வெற்றிக்கு தன் அம்மா இல்லாதது எப்போதையும் விட இப்போது மிகவும் துன்பமாக இருந்தது. தன் அம்மா இருந்திருந்தால்…. ஒருவேளை சாதனாவிற்கு இப்படி நடக்காமல் இருந்திருக்குமோ என நினைத்து வேதனை பட்டான்.
இப்போது தன் தங்கை புகுந்த வீட்டில் என்ன பேச்சு வாங்குகிறாளோ என அது வேறு அவனுக்குக் கவலையாக இருந்தது.
ஜோதியாவது தன்னுடைய கோபத்தைச் சாதனாவிடம் நேரடியாகக் காட்ட மாட்டார். ஆனால் அமீர்தா பாட்டி அவளுக்கு முன்பே பேசி விடுவார்.
“இந்தக் காலத்தில குழந்தை பிறக்காம தள்ளி போக ஆயிரத்தெட்டுக் காரணம் சொல்றாங்க. சில பேரு குழந்தைக்காகப் படுற கஷ்ட்டத்தை நாமே பார்க்கிறோம். ஆனா இங்க கிடைச்ச பாக்கியத்தையும் சில பேருக்கு தக்க வச்சுக்கத் தெரியலை…”
“இனி அடுத்தக் குழந்தை எப்போ உண்டாகுமோ…. சில பேருக்கு இப்படிக் கருகலைஞ்சா திரும்பத் தங்கிறதுக்கு ரொம்ப வருஷம் ஆகும். இல்லைனா கரு தங்கவே தங்காது.”
“இனி இந்த வீட்டுக்கு ஒரு வாரிசு வருமோ வராதோ….” இந்த ரீதியில் அவரது பேச்சுக்கள் இருக்க…. இதையெல்லாம் கேட்கும் சாதனா மனதளவில் நொருங்கியே போனாள். ஆனால் ரிஷிகாக அவள் வெளியில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை… அவனிடமும் சொல்லவில்லை… சொன்னால் அவன் அவர்களோடு சண்டை பிடிப்பான் என அவளுக்கு நன்றாகத் தெரியும்.
உறவினர்களுக்கும் சாதனாவின் விஷயம் அரசல்புரசலாகத் தெரியும். ஆனால் அவர்களால் அவளிடம் நேரடியாகக் கேட்க முடியாது. ஏனென்றால் அவளின் அந்தஸ்த்து அப்படி. இதே நடுத்தரக் குடும்பத்தில் என்றால் நேரடியாக அந்தப் பெண்ணைப் பேசி விடுவார்கள்.
ரிஷியின் ஒன்றுவிட்ட அத்தை வீட்டில் அவர்கள் மருமகளுக்கு வளைகாப்பு வர,…. இங்கே வீட்டிற்கு வந்து அனைவரையும் அழைத்தவர்கள் சாதனாவை மட்டும் அழைக்கவில்லை….
ஒரு பெண் எவ்வளவு படித்திருந்தாலும், எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், திருமணம் ஆகி அவள் தாய்மை அடையாதவள் என்றால்… அவளின் மதிப்புக் குறைவு தான். இப்படித்தான் நம் சமூகம் இருக்கிறது.
இங்கே சாதனாவின் நிலையம் அதுதான். முதல் குழந்தையே கலைந்ததால் அவளை ராசி இல்லாதவளாகப் பார்த்தனர். அவள் வந்து வளையல் போட்டால் தன் பேரப்பிள்ளைக்கு எதுவும் ஆகிவிடுமோ எனக் கண்முடித்தனமான நம்பிக்கை.
சாதனாவிற்கு அது எல்லாம் தெரியவில்லை…. அவள் அப்படி எல்லாம் யோசிக்கவில்லை… அவள் அம்மா இல்லாததால்… அவள் இது போல் விழாக்களுக்கும் சென்று பழக்கமும் இல்லை.
விழாவன்று காலை ஜோதி கிளம்ப… ப்ரீதாவும் அந்த விழாவுக்குத் தன் அம்மாவுடன் செல்ல அங்கே வந்திருந்தாள். வெற்றியும் அவளை விடும் சாக்கில் அப்படியே சாதனாவை பார்த்துவிட்டு செல்ல வந்திருந்தான்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தேர்தல் முடிந்திருந்தது. அதனால் ரிஷியும் வீட்டில் ஓய்வாக இருந்தான்.
ஜோதியும் ப்ரீதாவும் மட்டும் கிளம்ப… சாதனா கிளம்பாமல் இருப்பதைப் பார்த்த ரிஷி “அம்மா சாதனாவையும் கூடிட்டு போங்க.” என்றான். அவளும் இந்த ஒருமாதமாக வீட்டில் அடைந்து கிடப்பதை பார்த்ததுனால்… அவளுக்கு ஒரு மாற்றமாக இருக்கட்டும் என நினைத்து தான் சொன்னான்.
ஜோதிக்கு தெரியும் அல்லவா அவர்கள் சாதனாவை அழைக்கவில்லை என்று… அதை எப்படி ரிஷியிடம் சொல்வது என்று தெரியாமல் அவர் தயங்க…. அமிர்தா பாட்டி விஷயத்தை அனைவரின் முன்பும் போட்டு உடைத்துவிட்டார்.
“அவங்க உன் பொண்டாட்டியை கூப்பிடவே இல்லை. அப்புறம் எங்க கூடிட்டுப் போறது? நான் கூட அங்க போனா இவளையும் மனையில உட்கார வச்சு வளையல் போட்டா… சீக்கிரம் குழந்தை உண்டாகும்னு நினைச்சேன்.” என அவர் பெரு மூச்சு விட… அதைக் கேட்ட ரிஷி ருத்ர அவதாரம் எடுத்தான்.
[the_ad id=”6605″]
“ஒரு பெண்ணா இருந்திட்டு இன்னொரு பெண்ணை பத்தி உங்களால எப்படி இப்படி பேச முடியுது?”
“எங்களுக்குக் கல்யாணம் ஆகி மூன்னு மாசம் தான் ஆகுது. அதுக்குள்ள குழந்தைக்கு என்ன அவசரம்? அப்படியே இருந்தாலும் அதைப் பத்தி கவலைப்பட வேண்டியது நானும், சாதனாவும் தான்.”
“எங்களுக்குக் குழந்தை பிறக்கனும்னு இருந்தா பிறக்கும். அதுக்காக என் பொண்டாட்டியை மத்தவங்க முன்னாடி காட்சி பொருளா ஆக்கனும்னு நினைச்சீங்க, நான் சும்மா இருக்க மாட்டேன்.”
“என் பொண்டாட்டியை கூப்பிடாதவங்க வீட்டு விசேஷத்துக்கு இந்த வீட்ல இருந்து யாரும் போகக்கூடாது. அப்படிப் போனா திரும்பி இங்க வரக் கூடாது. ப்ரீதா உனக்கும் தான்.”
சொல்லிவிட்டு ரிஷி அவர்கள் அறைக்குச் சென்றுவிட…. கேட்ட வெற்றிக்கு அவனை அப்படியே கட்டிபிடித்து முத்தமிட வேண்டும் போல் இருந்தது.
“ப்ரீதா, உங்க அண்ணன் சொல்றது தான் நானும் சொல்றேன். நீ அங்க போக வேண்டாம்.” என்றவன், தன் தங்கையிடம் சொல்லிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான். அவனுக்குச் சாதனாவை அழைக்காதது தெரியாது.
உறவினர்கள் வீட்டு விசேஷத்திற்குப் போகவில்லை என்றால் பிரச்சனை வரும். அதனால் இந்த விஷயத்தை ராஜ்மோகனின் காதுக்கு ஜோதி கொண்டு சென்றார்.
“இந்த வீட்ல என்ன நடக்குது? ஏன் எல்லோரும் இப்படி மாறிடீங்க? இப்ப தான அவங்களுக்குக் கல்யாணம் ஆச்சு, அதுக்குள்ள ஏன் குழந்தை குழந்தைன்னு அவங்க ரெண்டு போரையும் டார்ச்சர் பண்றீங்க?”
“இங்க பாருங்க ரொம்பப் பேசாதீங்க. ப்ரீதாவும் தான் இப்ப குழந்தை வேண்டாம்னு இருக்கா… நாங்க அவளை எதுவும் சொல்லலையே…. குழந்தை இப்ப வேண்டாம்னு ஆரம்பத்திலேயே தெளிவா இருந்திருக்கணும். உண்டான பிறகு ஜாக்கிரதையா இருந்திருக்கனுமா வேண்டாமா…”
“உன் பையன் ஆரம்பத்தில அந்தப் பெண்ணோட எப்படிக் குடும்பம் நடத்தினான்னு உனக்கும் தெரியும். அவன் இப்ப சாதனா மேல காட்டுற அக்கறையை அப்ப காட்டலை….”
“பாவம் அந்தப் பெண்ணுக்கும் தன் புருஷனோட நாலு வெளி இடங்களுக்குப் போகணும்னு ஆசை இருக்கும் இல்லையா….”
“சாதனா படிப்பை முடிச்ச பிறகு கல்யாணத்தை வச்சிருந்தா கூட இந்தப் பிரச்சனை வந்திருக்காது. ரிஷி மனசு மாறுவதுகுள்ள கல்யாணத்தை வச்சிடனும்னு நாம தான் அவசரப்பட்டோம். இப்படி எல்லாத் தப்பையும் நாம பண்ணிட்டு அந்தப் பெண்ணைக் குறை சொல்லக் கூடாது.”
“ரிஷி அவன் பொண்டாட்டி மேலே இவ்வளவு அக்கறையா இருக்கிறதை பார்த்து நாம சந்தோஷப்படணும். உண்மையில அவன் எப்படி இருப்பானோன்னு நான் பயந்து போய் இருந்தேன். ஆனா அவன் இப்ப ஒழுங்கா இருக்கான். ஆனா நீங்க இப்படி ஆளாளுக்கு எதாவது பேசி… அவங்க ரெண்டு பேருக்குள்ள பிரச்சனையை இழுத்து விட்றாதீங்க.”
“ரிஷி சொன்ன மாதிரி யாரும் அந்த வளைகாப்புக்கு போக வேண்டாம். போய் அவங்கவங்க வேலையைப் பாருங்க.”
ராஜ்மோகன் சொன்னதும் தான் ஜோதி வேறு கோணத்தில் யோசிக்க ஆரம்பித்தார். இனி அவர் யோசித்து ஒன்றும் ஆகப்போவது இல்லை. ஏற்கனவே சாதனா மனதில் அனைத்தும் அழுத்தமாகப் பதிந்து போய்விட்டது.
மறுநாள் தன் பெரியம்மாவை அழைத்த சாதனா “பெரிம்மா எனக்கு எங்க வீட்ல வந்து கொஞ்ச நாள் இருக்கணும் போல இருக்கு. நீங்க வந்து கேட்டு என்னைக் கூடிட்டு போறீங்களா….” எனக் கேட்டதும்,
“சரி நாளைக்கு வரேன்.” என்றார் அவர்.
[the_ad id=”6605″]
“நான் சொன்னதா சொல்லாதீங்க. நீங்களா கூப்பிடுற மாதிரி கூப்பிடுங்க.”
சாதனா சொன்னது போல் மறுநாள் வந்த அவளின் பெரியம்மா மேகலா “சாதனா கொஞ்ச நாள் அவங்க அம்மா வீட்ல வந்து இருக்கட்டுமே… நான் அவளைப் பார்த்துகிறேன்.” என ஜோதியிடம் கேட்க… அவர் ரிஷியிடம் கேட்க, அவன் மிகுந்த தயகத்திற்குப் பின் ஒத்துக்கொண்டான்.
“ஹே… நீ கண்டிப்பா போகனுமா….” அவர்கள் அறையில் ரிஷி கேட்க… சாதனா பதில் சொல்லாமல் தன் உடைகளை எடுத்து வைத்தாள்.
“சரி ஒரு வாரம் மட்டும் இருந்திட்டு வந்திடு. நாம ஆஸ்திரேலியா போகலாம்.”
“நான் எங்கையும் வரலை…”
“ஏன்?”
“எனக்குக் காலேஜ் போகணும்.”
“இந்த மெடிக்கல் படிக்கிற பொண்ணுங்களை மட்டும் கல்யாணமே பண்ணிக்கக் கூடாது. நீங்க படிச்சு முடிக்கிறதுகுள்ள வயசாகிடும் போல… அப்புறம் எங்க இருந்து அனுபவிக்கிறது?” ரிஷி சொல்ல.. சாதனா அவனை முறைத்தாள்.
“இங்க பாரு… உனக்கு ரொம்ப நாள் ரெஸ்ட் விட்டாச்சு…. இனிமே விட முடியாது. அதனால போயிட்டுச் சீக்கிரம் வர்ற வழிய பாரு….” ரிஷி கண் சிமிட்ட… சாதனா அவனைக் கண்டுகொள்ளவே இல்லை.
அவளை அருகில் இழுத்த ரிஷி “என்ன டி பிரச்சனை உனக்கு? நீ இன்னும் அதையே நினைச்சிட்டு இருக்கியா….” சாதனா பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க… அதுவே சொன்னது ஆமாம் என்று.
“விட்டுடு சாதனா… எல்லாத்தையும் மறந்திடு….”
“நீங்க ரொம்ப ஆசையா இருந்தீங்க. என்னால உங்களோட இந்த ஆசையைக் கூட நிறைவேத்த முடியலை…”
சாதனா சொன்னதைக் கேட்ட ரிஷி அவளை அணைத்துக்கொண்டான். “நீ இவ்வளவு கஷ்ட்டப்படுவேன்னு தெரிஞ்சிருந்தா… என்னோட ஆசையை நான் வெளி காட்டி இருக்கவே மாட்டேன். இப்ப மட்டும் என்ன? கொஞ்ச நாள் போகட்டும் நாம அடுத்தக் குழந்தை ரெடி பண்ணலாம்.”
[the_ad id=”6605″]
ரிஷி இவ்வளவு புரிதலோடு பேசப்பேச தான் சாதனாவின் குற்ற உணர்வு அதிகரித்துக் கொண்டே சென்றது. இவனுக்கு ஒரு குழந்தையைத் தன்னால் கொடுக்க முடியாமல் போய் விடுமோ என்ற பயமும் சேர்ந்து கொண்டது.
இவனின் வாழ்க்கையில் வலுகட்டாயமாக நுழைந்து அவனை வேதனை தான் படுத்திக் கொண்டு இருக்கிறோம் என எல்லாவற்றிருக்கும் தன்னையே வதைத்துக் கொண்டு…. இனி அவனையும் வதைக்கப் போகிறாள்.
சாதனா ரிஷியின் மீது கொண்டிருந்த அதிகபடியான அன்பே… அவனுக்கு விருப்பம் இல்லையென்று தெரிந்தும், அவனையே திருமணம் செய்யும் அளவிற்கு வந்தது. இப்போது அவன் மீது கொண்ட அதே அன்பின் காரணமாக…. அவனை விட்டு விலகி செல்லும் முடிவையும் எடுத்தாள்.