அத்தியாயம்-1
கிழக்கு வெளுத்து, கீழ் வானம் சிவந்தது.கதிரவனின் வரவை பூமித் தாய், தன் இருகரம் நீட்டி வரவேற்க தயாரானாள்.பறவைகளின், கீச்சு கீச்சு ஒலியும், ஆவினங்களின் ம்மா..என்னும் ஒலியும், விடியலை ரம்யமாக்கியது.
மாதர்கள் வாசல் தெளித்து கோலமிடும் நேர்த்தியும்,பால்காரரின், பால் என்னும் ஒலியோடு கேட்கும் மணியோசையும்,விடியலை அழகாக்கியது.
தமிழ்நாட்டின், தென்கோடி எல்லையில் உள்ள கிராமம் அது.கிராமிய மணம் மாறாமல், அதோடு,இப்பொழுது உள்ள தொழிநுட்ப வளர்ச்சியோடு, வளர்ந்து வரும் கிராமம்.
“ஏலே அருக்காணி,எங்கலே இம்புட்டு வெரசா போரவ..”
அவ்வூரின் எப்.. எம்..(fm)என்று, அவ்வூர் இளசுகளால் செல்லமாக அழைக்கப்படும் மூக்காயி பாட்டி,அவசரமாக செல்லும் அருக்காணியை நிறுத்தி வம்பு வளர்த்தார்.
“சின்னையா வீட்டுக்கு வேலைக்கு தான், இன்னிக்கு நேரமா போச்சு.இந்நேரம் மாடெல்லாம், அம்மா..அம்மான்னு, ஊரையே கூட்டிபுடும்.மரகதம் அம்மா, கோச்சுக்க போறாக..நானே அவசரத்துல இருக்கேன்..வந்து பேசுறேன் ஆத்தா..”
நிற்காமல், ஓட்டமும் நடையுமாய் பதில் சொல்லிவிட்டு சென்றாள், அருக்காணி.
“இந்த கால பிள்ளைங்களுக்கு மட்டு மரியாதை தெரியுதா.??நின்னு பதில் சொல்லாம ஓடுதுக.”
என்று கூறிவிட்டு,
“ஏலே மாரிமுத்து..”
என்று அடுத்த வம்பு வளர்க்க சென்றார்,மூக்காயி.
அவசர அவசரமாக, அவ்வூரின் பெரிய வீட்டிற்குள் நுழைந்தாள் அருக்காணி.
இவள் வரவை கண்டு மாடுகள், பெரும் குரல் எடுத்து கத்த தொடங்கின..
“சத்த இருங்கடா வந்துட்டேன்..”
என்று, அவைகளிடம் சொல்லிவிட்டு,தொடப்பத்தை எடுத்து, மாடுகள் கட்டி இருக்கும் மாட்டு கொட்டகைக்குள் நுழைந்து, அந்த இடத்தை சுத்தம் செய்தாள்.
சுத்தம் செய்து முடித்துவிட்டு, அவைகளுக்கு வைக்கல், புல் போட்டு விட்டு,புண்ணாக்கு கரைக்கும் போது மரகதம் வந்தார்.
அந்த பெரிய வீட்டின் தலைவி,அவ்வூர் மக்களுக்கு பெரிய வீட்டம்மா.அந்த ஊருக்கு யார் வந்து பெரிய குடும்பம் என்று கேட்டாலும்,அவர்கள் வரலாறு முதல்,வீட்டின் முகவரி வரை, சிறு குழந்தை கூட சொல்லும் அளவுக்கு, செல்வாக்கான குடும்பம்.
மகாராணியின் தோரணையோடு, அவ்விடம் வந்தவர்,
“என்ன அருக்காணி,இதான் நீ வர்ர நேரமா..??ரா மூச்சுடும் பசியோட இருக்க ஜீவன்க, அதுகளுக்கு காலகாலத்துல, பசியாத்த வேணாமா..??”
குரலில் மட்டுமே அதிகாரம். முகத்தில் அதற்கு நேர் மாறாய், கனிவு தெரிந்தது.
பொலிவான முகம்,மங்களகரமாய் எப்பொழுதும் காட்சி தருபவர்,மூன்று வருடங்களுக்கு முன் ஏற்பட்ட கணவனின் இழப்பால்,முகப்பொழிவுக்குறைந்து
“மன்னிச்சுகிடுங்க மா..குழந்தைக்கு ரா மூச்சுடும் இருமல், அதான் சத்த நேரமாயுடுச்சு.”
“இப்போ எப்படி இருக்கு..??தகவல் சொல்லிவிட்டுருக்கலாமில்லை. எதுக்கு, பிள்ளையை விட்டுப்புட்டு, நீ வந்த..நான் வேற யாரையாவது செய்ய சொல்லி இருப்பேனில்ல..சரி, நீ வேலை பார்த்தது போதும், கிளம்பு.நான் பேச்சியம்மாவை பார்க்க சொல்லுறேன்.”
இது தான் மரகதம் அம்மா.கண்டிப்பும்,கருணையும் கலந்த கலவை,அது தெரிந்தவர்கள், அவர் அதிகாரத்தில் கோபம் கொள்ளமாட்டார்கள்.
“இல்லிங்கம்மா,பிள்ளைக்கு மருந்து கொடுத்து, தூங்க வச்சுட்டு தான் வந்தேன்.என் மாமியார் பார்த்துக்குறாங்க. வேலை முடிச்சுட்டேன்.இதோ கிளம்பிருறேன்.”
“சரி சரி, சீக்கிரம் வேலை முடிச்சுட்டு போ..நாளைக்கு பேச்சியை பார்க்க சொல்லுறேன்.பிள்ளைக்கு சரியான புறவு வா.”
“சரிங்கம்மா..”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், தூரத்தில் பைக்கின் ஒலி கேட்டது.
“ஏலே,காத்த முத்து. ராசா வந்தாச்சு.கேட்டை திறக்காம,என்ன கனா கண்டுகிட்டு இருக்க..??”
“இதோ போறேன் மா..”
தோட்ட வேலை பார்த்துக்கொண்டிருந்த காத்தமுத்து, அவசரமாய் கேட் அருகே சென்றான், கதவு திறக்க.
அவன் திறப்பதற்கும்,பைக் உள்ளே நுழைவதற்கும், சரியாய் இருந்தது.
பைக்கை ஷெட்டில் நிறுத்தி விட்டு இறங்கினான் அவன்,ராஜவர்மன்.அன்னைக்கு ராசா, ஊரில் உள்ளவர்களுக்கு சின்னையா.அவன் நண்பன் பாண்டியனுக்கு ராஜா,மச்சான்,மாப்பி, மாப்பிள்ளை.
ஆறடி உயரம்,மாநிறம்,வெயிலினால் சற்று கருமை ஏறி இருந்தது.உயரத்திற்கு ஏற்ற உடற்கட்டு.கண்டிப்பை காட்டும் கண்கள்,கூர் மூக்கு,அழுத்தமான உதடு,மற்றும் முகவாய்.
“ஏம்லே இம்புட்டு நேரம்..??”
“மடை மாத்திவிட்டு வர, நேரமாயுடுச்சு ம்மா..”
“இந்த ராசப்பரு, எப்போ வராராம்..??”
“மகளுக்கு ,இப்போ தானே பிரசவம் முடிஞ்சுருக்கு.பேத்தியை பார்த்துட்டு,சீர் செஞ்சுட்டு வரனுமுள்ள.. வரட்டும்.அவரும் அடிக்கடியா போறாரு..??”
ராசப்பர், அவர்கள் வயலில் இரவுக் காவலுக்கு இருப்பவர்.மனைவி இல்லை.ஒரே மகளை கல்யாணம் செய்து கொடுத்து விட்டு, இவர்கள் தோப்பு வீட்டில் தான், நிரந்தர வாசம்.
இப்பொழுது, மகளுக்கு குழந்தை பிறந்ததும், பார்க்க சென்று இரண்டு நாள் ஆகிறது.அவர் இல்லாததால்,ராஜவர்மனே இரவு நேர காவல் பணிக்கு சென்று விட்டு வருகிறான்.
நான் பெரிய குடும்பத்து பையன்.இந்த வேலையெல்லாம் வேலைக்காரர்கள் தான் பார்க்க வேண்டும் என்ற, எந்த பாகுபாடும் பார்க்காது.எல்லா வேலையும் கற்று,சூழ்நிலைக்கேற்ப, தேவைப்பட்டால், எல்லா வேலையும் பார்க்க தெரிந்தவன்.
“சரி ராசா, குளிச்சுட்டு வா.. சாப்புடலாம்..”
“சரி ம்மா..”
அவன் குளித்து விட்டு வருவதற்கும்,அவன் நண்பன் பாண்டியன், வீட்டிற்குள் வருவதற்கும், சரியாக இருந்தது.
வரும் போதே, மோப்பம் பிடித்துக்கொண்டு வந்தவன்.
“அத்தை,இன்னிக்கு அடை தோசையும், தேங்காய் சட்னியுமா??கூடவே, பொங்கல் சாம்பார் வாசனையும் வருது.சீக்கிரம் கொண்டுவா. வாசனையே பசியை தூண்டுது.”
“போன ஜென்மத்துல, நாயா பிறந்துருப்ப போலடா. என்னமா மோப்பம் பிடிக்குற??”
“டேய்,என்னை என்ன வேணா சொல்லு, நாய்ன்னு மட்டும் சொல்லாத..”
“ஏன் கண்ணு,உன்கூட்டுல, சோறாக்கலியா,உன்ற ஆத்தா.. இன்னும்..என்ன பண்ணுறா, இவ்ளோ நேரமா??”
“அம்மா..அதெல்லாம், அத்தை ஆக்கி இருக்கும்.இவன் ஏதாவது,எகத்தாளம் பேசிட்டு,அடி வாங்கிட்டு வந்துருப்பான்.”
“நான் ஒன்னும் பேசல..எங்கம்மாக்கு, நான் எது கேட்டாலும் பிடிக்கலடா, ஒடனே கரண்டி கம்புன்னு, கையில கிடைச்சதை தூக்குது.”
வராத கண்ணீரை துடைத்து கொண்டு..
“ஆமா,நான் அடிவாங்குனது, உனக்கெப்படி மாப்பு தெரியும்.”
“வெத்தலைல, மை தடவி பார்த்தேன்.”
அவனை முறைத்துவிட்டு,
“ஏன் பேசமாட்ட,உங்க அம்மா மாறியா, என் அம்மா.உனக்கு, விதவிதமா சமைச்சு வச்சுருக்காங்க அத்தை. அங்க தினமும், கம்பு,சோளம், ராகினு கூழும்,களியும் போடுது உன் அத்தை. உங்க மாமாக்கு, சர்க்கரை வியாதி வந்தாலும் வந்தது.எனக்கும், பத்தியமா போடுது.அதான் இன்னிக்கு, ஒரு பிஸ்சா, பர்கர், ஏதாவது இல்லியானு தான் டா கேட்டேன்.
என்னது பொறையா.. அது நாய்ல சாப்பிடும்.நீ எப்போ, நாய் ஆன, அப்டின்னு கேட்குது டா.அதான் கடுப்புல,நாய் எல்லாம் ஆகலை, உனக்கு பிறந்ததுல இருந்தே உன்னை மாறி தான் இருக்கேன்.அதான், அப்படி தெரியுதுன்னு சொன்னேன் டா.. விறகு கட்டையை எடுத்துக்கிட்டு, துரத்தி,துரத்தி அடிக்க வருது.அதான், தப்பிச்சு வந்துட்டேன்.”
மரகதத்தை பார்த்து,
“நீ ஏன் அத்தை, பார்த்துக்கிட்டே நிக்குற..தோசையை வை.சூடா சாப்பிட்டா தான், நல்லா இருக்கும்..”
அவரிடம் தட்டை பிடுங்கி, தோசையை தன் தட்டிற்கு மாத்திக் கொண்டான்.
தலையில் அடித்துக்கொண்டு,சாப்பிட ஆரம்பித்தான் ராஜா.
பாண்டியன் அவர்களுக்கு, தூரத்து உறவு.தந்தை வழியில்.ராஜாவும்,பாண்டியனும், குழந்தை பருவத்தில் இருந்தே ஒன்றாய் வளர்ந்தவர்கள்.ஒரே பள்ளி,ஒரே கல்லூரி.இருவரிடையே, ரகசியம் என்பதே கிடையாது என்று சொல்லலாம்.
பாண்டியன் விவசாய கல்லூரியில், யுஜி வரை படித்துவிட்டு,ஏட்டு சுரைக்காய், கறிக்கு உதவாது என்று, பழமொழி சொல்லிவிட்டு, நிஜ சுரைக்காயை விளைவிக்கிறேன்,தந்தைக்கு உதவியாய் வயலில் வேலை பார்க்கிறேன் என்று, உபத்திரவம் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.
விவசாயத்தில் புதுமை செய்கிறேன்.கத்திரிக்காய் செடியில், அவரைக்காய் வரவைக்கிறேன் என்று, அவன் தந்தையின் கண்ணில், ரத்த கண்ணீர் வரவைத்து கொண்டிருக்கிறான்.ராஜா அளவு செல்வாக்கு,வசதி,நிலம் எல்லாம் இல்லை பாண்டியனிடம்.
மூன்று அக்காவிற்கு பிறகு, ஆண் பிள்ளை வேண்டுமென்று, தவம் இருந்து பெற்ற பிள்ளை இவன்.
இன்று, ஏன் பெற்றோம் என்று பெற்றவர்களுக்கு இம்சை கொடுக்கிறான்.
மூன்று அக்காவுக்கும், திருமணம் முடித்து அனுப்பிவிட்டார்கள், இவன் பெற்றோர்.அவர்களுக்கு திருமணம்,சீர் செய்தது போக, மீதி இருக்கும் சொற்ப நிலத்தில், பயிர் செய்து, ஜீவனம் செய்கிறார்கள்.
ராஜவர்மன், விவசாயத்தில் பிஹச்டி முடித்து விட்டு,இயற்கை விவசாய முறையை பின்பற்றி,இயற்கை உரத்தின் மூலம், எவ்வளவு ஆரோக்கியமாக,லாபகரமாக, விவசாயம் செய்ய முடியுமோ, அந்த அளவு செய்து கொண்டிருக்கிறான். இன்னும் புதுமைகள் செய்ய, முயற்சித்து கொண்டிருக்கிறான், பாண்டி போல் அல்லாது.
அத்தோடு தேங்காய் நார் கொண்டு,கயிறு,கைவினை பொருட்கள் தயாரித்தல்,சணல் பயிரிட்டு, சணல் தயாரித்தல்,சாக்கு பைகள்,துணிகள்,திரைசீலைகள்,நாற்
நம்மூர் பொருள்களுக்கு, இங்கு தான் மதிப்பு தெரிவதில்லை. வெளிநாட்டில் அமோகமாய் வரவேற்பு.எந்த, எந்த பொருளுக்கு மவுசு அதிகம் என்று தெரிந்து, ஏற்றுமதி செய்கிறான்.அதற்கு தனி,தனி தொழிற்சாலையும் வைத்திருக்கிறான்.
அங்கு உதவிக்கு, பாண்டியனும் இருக்கிறான்.தந்தைக்கு உதவுவது போல் இல்லாமல், ஒழுங்காய் வாலை சுருட்டிக்கொண்டு, ராஜாவின் தொழிற்சாலையில், உதவி செய்கிறான்.
ராஜாவின் உடன் பிறந்தது, ஒரு தங்கை மட்டுமே.அவளை உள்ளூரிலேயே மணமுடித்து கொடுத்திருக்கிறார்கள்.அவள் பெயர் அகல்யா.
“நண்பன் போட்ட சோறு
நிதமும் தின்னேன் பாரு..”
சாப்பிட்டு கொண்டே, பாடினான் பாண்டி.
“அது மட்டும் தானே டா, உருப்படியா பார்க்குற..வேற என்ன வேலை செய்யுற, உருப்படியா..??”
“சொல்லி காட்டிட்டயில்ல.இனி இப்பையில இருந்து, இங்க பச்ச தண்ணி கூட, குடிக்க மாட்டேன்…”
“புறவு..??”
“அத்தை, ரெண்டு டம்ளர் சுடுதண்ணி கொண்டு வாங்க..”
“அதானே பார்த்தேன்.ஏதுடா நம்ம பாண்டி, இம்புட்டு ரோசக்காரன் ஆயிட்டானேன்னு..”
“அதை வச்சு என்ன பண்ணுறது மச்சான்??.சிங்கிள் டீ கூட வாங்க முடியாது..”
இதற்கு மேல் இவனிடம் பேசி பிரியோஜனமில்லை என்று, தன் உணவில் கவனம் செலுத்தினான் ராஜா.
“ஏலே பாண்டி, அந்த வீரபாண்டி மகளை பத்தி சொல்லிருந்தேனே..எப்போலே பொண்ணு பார்க்க போலாம்.உன்ற தோழன் பதிலே சொல்ல மாட்டேங்குறான்..”
“அம்மா..இப்போ என்ன அவசரம், என் கல்யாணத்துக்கு.நானே சொல்லுறேன் அப்போ பார்க்கலாம்..”
“எப்போலே சொல்லுவ, அறுவது வயசுலயா..??உனக்கென்ன, குழந்தைன்னு நினைப்பா. இன்னும் ரெண்டு மாசத்துல, இருவத்தெட்டு முடிஞ்சு, இருவத்தொன்பது ஆரம்பிக்குது..”
இதற்கு மேல் பேசினால்,தன் அன்னை புலம்ப ஆரம்பித்து விடுவார் என்று, அமைதி ஆகி விட்டான்.
“ஏலே பாண்டி, நீயாவது சொல்ல கூடாதால்ல..??”
“அத்தை, உங்கள நெனச்சா, பெருமையா இருக்கு.இங்க ஒருத்தன் வேண்டாம்,வேண்டாம்னு சொல்ல சொல்ல, பொண்ணு பார்குறிங்க..அங்க என்ற அம்மா, எனக்கு கல்யாணம் பண்ணணுமேன்னு ஒரு நினைப்பில்லாம இருக்கு..ஏன்டா ராஜா….நாமயேன், அம்மாவை எக்ஸ்சேஞ்சு பண்ணிக்க கூடாது..??”
“ஏம்ல.. நானென்ன சொல்லிக்கிட்டு இருக்கேன்.நீ என்னனா, கூறுகெட்ட தனமா ஒளரிக்கிட்டு இருக்க..”
“என் கஷ்டம் யாருக்கு புரியுது..”
போலியாக, ஒரு பெரு மூச்சை விட்டு,
“அத்தை, நான் இவன் கிட்ட பேசுறேன்.ஆனா, இந்த பொண்ணு வேண்டாம்..”
“ஏன்டா..?? கருப்பா இருந்தாலும், களையான புள்ள.பன்னன்டாப்பு வரை படிச்சுருக்கு. அருமையா சமைக்குமாம். வீட்டு வேலையெல்லாம், மணி மணியா பார்க்குமாம்.. புறவென்ன??”
“இவ சரியான ரவுடி…ரவுண்டு கட்டி அடிப்பா…என்னா அடி”
என்று, கன்னத்தை தடவிக் கொண்டான்.
பாண்டி, கல்லூரி காலத்தில் இருந்தே, காதல் மன்னன்.கவுண்டமணிக்கு அடுத்த படியாக, பல ரொமான்டிக் லுக்குகள் கொடுத்து இளம் பெண்களிடம், திட்டு,அடி, முறைப்பு என, வஞ்சகம் இல்லாமல் வாங்கி இருக்கிறான்.அதில், இந்த தேன்மொழியும் ஒருத்தி.
“யாரை லே அடிச்சா …உன்னையா??ஏன் லே..??”
அவர் கேட்டதும், ராஜாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.சத்தமாக சிரித்தான்.நண்பனின் லீலைகள் மொத்தமும் தெரிந்தவன்.அந்த லீலைகள் எல்லாம் ஒரு எல்லைக்குள் என்பதால்,கண்டுகொள்ள மாட்டான்.
சிரித்த நண்பனை முறைத்து விட்டு,
“என்னை எல்லாம் அடிக்க முடியுமா..??நானெல்லாம், நெருப்புடா நெருங்குடா பார்ப்போம் டைப்பு..நம்மகிட்ட யாரும் வாலாட்ட முடியாது..”
“அப்புறம் எப்படிலே சொல்லுற..??”
“கேள்வி பட்டது,பார்த்தது வச்சு தான்.. சும்மா இங்க நின்னு பேசாம..போய் தோசை கொண்டு வா..எம்புட்டு நேரம் வெறும் தட்டை தடவுறது..”
“ஏன்லே கோவப்படுற..இரு கொண்டு வரேன்..”
அவர் உள்ளே சென்றதும்.
“ஏன்டா துரோகி..சிரிச்சு மாட்டி விடுறியா..??”
“இல்ல, நீ அடிவாங்காத பொண்ணை தான் கட்டணுமுன்னா.. இந்த ஜில்லாலேயே பொண்ணு கட்ட முடியாது..அதை நினைச்சு சிரிச்சேன்..”
“யாரை பார்த்துலே இப்படி சொன்ன..??நானெல்லாம் விவேகானந்தர் மாதிரி லே..ஞானியாக ட்ரை பண்ணிட்டு இருக்கேன்..என்னை பார்த்து சிரிக்கிற..”
“யாரு நீ.. ??விவேகானந்தர் மாதிரி..??வெளியே இப்படி போய் உளறி, ஆம்பாளைங்கள் கிட்டயும் அடி வாங்கிறாதா..”
அவனை காண்டாக முறைத்த பாண்டியை பார்த்து,
“விவேகானந்தர் சிஷ்யரா சேர போனப்போ, ராமகிருஷ்ணர் அவருக்கு ஒரு சோதனை வச்சாரம்..ஒரு வெல்லத்தை அவர் வாயில வச்சுட்டு, கொஞ்ச நேரம் கழிச்சு எடுத்தாராம்.வெல்லம், துளி கூட கரையலையாம்.அதுக்கப்புறம் தான், இவர் ஆசை இல்லாதவர்னு புரிஞ்சு, சிஷ்யரா சேர்த்துகிட்டாராம்..
உன் வாயில யாராவது வெல்லம் வச்சா, வச்சவங்க கையையும் சேர்த்து, கடிச்சு முழுங்கிடுவ..இதுல நீ..”
வாக்கியத்தை முடிக்காமல் சிரித்தான் ராஜா..
“போதும் டா.. சிரிப்பு.பல்லு சுளிக்கிக்க போகுது..அத்தை தோசை என்னாச்சு??.”
இவன் மேல் உள்ள கடுப்பை, அங்கே காட்டினான்.
“இருடா..உனக்கு ஏன் தான், இம்புட்டு கோவம் வருதோ.. ??இந்தா சாப்பிடு..”
என்று கொண்டு வந்த தோசையை, அவன் தட்டில் வைத்தார்.
நண்பன் மேல் உள்ள கோவத்தை தோசையில் காட்டி, அதை வெளுத்து வாங்கினான்.
இருவரும் சாப்பிட்டு முடித்ததும்.
“அம்மா..மில்லுக்கு போய்ட்டு, அப்படியே வயலுக்கு போய்ட்டு வரோம்..மதியம், முன்ன பின்ன ஆகும்..எங்களுக்காக காத்திருக்காமா..சீக்கிரம் சாப்பிடுங்க..”
“ஏன்டா,அந்த பிள்ளையை பொண்ணு பார்க்குற விஷயமா, ஒன்னும் சொல்லலியே..”
“பார்த்துக்கலாம் மா..அகல் வரேன்னா.. இன்னும் காணும்..நான் வர்ர வரை இருக்க சொல்லு வந்துடுறேன்.”
உள்ளூரிலேயே இருப்பதால், அகல்யா அடிக்கடி அன்னை வீட்டிற்கு வந்து, சீராடி விட்டு செல்வாள்.
“கழுவுர மீனுல, நழுவுற மீனா இருக்கானே..ஆண்டவா, இவனுக்கு பொண்டாட்டி, எங்க பிறந்திருக்காளோ..??”