“டேய் மச்சான், இன்னைக்காச்சும் அந்த பொண்ணுகிட்ட உன் லவ்வ சொல்லுடா. இதோட நாலு மாசமாச்சுடா. நாமளும் தினமும் இந்த காலேஜ் வாசல்ல வந்து நிக்கிறோம். இப்படியே போச்சு, எனக்கு இங்கேயே ஒரு கடை வச்சிக் குடுத்துருடா. சும்மா இருக்கிறதுக்கு பொழுதாவது போகும்” என்று தினமும் பாடும் திருப்பள்ளி எழுச்சியைப் பாடி கொண்டிருந்தான் சுதாகர்.
வழக்கம் போல அதை தூசு தட்டுவது போல தட்டி விட்டு நின்று கொண்டிருந்தான் கண்ணன்.
அதைக் கண்டு சுதாகர், அவன் கழுத்தை நெறிக்கும் கொலை வெறியுடன் வரவும், “டேய் இன்னைக்கு கண்டிப்பா சொல்லிடுறேன்டா. இவ்ளோ நாள் வேலைக்காக அலைஞ்சிட்டு இருந்தேன். இப்போ தான் ஒரு நல்ல கம்பெனில வேலை கிடைச்சு இருக்கு. இதுக்கு முன்னாடி எந்த மூஞ்சிய வச்சுகிட்டு அவகிட்ட என்னோட காதலை சொல்றதுன்னு இருந்தேன்.. இப்போ சேஃபர் ஸோன் டா” என்றான் கண்ணன்.
“இத தான்டா மச்சான் நீயும் ரெண்டு மாசமா சொல்லிட்டு இருக்க. அத நானும் நம்பி கேட்டுட்டு இருக்கேன் பாரு, என் புத்திய செருப்பால அடிக்கணும். உனக்கு எல்லாம் யாருடா கண்ணன்னு பேரு வச்சா. பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவே, இந்தச் சைத்தானிடமிருந்து என்னை இரட்சிப்பீராக !” என்று கூறவும், வாய்விட்டுச் சிரித்தான் கண்ணன்.
என்னதான் சுதாகர் கண்ணனைத் திட்டினாலும், அவர்கள் இருவரும் பால்ய வயதில் இருந்தே நண்பர்கள். ஒரே பள்ளியில் படித்து, ஒரே கல்லூரியில் பட்டம் பெற்று, இப்போது ஒரே கம்பெனியில் வேலை பெற்ற நண்பர்கள்.
கைக்கடிகாரம் தனது கடமையைச் செவ்வனே செய்து மணி மாலை ஐந்து ஆகிவிட்டது என்று காண்பித்தது. கண்ணன் பரபரப்பானான்.
‘இன்னைக்கு எப்படியாச்சும் அவகிட்ட சொல்லிடணும்’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டவனின் உடலில் எப்பிநெஃப்ரின் வேக வேகமாகத் தனது கடமையைச் செய்ய ஆரம்பித்தது.
அந்த மாலை நேரத்தில், புன்னகை என்னும் வாடாத மலரைச் சூடிக் கொண்டு தனது தோழிகளுடன் கல்லூரியில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள் துர்கா.
துர்கா அப்பொழுது கல்வியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். அவளது தோழிகள் கண்ணனைக் கண்டதும் துர்காவைக் கேலி செய்ய ஆரம்பித்தனர். வெட்கப்பட்டுக் கொண்டே தலையை நிமிர்த்தாமல் சாலை சுத்தமாக இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்து கொண்டே பேருந்து நிறுத்தத்திற்கு வந்தாள் துர்கா.
மற்ற தோழிகள் அனைவரும் தங்கள் சொந்த வாகனத்தில் சென்று விட, துர்கா மட்டும் தனது தமையனுக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள்.
இனிமேலும் சும்மா இருந்தால் எதுவும் நடக்காது என்று அறிந்த சுதாகர், கண்ணனை வேகமாகத் தள்ளி விட, அவன் சுதாரிப்பதற்குள் துர்கா முன் நின்றிருந்தான்.
இது நாள் வரை தூரத்தில் இருந்து பார்த்து விட்டுச் சென்றுவிடும் கண்ணன், இன்று தன் முன் வந்து நிற்பதைக் கண்டு அதிர்ச்சியாகப் பார்த்தாள் துர்கா.
கண்ணன், “அது… வந்து… வந்து… என்ன ஒரு தடவ அண்ணானு கூப்பிடுவீங்களா ?” என்று கேட்டான்.
என்ன சொல்லப் போகிறானோ என்று எதிர்பார்த்து இருந்த துர்கா, சத்தியமாக இப்படி ஒரு கேள்வியை அவனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. தான் கேட்டது சரியா என விளங்காமல் அவனைப் பார்க்கவும், அவளது முக மாறுதல்களை பார்த்துக்கொண்டு இருந்த கண்ணன் இறுதியில்,
“நான் உங்கள மனப்பூர்வமா காதலிக்கிறேன், துர்கா” என்று எப்படியோ கூறிவிட்டான். அதைக் கேட்டதும் இவன் கண்டிப்பாகப் பைத்தியமாகத் தான் இருப்பான் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள் துர்கா.
அதை அவள் முகமே காட்ட, “நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க. ஒருவேளை, உங்க மனசுல என்னை பத்தி எந்த எண்ணமும் இல்லாம இருந்திருந்தா, என்ன உடனே அண்ணானு கூப்பிட்டு இருப்பீங்க. ஆனா, நீங்க அதிர்ச்சியானத பார்த்தப்போ ஏதோ உங்க மனசுல எனக்குனு ஒரு சின்ன இடமாச்சும் இருக்குனு தெரிஞ்சுகிட்டேன். அதான் தைரியமா சொல்லிட்டேன். நீங்க யோசிச்சு மெதுவா நாளைக்கு கூட உங்க முடிவ சொல்லுங்க. இப்போ உங்க அண்ணன் வந்துட்டார்” என்று கூறி விட்டு, வண்டியில் ஏறி சுதாகருடன் கிளம்பிவிட்டான்.
பிறகுதான் அவன் கூறிய விளக்கம் புரிய, வாய்விட்டே சிரித்துவிட்டாள் துர்கா.
சரியாக அதே நேரம் ஸ்ரீதர், அங்கே வந்து, “சாரிடா ஜெயாமா, கொஞ்சம் லேட்டாயிடுச்சு. நீ பிரஷர் குக்கர் மாதிரி கோபத்தோட இருப்பேன்னு பார்த்தா, இப்படி தனியா நின்னு சிரிச்சுக்கிட்டு இருக்க. ஓ மை சிஸ்டர் ! கோபத்தில் மூளை ஏதாவது ஆகிடுச்சா” என்று நக்கல் அடிக்க, அவனைக் கோபமாக முறைத்து விட்டு, வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள் துர்கா.
தான் கூறியதைக் கேட்டும் அமைதியாக இருக்கும் தங்கையை வித்தியாசமாகப் பார்த்துவிட்டு வண்டியைக் கிளப்பினான் ஸ்ரீதர்.
துர்கா மனதில், “இப்படி ஒரு ப்ரபோசலை யாருமே பார்த்திருக்க மாட்டாங்க” என்று நினைத்துச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
******
நினைவு துணுக்கு – 2
கண்ணனும் துர்காவும், தங்கள் கையைப் பிணைத்தவாறு எதிரே நின்று இருந்த அந்தப் பல்லவ சிற்பிகளின் சிற்பங்களைப் பார்த்துக் கொண்டு இருந்தனர். இன்றோடு அவர்கள் தங்கள் காதலைப் பரஸ்பரம் தெரிவித்து… இல்லை… இல்லை… துர்கா கண்ணனின் காதலை ஒத்துக் கொண்டு ஒரு வருடம் ஆகிறது.
என்ன தான் துர்கா கண்ணனைக் காதலித்தாலும், அவள் அவனை வாரத்திற்கு ஒருமுறை கோவிலில் மட்டுமே சந்திப்பாள். துர்காவின் பெற்றோர் அவளை வேலை செய்ய வேண்டாமென கூறி இருந்தும், தான் கற்ற கல்வியை வீணாக்க விரும்பாமல், ஒரு மழலையர் பள்ளியில் சேர்ந்து அன்றலர்ந்த மலர்களாகத் திரியும் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட்டாள்.
கண்ணனுக்கும் அவன் கம்பெனியில் பதவியுயர்வு பெறுவதற்குக் கடினமாக உழைக்க வேண்டி இருந்ததால், இருவரும் வாரத்தில் ஒருமுறை மட்டுமே சந்தித்துக் கொண்டனர். இவர்களோடு எப்போதாவது ஒரு குட்டி பிசாசும் ஒட்டிக்கொண்டு வரும்.
“ஊரான் காதலை ஊட்டி வளர்த்தால் தன் காதல் தானே வளரும்” என்ற நம்பிக்கையோடு சுதாகரனும் சுற்றி வந்தான்.
துர்கா, “கண்ணா இந்த சிற்பங்கள் எல்லாம் ரொம்ப அருமையா இருக்கு. எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதே இல்ல. ஒவ்வொரு தடவையும் இங்கு நிற்கும் போதும், கல்கி எழுதிய சிவகாமியின் சபதம் தான் நினைவுக்கு வருது” என்றாள்.
“அதை அந்த சிவகாமியே சொல்றது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு” என்று கண்ணன் அவளைக் கேலி செய்ய,
“கண்ணா எங்க வீட்டுல எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. நான் நம்மள பத்தி சீக்கிரம் சொல்லிடலாம்னு இருக்கேன்” என்றாள் துர்கா.
கண்ணன், “உங்க வீட்டுல கண்டிப்பா என்ன ஒத்துக்குவாங்க தானே, துர்கா ?” என்று கேட்க, “என் அப்பாவும் அம்மாவும் காதலுக்கு எதிரிகள் கிடையாது, கண்ணா. அவங்க என் விருப்பத்தைக் கேட்காம கண்டிப்பா எதையும் செய்ய மாட்டாங்க. என்ன, நம்மள புரிஞ்சுக்க கொஞ்சம் காலம் ஆகலாம். அதுக்கு கூட அவங்களுக்கு உரிமை இல்லையா ?” என்று கேட்க, கண்ணனும் ஆமோதித்தான்.
பிறகு அன்றைய பயணம் முடிந்து, இருவரும் அங்கிருந்து சென்றனர். இவர்களைப் பார்த்து சிரித்த விதி, தனது விளையாட்டை விளையாட ஆரம்பித்தது.
******
நினைவு துணுக்கு – 3
அன்று ஏதோ தவறாக நடக்கப் போவதாக துர்காவின் மனம் எச்சரித்துக் கொண்டே இருந்தது. இதுவரை இது போல் அவளது உள்ளுணர்வு எச்சரித்த அனைத்தும், நடந்தே இருந்தது. இதைத் தான் ஆங்கிலத்தில் Extra Sensory Power (ESP) என்பர்.
அன்று காலை வழக்கம் போலப் பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீட்டுக்குத் திரும்பும் போது, அவளது கைப்பேசி சிணுங்கியது. கண்ணன் தான் அழைத்து இருந்தான்.
எடுத்துப் பேசிய பொழுது, “துர்கா, நான் சுதாகர் பேசுறேன்மா… இன்னைக்கு கண்ணன் வண்டியில போகும் போது ஆக்சிடென்ட் ஆகிடுச்சுமா…. கொஞ்சம் சீரியஸான நிலைமையில இருக்கான்மா …” என்று அழுதுகொண்டே கூற, துர்காவுக்குத் தனது காலுக்கு அடியில் இருந்த நிலப்பரப்பு திடீரென்று நழுவியது போல இருந்தது.
உடனே அந்த மருத்துவமனையின் பெயரைக் கேட்டு அறிந்து, அங்கு சென்றாள். ரிசப்ஷனில் கண்ணனின் பெயரைச் சொல்லி அவனின் அறையை நோக்கிச் செல்வதற்குள், சுதாகர் எதிரே வந்தான்.
அவன் அருகே செல்ல, “எல்லாம் முடிஞ்சிடுச்சு, துர்கா” என்று அவன் அழுதுகொண்டே கூறிய வரி, அவளது இதயத்தில் அம்பை எய்தது. சிறிது நேரம் அவளுக்குத் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை.
“நான் அவனைப் பார்க்கணும்ணா ! அவன நிக்க வச்சி கேள்வி கேட்கணும்ணா ! என்னைய ஏன்டா இப்படி விட்டுட்டு போனனு கேட்கணும்ணா !” என்று குலுங்கி அழ ஆரம்பிக்க, அவளை சுதாகர் சமாதானப்படுத்தினான்.
“இல்லம்மா… அவனை நீ இப்ப பார்க்க வேண்டாம். அவன் இப்ப பார்க்கிற நிலைமைல இல்ல. அந்த வேதனையை உனக்கு நான் தர மாட்டேன்” என்று கூற, அதைக் கேட்ட துர்கா மயக்கமுற்று விழுந்தாள்.
******
நினைவு துணுக்கு – 4
துர்கா தனது பெற்றோருக்காக தன்னை தேற்றிக்கொண்டு, அவர்கள் பார்த்த மாப்பிள்ளையைத் திருமணம் செய்ய ஒத்துக்கொண்டாள்.
அவள் வாழ்க்கையில் அவள் எப்பொழுதும் மறக்க விரும்பும் அந்த நாள் முடிந்து, ஒன்றரை மாதங்கள் ஆகி இருந்தது. இன்னும் இரு நாட்களில் திருமணம் என்ற நிலையில், அவள் கல்யாண பெண்ணுக்கே உரிய பொலிவு இல்லாமல் இருந்தாள்.
ஆனால், எப்பொழுதும் அவள் உதட்டில் அந்த ஒட்ட வைத்த சிரிப்பு இருந்தது. இனி அது தானே தனது வாழ்க்கை என்று அவளது மனதை மாற்றிக் கொண்டு இருந்தாள் துர்கா.
அன்று திடீரென மனம் மிகவும் அலைப்புறச் செய்ய, கோவிலுக்குச் செல்ல முடிவெடுத்து அம்மாவிடம் அனுமதி பெற்றுச் சென்றாள். பல நாட்களாக மகளிடம் ஏதோ மாற்றத்தை உணர்ந்த சிவகாமி, அது என்னவென்று அறிய முடியாமல் இருந்தார். இன்று அவளே வந்து கேட்கவும், சீக்கிரம் வந்து விடுமாறு கூறி விட்டு அனுப்பி வைத்தார். உடன் ஸ்ரீதரும் சென்றான்.
ஆனால், கோவில் வாசலை அடையும் போது, ஸ்ரீதரை ஸ்ரீநிவாசன் கைப்பேசியில் அழைத்து வேறு ஒரு வேலைச் சொல்ல, “நீ சாமி கும்பிட்டு முடிச்சிட்டு வா, ஜெயா. நான் அதுக்குள்ள ஒரு வேலையை முடிச்சுட்டு வந்துடுறேன் ” என்று கூறிவிட்டுச் சென்றான்.
கோவிலுக்கு உள்ளே சென்று அங்கு இருந்த படியில் அமர்ந்தாள் துர்கா. அவளுக்குக் கொஞ்சம் மன அமைதி ஏற்பட்டதாகத் தோன்றியது.
அங்கிருந்து செல்லலாம் என்று நினைத்து, அவள் எழும்போது அவள் கண்ட காட்சியில் அப்படியே ஸ்தம்பித்து போனாள். தான் காண்பது கனவா நனவா என்று புரியாமல், ஒரு முறைக்கு மூன்று முறை உற்றுப் பார்த்தாள். தூரத்தில் கண்ணனும் சுதாகரும் நடந்து வந்து கொண்டிருந்தனர். கண்ணனின் கொஞ்சம் சிரமப்பட்டு நடப்பது போல் தெரிந்தாலும், முன்னர் பார்த்த மாதிரியே தான் இருந்தான்.
அதன் பின் அவளிடம் அதுவரை இருந்த அதிர்ச்சி விலகி கோபம் பெருக்கெடுக்க, அவனை நோக்கி வேக எட்டுகளை எடுத்து வைத்தாள்.
திடீரென்று தங்கள் எதிரே வந்து நின்ற துர்காவைக் கண்டதும் இருவரின் முகமும் அதிர்ச்சியைக் காட்டியது. பின்னே அவளுக்கு நாளை மறுதினம் திருமணம் என்று தெரிந்து வைத்துக் கொண்டு, இன்று இங்கு வரமாட்டாள் என்று திட்டமிட்டு தானே அவர்கள் வந்திருந்தனர் ?
சுதாகர், “துர்கா” என ஆரம்பிக்கவும், அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் துர்கா.
கோவிலில் அதிகமாகக் கூட்டம் இல்லாததால், யாரும் அவர்களைக் கவனிக்கவில்லை. அவள் அறைந்ததில் இருந்தே அவள் கோபத்தின் அளவு புரிய, சுதாகர் அமைதியானான்.
“இன்னும் ஒரு தடவை நீ பேச ஆரம்பிச்ச, இந்த இடத்துல ரெண்டு பொணம் விழும்” என்றாள் துர்கா.
பின் அவள் பார்வை கண்ணனை ஈட்டியாக துளைக்க, “என்னை மன்னிச்சுடு துர்கா, சுதாகர் அன்னைக்கு உன்கிட்ட சொன்னது ஓரளவுக்கு உண்மை தான். அன்னைக்கு நான் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போராடிக்கிட்டு இருந்தேன். என்னைப் பிழைக்க வைக்கிறதுக்கான எல்லா முயற்சிகளும் வீணா போயிட்டு இருந்துச்சு. நான் பிழைக்க வாய்ப்பு ரொம்ப கம்மியா இருக்குனு டாக்டர்ஸும் சொல்லிட்டாங்க.
அப்படியே பிளைச்சாலும் முன்ன மாதிரி இருக்க முடியுமானு தெரியல. எங்க நான் இறக்குறத உன் கண்ணால பார்த்து நீ ஏதாவது செஞ்சிக்குவியோனு தான் உன்கிட்ட சொல்லல. அதனால நான் முன்னாடியே இறந்து போனதா சுதாகர உன்கிட்ட சொல்ல சொல்லி வற்புறுத்தியது நான்தான். அதே மாதிரி எல்லாம் நடக்க, விதியின் சதியாக ஒரு மாசம் கழிச்சு தான் மறுபடியும் கொஞ்சம் நார்மல் ஆனேன்.”
“நடந்தது எல்லாத்தையும் சுதாகர் என்கிட்ட சொல்லவும் உன்னைப் பத்தி நான் கேட்டப்போ, உனக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிஞ்சிருச்சுனு சொன்னான். இறந்தவன் என்ற நினைவோடே நான் போகலாம்னு முடிவு பண்ணேன் துர்கா. மறுபடியும் உன் வாழ்க்கையில் தேவையில்லாத குழப்பத்தை நான் உருவாக்க விரும்பல. ஆனால், விதி வலியது என்பது எவ்வளவு உண்மையான வரி. கடைசியா ஒரு தடவை நாம வழக்கமா சந்திக்கும் இந்தக் கோவிலைப் பார்க்கத்தான் இன்னைக்கு வந்தோம். ஆனால், இங்க நீ வருவன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல” என்று அனைத்து உண்மையையும் கூறினான் கண்ணன்.
அனைத்தையும் கேட்டு, தன்னைச் சமன்படுத்திக் கொண்ட துர்கா, “இப்போ சொல்லு கண்ணா, உனக்கு என்னைய கல்யாணம் செஞ்சுக்க விருப்பமா ? இல்லையா ?” என்று கேட்டாள். அவள் கேட்ட கேள்வியில் கண்ணணும் சுதாகரும் அதிர்ச்சியுற்றனர்.
******
நந்தினியின் மனதில் ஒவ்வொரு காட்சியாக மாறிக்கொண்டே இருந்தது. இந்த முறை தான் கனவு காண்கிறோம் என்பது போல் இல்லாமல், ஏதோ ஒரு படத்தை நேராகவே சென்று பார்ப்பது போல இருந்தது. உள்ளுக்குள் பெரும் புயலே சுழல, வெளியே சாந்தமாகப் படுத்து இருந்தாள், தனது அறையில் இருந்த கட்டிலில்.
அவளைச் சுற்றி அனைவரும் அமர்ந்து இருக்க, மருத்துவர், “ஒன்னும் இல்ல… ஏதோ ரொம்ப அதிர்ச்சி அடைந்ததால மயக்கம் போட்டு இருக்காங்க… மற்றபடி, ஷீ இஸ் ஆல்ரைட் (She is alright). இப்போதைக்கு கொஞ்சம் தூங்குவதற்கு மட்டும் மருந்து கொடுத்து இருக்கேன். அவங்கள ரெஸ்ட் எடுக்க விடுங்க” என்று கூறிவிட்டுச் சென்றார்.
அறையில் இருந்தப் பொருட்கள் அனைத்தும் உடைந்து இருக்க, அதைச் சுத்தப்படுத்தி விட்டு அனைவரும் அமர்ந்தனர்.
ஆதிக்கு மனதில் குற்றவுணர்வு அரித்துக் கொண்டே இருந்தது. தான் அவளுக்குச் சற்று நிதானமாக கூறியிருந்தால், இவ்வாறு நடந்து இருக்காதோ என்று எண்ணி வருந்தினான். இரு தினங்களுக்கு முன் பட்டாம்பூச்சியைப் போல சுற்றி வந்தவள், இப்போது வாடிய கொடியாகப் படுத்து இருக்கின்றாள். ஆனால், அவன் மனதில் அந்த வருத்தத்தையும் மீறி ஏதோ ஓர் உணர்வு அவனை நிலை கொள்ளாமல் செய்தது.
நந்தினி மேல் இனம் புரியாத அன்பு ஏற்பட்டது. அவள் தனது அத்தையின் மகள் இல்லாவிடினும், அவளை அவன் மனம் சொந்தம் கொண்டாடியது.
நடந்த சம்பவத்தில் முதலில் கீழே இருந்தவர்கள் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. திடீரென்று நந்துமா என்று ஆதி கத்தியது கேட்கவும், அதனைத் தொடர்ந்து பொருட்கள் உடையும் சத்தம் கேட்கவும், அனைவரும் பதறி அடித்துக் கொண்டு மாடிக்கு ஓடி வந்தனர்.
அங்கு இருந்த நிலையைக் கண்டதும் அனைவரும் அச்சப்பட, துர்கா நந்தினியைக் கண்டு அழ ஆரம்பித்தார்.
அந்தச் சூழ்நிலையில் இருந்து முதலில் தன்னை மீட்டுக் கொண்ட ஆரியன் தான் மருத்துவரை அழைத்தான்.
பின்னர், ஆதித்யன் நந்தினியை எழுப்ப முயற்சிக்க, அது முடியாமல் போகவே, நாடியைப் பரிசோதித்தான். அது அவளது இதயத்துடிப்பைக் காட்ட, அப்போது தான் அங்கிருந்த அனைவருக்கும் உயிர் திரும்பியது.
பின்னர், மருத்துவர் வந்து சென்ற பிறகு, துர்கா சிவகாமியின் மடியில் தலையை வைத்து அழ ஆரம்பித்தார். சிவகாமிக்கு அழும் மகளைக் கவனிப்பதா இல்லை மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் பேத்தியைக் கவனிப்பதா என்று புரியவில்லை.
மெல்ல மகளின் முதுகைத் தட்டிக் கொடுத்து, அவளை அமைதிப்படுத்தினார் சிவகாமி. துர்கா அழுதுகொண்டே, தங்கள் திருமணம் நடந்த விதத்தைக் கூறினார்.
“அன்னக்கு கோவில்ல கண்ணனைப் பார்த்ததும் என்னால என்னோட சந்தோஷத்த கட்டுப்படுத்த முடியலமா. ஆனா, அதே நேரத்துல நான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டு அது நாளை மறுதினம் என்ற நிலைமையில இருக்குறப்ப, எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலமா. ஆனால், கண்ணன் உயிரோட இருக்குறது தெரிஞ்சும், நான் வேற ஒருத்தர கல்யாணம் செஞ்சுக்கிட்டா நான் மூணு பேரோட வாழ்க்கையைக் கெடுத்திருப்பேன். அதுக்கப்புறம் வேற வழியில்லாம தான் நான் அடுத்த நாள் கண்ணனோடு ரிஜிஸ்டர் ஆபீஸில் பதிவு திருமணம் செஞ்சுக்கிட்டேன். ஆனா, நான் அன்னைக்கு செஞ்ச பாவம் என்னை இன்னும் விடலமா. அது என்னோட குழந்தையையும் சேர்த்து பாதிக்குது” என்றாள் துர்கா.
உடனே ஸ்ரீதர் ஓடிவந்து, “என்னை மன்னிச்சுடு ஜெயாமா. அன்னைக்கு உன் பக்க நியாயத்த சொல்ல விடாம, உன்னை நாங்க துரத்திட்டோம்” என்று கூறி கண்கலங்கினார்.
ஸ்ரீநிவாசனும் சிவகாமியும் ஒரே நாளில் பல வருடங்கள் வயது கூடினாற் போலக் காட்சி அளித்தனர்.
அன்று காலையில் இருந்து நடந்த சம்பவங்களால் அவர்களது மனம் உளைச்சலுக்கு ஆளானது. சிறிது நேரம் கழித்து துர்கா கண்ணனை நோக்கி எதையோ சொல்ல அவர் மிகவும் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டார்.
பின்னர் மெதுவாக, “மாமா ! அத்தை ! நான் இப்போது சொல்லப் போற விஷயம் உங்களுக்கு வேதனை தரலாம். ஆனால், இதை உங்ககிட்ட இருந்து மறைக்கிறது எனக்குச் சரினு தோனலை” என்று கூறியவர், சற்று தயங்கி, “நந்தினி எங்களுக்குப் பிறந்த குழந்தை இல்லை” என்றார்.
அதைக் கேட்ட அனைவர் முகமும் பேய் அறைந்தார் போல் ஆனது.
உடனே ஸ்ரீதர், “என்ன சொல்றீங்க கண்ணன் ? நந்தினி உங்க பொண்ணு இல்லையா ? அப்புறம் எப்படி அவ ஜெயா மாதிரியே இருக்குறா ?” என்று கேட்டார்.
கண்ணன், “எங்களுக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷமா குழந்தை இல்லாம இருந்ததால, துர்காவுக்கு மிகுந்த மன வேதனை ஏற்பட்டுச்சு. அந்த நிலை தொடர்ந்தால் அவளோட மனநிலைமை மோசமாகிவிடும்னு டாக்டர் சொன்னதால, அவள் மனதை மாற்ற, நாங்க ஒரு குளிர் பிரதேசத்திற்கு போனோம். அங்கு தான் எங்களுக்கு நந்தினி கிடைச்சா. நந்தினி இருந்த பெட்டியைத் தொட்டதும், ஏதோ ஒரு பேரொளி ஏற்பட்டது” என்று தன் சந்தேகத்தை மறைத்து மற்றவற்றை கூறினார்.
அங்கிருந்த மற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும், ஆரியனுக்கும் ஆதித்யனுக்கும் அனைத்தும் விளங்கியது. இதுவரை ஆங்காங்கே வெறும் புள்ளிகளாக இருந்தவை, இப்பொழுது கோடுகளால் இணைக்கப்பட்டு ஒரு உண்மையை வெளிக்கொணர்ந்தன.
******
இடம் : இன்டர்ஸ்டெல்லர்
தனது திட்டத்தைச் சரியாகத் தீட்டிய பின் பொசய்டன், அடுத்து அந்தப் புதிய விமானத்தின் இறுதிக் கட்ட வேலையை முடிக்கத் தொடங்கினார். தனது சக்திகள் அனைத்தையும் பயன்படுத்தாமல் பூமிக்குச் சென்று சேர்வதற்கு போதுமான அளவிற்கு விமானத்தைத் தயார் செய்தார். ஓரிரு நிமிடங்களில், அவரது விமானத்தில் ‘Obstruction ahead’ என்ற எச்சரிக்கை செய்தியை உரக்கக் கூற ஆரம்பித்தது. பொசய்டன் அதைப் பொருட்படுத்தாமல், தனது காரியத்தில் கண்ணாக இருந்தார்.
மற்றொரு கயா கிரக விமானத்தில் இருந்தவர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. தங்களை மோதுவது போன்று தலைமை மந்திரியின் வாகனம் வந்தால், அவர்களும் என்ன தான் செய்வார்கள் ?
அவரைத் திரும்பத் தாக்குவதா அல்லது தாங்கள் அவரது தாக்குதலில் இறப்பதா என்று இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
உள்ளே இருப்பது நிச்சயமாக பொசய்டன் தானா என்று தெரிந்து கொள்ள அந்த வாகனத்துடன் தொடர்பு ஏற்படுத்தி, “தலைமை மந்திரி பொசய்டன் வாழ்க ! தங்களது விமானம் எங்கள் வாகனத்தை அழிப்பது போல் வந்துகொண்டிருக்கிறது. நாங்கள் பேரரசர் ப்ரொமேத்தியஸின் கட்டளையின் படி பூமியில் உள்ள உயிரினங்களைச் சிறைபிடிக்க வந்துள்ளோம். தாங்கள் தான் அங்கு உள்ளீர்களா ?”என்ற கலபதி கேட்க,
பொசய்டன் தனது திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய நேரம் நெருங்கி விட்டதை உணர்ந்து, அந்தச் சிறிய விமானத்தைத் தயார் நிலையில் வைத்து விட்டு, தொடர்பில் இருந்த கலபதியிடம், “நான் பொசய்டன் தான் கலபதி. விமானத்தின் கட்டுப்பாடுகள் செயலிழந்து விட்டன. இன்னும் அரை நிமிடத்தில், அந்தப் பழுதை நீக்கி விடுவேன். அதுவரை, சற்று பொறுங்கள்” என்று கூறிவிட்டு வாகனத்தின் வேகத்தை முழு வேகத்திற்கு மாற்றினார்.
உடனே சென்று தனது புதிய விமானத்தில் அமர்ந்தவர், “Eject” (வெளியேறு) என்ற பொத்தானை அழுத்தியதும், விமானம் அந்த விண்வெளி வாகனத்தை விட்டு வெளியே வந்து பறக்கத் தொடங்கியது. சில வினாடிகளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட அந்த இடமே ஒளி வெள்ளமானது.
******
கிரகம் : பூமி
இடம் : International Organisation for Alien Research, பெங்களூர்
ஆங்கிலச் செய்தி சேனலில் ஒரு பெண்மணி பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்ததன் தமிழாக்கம் :
“இதுவரைக்கும் நாம் அனைவரும் சந்திரகிரகணம், சூரியகிரகணம் போன்ற விஷயங்களைத் தான் பார்த்திருக்கிறோம். ஆனால், இன்று முதல் முறையாக ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதனுடைய ஒளி நம் பூமியிலும் சில இடத்தில் இருந்தவர்களுக்கு தென்பட்டதால், அது கண்டிப்பாக நமது கிரகத்துக்கு அருகில் தான் ஏற்பட்டிருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இது நமது செயற்கைக்கோள்கள் தானா அல்லது வேறு ஏதாவது ஒன்றா என்பதைப் பற்றி எந்த விதமான அதிகாரப் பூர்வமான செய்தியும் வரவில்லை. அது போல் தங்களது செயற்கைக்கோள் தான் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று எந்த விண்வெளி ஆராய்ச்சியகமும் பொறுப்பேற்கவில்லை. அப்படியென்றால் இது வேற்று கிரகத்தினரால் ஏற்படுத்த பட்டதா அல்லது இது இரண்டு எரிகற்கள் மோதிக்கொண்டதால் ஏற்பட்டதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது உங்கள் …” என்று தன் பெயரையும், அந்தச் சேனலின் பெயரையும் கூறி விட்டுச் சென்றார் அந்தப் பெண்மணி.
அதன் பின்னர் அந்த வெடிப்பையே மறுபடியும் போட்டுப் போட்டு காண்பித்தனர்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆல்ஃபா, “நமக்கு வந்த செய்திப்படி ஒரே ஒரு விண்வெளி வாகனம் மட்டும் தான் வருவதாக இருந்தது. ஆனால், இங்கே இரண்டு வாகனங்கள் அல்லவா ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டுள்ளது. அப்படியென்றால், அந்த மற்றொரு வாகனத்தில் வந்தவர்கள் நமக்கு உதவி செய்கின்றனரா ? நாம் இந்த இக்கட்டில் இருந்து தப்பித்தோம் என்று சந்தோசப்படுவதா அல்லது ஒரு சிறிய விமானம் அந்த மோதலில் இருந்து தப்பித்து நம் பூமிக்கு வந்ததை எண்ணி வருத்தப் படுவதா என்று தெரியவில்லை” என்று மற்ற பீட்டாக்களிடம் கூறியவர்,
“இது வெறும் சிறு எரிகற்களின் மோதலால் ஏற்பட்ட விளைவுதான் என்று மக்களிடம் கூறுமாறு அனைத்து விண்வெளி ஆராய்ச்சியகங்களுக்கும் தகவல் அனுப்புங்கள். ஆனால், நமது மற்ற ஆல்ஃபாக்களிடம் மட்டும் உண்மையைக் கூறுங்கள். அவர்களுக்கும் ஏற்கனவே தெரிந்திருக்கும். இருந்தாலும் அனுப்புங்கள். முக்கியமாக மிஸ்டர். ஆதித்யன் – ஐ நான் உடனே சந்திக்க விரும்புவதாக தகவல் கூறுங்கள். நாம் நமது ஆயுதங்களைச் சோதனை செய்ய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தனது பர்சனல் செக்கரட்டரியிடம் கூறினார்.
******
கிரகம் : கயா
இடம் : வெலாரிஸ் கோட்டை
ப்ரொமேத்தியஸ் அந்தச் சிற்பத்தை உடைத்த பின்பும் கோபம் மட்டுப்படாமல் இருக்க, மிக வேகமாகக் குறுக்கும் நெடுக்குமாக நடக்க ஆரம்பித்தான்.
பின்பு, “இத்தனை வருடங்களாக அடைந்து கிடந்த சிற்றரசர்கள் திடீரென்று எப்படித் தப்பினார்கள். அந்த டிராகன்கள் இரண்டையும் சமாளிக்க வேண்டுமானால், எப்படியும் அவர்கள் சக்தியைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது” என்று யோசித்தவனுக்கு, அப்போதுதான் தான் செய்த செயல் நினைவுக்கு வர, சிரித்துக்கொண்டே,
“கத்தி பல ஆண்டுகள் தீட்டப்படா விட்டாலும், அதன் கூர்மை குறையாது என்பதை நிரூபித்துவிட்டாய், வல்கன். ஆனால், இத்தனை ஆண்டுகளாக நான் திட்டமிட்டபடி நடக்கப்போகும் யாகத்தில் உங்கள் பங்கும் முக்கியமானது தான். எப்படியும் தாங்கள் என்னைத் தேடித் தானே வரவேண்டும். அப்பொழுது பார்த்துக் கொள்கிறேன்” என்று மனதுக்குள் எண்ணியவன் அந்த வீரனுக்கு விடை கொடுத்து அனுப்பினான்.
அதன் பிறகுத் தனது திட்டத்தில் சிறு மாறுதல்களைச் செய்து, அவன் மீண்டும் பிரம்ம கிரந்தத்தைப் பார்க்க ஆரம்பித்தான்.
அப்பொழுது பொசய்டனைக் கண்காணிக்க ஏற்பாடு செய்திருந்த காவலன் வந்து, “பேரரசர் ப்ரொமேத்தியஸ் வாழ்க ! ஒரு அவசரச் செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்” என்றான்.
ப்ரொமேத்தியஸ் தலையசைத்ததும், “பேரரசே ! தலைமை மந்திரி பொசய்டன் சென்ற விமானம், தங்கள் உத்தரவின் கீழ் பூமிக்கு சென்ற விமானத்தின் மீது மோதி இரண்டு விமானங்களுமே அழிந்து விட்டன. ஆனால், அந்த இடத்தில் அமைச்சர் பொசய்டனின் சடலம் கிடைக்கவில்லை. ஆதலால், அவர் ஒரு விபத்து ஏற்படுவது போல் போக்கு காட்டிவிட்டு வேறு எங்கோ தப்பித்து உள்ளார் என்று மட்டும் தெரிகிறது” என்று கூறினான்.
அவனைப் போகுமாறு சொல்லிவிட்டு, மனதிற்குள், “உன்னிடம் இதை முன்னரே எதிர்பார்த்தேன் பொசய்டன். நீ சிறிது தாமதமாகத் தான் வேலை செய்கிறாய். என்னை எதிர்த்துக்கொண்டு செல்வதற்கு ஒரு காரணம் இருக்கும் என்றால், அது நிச்சயம் சீரஸின் குழந்தை தொடர்பு உடையதாகத் தான் இருக்கும்.
இந்த ப்ரொமேத்தியஸுக்காக நீ இவ்வளவு கஷ்டப்பட்டு அந்தக் குழந்தையை கயா கிரகத்துக்கு அழைத்து வருவதற்கு ரொம்ப நாள் எடுக்கும். அதற்குள்ளாக உன்னை வரவேற்பதற்கு நான் ராஜ மரியாதையுடன் காத்துக் கொண்டிருப்பேன், பொசய்டன் !” என்று எண்ணிச் சிரித்து விட்டு, சதுரங்க விளையாட்டில் தனது காயை நகர்த்தினான்.