’இல்லை’ என்று மெள்ளத் தலையை ஆட்டிவிட்டு நடக்கத் தொடங்கினான்.
பட்டி நின்ற இடத்திலேயே தயங்கி நின்றான், விஷாலி அவனை “வா!” என்று அழைத்துக்கொண்டு சென்றாள்.
அவர்கள் அருங்காட்சியகத்தின் வாசலுக்கு வந்தபோது அங்கு தேவியும் செழியனும் மட்டும் நின்றுகொண்டிருந்தனர்.
”அந்த ஆளு எங்க?”
அருண் தேவியைக் கேட்டான்.
அவள் முகத்தில் இலேசான குழப்பம் இருந்தது.
“தெரியல அருண்… ஆளக் காணோம்! இவரக் கேட்டா இவருக்கும் தெரியல!”
தேவி செழியனைக் கைகாட்டினாள்.
அனைவரின் பார்வையும் செழியன் மீது விழுந்தது.
“அவரு எங்க சார்?”
அருண் அவரைக் கேட்க, அவர் ’யாருக்குத் தெரியும்!’ என்பதைப் போலத் தோளைக் குலுக்கினார்.
“நீங்கதானங்க பின்னாடியே போனீங்க?”
அருண் விடாமல் கேட்டான்.
”ஆமா… ஆனா வாசலுக்கு வந்ததும் நின்னு திரும்பிப் பார்த்தாரு, என் கைல இதைக் கொடுத்தார், நான் வாங்கிப் பார்த்துட்டு நிமிர்ந்தா ஆளக் காணோம்!”
செழியன் தன் கையில் இருந்த அந்தச் சிறிய பட்டுத் துணியைக் காட்டினார்.
தேவி அதை வாங்கிப் பார்த்தாள்.
அதில் என்னவோ எழுதியிருந்தது. என்னவென்று தெரியவில்லை. ஏதோ பழங்கால எழுத்து என்று மட்டும் புரிந்தது.
“இதுல என்ன எழுதியிருக்குனு உங்களால படிக்க முடிஞ்சுதா?”
தேவி செழியனைக் கேட்டபடியே பட்டுத் துணியை விக்ரமிடம் கொடுத்தாள்.
“ம்ம்ம்… நாம தேடுற வாள் எங்க இருக்குன்றதுக்கான துப்பு!”
செழியன் சாதாரணமாகச் சொன்னார்.
அனைவரின் முகத்திலும் சட்டென ஒரு பரபரப்பு வந்தது.
“எங்க இருக்காம்?”
விஷாலி கண்கள் விரியக் கேட்டாள்.
“கட்கஸ்ய நிலையம் மாகாளிப் பட்னம் ”
செழியன் துணியில் இருந்ததைப் படித்துக் காட்டினார்.
”அப்படினா?”
“என்னோட வாள் உஜ்ஜைனில இருக்கு!”
[the_ad id=”6605″]
விக்ரம் பதில் சொன்னதும் அனைவரும் வியப்புடன் அவனைத் திரும்பிப் பார்த்தனர்.
“உனக்கு சான்ஸ்க்ரிட் தெரியுமா?”
தேவி வியப்புடன் அவனைக் கேட்டாள்.
விக்ரமின் முகம் கனவு காண்பவனைப் போல இருந்தது.
“சபாஷ் மிகிரா!”
அவனது வாய் அனிச்சையாக உச்சரித்தது.
“அண்ண்…ண்ணாஆ”
விஷாலி விக்ரமின் தோளைப் பிடித்துக் குலுக்கினாள்.
விக்ரம் கனவு கலைந்து எழுபவனைப் போலத் தலையை உதறிக்கொண்டுவிட்டு அவர்களைக் குழப்பத்துடன் பார்த்தான்.
”எ- என்ன?”
“வாள் உஜ்ஜைனிலயே இருக்கு!”
செழியன் முகத்தில் இலேசான புன்னகை இருந்தது.
“ஓ… எப்படித் தெரிஞ்சுது?”
”நீதான டா சொன்ன!” விஷாலி அவன் தோளில் தட்டினாள்.
“நானா?”
“சரி நாம அடுத்து என்ன பண்ணலாம்?”
அருண் கேட்க, அனைவரும் செழியனைப் பார்த்தனர். செழியன் தோளைக் குலுக்கினார்.
“உஜ்ஜைனி போலாம்… வேறென்ன!”
”அது எங்க இருக்கு?”
“மத்ய பிரதேஷ்ல!” செழியனின் பார்வை பட்டி மீது சென்றது.
“அ- ஆமா!”
அவன் தயங்கிச் சொன்னான்.
”சரி வாங்க போய் நாம எல்லாரும் கிளம்புறதுக்கான ஏற்பாடுகளைச் செய்வோம்!”
அருண் நடக்கத் தொடங்கினான்.
“எல்லாருமா?”
விக்ரம் அவனோடு நடந்துகொண்டே கேட்டான்.
“பின்ன?”
“எல்லாரும் கிளம்பிப் போய்ட்டா இங்க பிசினசலாம் யாருப்பா பார்த்துப்பா?”
விக்ரம் பொய்யான முறைப்போடு கேட்டான்.
“ஆமால்ல… சரி விக்ரம் நீ இங்கயே இரு, நாங்க போய் வாளைக் கொண்டு வரோம்!”
அருண் சாதாரணமாகச் சொன்னான்.
”ஹா ஹா! சிரிச்சுட்டேன், போதுமா?”
விக்ரம் பல்லைக் கடித்துக்கொண்டு சொன்னான்.
“ஆமா, விக்ரம் வந்தே ஆகனும், அதனால நீதான் இங்க இருந்து பிசினிச நல்லாக் கவனிச்சுக்கனும் சரியா, நீ சமர்த்தா இருந்தேனா நாங்க வரப்ப உனக்குக் குச்சிமிட்டாய் குருவிரொட்டிலாம் வாங்கிட்டு வரோம்!”
விஷாலி குறும்போடு சொன்னாள்.
“நாங்கலா? உங்களக் கூட்டிட்டுப் போறதா யாரு சொன்னா மேடம்?”
அவர்கள் மகிழுந்தை நெருங்கியிருந்தனர். விக்ரம் வனப்பாக வண்டியின் மீது சாய்ந்துகொண்டபடி கேட்டான்.
“என்ன விட்டுட்டுப் போய்டுவியா நீ?”
விஷாலி மல்லுகட்டினாள்.
“முதல்ல வண்டில ஏறுங்க, போய்ட்டே பேசுவோம்!”
தேவி கறாராகச் சொல்ல அனைவரும் வண்டியில் ஏறிக்கொண்டனர்.
அருண் ஒட்டினான். வண்டி அடையாறு நோக்கிப் பறந்தது.
வண்டி புறப்பட்டதும் தேவி பேசத் தொடக்கினாள்.
“விஷாலிய விட்டுட்டுப் போக வேண்டானுதான் தோனுது விக்ரம்… அவ பாதுகாப்பும் முக்கியம்!”
தேவியின் முகத்தில் ஒரு தீவிரம் படர்ந்தது.
“வீட்ல செக்யூரிட்டி இருக்கு, அதவிட்டுட்டு வெளியூருக்குக் கூட்டிட்டுப் போறதா பாதுகாப்பு?”
விக்ரம் கேட்க அருணும் “ஆமா ஆமா” என்று வழிமொழிந்தான்.
“கொஞ்சம் யோசிச்சுப் பாரு விக்ரம்… இப்ப அடிப்பட்டது வேணா செழியனுக்கா இருக்கலாம் ஆனா கத்தி வீசப்பட்டது விஷாலியக் குறி வெச்சுதான்!”
“யெஸ், யூ ஆர் கரெக்ட் தேவி!”
அருணின் குரலில் கவலை தொனித்தது.
விக்ரமின் முகம் தீவிர சிந்தனைவயப்பட்டது.
“ஆமா, அன்னிக்கு வீட்ல கூட…”
“விஷாலி மேலதான் தாக்குதல் நடந்துச்சு!”
விக்ரம் முடிக்கும் முன் தேவி முடித்தாள்.
[the_ad id=”6605″]
“எனக்கென்னவோ ரெஸ்டாரண்ட்ல கூட அவங்க குறி விஷாலியாத்தான் இருப்பாளோனு தோனுது!”
தேவி சொல்ல அனைவர் முகத்திலும் கவலை ரேகைகள் படர்ந்தன. விஷாலி முகத்தில் இலேசான அச்சமும் இருந்தது.
“அடப்பாவிகளா… நீதானடா விக்ரமாதித்யன், உன்னவிட்டுட்டு என்னை ஏண்டா கொல்லப் பாக்குறானுங்க?”
விஷாலி அச்சத்தையும் மீறிக் குறும்போடு கேட்டாள்.
தேவி பட்டியை நோக்கிக் கை நீட்ட அவன் அந்தக் கணையாழியை எடுத்துக் கொடுத்தான்.
தேவி அதை வாங்கி விஷாலி முன் நீட்டினாள்.
”ஆமா விஷி, விக்ரம் விக்ரமாதித்யன் அதனால் அந்த மோதிரத்தைத் தொட்டா அவனுக்கு மண்டைக்குள்ள என்னமோ பன்னுது, உனக்கும் ஏன் அப்படி ஆகனும்? உனக்கும் விக்ரமாதித்யனுக்கும் என்ன சம்பந்தம்?”
அருண் பின்பக்கக் கண்ணாடி வழியாகப் பார்த்துக் கேட்டான்.
விஷாலியின் முகத்தில் குழப்பம் படர்ந்தது.
அவளது கை தேவி நீட்டிய மோதிரத்தை நோக்கி மெல்ல நீண்டது, ஆனால் அதைத் தொட அவள் தயங்கினாள்.
வண்டி வேகத்தடுப்பானில் ஏறிக் குலுங்க, விஷாலியின் விரல் அந்தக் கணையாழியை இலேசாய் உரசியது.
விஷாலியின் மண்டைக்குள் மின்னல் வெட்டுகள் பளிச்சிட்டன.
முப்பத்தியோரு பதுமைகளும் கலகலவென நகைத்தன.
பேரரசர் விக்ரமாதித்யரும் அவைகளோடு சேர்ந்து நகைத்தார்.
கோமளவல்லிப் பதுமை கோவமானது.
“ரத்னாங்கீஈஈ…”
கோமளவல்லிப் பதுமை ஆத்திரத்தோடு கத்தியது.
“ரத்னாங்கீஈஈ…”
விஷாலி கத்தினாள்.
செழியன் சட்டென எட்டி தேவி கையிலிருந்த மோதிரத்தைப் பிடுங்கித் தன் கைக்குள் மூடிக்கொண்டார்.
விஷாலி கண்கள் செருக இருக்கையில் சாய்ந்தாள்…
தொடரும்…