4.29 யார் இதழில் சுவை அதிகம்?
4.30- கயலு…….
காதல், ஆசை, இச்சை, தன்னுடைமை, உரிமை, முழுமை, வெற்றி, திருப்தி என்று காதல் கொண்ட இரு உள்ளங்களுக்குள் ஊற்றெடுக்கும் பலவித உணர்வுகளையும் வார்த்தைகளின்றி ஒரு முத்தம் கச்சிதமாய்ப் புரியவைத்துவிட வல்லது என்பதைக் கயலும் கால்டனும் செய்முறையில் தெரிந்துகொண்டனர்.
கால்டன் துளியும் எதிர்பார்த்திராத, பவர்ஃபுல்லானதொரு ஒப்புதல் வாக்குமூலம் கயலிடமிருந்து வெளிப்பட்டதும் தனக்குள் அதுகாறும் அணைகட்டி வைத்திருந்த “அமெரிக்க பாணி காதல் செயல்முறைகள்” வாடிவாசல் திறந்து ஓடிவரும் எருது போல் வெளிப்பட்டது. வேட்கையோடு அவளின் அதரங்களைச் சுவைபார்த்தார் கன்னாபின்னாவென்று காதலில் விழுந்துவிட்ட கால்டன்.
கலாச்சாரம் பண்பாடு சார்ந்த எல்லா அறிவும் காதலெனும் ஞாயிற்றின் முன், பனியென ஓட்டமெடுத்துவிட்டன நம் நாயகிக்குள்ளே! இலைகள் மலரை மூடிவைத்தாலும் காதலெனும் காற்று அந்த இலைகளை உலுக்கி மலரைக் கொள்ளாமல் விட்டுவைக்காதே!
“பசித்தவன் அமுதம் பருகிடத்தானே, இத்தனை வசந்தங்கள் இதழ் வளர்த்தேன்!!” என்று விடுபட எவ்வித முயற்சியும் செய்யாமல் கால்டனின் முத்தத்துக்குள்ளே தொலைந்து போய்க்கொண்டிருந்தாள் கயல்.
இரண்டு திடமான ஆளுமைகளும், இரண்டு தெளிவான மனங்களும், இரண்டு கூர்மையான அறிவுகளும் காதலெனும் மாயத்தினால் கட்டுண்டு அடங்கிப் போயின.
சிவபூஜைக் கரடிகளுக்குப் பஞ்சமேது?! இம்முறை விமானப் பணிப்பெண். சென்னையை நெருங்கிவிட்டதாகவும் தயாராகிக்கொள்ளும்படியும் அறிவிக்க வந்தாள்.
இணைந்திருந்த இதழ்களும் தற்காலிகமாய்ப் பின்வாங்கின.
கைப்பைகளைத் தயாராகிக்கொண்டனர் இருவரும்.
கால்டன் அதற்குள் அனைத்தையும் வெளியில் இறைத்துப் போட்டுவிட்டிருந்தார். கயலிடம் திட்டு வாங்கிக்கொண்டே எடுத்து மூட்டை கட்டினார்.
“எதுக்கு இப்படி எல்லாத்தையும் வெளியே எடுத்திங்க?”
“சொல்லுவ மா.. நான் பேக் பண்ணவே இல்ல. நியூயார்க்லேருந்து அப்படியே கையில கிடைச்சது எல்லாத்தையும் வாரிப் போட்டுக்கிட்டு ஓடி வந்துருக்கேன் தெரியுமா?”
“தனி விமானத்தில வந்த அப்போ பங்கிடு பண்ணி வச்சிருக்கலாமில்ல..”
“நான் எவளோ டென்ஷன் ல வந்தேன். இந்த ஃப்ளைட்ட மிஸ் பண்ணிடுவேனோன்னு பயந்துக்கிட்டே வந்தேன். எங்க பேக்கிங் பண்றது?”
“சரி பாரிஸ் ல ஏறி 18 மணி நேரமாச்சு. எடுத்து வச்சிருக்கலாமில்ல?”
“18 மணி நேரமா நான் எவளோ பிஸியா உன்னைக் காதலிச்சுக்கிட்டு இருந்தேன். பாத்த-ல.. எப்படி இப்படியெல்லாம் கேக்குற?!. கேள்வியை நிறுத்திட்டு வந்து ஹெல்ப் பண்ணு”
கயல் உதவ, ஒருவழியாய்க் கைப்பை தயாரானது.
“இப்ப எதுக்கு சென்னை வர வழியனுப்ப வர்றீங்க. வீண் அலைச்சல், செலவு தானே. எனக்கு முன்னமே சொல்லி இருந்தா பாரிஸ் ல 4 மணி நேரம் டைம் இருந்துது. அங்கையே செண்ட்-ஆஃப் பண்ணிருக்கலாமில்ல..”
“ப்பா.. எவளோ அறிவு!! எனக்கு தோணாம போய்டுச்சே!”
“சரி, எப்ப உங்களுக்குத் திரும்பி போகற ஃப்ளைட்டு? எப்படியும் அரை நாள் இடைவெளி இருக்குமே. நீங்க ஏர்போர்ட்-ல இருக்கப் போறீங்களா?!”
“இது கூட நல்ல ஐடியா தான்.”
“அப்படீன்னா நான் ஹாஸ்பிட்டல் போய் அப்பாவை பாத்துட்டு திரும்பி ஏர்போர்ட் வர்றேன். உங்களை வழி அனுப்ப”
“அப்படியா! நீ சொன்னா சரி தான்.. ஓக்கே!” என்று புன்னகைத்தார் கால்டன்.
“எதுக்கு சிரிக்கிறீங்க?”
“சும்மா சிரிச்சேன்!”
கால்டனின் பார்வையும் புன்னகையும் விஷமமாய் இருக்க, கயல் யோசிக்கத் துவங்கினாள்.
அவள் யோசிப்பதையே அணு அணுவாய் இரசித்துப் புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்தார் கால்டன். “யோசி யோசி..” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டார்.
ஒரு நிமிட சிந்தனைக்குப் பிறகு ஏதோ புரிந்துகொண்டவளாய்க் கால்டனை அதிர்ச்சியோடு கயல் பார்க்க, அதே விஷம புன்னகை கால்டனின் முகமெங்கும் பரவி நின்றது.
“திரும்பி போகல்லையா?!!!!!!!” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் கயல்.
அப்போதும் கால்டன் புன்னகைத்துக்கொண்டே தான் இருந்தார்.
அதிர்ச்சியும் பீதியும் அடைந்த கயலை அலைபேசியில் புகைப்படம் எடுக்கத்துவங்கினார்.
“நான் என்ன கேட்டுக்கிட்டு இருக்கேன் ஃபோட்டோ எடுத்துக்கிட்டு இருக்கிங்க. பதில் சொல்லுங்க. திரும்பி போகல்லியா??!!” என்று கடுப்பில் கேட்டுக்கொண்டே ஃபோனைப் பிடுங்க வந்தவளைக் கட்டிக்கொண்டார் கால்டன்.
“சும்மா டாட்டா காட்ட வந்தேன்னு நினைச்சியா? 1 மாசம் உன்னைப் பிரிஞ்சு என்னால இருக்க முடியுமா?” என்று சொல்லிக்கொண்டே அவள் இதழ்களைச் சுவைக்கத் துவங்கினார்.
கயலால் அந்த முத்தத்தை இரசிக்க முடியவில்லை. மயங்கத்துவங்கினாலும் சட்டென்று சுதாரித்து விலகினாள். மிகவும் டென்ஷன் ஆனாள்.
“என்ன சொல்றீங்க கால்டன்?”
“உன் கூட தான் இருக்கப்போறேன்னு சொல்றேன். புரியல்லியா?!”
“நான் 1 மாசம் இருக்க போறேனே!”
“தாராளமா இரு. நானும் உன் கூடத்தான் இருப்பேன்.”
“விளையாடுறீங்களா!? பொய் தான சொல்றீஙக!”
புன்னகைத்தார்.
சீட் பெல்ட் அணிந்து கொள்ளும் அறிவிப்பு வந்தது. பேச்சுக்கள் கேள்விகள் தற்காலிகமாய் நிறுத்தப்பட்டன.
விமானம் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் பத்திரமாகத் தரை இறங்கியது.
உச்சகட்ட பீதியில் அமர்ந்திருந்தாள் கயல்.
தரை இறங்கி லக்கேஜ் க்ளியரென்ஸ் இன்னபிற ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் கயலுக்குச் சட்டென்று முடிந்து விட்டது. ஆனால் கால்டனுக்கு நேரம் பிடித்தது. அவரின் முதல் இந்தியப்பயணம் அல்லவா!
ஆனால் அவரோ தடுப்பூசி, விசா என்று தேவையான அத்தனையும் மிகச் சரியாகத் தயார் செய்து வைத்திருந்தார்.
அவற்றையெல்லாம் பார்த்த கயல், இது பல நாள் திட்டம், பல நாள் ஏற்பாடு என்பதை நன்றாய்ப் புரிந்து கொண்டாள். மிகவும் டென்ஷன் ஆனாள். கோபமாய் வந்தது.
இருவரும் முன்னேறி வெளியில் வர ட்ராலிக்களைத் தள்ளிக்கொண்டு நடந்துவந்தனர். அவளின் கோபமும் பயமும் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது.
“ஏன் இவளோ கோவப்படற! புரியவே இல்ல எனக்கு! நான் எவளோ ஆசையா எல்லா ஏற்பாடும் செஞ்சேன் தெரியுமா? 1 வாரமா ராப்பகலா உழைச்சது எதுக்கு? 1 மாசம் உன்னோட இங்க இருக்கனும்னு தான். ஆனா நீ சந்தோஷப்படற மாதிரி தெரியல்லையே!”
“என்ன சந்தோஷப்படறது? கொஞ்சம் கூட ப்ராக்ட்டிக்கலா யோசிக்காம இப்படியா செய்வீங்க? இத்தனை பெரிய விஷயத்த என்கிட்ட ஒரு வார்த்தை சொல்ல மாட்டிங்களா?”
இப்படி இருவரும் காரசாரமாய் ஆரம்பித்த போது அழைத்துப்போக வந்திருப்பவர்கள் நின்ற பகுதியிலிருந்து 2 குரல்கள் சத்தமாய் எழும்பின.
“கயலு…………” என்று.
வட்டார வழக்கில் விளித்தொடராய்த் தன்னவளின் பெயரைக்கேட்ட கால்டன் பேரதிர்ச்சியானார். பல வயதுகளில் ஆண் பெண் என்று 9 பேர் வந்திருந்தனர் கயலுக்காக.
கால்டனை முறைத்துவிட்டு அவர்களை நோக்கிக் கயல் ஓடினாள். ட்ராலியை அம்போவென்று விட்டுவிட்டு சந்தோஷமாய் ஓடிச்சென்ற கயலை அவர்கள் ஆரவாரமாய் வரவேற்றனர்.
கத்தி அழைத்த இருவரில் ஒருவன் கல்லூரிப் பருவத்தில் இருந்தான். கயலைத் தூக்கிச் சுற்றினான்.
“கயலு.. கயலு..” என்று கோஷங்கள் கேட்க, கால்டன் என்ன நடக்கிறது என்பது போல் விழித்துக்கொண்டு நின்றிருந்தார்.
-வித்யாகுரு