4.27 நியூயார்க் பயணமும் பசலை நோயும்
4.28- காற்றெல்லாம் காதல்
லெக்ஸிங்டனின் ப்ளூ கிராஸ் (Blue Grass) சர்வதேச விமான நிலையத்தில் கயலை அலி வழியனுப்பி வைத்தார். அலியிடம் கயல் எல்லா விஷயங்களையும் பகிர்ந்துகொள்வாள் ஆகையால் அவள் தற்போது பயணப்படும் கல்யாண காரணத்தையும் சொல்லியிருந்தாள். அதனால் நல்ல செய்தியோடு வருமாறு அலி வாழ்த்துச் சொல்லி தன் தோழியை வழியனுப்பி வைத்தார்.
கயலுக்கு வருத்தமாக இருந்தது. தோழன் வழியனுப்பினாலும் தன்னவன் வழியனுப்ப வரமுடியாமல் போய்விட்டதே என்று நொந்தாள். கால்டன் நியூயார்க்கில் இருப்பதாய் ஒரு வேளை பொய் சொல்லி இருப்பாரோ என்று ஓரத்தில் ஒரு சந்தேகம் இருந்தது அவளுக்கு. திடீரென்று தோன்றி தன்னை வழியனுப்ப வந்துவிடமாட்டாரா என்ற நப்பாசையோடு கயல்விழிகள் கால்டனை எதிர்பார்த்துக் காத்திருந்தன.
லக்கேஜ் க்ளியரண்ஸ், போடிங் அனைத்தும் முடிந்து தன் இருக்கையிலும் அமர்ந்துவிட்டாள். அப்போதும் அவர் வருவார் என்றே அவளின் பேதை மனம் நம்பிக்கொண்டிருந்தது.
விமானம் புறப்படத் தயாரானது. இருக்கை பெல்ட் அணியச்சொல்லிய அறிவிப்பு வந்தது. விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து படு விரைவாய் ஓடி மேலெழும்பிக் காற்றைக் கிழித்துக்கொண்டு பறக்கவும் துவங்கிவிட்டது. பின்னர் தான் கயல் தன்னவன் இனி வருவதற்கு வழியில்லை என்ற நிதர்சனத்தை உணர்ந்தாள். கால்டன் விளையாடவில்லை, நிஜமாகவே அவர் கடைசி வரை வரவில்லை என்ற உண்மை உறைத்தது. விழியோரம் நீர் துளிர்த்தது.
துரதிர்ஷ்டவசமாக உணர்ந்தாள். இன்னும் 1 மாதத்திற்கு அவரின் ஸ்பரிசம் கிடைக்காது என்று எண்ணி ஏங்கினாள். காற்றில் செய்த பயணம் காதலோடு நிகழ்ந்தது.
முதன்முதலாய் கால்டனிடமிருந்து வந்த மின்னஞ்சல்,
முதல்முதலாய்க் கால்டனை இல்லத்தில் சந்தித்த நிகழ்வு,
முதன்முதலாய்க் கால்டனுடன் வந்த மோதல்,
கால்டனின் வாடகைத்தாய் ஆகிய நிமிடம்,
வீட்டுக்கு வந்தது,
வாக்குவாதங்கள்,
ஊடல்கள்,
கூடல்கள்,
அனைத்தையும் அசை போட்டாள்.
வளர்ந்து விஸ்வரூபம் எடுத்திருக்கும் காதலை வியப்பாய்ப் பார்த்தாள். அத்தனை வித்தியாசங்களையும் தாண்டி இந்த அளவு இந்தக் காதல் பயணப்பட்டிருப்பது நம்ப முடியாததாய் இருந்தது.
காதலிக்கப்படுகிறோம் என்று உணரவைத்துவிட்டால் அந்த காதலுக்குச் சாகா வரமும் அபரிதமான சக்தியும் வந்துவிடுவதை எண்ணி ஆச்சிரியம் கொண்டாள்.
அப்பாவிடம் இதை எப்படித் துவங்கலாம் என்று சிந்தித்தாள். அப்பாவை முதலில் படுக்கையில் பார்ப்பதற்குத் தன்னைத் தயார் செய்து கொள்ள நினைத்தாள். படிப்புக்காக கெண்டக்கிக்கு தன்னை அனுப்பி வைத்த போது கம்பீரமாய் வந்த அப்பா இப்போது படுக்கையில் கிடப்பதை நினைத்து வேதனைப்பட்டாள்.
இப்படி பலவாறாகச் சிந்தனைகள் அவளை ஆக்கிரமித்திருந்தன.
லெக்ஸிங்டனில் இருந்து சென்னை கிட்டத்தட்ட ஒன்றரை நாள் பயணம். மிக நீண்ட பயணம். இடையில் பாரிஸ் விமான நிலையத்தில் இறங்கி இணைப்பு விமானத்தில் ஏற வேண்டியிருந்தது. லக்கேஜுகள் தானாக மாறிவிட, பயணிகள் மாற 4 மணி நேர அவகாசம் இருந்தது. கயல் பாரிஸ் விமான நிலையத்தில் இறங்கி ரிலாக்ஸ் செய்து கொண்டாள். கால்டனுக்குத் தகவல் அளித்தாள். வெறும் ஓகே தான் பதிலாய் வந்தது. முகம் வாடியது.
கனெக்டிங் விமானத்தில் ஏறித் தன் இருக்கையில் செட்டில் ஆனாள்.
பாரிஸ்.. காதலர்களின் நகரம்! அந்த காற்றுக்குக் கூட காதலைத் தூண்டும் சக்தி இருந்ததோ என்னவோ, கயலுக்குக் கால்டனைப் பார்க்க வேண்டும் பேச வேண்டும் என்ற ஆவல் பெருக்கெடுத்தது. கால் செய்தாள்.
அவர் எடுக்கவில்லை. இறுதி கட்ட பணிகளில் இருக்கிறார் என்று அவளுக்குத் தெரியும் தான் என்றாலும் ஏக்கத்தினாலும் ஏமாற்றத்தினாலும் கோபம் வந்தது. ஒரு நொடி எடுத்துப் பேசினால் என்ன குடியா முழுகிவிடும் என்று மனதுக்குள் திட்டித்தீர்த்தாள்.
காதல் உறுதிப்படும் வரை சுற்றிச்சுற்றி வந்தவர், மீண்டும் இப்போது பணிக்குத் தான் முக்கியத்துவம் அளிக்கிறார் என்று தோன்றியது. ஜன்னல் பக்கமாய்த் திரும்பிக்கொண்டு மனதுக்குள் திட்டுவதைத் தொடர்ந்தாள்.
வேலை முடிந்த பிறகு பேச வந்தால் கண்டுகொள்ளவே கூடாது என்று முடிவுகட்டிக்கொண்டாள். அரை மணி நேரம் திட்டியே ஓடியது. விமானம் காதல் நகரமாம் பாரிஸ் விட்டு 10 நிமிடத்தில் கிளம்பும் என்று அறிவிப்பு வந்தது. அனைவரும் ஏறுவதும் தத்தம் இருக்கைகளில் செட்டில் ஆவதுமாய் இருந்தனர். கயல் ஏறியது முதலே சாளரத்தின் பக்கமே பார்த்துக்கொண்டிருந்தாள்.
பாரிஸ் அவளுக்கு ஏனோ மிகவும் பிடித்துப்போனது. கால்டனோடு இங்கு ஒரு முறை சுற்றுலா வர வேண்டும் என்று அத்தனை கோபத்துக்கு இடையிலும் ஆசை கொண்டாள்.
மீண்டும் கால்டனைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற என்ன மனம் இது, குரங்கை விட மோசமாய்த் தாவுகிறதே என்று நினைத்தாள். அலைபேசியில் நோண்டினாள். கால்டனின் ஒழுங்கான புகைப்படம் ஒன்று கூட இல்லை. தோட்டத்தில் எடுத்துக்கொண்ட ஒரு செல்ஃபி மட்டும் இருந்தது. அதனால் ஒரு புகைப்படம் அனுப்பும்படி மெசேஜ் தட்டிவிட்டாள்.
அடுத்த 5 நொடிகளில் கால்டனிடமிருந்து புகைப்படம் வந்தது. ஆசையாய் அதைத் தட்டித் திறந்தவள் அதிர்ச்சியானாள். சட்டென்று எதுவுமே புரியவில்லை அவளுக்கு. காரணம் கால்டன் சிரித்த முகத்தோடு அனுப்பிய அந்த செல்ஃபியில் அவளும் இருந்தாள்.
இப்போது அவள் அணிந்திருக்கும் அதே உடையில், அதே விமானத்தில், அதே இருக்கையில், அதே சாளரத்தின் வழி வெளியே பார்த்துக்கொண்டிருந்த படி அந்த புகைப்படத்தில் அவள் இருந்தாள்.
சட்டென்று திரும்பியவள், தன் பக்கத்திலேயே தன்னவன் இருப்பதைக் கண்டு இன்ப அதிர்ச்சியானாள்.
“ஹாய் டாக்டர்..” என்றி காதல் வழிய சொன்னார் கால்டன் கூப்பர்.
அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் நிலைபெற்று அமர்ந்திருந்தவளை முத்தங்களிட்டு நிகழ் உலகத்துக்கு இழுத்துவந்தார்.
கனவா நனவா என்ற குழப்பத்தில் கயல் இருக்க, காதல் நகரமாம் பாரிஸ்ஸில் இருந்து விமானம் மேலே எழும்பியது. காற்றில் பயணம் தொடர, அந்தக் காற்றெல்லாம் காதலும் மணத்தது.
4.29- யார் இதழில் சுவை அதிகம்?!
-வித்யாகுரு