4.26- ஏனென்றால்.. உன் பிறந்தநாள்
மின்தூக்கியில் பொழிந்துகொண்டிருந்த முத்தமழை, முதல் தளத்தில் மருத்துவர் ஒருவர் நுழைந்ததால் அரைகுறையாய்ச் சட்டென்று முடிந்து போக, கயல்விழிகளிட்ட உத்தரவுக்குக் கீழ்படிந்து இரண்டாம் தளத்தில் பூனை போல் இறங்கிக்கொண்டார் கால்டன்.
ஆனால் தலைவியின் இதயத்துடிப்போ எக்கச்சக்கமாய் எகிறி நிற்க, அந்த குளிர்ந்த இரவிலும் வியர்த்துக்கொட்டியது அவளுக்கு. காதல் கொண்டவனின் முத்தங்களும் தழுவல்களும் அணைப்பும், இந்த உலகம் ஆண்-பெண் பாலர்களால் ஏன் பகிரப்பட்டிருக்கிறது என்பதற்கான புதியதொரு விளக்கத்தினை அவளுக்குப் புரிய வைத்தன. தன் தந்தையிடமிருந்து தெரிந்துகொண்ட அகப்பொருள் இலக்கியங்களைக் கால்டனிடம் முதன்முறையாய் அனுபவப்பாடம் படித்துப் புரிந்துகொண்டாள் அவள்!
“உள்ளம் பறித்தது நானென்பதும் – என்றன் உயிர் பறித்தது நீ என்பதும் கிள்ளி உறிஞ்சிடும் மாமலர்த்தேன் – இன்பக் கேணியிற் கண்டிட வேணுமென்றாள்.
துள்ளியெழுந்தனன் சுந்தரன்தான் – பசுந் தோகை பறந்தனள் காதலன் மேல்!
வெள்ளத்தி னோடொரு வெள்ளமுமாய் – நல்ல வீணையும் நாதமும் ஆகிவிட்டார்.” என்ற பாவேந்தரின் “காதல் குற்றவாளிகள்” கவிதை வரிகளை அசைபோட்டபடி 4ஆம் தளத்தில் தன் வீட்டினைத் திறந்து, நேராக சாளரத்தருகே சென்று திரைகளை விலக்கிக் கீழே பார்த்தாள் கயல்.
கால்டனின் பார்வை கயலின் தரிசனத்துக்காய்க் காத்திருந்தது. காற்றிலே மீண்டுமொரு முத்தத்தினைத் தூதனுப்பினார். மனமே இன்றிக் கிளம்பியும் போனார்.
“சாதலும் வாழ்தலும் அற்ற இடம்
அணுச் சஞ்சலமேதும் இல்லாத இடம்
மோதலும் மேவலும் அற்ற இடம்
உளம் மொய்த்தலும் நீங்கலும் அற்ற இடம் – காதல் உணர்வெனும் லோகம்”
அந்த லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த கயலை, லீலாவின் அழைப்பு நிகழ் உலகுக்கு இழுத்து வர, புகழேந்தி அப்பாவிடம் பேசினாள்.
இன்னும் சற்று தெளிவு பெற்றிருந்தார் அப்பா! வாயசைப்பில் அவர் எடுத்ததும் கேட்ட கேள்வி கயலை நிலைபெறச்செய்தது.
“பணத்துக்கு என்ன பண்ணிட்டிருக்க?” என்பதே அக்கேள்வி. இறுக்கமான முகத்தோடு அவர் கேட்ட கேள்வியினால் ஆடிப்போனாள். என்ன பதில் சொல்லுவாள் அவள்! திருதிருவென விழித்தாள்.
அவள் ஏதோ பெரிதாகச் செய்து தான் மாதக்கணக்கில் தனக்கு ராஜ வைத்தியம் பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்பதை ஊகிப்பது அப்பாவுக்கு என்ன கஷ்டமா?!
“கிளம்பி வா” என்று உத்தரவிட்டு அலைபேசியினை லீலாவை எடுத்துக்கொள்ளச் சைகை செய்தார் அப்பா.
லீலாவிடம் சிகிச்சை தொடர்பாய் சிலவற்றைப் பேசிவிட்டு கயல் வைத்துவிட்டாள். ஆனால் மனம் பதைபதைத்தது.
பெற்றவரைக் காப்பாற்ற வாடகைத் தாய் ஆகிய விஷயம் தெரிந்தால் அப்பா எத்தனை வேதனைப்படுவார் என்பதை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை அவளால். இன்னும் அந்த உடன்படிக்கை, குழந்தையை இழந்தது ஆகிய இவை இரண்டும் பட்ட இடத்திலேயே படும் அடிகளாக இருக்கும்; வாடகைத் தாயாக்கியவர் மேல் காதல் கொண்டதும் அவரைத் திருமணம் செய்ய விரும்புவதும் அப்பாவுக்குப் பேரிடியாக இருக்கும் என்பதையும் அவள் நன்கு அறிந்துகொண்டாள்.
மனம் கனத்தது. வழக்கம் போல் தன் அம்மாவிடம் அனைத்தையும் புலம்பிவிட்டு அந்த புடவையைக் கட்டிப்பிடித்துக்கொண்டே உறங்கியும் போனாள்.
வீடு சென்று சேர்ந்த கால்டனுக்கோ உறக்கமே வரவில்லை. கயல் 1 மாதம் இந்தியா போகவேண்டும் என்று சொன்னதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தார். டிக்கெட்டுக்களை எட்டிப்பார்த்தார். ஆனால் புக் செய்யவில்லை.
பலவாறு சிந்தனைகள் அவரை ஆட்கொண்டன. சில அலுவலக வேலைகளும் இருந்தனவாகையால் அதிகாலையில் தான் அவரையும் மீறிக் கண்ணயர்ந்தார்.
காலை எழுந்த கயல், கால்டனிடமிருந்து சத்தத்தையே காணுமே என்று நினைத்துக்கொண்டபடியே டூட்டிக்குப் போனாள். கால்டன் நினைப்பை விடவும் அப்பா பயமே அதிகம் இருந்தது அவளுக்கு.
இந்தியா 1 மாதம் போய் வருவதற்கான ஏற்பாடுகளில் இறங்கினாள். விடுப்புக்கு விண்ணப்பித்தாள். இவளின் நரம்பியல் அறுவைசிகிச்சைத் துறையின் தலைவரான Prof.Dr.ஸ்மித் தான் விடுப்புக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். கயல் மீது மிக நல்ல அபிப்ராயமும் மரியாதையும் கொண்ட அவரால், இவளின் முழு நிலைமைகளும் தெரிந்த அவரால் விண்ணப்பத்தினை மறுக்கவும் முடியுமா!! ஒப்புதல் அளித்தார்.
சில சர்ஜரிகளைத் தள்ளிப்போட்டார். சிலவற்றை 1 வாரத்துக்குள் முடித்துவிடும்படி முன் தள்ளினார். சிலவற்றை கயல் இல்லாமல் அலி தலைமையில் விட்டார். இப்படி அன்று மதியம் வரை இந்த டிஸ்கஷன் ஓடியது.
மதிய உணவு முடித்தபோது கால்டன் அழைப்பு வந்தது. எடுத்தாள்.
“என்ன காலைலேருந்து அமைதியா இருக்கு?”
“நைட் கொஞ்சம் வேலை. காலையில தான் தூங்கினேன். இப்போ தான் எழுந்தேன். கம்பனி கிளம்பறேன்.”
“ம்..”
“3 மணிக்கு வரேன்.”
“எதுக்கு? நான் நடந்தே போயிடுவேன். பக்கம் தானே!!”
“இன்னிக்கு நீ அங்க போகல்லையே.. நம்ம வீட்டுக்கு தான் வர..”
“மாட்டேன்”
“யோக்கியனா நடந்துப்பேன். அதுக்காக மாட்டேன்னு சொல்லாத.”
“எப்படி? நேத்து நடந்துகிட்ட மாதிரியா!!”
“ஹா ஹா.. அதான் அரை நிமிஷத்தில அந்த டாக்டர் வந்துட்டாரே.! நீயும் போன்னு துரத்தி விட்டுட்ட. அப்பறம் என்ன?”
“சரி சரி. விடுங்க. டிக்கெட் பாத்திங்களா.”
“சேர்ந்து பாப்போம் சாய்ந்தரம்.”
“ஒரு முடிவுல தான் இருக்கிங்க போல..”
“ஆமா. 3 மணிக்கு வரேன்.”
“சரி!”
“லவ் யூ..”
“பாய்”
“நீயும் ஒரு முறை சொல்லேன்.”
“டூட்டி ல இருக்கேன்”
“இல்லைன்னா மட்டும்.. சரி! வை”
***
3 மணிக்கு காத்திருந்தார். ஆனால் கயல் வரவில்லை. பொறுமை இழந்து உள்ளே போய் விசாரித்தார். கயல் ஒரு அவசர அறுவை சிகிச்சைக்குப் போய்விட்டது தெரிந்தது.
ஏமாற்றமும் கோபமும் கொண்டார்.
3 மணிக்கு வரவேண்டியவள் 11 மணிக்கு வெளியே வந்தாள். படு சோர்வாக! முதல் வேலையாக அப்பாவிடம் சுருக்கமாகப் பேசி முடித்தாள். கால்டன் காத்திருந்துவிட்டுக் கடுப்பாகி கிளம்பிப் போயிருப்பார் என்று நினைத்தாள். ஃபிளாட்டுக்குப் போய்ப் பேசிக்கொள்ளலாமென்று நடந்து வெளியே வந்தவள், வழக்கமான இடத்தில் கால்டனின் கார் இருப்பதைப் பார்த்தாள்.
கிட்டே சென்று உள்ளே கால்டன் காத்திருப்பதைப் பார்த்ததும் ஆச்சரிய ஆனந்தம் கொண்டாள். ஜன்னலைத் தட்டினாள். கண்களை மூடி சாய்ந்த படி அமர்ந்திருந்த கால்டன், விழித்துக்கொண்டு கார் கதவினைத் திறக்க, உள்ளே ஏறிய கயல், அவர் கோபமாய் இருப்பதை உடனேயே தெரிந்து கொண்டாள்.
“எதுக்கு இவளோ நேரம் காத்திருக்கிங்க?”
“அ… பைத்தியம் புடிச்சிருக்கு. அதான்” என்று கோபமாய்ச் சொல்லிவிட்டு விருட்டென்று காரைக் கிளப்பி வீடு நோக்கி ஓட்டினார்.
“ஒரு சாலை விபத்துல கை துண்டிக்கப்பட்டு ஒருத்தரைக் கொண்டுவந்தாங்க. கையைத் திருப்பி பொருத்த டீம் சர்ஜரி நடந்தது. நரம்பியல் பகுதி இணைச்சு கொடுக்கற வேலை என்னோடது. முடிக்க இவளோ நேரம் ஆகிடுச்சு. உங்களுக்குச் சொல்ல கூட டைம் இல்ல. நீங்க விசாரிச்சு தெரிஞ்சுகிட்டு கிளம்பிடுவிங்கன்னு நினைச்சேன். சாரி.. நீங்க வெயிட் பண்ணுவிங்கன்னு எதிர்பாக்கல்லை”
கால்டன் பதிலே பேசவில்லை. கயலும் அமைதியானாள். ஆனால் அவளுக்கு ஏதோ போல் இருந்தது.
வீட்டுக்கு வந்ததும், உள்ளே நுழைந்தவள், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவு உணவு தயாராய் இருந்ததைப் பார்த்தாள். கால்டன்-எல்க் கூட்டணி வேலைதான் இது என்பதை ஊகித்தாள்.
கொலைப் பசியில் இருவரும் ஒன்றுமே பேசிக்கொள்ளாமல் சாப்பாட்டை ஒரு கை பார்த்தனர். முடித்ததும், கயலே துவங்கினாள்.
“ஏன் இவளோ கோவம்?! இது என் வேலையில ரொம்ப சகஜம். ப்ளீஸ் கெட் யூஸ்டு டு இட்.”
முறைத்தார்.
“சரி. நீங்க முறைச்சுக்கிட்டே இருங்க. நான் போய் படுக்கறேன். மணி 12 ஆச்சு. ஐ ஆம் ஹெல் டயட்!” என்று சொல்லிக்கொண்டே தன் அறைக்குப் போனவள், தோட்டத்தில் அழகான லேசான மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டிருப்பதையும், அங்கே ஒரு தொலைநோக்கி விண்ணைப் பார்த்தபடி நின்றிருப்பதையும் பார்த்தாள்.
“உனக்காகத்தான் டெலஸ்கோப் வெயிட் பண்ணுது. போய் பாரு” என கால்டன் குரல் பின்னாலிருந்து கேட்டது. கோபப்பார்வையும் காதல் பார்வையாய் மாறியிருந்தது.
புன்னகைத்துக்கொண்டே ஓடியவள், டெலஸ்கோப் வழி பார்த்தாள். ஒரு அழகான விண்மீன் மின்னிக்கொண்டிருந்தது தெரிந்தது.
“எப்படி இருக்கு? அந்த ஸ்டார்!!”
“வாவ்..!!!”
“இந்தா..” ஒரு காகிதச் சுருளை நீட்டினார்.
புதிர் பார்வையுடன் அதை வாங்கிப் பார்த்த கயலுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை.
கால்டன் அவளுக்கு ஒரு நட்சத்திரத்தை வாங்கித் தந்திருப்பதற்கான பதிவுப் பத்திரம் அது. சற்றுமுன் அவள் பார்த்த அந்த நட்சத்திரமாகத் தான் இருக்க வேண்டுமென்று ஊகித்துப் புரிந்து கொண்டதும் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போனாள்.
அவளின் அத்தனை முகபாவங்களையும் தன் ஹேசல் கண்களால் படம்பிடித்தவாறு ரசித்துக்கொண்டிருந்த கால்டன், “ஹாப்பி பர்த் டே மை சோல்மேட்!” என்று சொல்லி அவள் கன்னத்தில் முத்தமிட்டார்.
4.27 நியூயார்க் பயணமும் பசலை நோயும்
-வித்யாகுரு