4.21- முடியாது கால்டன்!
அழுத விழிகளோடு கயலை அதே இடத்தில் அதே போன்றதொரு வானவில் வருகை புரிந்திருந்த வேளையில் முதன்முறையாய்ப் பார்த்த தருணத்திற்கும் மீண்டும் தற்போது பார்க்கும் தருணத்துக்கும் இடையே விதி எத்தனை விளையாட்டுக்களை அவர்கள் வாழ்வில் நிகழ்த்தியிருந்தது!!
அன்று யாரென்றே தெரியாமல் இருந்த இந்த இந்தியப் பெண் இன்று தன் உயிராகவே மாறிப்போவாள் என்று கால்டன் கனவிலும் நினைத்துப் பார்த்திருப்பாரா!!
அன்று கயல் கால்டனைப் பார்க்கவே இல்லை! இன்று அவரை விட்டுக்கொடுக்கவோ பிரியவோ வழியே இன்றி தவித்து நிற்போம் என்று கயல் தான் நினைத்திருப்பாளா!!
வாழ்க்கை, இந்த இருவேறு இதயங்களை, இரும்புக் கதவுகள் கொண்டு அடைத்து வைத்திருந்த உள்ளங்களை, ஒன்றை ஒன்று தட்டித் திறந்து உள்நுழைத்துவிட்டிருந்த மாயாஜாலத்தை நிகழ்த்தியிருந்ததே!
கால்டனைக் கண்டதும் காதல் பெருக்கெடுத்தது தலைவிக்குள்ளே! ஆனால் கால்டன் தன் கடுப்பினால் அவளையும் கடுப்பாக்கி விட்டுவிட்டார்.
“வீட்டை விட்டுப் போக நீயா எந்த அதிகாரத்தில முடிவெடுத்துருக்க? நான் சம்மதிக்கனும். காண்ட்ராக்ட்டை நான் என்னிக்கு முடிச்சு உன்னை அனுப்பறேனோ அது வரை நீ என் கண்ட்ரோல் தான். தெரியுமா தெரியாதா?” என்று கால்டன் கோபமாய் மிரட்டிக் கேட்டார்.
காதலைப் பற்றிப் பேசுவார் என்று கயலின் எதிர்பார்ப்பு கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த நிலையில்
காண்ட்ராக்டை அவர் இழுத்ததும் கோபமானாள் தன்மானக்காரியான கயல்.
“குழந்தைக்காகத்தான் காண்ட்ராக்ட்! அதுவே போனதுக்கு அப்பறம் உங்க காண்ட்ராக்ட் காலாவதி ஆகிடுச்சு. இனிமே உங்களால என்னை எந்த விதத்திலையும் கண்ட்ரோல் பண்ண முடியாது.”
“யாரு சொன்னது? மறுபடியும் குழந்தைக்கு முயற்சி பண்ண என்னால உன்னை நிர்பந்திக்க முடியும்.”
“அப்படி காண்ட்ராக்ட்ல எந்த பாயிண்டும் இல்லையே. நீங்க கொடுத்த பணம் ஒரு முயற்சிக்கு தான். செயற்கை முறைங்கறதினால கரு கலைய வாய்ப்பு இருக்குன்னு தெரியும். அப்படி ஆகுற பட்சத்தில இன்னொரு முயற்சிக்கு நான் விருப்பப்படலைன்னா நம்ம காண்ட்ராக்ட் முடிஞ்சிதுன்னு தான் போட்டிருக்கு. இல்லையா! நீங்க என்னை நிர்பந்திக்க முடியாது கால்டன்.”
“சரி காண்ட்ராக்டை விடு! என்னைப் பத்திக் கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டியா?”
“முதல்ல காண்ட்ராக்டைக் காரணம் காட்டி மிரட்டி சொன்னிங்க. இப்ப உங்களை நினைக்க சொலுறீங்க! உங்களைப் பத்தி என்ன நினைக்கறது??!!”
“குழந்தையும் போயிடுச்சு. நீயும் உடனே போனா எனக்கும் வலிக்குமில்ல! நீ வீட்டை விட்டு போகறதை என்னால ஒத்துக்க முடியாது. தடுக்க என்ன வேணுமின்னாலும் செய்வேன். கேஸ் கூட போடுவேன்”
“கேஸா!! என்னன்னு?”
“அது… அது… என்ன வேணுமின்னாலும் சொல்லுவேன். பணம் வாங்கிட்டு ஏமாத்தப் பாக்குறன்னு சொல்லுவேன். தீர்ப்பு வரது வரை என்வீட்டுல இருக்கனுமின்னு ஸ்டே வாங்குவேன். தெரியுமா?!”
“ஓ… உங்களால ஆனதை செய்யுங்க! நான் வீட்ட விட்டு போகறது போகறது தான்.”
இருவருமே கோபத்தின் சிகரத்தில் ஏறிவிட்டதைப் பார்த்த தெரெக் தலையில் அடித்துக்கொண்டார். அலிக்கு ஒன்றுமே புரியவில்லை. சாலையில் இருவரும் அப்படி காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கயலின் திமிர் கால்டன் அறியாததா என்ன? முடிந்ததைச் செய் என்று சொல்லிவிட்டு முறைத்துக்கொண்டு தன் முன் நின்றவளை எப்படி வழிக்குக் கொண்டு வருவதென்றே விளங்கவில்லை அவருக்கு.
ரூட்டை மாற்ற முடிவு செய்தார். அடக்குமுறை கயலிடம் பலிக்காது என்று புரிந்து கொண்டு அதன் எதிர் வழியாம் அன்பைக் கையில் எடுத்தார்.
“இதோ பாரு! உனக்கு எதிரா என்னால எதுவும் செய்ய முடியாதுன்னு உனக்கு நல்லா தெரியும். நான் இப்படியெல்லாம் பேசினதுக்கு காரணம் உன்னைப் பிரிஞ்சு என்னால இனிமே இருக்கவே முடியாது. ஐ ஆம் க்ரேஸிலி இன் லவ் வித் யூ கயல். வீட்டை விட்டுப் போகற முடிவு வேண்டாம்.. நாம சேர்ந்தே இருக்கலாம். என் கூடவே இரு.. ப்ளீஸ்.”
அமைதியான அழுத்தமான ஆழமான குரலில் கயலிடம் சட்டென்று கெஞ்சிவிட்டார் கால்டன். கரையாமல் இருக்க கயல் என்ன கல்லா? உருகியே போய்விட்டாள் அவள்.
தன் முன் தன் அன்பை வேண்டி நிற்கும் காதலனை, தன்னைக் களவுண்டவனை, தன் கண்ணாளனை இழுத்து அணைத்துக்கொள்ள வேட்கை எழுந்தது அவளுக்குள்ளே. ஆனால் சுதாரித்தாள். சாலை என்பது கவனத்திற்கு வந்தது.
தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, கால்டனைப் போன்ற அதே ஆழமான அழுத்தமான அமைதியான குரலில், “முடியாது கால்டன். நான் இனி அந்த வீட்டுல இருக்க முடியாது” என்று திட்டவட்டமாய்ச் சொன்னாள்.
கால்டனுக்கு சில் சில்லாய் உடைந்துபோய்விட்டது போல் இருந்தது. எமிலிக்கு அடுத்து கயலும் தன்னை நிராகரித்துவிட்டாள் என்று நினைத்தார். எமிலியால் அவமானம் மட்டும் தான். அது காலப்போக்கில் மறைந்துவிட்டது. ஆனால் கயல் நிராகரித்தால் அதை தாங்கிக்கொள்ள முடியவே முடியாது என்று புரிந்தது அவருக்கு.
தலை தூக்கிய ஈகோவினைத் தட்டித் தூர எறிந்துவிட்டு சாலை என்றும் பாராமல் தன்னவள் முன் மண்டியிட்டு அவள் கைகளைப் பற்றியபடி “நீ மட்டும் தான் எனக்கு இருக்க கயல். நீ தான் என் உயிர், உலகம், வாழ்க்கை எல்லாமே! ஐ காண்ட் லிவ் வித்அவுட் யூ! நீ என் கூட இருக்க நான் என்ன செய்யனும் சொல்லு.. செய்யறேன்!” என்று கலங்கிய கண்களோடு கேட்டார்.
இதைச் சற்றும் கயல் எதிர்பார்க்கவில்லை. பதறி அவர் கரங்களை இழுத்து அவரை எழச் சொன்னாள். அவளுக்கும் கண்கள் கலங்கித்தான் போயின.
“நீ என் கூட இருக்க நான் என்ன செய்யனும் சொல்லு.. செய்யறேன்!” என்று மீண்டும் கேட்டார் கால்டன்.
“கல்யாணம் பண்ணிக்கனும். காலத்துக்கும் கூடவே இருப்பேன்..” என்று ஸிம்பிளாய் முடித்துவிட்டாள் கயல். இதழோரம் மெல்லிய புன்னகையும் கண்ணெல்லாம் காதலும் வழிய…
உடைந்து போனதாய் நினைத்த கால்டன், கயலின் காதலைப் பார்த்து கேட்டு உணர்ந்து முகர்ந்து சுவைத்ததும் வானமே வசப்பட்டுவிட்டதைப் போல் பேருவகை கொண்டார்.
வளைந்து விரிந்து கிடந்த வானவில் அத்தனை வண்ணங்களையும் தன் வாழ்க்கை மேல் கொட்டித் தீர்த்துவிட்டது போல் இருந்தது அவருக்கு.!
“நமக்குள்ள நிறைய வித்தியாசங்கள் இருக்கு! சமாளிக்க வழி கண்டுபிடிங்க. டூட்டிக்கு நேரமாச்சு” என்று மட்டும் சொல்லிவிட்டு ஆளையே அடியோடு பெயர்க்கும் படியான பார்வையொன்றை வீசிவிட்டு அலியோடு சாலையைக் கடக்க நடக்க ஆரம்பித்தாள் கயல்.
அலி தன் தோழிக்காக அளவில்லா ஆனந்தப்பட்டு அது முகத்தில் தெரிய சிரித்தபடி கால்டனைப் பார்த்து இரு கை பெரு விரல்களையும் உயர்த்திக் காட்டிவிட்டு கயல் பின்னால் நடந்தார்.
“3 மணிக்கு கூட்டிக்கிட்டு போக வருவேன்” என்று கத்தி சொன்னார் கால்டன்.
கயல் திரும்பி வெட்கத்தோடும் புன்னகையோடும் மண்டையை ஆட்டிவிட்டு மருத்துவமனை நோக்கி நடந்தாள்.
டீன் ஏஜ் காதலுக்குச் சற்றும் குறையாமல் உடலெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்க விண்ணை முட்டும் மகிழ்ச்சியோடு தெரெக்கைப் பார்த்து புன்னகைத்துக்கொண்டே வந்தார் கால்டன்.
இருவரும் கைஅடித்துக்கொண்டனர். தெரெக் வாழ்த்துக்கள் சொன்னார். இருவரும் காரில் ஏறியதும் கால்டனைக் கிண்டலடித்துச் சிரிக்க ஆரம்பித்தார் தெரெக்.
“கடைசியில நான் சொன்னது நடந்துருச்சு பாத்தியா!! கால்டன் கூப்பர்! மண்டியிட்டு காதல் வசனங்கள் பேசி கெஞ்சி ஒரு வழியா தன் காதலியைச் சம்மதிக்க வச்சிட்டாரு! ஹா ஹா ஹா! உலக நியதி இது! நீ மட்டும் தப்பிச்சுட முடியுமா என்ன! ஹா ஹா ஹா!” என்று கை கொட்டிச் சிரித்த தன் நண்பனைச் செல்லமாய்க் குத்தி அடித்துவிட்டு காரினைக் கிளப்பிக் கயல் போன திசையில் ஒரு காதல் பார்வை வீசிவிட்டு கம்பெனிக்கு ஓட்டினார் கால்டன்! முகமெல்லாம் அத்தனை மகிழ்ச்சி!
இரு மலைகளும் ஒரு வழியாய் அசைந்துவிட்டன.
அலுவலகம் போன கால்டன், தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார். வித்தியாசங்களைச் சமாளிக்கும் வழி ஒன்றும் புலப்படவில்லை அவருக்கு. குழப்பமாய்த்தான் இருந்தது. கல்யாணம் செய்துகொண்டால் காலத்துக்கும் கூடவே இருப்பேன் என்று கயல் சொன்னதன் அர்த்தம் அவருக்கு இன்னும் முழுதாய் விளங்கவில்லை. தமிழ்ப் பெண்ணொருத்தியின் உட்சமான காதல் வெளிப்பாடு அது என்று நம் கலாச்சாரம் தெரியாத அவருக்குப் புரியாது தானே! என்னை உன் மனைவியாக்கு என்று காதலும் நம்பிக்கையும் நிறைந்துவிட்ட பிறகே தமிழ்ப்பெண்ணொருத்தி தன் தலைவனிடம் கேட்பாள் என்பது அமெரிக்கரான கால்டனுக்குப் புரிய வேண்டுமென்பதில் எந்த நியாயமும் இல்லை தான். ஆனால் திருமணம் பற்றிச் சொல்லி அவள் தன் காதலுக்குச் சம்மதம் சொல்லியிருக்கிறாள் என்பது வரை மட்டும் அவருக்குப் புரிந்தது. அது பற்றிய குழப்பங்களினூடே காதலும் வியாபித்திருக்க, இப்போதைக்கு அவள் தன்னுடன் தான் இருக்கப் போகிறாள்; மற்றவற்றைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தார்.
3 மணிக்குக் கயலை அழைக்க மருத்துவமனையில் காத்திருந்தார். வழக்கமாக இதுவரை காருக்குள்ளே காத்திருந்தவர், பகிரங்கமாய்க் காருக்கு வெளியே நின்றிருந்தார்.
காரில் சாய்ந்தபடி சாம்பல் நிறச் சட்டையும் கருப்பு பேண்டும் அணிந்து கைகளைப் பாக்கெட்டுக்குள் விட்டுக்கொண்டு கயல் நடந்து வருவதை இரசித்துப் பார்த்துக்கொண்டே நின்றிருந்த கால்டன் மேல் கயலின் கண்களும் மேய்ந்தன. அவளை இந்நிலையில் நிறுத்தியிருப்பது இதே வசீகரம் தானே!
ஆனால் கயலின் முகம் குழப்பமாய் இருந்தது. கார் அருகே வந்ததும் காதல் புன்னகையோடு கயலுக்காய்க் கதவைத் திறந்து பிடித்துக்கொண்டார் கால்டன். இத்தனை நாள் இல்லாத இந்த வெளிப்படை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
அவள் ஏறியதும் கதவினைச் சாத்திவிட்டுத் தானும் உள்ளே ஏறிக் காரைக் கிளப்பினார்.
கயலோடு கைகோர்த்துக்கொண்டு நொடிக்கொருமுறை அவளைப் பார்த்தபடி ஓட்டிக்கொண்டிருந்த கால்டன் பேச்சினைத் துவங்கினார்.
“என்ன.. முகம் குழப்பமா இருக்கு!”
மருத்துவமனை குடியிருப்புக்கு இரவு 7 மணிக்கு மாறப்போவதாய் ஒரு குண்டைப் போட்டாள் கயல். அதிர்ச்சியானார் கால்டன். மீண்டும் மரமேறி விட்டாளே என்று நினைத்தார்.
4.22- மிரட்டிய நிக் கூப்பர்!
-வித்யாகுரு