சந்தியாவும் சூரியாவும் அதன் பின் மார்க்கின் தொழிற்சாலைக்கு அடிக்கடி செல்ல வேண்டியதாயிற்று. லிபர்ட்டி ஃபேப்ரிக் கம்பெனியும், ஜே.கே.ஆர் ஃபேப்ரிக் பிரைவேட் லிமிட்டெடும் ஒரு புது வகையான துணியைக் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காகத் தான் அந்த புரிந்துணர்வு ஒப்பந்தமே கையெழுத்திடப்பட்டது.
அந்த ஆராய்ச்சிக்கான செலவை இரு நிறுவனங்களுமே பகிர்ந்துகொள்ள வேண்டுமென்றும், ஆராய்ச்சிமுடிவு சாதகமாக அமைந்தால் இரு நிறுவனங்களும் அதைச் சரிபாதியாகப் பிரித்துக் கொள்ளலாம் என்றும் முடிவெடுத்திருந்தனர். ஆராய்ச்சிக்கான லேபரேட்டரி வசதிகள் மற்றும் வல்லுனர்கள் லிபர்ட்டி சார்பிலும் அதற்குத் தேவையான ஊழியர்கள் ஜே,கே,ஆர் சார்பிலும் அந்த ஆராய்ச்சிப்பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டு முடித்தனர்.
அதன் ஒரு பகுதியாக தான் ஆய்வகத்தைப் பார்வையிட மார்க்குடன் வந்திருந்தனர் சூரியாவும் சந்தியாவும். அவன் ஒவ்வொரு இடமாகக் காட்டிக்கொண்டே வர இருவரும் அதைத் தலையாட்டியபடி கேட்டுக் கொண்டே வந்தனர். ஒரு வழியாக இருவரும் முழு ஆய்வகத்தையும் பார்வையிட்டு முடிக்கவே மாலை மூன்று மணி ஆகியிருந்தது. அதன் பின் மார்க் தனக்கு ஒரு முக்கியமான அலுவல் இருப்பதாகக் கூற சூரியா சந்தியாவுடன் ரிவர் ஓக்ஸ் திரும்பலாம் என்று முடிவெடுத்துக் கிளம்ப எத்தனிக்கையில் சூரியாவுக்கு சாயாவிடம் இருந்து போன் வந்தது.
“சூரியா எங்கே இருக்கடா? நான் இப்போ கேலரியால தான் இருக்கேன். என்னோட ஜாயின் பண்ணிக்கிறியா? இட்ஸ் ரியலி போரிங் மேன்” என்று அவள் மிழற்ற சூரியாவால் அதை மறுக்க இயலவில்லை. அவன் போனை எடுத்துக் கொண்டு ஓரமாகச் செல்லும் போதே அழைத்தது சாயாவென்று புரிந்து கொண்டாள் சந்தியா.
ஒரு உதட்டுச்சுழிப்புடன் திரும்பி நின்று கொண்டவள் அவன் போன் பேசிவிட்டு வரவும் சூரியாவிடம் “இப்போ என்ன சொல்லப் போற? நான் கேப்ல ரிவர் ஓக்ஸ் போகணும்..அவ்ளோ தானே! ஐ கேன் மேனேஜ்.. சோ நீ தயங்கித் தயங்கி எதையும் சொல்ல வேண்டாம்… பட் எனக்கு ஒரு விஷயம் தான் புரியலை…
[the_ad id=”6605″]
என்னை எதுக்காக நீ யூ.எஸ் கூட்டிட்டு வந்த? நான் இங்கே வரலைனா கூட உன்னால தனியா மார்க் கூட மீட்டிங்கை முடிச்சுட்டு இந்தியா வர முடியும் தானே… ஏதோ நான் வந்தா தான் ஆச்சுங்கிற மாதிரி அவ்ளோ அடம்பிடிச்சு கூட்டிட்டு வந்தல்ல! ஆனா முக்கால்வாசி நேரம் நீ உன் ஃப்ரெண்டோட அவுட்டிங் தானே போற… நீ ஹாலிடே என்ஜாய் பண்ண வந்த மாதிரி நல்லா ஊரைச் சுத்திட்டிருக்க… நான் அவ்ளோ பெரிய வீட்டுல தனியா உக்காந்து டிவியை முறைச்சிட்டிருக்கேன்…” என்று கத்திவிட்டு அங்கிருந்து விறுவிறுவென்றுச் செல்ல சூரியாவுக்கு யார் பக்கம் பேசுவது என்றே புரியவில்லை.
சந்தியா சொன்னது என்னவோ உண்மை தான். ஹூஸ்டன் வந்ததிலிருந்து சூரியாவின் நேரத்தை தன்வசப்படுத்திக் கொண்டது இரண்டே இரண்டு விஷயங்கள் தான். ஒன்று லிபர்ட்டி கம்பெனி என்றால் மற்றொன்று சாயாவுடன் செல்லும் அவுட்டிங்…
எல்லாம் ஏற்கெனவே சுற்றி சலித்த இடங்கள் தான். ஆனாலும் சாயாவுக்கு சூரியாவுடன் செல்வது தங்களின் கல்லூரி நாட்களை நினைவுறுத்தவே அவள் அவனுடனே சுத்த ஆரம்பிக்க நினைத்து சந்தியாவை நாசூக்காகத் தவிர்த்துவிடுவாள். சந்தியாவுமே “ஆமா இந்த கிளியோபாட்ரா கூட சுத்துறதுக்கு தான் நான் சென்னைல இருந்து யூ.எஸ் வந்தேனாக்கும்?” என்று அலட்சியமான எண்ணம். அதனால் அவர்களுடன் செல்வதை கூடுமான வரைக்கும் தவிர்த்தாள் அவள்.
அன்றும் சூரியாவைச் சாயா அழைக்கவே சந்தியாவுக்கு எரிச்சலாகிவிட்டது. அதே எரிச்சலோடு ரிவர் ஓக்ஸ் திரும்பியவள் உடை மாற்றிவிட்டு சிறிதுநேரம் போனை நோண்டியபடியே உறங்கிவிட்டாள். ஆழ்ந்து உறங்கியவள் எழுந்த போது இருட்டத் தொடங்கியிருக்கவே ஏனோ “கருக்கல்ல இப்பிடி பொம்பளைப்பிள்ளை தூங்குனா வீட்டுக்கு ஆகுமா?” என்ற அவளின் பிரியத்துக்குரிய ஆச்சியின் நினைவு தாக்க பெருமூச்சை எடுத்துவிட்டுக் கூந்தலை கொண்டையாகப் போட்டபடி எழுந்து தனது அறையை நோக்கிச் செல்ல முயல அழைப்புமணி ஒலிக்கவே சூரியா தான் வந்திருப்பான் என்று எண்ணியவள் அவனிடம் தான் ஒரு சாவி இருக்கிறதே, பின்னர் ஏன் அழைப்புமணியை அழுத்துகிறான் என்ற யோசனை எழ வாயில் கதவைத் திறக்கச் சென்றாள்.
அவள் எதிர்பார்த்தபடி அங்கே நின்றிருந்தது சூரியா இல்லை, சாயா.. இவள் ஏன் தனியாக இங்கே வந்திருக்கிறாள் என்ற யோசனையுடன் கதவை அடைக்காமல் சந்தியா உள்ளே செல்லவே சாயா “சந்தியா ஒரு நிமிசம்” என்று கூறி அறையை நோக்கிச் செல்பவளைப் போகவிடாமல் நிறுத்தினாள்.
அவளது ஹைஹீல்ஸ் ஏற்படுத்திய டக்டக்கென்ற சத்தம் சந்தியாவுக்கு எரிச்சல் மூட்டக் கையைக் கட்டியபடி அவளை நோக்கித் திரும்பினாள்.
“எதிர்பார்க்கலைல்ல!” என்று அவள் மொட்டையாகக் கேட்க
சந்தியா கேலியாக “நேத்து சிங்கம் மூவி பார்த்தியா என்ன? மொட்டையும் கட்டையுமா எதிர்பார்க்கலைல்லானு கேட்டா என்ன அர்த்தம்?” என்று பதிலுரைத்துவிட்டு தனது அறையை நோக்கிச் சென்றாள்.
சாயா விடாமல் சந்தியாவைத் தொடர்ந்தவள் அங்கே முகம் கழுவிவிட்டுக் கூந்தலை வாரியபடி நின்றவளை ஒருவித எரிச்சலுடன் பார்க்க சந்தியா அதைக் கவனியாதது போல கூந்தலைப் பின்னி போனி டெயிலாக்கிவிட்டு இன்னும் சாயா செல்லாமல் நிற்பதைக் கண்டதும் “இன்னும் நீ கிளம்பலையா? உனக்கு என்ன வேணும்? உன்னோட ஃப்ரெண்ட் தான் இல்லையே… அப்போ நீ இங்கே என்ன பண்ணிட்டிருக்க?” என்று கேட்க
சாயா “உனக்கு ஒரு விஷயத்தை நியாபகப்படுத்திட்டுப் போலாம்னு வந்தேன்..” என்றபடி மெத்தையில் கால் மேல் கால் போட்டு தோரணையாக அமர சந்தியா அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதைக் கேட்கும் ஆர்வம் கிஞ்சித்துமில்லாதவளாய் ஒருவித அலட்சிய பாவனையுடன் தனது கை நகங்கள் தான் இப்போதைக்கு முக்கியம் என்பதைப் போல அவற்றையே நோக்க அவளின் அலட்சியம் சாயாவின் முகத்தில் அறைந்தது என்னவோ உண்மை.
இருந்தாலும் முகத்தைச் சீர்படுத்தியபடி கூந்தலை நீவிக் கொண்டவள் “பெருசா ஒன்னும் இல்லை… ஹேமா ஆன்ட்டி எனக்கு கால் பண்ணப்போவே சொன்னாங்க சூரியா கூட அவனோட எம்ப்ளாயி வருவானு…அதோட அவ பார்க்கிறதுக்கு என்னை மாதிரியே இருப்பானு வேற சொன்னாங்க… முக்கியமா என்னை மாதிரி இருக்கிறதால தான் உன்னை சூரியா ஃப்ரெண்டா ஏத்துகிட்டானும் சொன்னாங்க…” என்றுச் சொல்ல சந்தியா கேலியாக உச்சுக் கொட்டினாள்.
அவளின் இந்த பாவனை சாயாவை இன்னும் எரிச்சலாக்க சந்தியா நிதானமாக “இதுக்கான ஆன்சரை நான் நம்ம ஃபர்ஸ்ட் மீட் பண்ணப்போவே சொல்லிட்டேன்… இன்னுமா நீ இதையே சொல்லிட்டுச் சுத்துற?” என்று கேட்க
“அப்போ நான் உன்னோட காப்பி மாதிரி இருக்கேனா?” என்று சீறலுடன் கேள்வி பறந்து வந்தது சாயாவிடம் இருந்து.
[the_ad id=”6605″]
சந்தியாவை இடவலமாக தலையாட்டி மறுத்துவிட்டு “ச்சே ச்சே! ஒன் செகன்ட் நம்ம ஆப்போசிட்ல இருக்கிற மிரரைப் பாரு…” என்று சாயாவிடம் கண்ணாடியைச் சுட்டிக் காட்டியவள்
தனது முகத்தையும் சாயாவின் முகத்தையும் சுட்டிக் காட்டியபடி “இந்த ப்ளெயின் ஃபேஸும், இந்த நிப்பான் பெயிண்ட்டும் ஒன்னா? நெவர்” என்று அவளது ஒப்பனையைக் கேலி செய்துவிட்டு நகரச் சாயா “சூரியா சொன்னது மாதிரி இந்த சந்தியாவுக்கு வாய் ரொம்பவே நீளம் தான்” என்று எண்ணிக்கொண்டவள் தான் எதற்கு வந்தோம், இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று நிதானித்து யோசித்துவிட்டுப் பேச ஆரம்பித்தாள்.
சந்தியாவிடம் “சூரியாவும் நானும் சின்னவயசுல இருந்து ஃப்ரெண்ட்ஸ்… அண்ட் எங்க பேரண்ட்ஸ் நாங்க வாழ்க்கை முழுக்க இப்பிடியே ஒன்னா இருக்கணும்னு ஆசைப்படுறாங்க.. ஐ மீன் ஃப்ரெண்ட்ஷிப்பையும் தாண்டி எங்க ரிலேசன்ஷிப்பை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு போகணும்னு நினைக்கிறாங்க… நீங்க இந்தியா ரிட்டர்ன் ஆனதும் ஹேமா ஆன்ட்டி பண்ணப் போற முதல்வேலையே எனக்கும் சூரியாவுக்குமான மேரேஜ் தான்…
அதுக்கு முதல் படியா நான் சூரியா கிட்ட என்னோட மனசுல இருக்கிற காதலைச் சொல்லப் போறேன்… இங்கே வந்ததுக்கு அப்புறம் உனக்கே புரிஞ்சுருக்கும் நீயா நானானு வந்தா சூரியா கண்டிப்பா என்னைத் தான் செலக்ட் பண்ணுவான்னு… அதனால நீ அவனோட ஃப்ரெண்டாவே இருந்தாலும் கொஞ்சம் அவன் கிட்ட இருந்து விலகியே இரு.. நாளைக்காக இன்னைக்கே லக்கேஜை பேக் பண்ணிக்கோ… பிகாஸ் நாளைக்கு இந்நேரம் நியூ இயர் ஈவ் ஸ்டார்ட் ஆகியிருக்கும்…அதுக்கு முன்னாடி நான் என்னோட காதலை சூரியா கிட்டச் சொல்லிருப்பேன்… அதோட உன்னை இந்தியாவுக்கு பார்சல் பண்ணி அனுப்பிடுங்கிற ஆர்டரையும் அவனுக்குப் போட்டிருப்பேன்… சோ எதுக்கும் மார்னிங்கே தயாரா இரு… இப்போ எனக்கு லேட் ஆயிடுச்சு…நான் வரட்டுமா? பை” என்றுச் சொல்லிவிட்டு பூனைநடை நடந்துச் செல்லும் அவளைப் பார்த்துச் சந்தியாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
இவளைப் போய் எப்படி சூரியா தோழியாகப் பிடித்தான் என்பது தான் அந்த ஆச்சரியத்துக்குக் காரணம். அதோடு இவள் சொன்னதைப் போல சூரியா இவளைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டால் என்ன ஆகும் என்பது கூட அவளது மனக்கண்ணில் படமாக ஓட ஆரம்பித்தது. வேறு என்ன நடக்கக் கூடும்; அவளது மார்ஸ்மாலோவின் நட்பு அவளை விட்டு காததூரம் போய்விடும்.. சூரியா என்ற ஒருவன் தன் வாழ்வில் வந்ததையே அவள் மறந்துவிட வேண்டியது தான் என்று சந்தியாவின் மூளை அவளுக்கு அறிவுறுத்த ஆரம்பித்தது.