4.29- யார் இதழில் சுவை அதிகம்?!
காதல் காற்று வீசும் பாரிஸ் நகரின் விமான நிலையத்திலிருந்து விமானம் மேலெழும்பவிருக்கிறது என்ற அறிவிப்பு வந்ததும் நிலைபெற்று அமர்ந்திருந்த கயலின் சீட் பெல்ட்டை அணிவித்துவிட்டு குட்டி முத்தமொன்றும் அளித்துவிட்டுத் தானும் சீட் பெல்ட் போட்டுக்கொண்டார் கால்டன்.
விமானம் மேலெழும்பிப் பறக்கத்துவங்கியும் விட்டது. ஆனால் கயல் இன்னும் சுயனிலைக்கு வந்தாள் இல்லை.
“என்ன.. இன்னும் இப்படியே பாத்துட்டிருக்க!!”
“கால்டன்.. நீங்க… எனக்கு ஒன்னுமே புரியல்ல.. திடீர்னு பாரிஸ் ல.. நான் எதிர்பார்க்கவே இல்ல.. ஆச்சிரியமா இருக்கு ரொம்ப” என்று முகமெங்கும் தன் மகிழ்வினை வெளிப்படுத்தி திக்கித்திக்கிச் சொன்னாள் கயல்.
“ஆக்சுவலி லெக்ஸிங்டன்லையே உன்னோட கிளம்பியிருக்க வேண்டியது. நியூயார்க்-ல மாட்டிக்கிட்டேன். என் திட்டப்படி வேலை முடியாம கொஞ்சம் இழுத்துருச்சு. அதுனால கடைசி நேர புது ப்ளான் இது. தனி விமானத்தில பாரிஸ் வந்துட்டு காத்திருந்து ஒரு வழியா ஏறிட்டேன்.”
“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல்ல..”
“லவ் யூன்னு சொல்லேன்..”
“சொல்லனுமா! இல்லன்னா உங்களுக்கு தெரியாதா?”
“தெரியும். இருந்தாலும் கேக்கும் போது சந்தோஷமா இருக்குமில்ல..”
மகிழ்ச்சிப் புன்னகை பூத்தாள்.
“1 வாரம் உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன். எல்லா வேலைகளுக்கு இடையிலையும் மனசு பூரா நீ தான் இருந்த” என்று சொல்லி தன்னவளோடு கை கோர்த்தார்.
“நீயும் லைட்டா என்னை மிஸ் பண்ணிக்கிட்டு உக்கார்ந்திருந்தியோ?!”
“இல்லையே..”
“அப்பறம் எதுக்கு ஃபோட்டோ கேட்ட?”
“அது.. சும்மா கேட்டேன். ஆனா இப்படி ஒரு ஃபோட்டோ வருமின்னு நினைக்கவே இல்ல. எப்ப வந்து உக்காந்திங்க?”
“நான் வந்து உக்காந்த உடனே தான் உன் மெசேஜ் வந்துது..!”
“யூ ஆர் நாட்டி. இப்படியா ஆச்சிரியப்படுத்துறது!”
“ஆச்சிரியப்படும்போது நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க. அதுக்கு தான் அடிக்கடி ஆச்சிரியப்படுத்திக்கிட்டே இருக்கனுமின்னு தோணுது.”
இப்படி இருவரும் காதல் அள்ளித்தரும் மகிழ்வுகளை உணர்ந்தபடி சென்னை நோக்கிப் பறந்துகொண்டு இருந்தனர்.
அவர்கள் பயணித்தது முதல் வகுப்பு காபின். நல்ல வசதியாக தாராளமாகவே இருந்தது. ப்ரைவசியாகவும் இருந்ததினால் 17 மணி நேரத்துக்கும் மேலான அந்த பயணம் காதல் மணத்துடன் இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!
உடன் பயணிப்பது யார்? கால்டனாயிற்றே!
ஸ்வீட் நத்திங்ஸ் பேசிப்பேசி நொடிகளெல்லாம் இனித்தன. கோர்த்த கைகளை விடவே இல்லை அவர். இரவானதும் இருக்கையினைப் படுக்கையாக்கி இருவரும் உறங்கினர். காலை மீண்டும் இனிப்பான தருணங்கள் தொடர்ந்தன.
கயலுக்குத் தன்னவன் துணைக்கு வந்தது பற்றி ரொம்பவும் சந்தோஷம். வழியனுப்ப வரமாட்டாரா என்று ஏங்கிக்கொண்டிருந்தவளுக்கு வழியனுப்ப அவர் சென்னை வரைக்குமே வருவது ஆனந்தமாக இருக்காதா என்ன!
1 வார கதைகள் அனைத்தும் இருவரும் பகிர்ந்துகொண்டனர்.
பேச்சுக்கள் ஓய்ந்ததும் உணர்வுகள் தலை தூக்க, தோளில் சாய்ந்திருந்த தன்னவளை அணைத்துக்கொண்டு விரலால் அவள் மேனியில் கோலம் போட்டுக்கொண்டிருந்தார் கால்டன்.
“நீ எவ்வளவு அசல் அழகு தெரியுமா!”
“தெரியாதே.. நீங்க சொன்னாத்தானே தெரியும்!!”
“கட்டவிரல்லேந்து ஆரம்பிக்கட்டுமா!”
“வேணாம் வேணாம். இன்னொரு நாள் கேக்குறேன்”
“சூப்பர். என்னையும் எதுவும் சொல்ல விடாத. நீயும் எதுவும் சொல்லாத.” என்று பொய்க்கோபம் கொண்டார்.
“என்ன சொல்லனும்?”
“நீ இன்னும் எதுவுமே சொன்னதில்ல. காதலைக் கூட சொல்லல்ல. நியாபகம் இருக்கா இல்லியா?!”
“இப்படி உங்க அணைப்புக்குள்ள தோள்ள சாஞ்சு உக்கார்ந்துகிட்டு இருக்கேன். இன்னும் என்ன காதலை நான் சொல்லனும்?”
“சரி சொல்லல்லன்னா, அட்லீஸ்ட் ஏதாச்சும் கேளு. என்ன வேணும் உனக்குன்னு தெரியவே இல்லை எனக்கு. நியூயார்க் ல உனக்கு ஏதாவது வாங்கலாமின்னு பாத்தேன். ஆனா உனக்கு என்ன பிடிக்கும் என்ன வேணுமின்னே எனக்கு தெரில்லை. அங்க எல்லாம் இருக்கு. ஆனா ஒன்னும் வாங்காம வந்துட்டேன். ஆதான் கேக்குறேன். உனக்கு என்ன பிடிக்கும்? என்ன வேணும்? உன் ஆசை என்ன? சொல்லு.”
“ம்….. சரி சொல்றேன். எனக்கு…… நீங்க தான் வேணும். உங்களத்தான் எனக்கு பிடிச்சிருக்கு. உங்க ஒவ்வொரு செல்லையும் நான் இரசிக்கிறேன். உங்க எண்ணங்கள் குணங்கள் எல்லாத்தையும் காதலிக்குறேன். உங்க மனைவியா உங்க கூட வாழனும். ஒவ்வொரு நாளும் உங்க கூட தான் விடியனும்; அடையனும். நம்ம வீட்டுல வேலை நேரம் போக ஒன்னா டைம் செலவிடனும். சிரிக்கனும், சண்டை போடனும், அழனும், விளையாடனும், காதலிக்கனும், ஊர் சுத்தனும், கோவிச்சுக்கனும், அடிச்சுக்கனும், சேந்துக்கனும். உங்களை நான் மட்டும் தான் பாத்துக்கனும். என்னெல்லாம் தோணுதோ எல்லாத்தையும் சொல்லனும். 3 குழந்தைங்க வேணும். என்னை மாதிரி ஒன்னு உங்களை மாதிரி ஒன்னு நம்பளை மாதிரி ஒன்னு. சேர்ந்து வளக்கனும். நமக்குள்ள இருக்கற வித்யாசங்கள் எல்லாத்தையும் கடந்த ஒரு சந்தோஷமான வாழ்க்கை வேணும். எத்தனை வித்யாசங்கள் இருந்தாலும் வாழலாம்னு நிரூபிக்கற காதலா நம்ம காதல் காலத்துக்கும் நிலைச்சு இருக்கனும். உங்க மனசுல இன்னிக்கி நான் இருக்குற இதே இடம் எனக்கு என்னைக்கும் வேணும். இந்த நிமிஷம் மாதிரியே இதே அளவு உங்களை பைத்தியக்காரத்தனமா ஒரு 40 வருஷம் காதலிக்கனும். போதும். அப்புறம் இதே மாதிரி உங்க அணைப்புக்குள்ள கைகோர்த்து உக்காந்துக்கிட்டே கிழவி ஆகி ஒரு நாள் செத்துப்போயிடனும். அவளோ தான் என் ஆசை.அவளோதான் எனக்கு வேணும்” என்று முடித்தாள் கயல்.
காதலிக்கிறேன் என்ற ஒற்றை வார்த்தை அவள் வாயில் இருந்து வராதா என்று ஏங்கிக்கொண்டிருந்த நிலையில், அடுத்த 40 வருடங்களுக்கு வேண்டிய காதலைக் கயல் அணை உடைந்து வந்த வெள்ளமெனக் கொட்டிவிடவே, மிகவும் உணர்வு வசப்பட்டார் கால்டன். கண்கள் கண்ணீர் மழை பொழிந்தன. தன் ஆசைகளைச் சொல்லி “நீ தான் என் எல்லாமுமானவன். நீயே என் தேவை. நீயே என் ஆசை. நீயே எனக்கு வேண்டியவன்” என்பதை கவித்துவமாய்ப் புரியவைத்துவிட்டாள் கயல்.
அவளுக்கு என்ன பதில் உரைப்பார் அவர்?? முத்தத்தைத் தவிர இந்த தருணத்துக்குச் சிறப்பானதொரு ஏற்புரை வேறு உளதோ.??!!
அழுத விழிகளோடு அதரங்களைக் கவ்வினார். கயல் புறந்தள்ளும் நிலையில் இல்லை. இருவரும் யார் இதழில் சுவை அதிகம் என்ற ஆராய்ச்சியில் இறங்கினர்.
விமானம் சென்னையை நெருங்கிவிட்ட அறிவிப்பு வந்தது.
4.30 கயலு……….
-வித்யாகுரு