வீட்டிற்குள் அனைவரும் பேசிக் கொண்டிருக்கையில் வெளியே ஏதோ லாரி நிற்கும் சத்தம் கேட்க அதைத் தொடர்ந்து ஆட்களின் பேச்சுச்சத்தமும் கேட்கவே சந்தியா சதாசிவத்திடம் “பெரியப்பா வாசல்ல என்ன சத்தம் கேக்குது? ஒரு வேளை ரேஷன் கடைக்கு ஜாமான் கொண்டு போகிற லாரி இங்கே ரிப்பேர் ஆயிடுச்சோ?” என்று சந்தேகத்துடன் வினவ
அவர் இல்லையென்று தலையாட்டி மறுத்துவிட்டு “நம்ம வீட்டுக்கு அடுத்த வீட்டை என் ஓனர் சேட் தான் வாங்கிருக்காருடா. அவர் ஃபேமிலிக்கு கோதுமை மூட்டை, மளிகை ஜாமான்லாம் வந்து இறங்குது” என்று சொல்ல சந்தியா திகைத்தாள்.
“பெரியப்பா அவங்க வீடு பார்டர்ல தானே இருந்துச்சு. இங்கே எப்போ வந்தாங்க?” என்றபடி உள்ளே வந்தவளிடம்
“பிரானூர்ல சாமில்லும் வீடும் பக்கம் பக்கம் இருக்கிறது அவருக்கு ஏனோ பிடிக்கலை. என் கிட்ட நல்ல வீடா பார்க்கச் சொன்னாரு. நான் தான் நமக்கு அடுத்த பங்களாவை அவருக்குப் பார்த்துக் குடுத்தேன். அந்த வீடு சேட்டுக்கும், அவரு வீட்டுக்கார அம்மாவுக்கும் ரொம்பவே பிடிச்சுப் போச்சு. இங்கே வந்து ரெண்டு வருசம் ஆகுதுடா” என்று சொல்லிவிட்டு காபிடம்ளரை கீழே வைத்தார்.
அவர்கள் வீடும் அவளது பெரியப்பா சொன்ன பங்களாவும் அடுத்தடுத்து தான் அமைந்திருந்தன. அந்த பங்களாவின் காம்பவுண்டுக்குள் செக்யூரிட்டியின் வீடு, ஒரு அவுட் ஹவுஸ் மற்றும் அந்தப் பெரிய பங்களா என்று மூன்றும் அமைந்திருக்க ஏகப்பட்ட இடத்தை விழுங்கி கம்பீரமாக நின்றது அந்த பங்களா.
அதன் உரிமையாளரான கைலாஷ் படேலின் அப்பா காலத்திலேயே அவர்கள் குஜராத்திலிருந்து இங்கே புலம்பெயர்ந்து மரம் அறுக்கும் ஆலையை நிறுவினர். அதை கைலாஷ் படேலும் அவரது மகன்களும் சேர்ந்து தற்போது நிர்வகித்து வருகின்றனர்.
அந்த ஆலையில் தான் சதாசிவம் கணக்காளர் மற்றும் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். அவரது கடின உழைப்பும், நேர்மையும் அவருக்கென்று ஒரு இடத்தை அந்த சாமில்லில் உருவாக்கிவிட்டது. கைலாஷ் படேலும் அவரை முழுவதுமாக நம்பினார் எனலாம்.
இன்னும் வாசலில் கேட்ட கூச்சல் நிற்காததால் சந்தியா வாசலில் சென்று எட்டிப்பார்க்க அங்கே கோதுமை மூட்டைகள் பங்களாவுக்குள் எடுத்துச் செல்லப்படுவதைப் பார்த்தவள் “இந்த கோதுமை மூட்டையைப் பார்த்தா உள்ளே ஒரு ஊரே தங்கியிருக்கும் போல” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு “மா! நான் புறவாசலுக்குப் போறேன்” என்று சத்தம் போட்டு அறிவித்துவிட்டு வீட்டின் பின்வாசலுக்குச் சென்றாள் அவள்.
அது அவளுக்கு மிகவும் பிடித்த இடம். அங்கே அவளுக்கென்று அவளது பெரியப்பா வாங்கிப் போட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆடத் தொடங்கியவளின் செவியில் விழுந்தது ஒரு இனிமையான சிரிப்புச்சத்தம். சுற்றி முற்றி பார்த்தவளுக்கு அது பக்கத்துப் பங்களாவின் காம்பவுண்ட் பக்கம் ஒலிப்பதாகத் தோன்ற காம்பவுண்டை எட்டிப் பார்த்தவளின் விழிகள் விரிந்தபடி அப்படியே நின்றது.
அலையான கேசம், ஆளை வெட்டும் புருவங்கள், கூர்நாசியுடன் இப்போது இதழில் விளையாடும் சிரிப்பு அவன் கன்னத்துக்கு அளித்திருந்த பரிசாய் இரு கன்னங்களிலும் விழுந்த குழிகளுடன் கச்சிதமாக டிரிம் செய்யப்பட்டிருந்த இருநாள் தாடியுடன் அந்த பங்களாவின் அவுட் ஹவுஸின் மாடியிலிருந்து அவர்கள் வீட்டைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் ஒரு இளைஞன். அவள் இருந்த இடம் சரியாக அவன் நின்ற இடத்துக்கு கீழே என்பதால் அவனது முகம் அவளுக்கு நன்றாகத் தெரிந்தது.
அந்த மதிய நேர சூரியவெளிச்சத்தையும் தாண்டி மின்னிய புன்னகையுடன் கூடிய அவனது முகத்தைக் கண்ட அக்கணமே அவள் விழிகள் அவனைப் படம் பிடித்து அவளது இதயப்பெட்டகத்தில் சேகரித்துக் கொண்டது.
ஆனால் இவ்வளவு நேரம் புல் தின்ன போயிருந்த மூளை அதன் இடத்துக்கு வந்ததும் சந்தியா சுதாரித்து விட்டாள். அப்படி அவன் எதைப் பார்த்து தான் சிரிக்கிறான் என்று அவன் பார்த்த திசையை அவளும் நோக்க அங்கே அவர்கள் வீட்டின் சமையலறை தான் இருந்தது. அங்கே சிரிக்கும் அளவுக்கு என்ன நடக்கிறது என்று ஊஞ்சலில் இருந்து எழும்பி எட்டிப் பார்க்க அங்கே அவள் கண்ட காட்சியில் அவளுக்கு மயக்கமே வந்துவிடும் போல இருந்தது.
மேலகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் குற்றாலத்துக்கு மிகவும் அருகாமை என்பதால் அங்கே குரங்குகள் சர்வசாதாரணமாக நடமாடுவது உண்டு. அதுவும் முன் மதியத்தில் அவை தாராளமாக அங்கே உலா வரும். எனவே ரேவதி காலையிலேயே சந்தியாவிடம் “சந்தியா புறவாசல் கதவு எப்போவும் பூட்டி தான் இருக்கணும். இல்லனா குரங்கு வீட்டுக்குள்ள வந்துடும்டா” என்று சொன்னது புத்தியில் அப்போது தான் உரைத்தது.
அவர்கள் சமையலறையில் ரேவதி அரைத்து வைத்திருந்த தோசைமாவில் குரங்குகள் கை, கால்களை முக்கி எடுப்பதை தான் அந்த பக்கத்துவீட்டு வாலிபன் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்து கொண்டவள் “இன்னைக்கு நீ செத்த சந்தியா, பெரியம்மா சொல்லியும் கதவை திறந்து வச்சிட்டு வந்துட்டியே. இப்போ மாவு ஃபுல்லா வேஸ்ட்” என்று புலம்பியவாறு சமையலறையை நோக்கி ஓடினாள்.
உள்ளே ஒரு குரங்கு குடும்பமே இருக்க அவளுக்கு அவற்றைக் கண்டதும் திகிலாகி விட்டது. புறவாசல் கதவு பக்கம் நின்றவாறு அவள் “ஏய் சூ! ஓடிப் போ!” என்று அவற்றை விரட்ட முயற்சிக்க அவை அவளை நோக்கி முன்னேறவே அவள் சத்தமாக “பெரியப்பா” என்று அலற அவளது அலறலில் வீட்டுக்குள் இருந்து அனைவரும் என்னவோ ஏதோவென்று பதறியடித்து ஓடி வரவும் அந்தச் சத்தத்தில் குரங்கு குடும்பம் ஓடி விட்டது.
சதாசிவம் பதறிப் போய் சின்னமகளிடம் வந்தவர் “சந்தியா என்னடாமா?” என்றவரின் காலில் தோசைமாவு ஒட்டவே “இது எப்பிடி இங்கே கொட்டுச்சு?” என்று ரேவதி கேட்க சந்தியா குரங்கு குடும்பத்தின் கலாட்டாக்களைக் கூறினாள்.
ரேணுகா அதைக் கேட்டதும் “அக்கா காத்தாலே உன் கிட்ட சொன்னாங்க தானே! புறவாசல் கதவை திறந்து வைக்காதேனு. இப்போ பாரு மாவு ஃபுல்லா வேஸ்ட் ஆயிடுச்சு. குரங்கு வந்தது கூட தெரியாம நீ என்ன பண்ணிட்டிருந்த சந்தியா?” என்று அவளைச் சத்தம் போட துவங்கினார்.
சந்தியா முகத்தைத் தூக்கிக் கொண்டு கோமதியம்மாளிடம் “ஆச்சி!” என்ற சிணுங்கலுடன் செல்ல அவரும் “விடு ரேணு! சின்னப்பிள்ளையை திட்டாதே” என்று பேத்திக்கு பரிந்துப் பேசவும் ரேணுகா தலையிலடித்துக் கொண்டு சென்றுவிட்டார். கோமதியம்மாளுக்கு தனது பேத்தி அவரை ஆச்சி என்று அழைத்துவிட்டால் எப்போதுமே உச்சி குளிர்ந்து விடும். அதை புரிந்து கொண்ட சந்தியா தேவையான சமயத்தில் அதை பயன்படுத்திக் கொள்வாள்.
அனைவரும் ஹாலுக்கு செல்ல அவள் கோமதியம்மாளிடம் தான் ஊஞ்சலுக்கு செல்வதாக கூறிவிட்டு வந்தவள் அங்கே நின்று சிரித்துக் கொண்டிருந்தவனை தேட அவன் அங்கே இல்லை. யாராக இருப்பான் என்ற யோசனையுடன் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தவளிடம் வந்தாள் சுமித்ரா, அவளின் பெரியப்பா மகள்.
“சந்தியா உனக்கு இங்கே இருக்கிறதுல எந்த பிரச்சனையும் இல்லையே?” என்றவளை புருவச்சுழிப்புடன் பார்த்தாள் சந்தியா.
“திடீர்னு ஏன் சுமிக்கா இப்பிடி கேக்கிற? எனக்கு நம்ம ஊர் ரொம்ப பிடிக்கும்னு உனக்கு தெரியாதா? இங்கே நீ, பெரியப்பா, பெரியம்மா, ஆச்சினு எல்லாரும் இருக்கிங்க. நான் முன்னே மாதிரி பாளையங்கோட்டையிலேயே படிக்கப் போனா ஹாஸ்டல்ல எனக்குனு யாரு இருப்பாங்க? தனியா நான் மட்டும் தான் இருக்கணும்” என்றவளை நோக்கி திரும்பி அமர்ந்தாள் சுமித்ரா.
“அப்போ இனிமே ஜாலி தான்” என்று இருவரும் ஹைஃபை கொடுத்துக் கொண்டனர்.
அதன் பின் அவர்களின் உரையாடலில் மதியமும் வந்துவிட நீண்டநாட்களுக்குப் பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதியவுணவை முடிக்க சந்தியாவுக்கு அந்த நாள் மிகவும் மகிழ்ச்சியாக கடந்தது. மாலையில் ரேவதி அவளை அமரவைத்து கூந்தலுக்கு எண்ணெய் தடவி வாரி விடும் போது சந்தியாவுக்கு திடீரென்று அந்த அவுட் ஹவுஸ் சிரிப்புக்காரனின் நியாபகம் வந்தது.
“பெரியம்மா! சேட்டு வீட்டோட அவுட் ஹவுஸில யாரு இருக்காங்க?” என்று அவன் யாரென்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் ரேவதியிடம் கேட்க
“சேட்டோட கடைக்குட்டி பையனோட ஃப்ரெண்டுடா! அவனும், சேட்டோட சின்னப் பையன் ஜித்துவும் வெளிநாட்டுல ஒன்னா படிக்காங்களாம்” என்று அவளுக்கு கதை சொல்லியபடி கூந்தலை வாரிவிட்டார் ரேவதி. அவளும் உம் கொட்டியபடி கதையைக் கேட்டு முடித்தாள். ஆனால் அவனது முகம் அவளது மனக்கண்ணில் பதிந்துவிட்டதால் அடிக்கடி அவள் நினைவில் வந்துவிட்டுப் போனது. அதோடு அந்த சிரிப்பும் தான். அதை நினைத்தபடியே படுக்கையில் விழுந்தவள் சிறிதுநேரத்தில் உறங்கியும் போனாள்.
********
மறுநாள் காலை சந்தியா விழிக்கும் போது மணி ஏழு. “ஆஹா! இது ஒன்னு போதும், இன்னைக்கு முழுக்க அம்மா என்னை கரிச்சுக் கொட்டுறதுக்கு” என்றபடி வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள் அவள். தாயின் கண்ணில் விழாமல் மெதுவாக குளியலறைக்குச் சென்று நானும் குளித்தேன் என்று பேர் பண்ணிவிட்டு உடையை மாற்றிவிட்டு கூந்தலை உலர்த்த ஆரம்பித்தாள்.
அவள் தலை உலர்த்தும் அழகைப் பார்த்த கோமதியம்மாள் “இங்கே வா! ஆச்சி துவட்டி விடுறேன்” என்றுச் சொல்ல அவள் தலையை நீட்டினாள்.
“கொஞ்சம் முடியை வளர்த்தா என்ன சந்தியா? சுமியை பாரு, அவ தலைமுடிக்காகவே அவளைக் கட்டிக்க நீ நான்னு போட்டி போடுவாங்க” என்று சொன்னபடி தலையைத் துவட்ட தொடங்கினார் அவர்.
“ஆச்சி! என்னை கட்டிக்க போறவன் முடியை பார்த்தோ, அழகைப் பார்த்தோ என்னை மேரேஜ் பண்ணுனா அது எனக்கு கிரேட் இன்சல்ட். மனசை பார்க்கணும் ஆச்சி” என்று கண் மூடிச் சிலாகித்தபடி கைகளை இடதுபக்க நெஞ்சில் வைத்துச் சொல்ல அவளின் பாவனையில் அசந்து போனார் கோமதியம்மாள்.
இருந்தாலும் கிண்டலாக “அது சரி! அப்பிடி ஒரு சீமராஜாவை எங்கே போய் தேடுறது?” என்று அவர் கூறவே சந்தியா “யாரும் தேட தேவையில்ல ஆச்சி. அவனே வருவான்! ஆனா வர்றவன் நான் ஆடிட்டர் ஆனதுக்கு அப்புறம் தான் வரணும். அதுக்கு முன்னாடி வந்தா அவனை யூடர்ன் பண்ணி போகச் சொல்லிடுவேனாக்கும்” என்ற பேத்தியின் சாமர்த்தியத்தை மெச்சியபடி டவலை கொண்டு சென்றார் கோமதியம்மாள்.
காலையுணவின் போது சரியாக தோசை விள்ளலை சந்தியா வாயில் வைக்கப் போகும் போது ரேணுகா பேச்சை ஆரம்பித்தார். அவர் சதாசிவத்திடம் “மாமா! ரெண்டு பேருக்கும் பி.காம் கோர்ஸுக்கு தானே அப்பிளிகேசன் வாங்கியிருக்கிங்க? பராசக்தியில கிடைச்சிடுமா மாமா?” என்று அவர் வினவ சந்தியா “பராசக்தியிலயா?” என்று வாயைப் பிளந்தாள்.
ரேணுகா “ஆமா! ஏன் அந்த காலேஜுக்கு என்ன?” என்று அவரது அக்மார்க் கண்டிப்பு குரலில் கேட்க
அவளோ “மா! நான் ஸ்கூல் படிச்சது தான் கேர்ள்ஸ் கான்வென்ட். அட்லீஸ்ட் காலேஜ் மட்டுமாச்சும் கோ-எட்ல படிக்கலாம்னு நினைச்சா நீங்க அதுக்கும் ஆப்பு வைக்கிறிங்க? நான் பராசக்தியிலலாம் படிக்க மாட்டேன்” என்றாள் முகத்தைச் சுருக்கியபடி. ஆனால் அடுத்த நொடியே அன்னையின் முறைப்பில் அவள் தலை சம்மதம் என்று ஆடவே எல்லாம் முடிந்தது என்று எண்ணிக் கொண்டாள் சந்தியா.
சாப்பிட்டு விட்டு சுமித்ராவுடன் கை கழுவ வந்தவளிடம் சுமித்ரா “கோ-எட்ல படிச்சா மட்டும் மேடம் என்ன பண்ணுவிங்க?” என்று கேலியாக வினவ
“அக்கா! கோ-எட்ல படிச்சா தான் பசங்க கூட கூச்சம் இல்லாம நார்மலா பேச வரும். இல்லனா நாளைக்கு நான் ஹையர் ஸ்டடீஸ் படிக்கிறப்போ என்னால பாய்ஸ் கூட நார்மலா பேசவே முடியாம போயிடும்க்கா” என்றாள் அவள். சுமித்ராவும் இது கூட சரியான விஷயம் தான் என்று ஒத்துக் கொண்டாலும் தங்களால் பெரியவர்களின் முடிவை எதிர்க்க முடியாது என்பதை இருவருமே அறிவர்.
அவள் முகச்சுணுக்கத்துடன் முன்வாசலுக்குச் சென்றவள் வீட்டின் கேட்டில் நின்றபடி வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க அங்கே சில சிறுவர்கள் கூட்டமாக விளையாடிக் கொண்டிருந்தனர். அதில் ஒருவன் அவளுக்குப் பரிச்சயமானவனாக இருக்க அவர்கள் அருகில் சென்றாள் சந்தியா.
அருகில் சென்றதும் அவனை அடையாளம் தெரிந்துவிட சந்தோசத்துடன் “டேய் சிதம்பரம்!” என்று அவனை அழைக்க அந்த சிறுவன் முகத்தைச் சுருக்கிக் கொண்டு திரும்பியவன் அவளைக் கண்டதும் முகம் மலர்ந்து “சந்துக்கா நீயா?” என்றவன் சிறு முறைப்புடன் “ஆனா என்னை சிதம்பரம்னு கூப்பிடாதே. கால் மீ சிண்டு” என்றுச் சொல்ல சந்தியா தன் தலையில் செல்லமாகக் குட்டிக் கொண்டாள்.
பின்னர் அவனிடம் “சாரிடா சிண்டு! இங்கே வந்து நாளாச்சுல்ல! அதான் அக்காக்கு உன் பேர் மறந்து போச்சு. இனிமே கவனமா இருப்பேன்டா” என்றுச் சொல்லிவிட அந்த பெரியமனிதனுக்கு அப்போது தான் முழுச்சந்தோசம். அவர்களின் விளையாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளிடம் அவன் “அக்கா! இங்கேயே இருந்தா போர் அடிக்குது. ஆனா என்ன செய்ய? நெல்லிக்கா வேணும்னு தான் இங்கே விளையாடுறோம்” என்று பெருமூச்சுடன் கூற சந்தியாவுக்கு நெல்லிக்காய் என்ற வார்த்தையே நாவில் எச்சில் ஊறச் செய்தது.
ஆர்வத்துடன் “நெல்லிக்கா மரம் எங்கேடா இருக்கு? நீ சொல்லு நான் பறிச்சிட்டு வர்றேன்” என்றுச் சொல்ல அந்த சிண்டு “அக்கா உனக்கு மறந்து போச்சா? அந்த பங்களா புறவாசல்ல ஒரு நெல்லிக்கா மரம் இருக்குல்ல, அங்கே தான் போய் பறிக்கணும்” என்று விஷயத்தை வெளியிட்டான்.
சந்தியாவுக்கும் அது நினைவு இருக்கிறது. ஆனால் அப்போது அந்த வீடு ஆளரவமற்று பூட்டிக் கிடக்கும். தற்போது உரிமையாளர்கள் இருக்கும் போது அவர்கள் பார்த்துவிட்டால் என்ன செய்வது என்று அவனிடம் வினவ “அக்கா அந்த வீட்டுக்கு ஒரு வளர்ந்து கெட்ட மனுஷன் வந்துருக்கான்கா. அவன் எப்போவுமே புறவாசல்ல தான் இருப்பான். அங்கே இன்னொரு வீடு இருக்குல்ல அதோட மாடியில தான் அவனும் ஜித்து அண்ணனும் இருப்பாங்க. ஆனா அவங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வெளியே போயிட்டாங்க. இப்போ நம்ம போனா ஈஸியா நெல்லிக்கா பறிக்கலாம்கா” என்றுச் சொல்லி அவளுக்கும் நெல்லிக்காய் ஆசையைத் தூண்டிவிட அதற்கு மேல் பொறுமை காக்க இயலாதவளாய் சந்தியா அவனுடன் கிளம்பி விட்டாள்.
பின்வாசல் இரும்பு கேட் திறந்து கிடக்க சிண்டு “அக்கா பார்த்து போக்கா! நான் யாராச்சும் வர்றாங்களானு பார்த்து சொல்லுறேன்” என்று இரகசியக்குரலில் பேச சந்தியாவும் அவனைப் போலவே “சரிடா சிண்டு!” என்றுச் சொல்லிவிட்டு அந்த நெல்லிக்காய் மரத்தை நோக்கிச் சென்றாள்.
அங்கே எப்போதுமே ஒரு சிறிய ஏணி சுவரில் சாத்தி வைக்கப்பட்டிருக்கும். அதை மரத்தின் பக்கவாட்டில் ஏறுவதற்கு ஏற்றபடி நிறுத்தியவள் மெதுவாக ஏறி நெல்லிக்காய்களைப் பறித்து சுடிதார் துப்பட்டாவில் முடிந்து கொண்டாள். ஆர்வத்துடன் ஒரு நெல்லிக்காயை சுவைத்தவளுக்கு அதன் புளிப்பு கன்னக்கதுப்புகளில் கூச வைக்க ஒரு பக்க கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அதன் சுவையை ரசித்தபடி பறித்துக் கொண்டிருந்தாள். எல்லாம் நன்றாக தான் போய்க் கொண்டிருந்தது. சிண்டு கத்தும் வரை.
“அக்கா! அந்த வளர்ந்து கெட்ட மனுசன் வந்துட்டான்கா! சீக்கிரமா வா” என்றபடி அவன் ஓடிவிட சந்தியா பதற்றத்துடன் ஏணியிலிருந்து கீழே இறங்கினாள். அவளது கெட்டநேரம் அவள் ஏணியை பழைய இடத்தில் வைக்கச் சென்ற போது தூரத்தில் வந்த, சிண்டு கூறிய அந்த வளர்ந்து கெட்ட மனிதன் அவளை நெருங்கிவிட்டான். அவள் ஏணியை வைத்துவிட்டு ஓட எத்தனிக்க அவன் “ஏய் ஓடாதே நில்லு” என்று கூற அவளுக்கு நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக் கொண்டது.
துணிவைத் திரட்டிக் கொண்டு மீண்டும் வேகமாகச் செல்ல முயல “ஏய் ஹலோ எங்கே ஓடப் பார்க்கிற? இப்போ நீயா நிக்கலைனு வையேன் உன் கையைப் பிடிச்சு தடுத்து நிறுத்த வேண்டியிருக்கும்” என்ற குரல் மிகவும் அருகில் கேட்கவே சந்தியாவிற்கு திகிலானது.
“சந்து! மாட்டிக்கிட்டியே! இந்த நெல்லிக்காய்க்காக உன் மானம் போகப் போகுதுடி! பேசாம இதை அந்த வளர்ந்து கெட்டவன் கிட்ட குடுத்துட்டு வீட்டைப் பார்த்து ஓடிடு” என்று அவளது மனசாட்சி அறிவுறுத்தினாலும் அவளது நாவின் சுவைமொட்டுகள் நெல்லிக்காய் சுவையைத் தீண்டாமல் தங்களுக்கு ஜென்மசாபல்யமே கிடையாது என்று அவளைப் பாடாய்படுத்த வேறு வழியின்றி நின்றவள் பரிதாபமாய் முகத்தை மாற்றிக் கொண்டு அந்தக் குரலுக்குச் சொந்தக்காரனும் அவளது பாஷையில் வளர்ந்து கெட்டவனுமான அந்த மனிதனை நோக்கித் திரும்பினாள்.
பயத்துடன் அவனை பார்த்தவள் திகைத்தாள். அவன் வேறு யாருமல்ல அவள் நேற்று பார்த்த அந்த சிரிப்புக்கு சொந்தக்காரன் தான். சந்தியா அருகாமையில் அவனைக் கண்ட அதிர்ச்சியில் விழி விரித்து நிற்க அவனோ தன் எதிரே முட்டைக்கண்களுடன், கருநிறவில்லாய் புருவங்களுடன், எள்ளுப்பூவை ஒத்த நாசியுடன், குட்டி ஸ்ட்ராபெர்ரியாய் மின்னும் இதழ்களுடன் யாரையும் ஒரு முறைக்கு இரு முறை திரும்பிப் பார்க்கச் சொல்லும் மாநிறத்தில் மின்னும் அழகுடன் நின்றவளை கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் தான் சூரியா. ஜே.கே.ஆர் குரூப் ஆஃப் கம்பெனிகளின் நிறுவனர் நாராயணனின் மூத்த வாரிசு. அவனது கூரியவிழிகளும், அழுத்தமான உதடுகளும் அவன் எவ்வளவு பிடிவாதக்காரன் என்பதை பார்ப்பவர்களுக்கு உணர்த்திவிடும்.
அவன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டபடி சந்தியாவை ஆராய்ச்சிப்பார்வை பார்த்துவிட்டு “ஹவுஸ் ஓனரோட பெர்மிசன் இல்லாம இப்பிடி திருடுறது தப்புனு உனக்கு தோணல?” என்று அழுத்தம் திருத்தமான குரலில் கேட்டவனின் தோரணையில் சற்று அயர்ந்து தான் போனாள் சந்தியா. “ஏன்டா நெல்லிக்காய் பறிச்சது ஒரு குத்தமாடா?” என்று தனக்குள் பேசிக் கொண்டாலும் அவனிடம் அதைக் கேட்கும் தைரியம் இல்லை அவளுக்கு.
இந்த மாதிரி சூழ்நிலையில் அவள் மூளை மிகவும் தீவிரமாக யோசிக்கும். அந்த தீவிர யோசனையின் விளைவு தன் எதிரே நிற்பவனிடம் ஒரு பொய்யைக் கூறத் தயாரானாள் சந்தியா. தொண்டையை செறுமிக் கொண்டு “சார் நான் ஒன்னும் இதை எனக்காக பறிக்க வரலை” என்று பரிதாபக்குரலில் உரைத்துவிட்டு முகத்தையும் அப்பாவி பெண்ணை போல் வைத்துக் கொண்டாள் அவள்.
ஆனால் அவனோ அதற்கெல்லாம் மசியாமல் “அப்போ யாருக்காக பறிக்க..ப்ச்..திருட வந்த?” என்று அவளைச் சீண்ட சந்தியாவுக்கு உள்ளுக்குள் எரிமலைக்குழம்பு தணதணவென்று இருந்தாலும் முகத்தில் அதை காட்டிக் கொள்ளாமல் அதே அப்பாவித்தனத்துடன் பேசினாள் சந்தியா.
“இந்த தெருமுனையில ஒரு பாட்டி நெல்லிக்கா வித்திட்டிருக்கும். அதுக்கு இன்னைக்கு நெல்லிக்கா பறிச்சு குடுக்கிற ஆள் வரலையாம். அதான் நான் இந்த மரத்துல இருந்து பறிச்சுக் குடுக்க வந்தேன். ஆனா நீங்க அது புரியாம என்னை திட்டிட்டு…….” என்ற வார்த்தையை முடிக்கும் முன் அழத் துவங்கினாள், இல்லை இல்லை அழுவது போல நடிக்க தொடங்கினாள்.
சூரியா அவள் அழுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. பெருங்குரலெடுத்து அழுதவளைக் கண்டு பதறிப் போனவனாய் “ஹேய் டோண்ட் க்ரை! நான் உன்னை பிளேம் பண்ணறதுக்காகச் சொல்லலைமா. பட் இப்பிடி ஓனர் பெர்மிசன் இல்லாம அவங்க பொருளை எடுத்துட்டுப் போறது தப்பு” என்று பொறுமையாய் எடுத்துரைக்க அவள் வராத கண்ணீரை துடைத்துவிட்டுக் கொண்டாள்.
நல்ல பெண்ணைப் போல “இனிமே நான் இப்பிடி பண்ண மாட்டேன் சார். நீங்க யாரு கிட்டவும் சொல்லிடாதிங்க பிளீஸ்” என்று வேண்ட அவனும் தான் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று சமாதானப்படுத்தி அவளை அனுப்பி வைத்தான்.
சந்தியா மனதிற்குள் “இவன் என்ன இவ்ளோ அப்பாவியா இருக்கான்? என்ன சொன்னாலும் நம்புவான் போலயே” என்று அவனைக் கேலி செய்தபடி வீட்டின் வெளியே பதுங்கி நின்ற சிண்டுவிடம் சென்றாள். அவனிடம் நெல்லிக்காயை கொடுத்துவிட்டு “டேய் சிண்டு! எதிரி கிட்ட புறமுதுகு காட்டி ஓடக் கூடாதுடா! பார்த்தல்ல அக்கா எப்பிடி அந்த வளர்ந்து கெட்டவனை சமாளிச்சிட்டு நெல்லிக்காயோட வந்தேன்னு” என்று அமர்த்தலாகச் சொல்லிவிட்டு வீட்டை நோக்கி சென்றாள்.
சுமித்ராவுக்கு நெல்லிக்காய் என்றால் உயிர். இரு சகோதரிகளும் நெல்லிக்காய், உப்பு மிளகாய்ப்பொடி கலவையுடன் மொட்டை மாடிக்குச் சென்று அங்கே நாற்காலிகளை இழுத்துப் போட்டு அமர்ந்து ருசிக்க ஆரம்பித்தனர்.
சந்தியா “சுமிக்கா இன்னைக்கு நான் நெல்லிக்காயை பறிச்சது சம்பவம் இல்ல, அது ஒரு சரித்திரம். அந்த வளர்ந்து கெட்டவன் கிட்ட இருந்து நான் என் செல்லங்களை கடத்திட்டு வர நான் பட்ட கஷ்டம் இருக்கே. அவன் கண்ணு இருக்கு பாரு, அதுல எக்ஸ்ரே மிசின் வச்சிருக்கானோ என்னவோ? வெரி பவர்ஃபுல் அய்ஸ் சுமிக்கா” என்றவள் அவளது பக்கத்து மாடிக்கு சூரியா வந்ததையும் இவர்கள் நெல்லிக்காய் சுவைப்பதை பார்த்ததையும் சகோதரிகள் இருவருமே கவனிக்கவில்லை.
சந்தியா அவனைப் பற்றி கேலியாக “சுமிக்கா ரொம்ப வளர்ந்தவங்களுக்குலாம் அறிவே இருக்காதுனு நினைக்கிறேன். நம்ம தெருமுனையில என்னைக்காச்சும் பாட்டி நெல்லிக்கா வித்து அவன் பார்த்திருக்கானா? இல்ல அது உக்கார அங்கே இடம் தான் இருக்கா? இதை கூட யோசிக்காம நான் சொன்ன எல்லாத்தையும் நம்பிட்டான். நான் அழுற மாதிரி நடிச்சதும் பையன் அப்பிடி பதறிப் போயிட்டான்னா பாரேன்” என்று கலாய்த்தவளின் பேச்சை இடையிட்டது ஒரு குரல்.
“ஏய் பிரவுனி” என்ற குரலில் கடுப்பானவள் “எவன்டா அவன் என்னை பிரவுனினு கூப்பிட்டது?” என்று எரிச்சலுடன் திரும்ப அங்கே தனது மூன்றாவது கண்ணை திறந்தபடி நின்ற சூரியாவைக் கண்டதும் அதிர்ச்சியில் கையில் வைத்திருந்த நெல்லிக்காயை தரையில் தவறவிட்டாள் சந்தியா. சுமித்ராவின் நிலையும் அதுவே. மெதுவாக சந்தியாவின் காதில் “சந்து வாடி கீழே போயிடலாம்” என்றுச் சொல்ல அதற்குள் கோபத்தில் பொறிய தொடங்கினான் சூரியா.
“உனக்கு கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்ல? ஹவுஸ் ஓனருக்கு தெரியாம அவங்க வீட்டுல திருடுறதே தப்பு. இதுல உனக்கு பெருமை வேறயா? நீ சொன்னதைலாம் நம்புனேன் பாரு! என்னைச் சொல்லணும்” என்று அவன் வார்த்தைகளைக் கடித்து துப்ப
சந்தியா நமட்டுச்சிரிப்புடன் “நியாயப்படி நீ என்னை திட்டக் கூடாதுப்பா. நீ நம்புற அளவுக்கு பொய் சொன்னேன் பாரு, அந்த திறமையை பாராட்டணும். திறமை எங்கே இருந்தாலும் பாராட்டலாம். தப்பே இல்ல மிஸ்டர் அமுல்பேபி” என்று கேலியாகச் சொல்லிவிட்டு சுமித்ராவுக்கு ஹைஃபை கொடுத்தாள்.அவளது செய்கையிலும் கேலியிலும் கொதிநிலைக்குச் சென்றவன் “ஹே பிரவுனி! ஓவரா பேசாத ஓகே! பண்ணுறது ஃபுல்லா பித்தலாட்டம். இதுல உனக்கு பெருமை வேற” என்றான் அலட்சியமாக.
அவனது “பிரவுனி” என்ற வார்த்தை அவளுக்கு எரிச்சல் மூட்ட “ஹலோ யாருடா பிரவுனி? நானா? நீ இப்பிடி மார்ஸ்மாலோ மாதிரி வெள்ளை வெளேர்னு இருந்தா உன் பக்கத்துல தமன்னா வந்து நின்னா கூட பிரவுனா தான் தெரியும். அப்பிடியே இவங்க வீட்டுல புதைச்சு வச்சிருந்த புதையலை நான் திருடிட்டேன் பாரு, சார் என் மேல கோவப்படுறதுக்கு. நாலணா நெல்லிக்காய்க்கு இவ்ளோ பில்டப்பா?” என்று சந்தியாவும் சளைக்காமல் அவனுக்கு பதிலளித்தாள்.
சூரியா அவளது “நாலணா’ என்ற வார்த்தையில் குழம்பியவன் பேச வந்த விஷயத்தை விட்டுவிட்டு “ஏய் ஒன் செகண்ட்! வாட் இஸ் நாலணா?” என்று புரியாமல் விழிக்க அவனை இடுப்பில் கை இரு கைகளையும் ஊன்றியபடி முறைத்தாள் சந்தியா.
பின்னர் நக்கலாக உச்சுக் கொட்டியவள் “சாருக்கு நாலணான்னா என்னனு தெரியாது போல! என்ன பண்ணுறது சார்! உங்க டீலிங் எல்லாம் டாலர்ல இருக்கும். உங்களுக்குப் போய் நாலணா, எட்டணாலாம் தெரியுமா? நீ வா சுமிக்கா, இந்த மார்ஸ்மாலோ கிட்ட பேசி நம்ம டைமை வேஸ்ட் பண்ணக் கூடாது. நாலணான்னா என்னன்னு தெரியாதாம். கேக்கிறவன் கேனையா இருந்தா எறும்பு ஏரோபிளேன் ஓட்டுதுனு சொல்லுவான் போல இந்த மார்ஸ்மாலோ” என்றுச் சொன்னபடி அவள் அருகில் நின்ற சுமித்ராவை அழைத்துக் கொண்டு வேகமாக படிக்கட்டிகளில் ஓடி மறைந்தாள்.
அவள் செல்வதைப் பார்த்தவாறே “ஹேய் பிரவுனி! பிளீஸ் நாலணான்னா என்னனு சொல்லிட்டுப் போ! எனக்கு கியூரிசியாட்டி தாங்காது” என்று சூரியா கத்த அவளோ காதில் போட்டுக் கொள்ளாமல் கீழே சென்றுவிட்டாள். சூரியாவோ அவள் சொன்ன அந்த நாலணா என்னவாக இருக்கக் கூடும் என்ற குழப்பத்துடன் நின்றான்.
குழம்பிய அவனுக்கும் தெரியவில்லை; குழப்பிவிட்டுச் சென்ற அவளுக்கும் தெரியவில்லை; இதே மாதிரி இன்னும் நிறைய குழப்பங்கள் அவர்களுக்காக வரிசை கட்டிக் காத்திருக்கின்றன என்று.
சாரல் வீசும்…..