அன்று சந்தியாவுடன் பேசிவிட்டு வீடு திரும்பிய சூரியா செய்த முதல் காரியம் அவனது தந்தை நாராயணனுக்கு போன் செய்தது தான். அவனது அழைப்பின் முதல் ரிங்கிலேயே எடுத்தவர் “சூரியா என்னாச்சுப்பா? உனக்கு ஒன்னும் இல்லையே” என்று பதறவும் அவனால் அவரிடம் சகஜமாக ஒரு மகன் தந்தையிடம் பேசுவது போல பதிலிறுக்கவே முடியவில்லை. இத்தனை வருடங்களில் அவன் தந்தையிடம் பேசிய வார்த்தைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
எனவே அடுத்து என்ன பேசுவது என்பது கூட புரியாமல் விழித்தவன் சிரமத்துடன் “டாட்……அ……..அப்பா” என்று மட்டும் வார்த்தைகளில் தந்தியடிக்க நாராயணனுக்கோ மகன் தன்னை நீண்டநாள் கழித்து அப்பா என்று அழைத்ததே பெரிய விஷயமாக தோன்ற அவராலும் பேச முடியவில்லை.
சூரியா தான் முதலில் சுதாரித்தவனாக “எப்பிடி இருக்கிங்க டாட்? பிஸினஸ் டிரிப் எப்பிடி போகுது?” என்று சாதாரணமாக பேசத் தொடங்க நாராயணனும் மகிழ்ச்சியுடன் மகனது கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அவன் “டாட் போன்ல நல்லா பேசுறிங்க, நேர்ல பார்த்தா மட்டும் ஏன் டாட் பேச மாட்றிங்க? எனக்கு உங்க கூட உக்காந்து பேசணும், உங்க கையைப் பிடிச்சுக்கணும்னு இந்த மாதிரி நிறைய ஆசைகள் இருக்கு. ஆனா உங்களுக்கும், உங்க ஒய்ஃபுக்கும் என் கிட்டவோ ஆரியா கிட்டவோ பேச டைம் இருக்காதே” என்றவனின் குரலில் எவ்வளவோ முயன்றும் பெற்றோரின் பாசத்துக்காக ஏங்கும் ஒரு மகனின் ஏக்கம் வெளிப்பட்டுவிட நாராயணனும் பதில் சொல்ல இயலாமல் தான் தவித்தார்.
முயன்று வருவித்த குரலில் “பதினெட்டு வருசத்துக்கு முன்னாடி நான் இருந்த நிலைமை அப்பிடி சூரியா. தொழில் போட்டியால என்னை என்னோட போட்டி கம்பெனிகள் மிரட்டிட்டு இருந்த காலம் அது. உங்களை உங்க அம்மா பொறுப்பா பார்த்துப்பானு நம்புனேன். ஆனா அவளுக்கு பெத்த பிள்ளைங்களை பார்க்கிறதை விட சோஷியல் சர்வீஸ், ஃபாரின் டிரிப், லேடிஸ் கிளப் முக்கியமா போயிடுச்சு.
நான் இருந்த சூழ்நிலையில உங்களை போர்டிங் ஸ்கூல் அனுப்புனா உங்க பாதுகாப்பை நினைச்சு நான் கவலைப்பட அவசியம் இல்லைனு தோணுச்சு. அதனால தான் அனுப்பி வச்சேன். ஆனா அதனாலயே என் பையன் என்னை விட்டு விலகி போவானு தெரிஞ்சிருந்தா பிஸினஸை அப்போவே தலை முழுகியிருப்பேன்” என்று கூற அவரின் வார்த்தைகளே அவரது மனவருத்தத்தை அவனுக்கு புரியவைத்தது.
இனி தான் அப்படி இருக்க போவதில்லை என்று தந்தைக்கு உறுதியளித்தவன் அவரை தொழிலில் கவனம் செலுத்துமாறு கூறிவிட்டு போனை வைத்தான். தந்தையின் பக்க நியாயத்தை இத்தனை வருடங்கள் புரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டோமே என்று வருந்தியவன் சந்தியா மட்டும் இல்லை என்றால் இப்போதும் தான் தந்தையிடம் தாமரை இலை தண்ணீர் போலவே இருந்திருப்போம் என்று அவளுக்கு மனதிற்குள்ளேயே நன்றி கூறிவிட்டு அடுத்து அன்னையை அழைக்கலாமா என்று போனை எடுத்தான்.
அடுத்த நிமிடம் தான் அவரது எண் அவனிடம் இல்லையென்பதே அவன் புத்தியில் உரைத்தது. அவனுக்குமே அவருக்கு அழைக்க பெரிதாக ஒன்றும் விருப்பம் இல்லை தான். ஏனெனில் தந்தை என்ன தான் விலக்கி வைத்திருந்தாலும் விடுமுறைக்கு வரும் போது அவரால் இயன்ற அளவுக்கு இரு மகன்களுடன் நேரம் செலவளிக்க முயற்சியாவது செய்வார். ஆனால் அவனது தாய் பிள்ளைகளை பெற்றதை தவிர ஒரு துரும்பை கூட இது வரைக்கும் அவர்களுக்காக கிள்ளி போட்டதில்லை. அதனால் அவருக்கு போனில் அழைக்கும் எண்ணத்தை ஒதுக்கி வைத்துவிட்டு அவனது வேலையை கவனிக்க சென்றான்.
***********
தந்தையின் விஷயத்தில் சந்தியா கொடுத்த அறிவுரை சூரியாவுக்கு அவளது இன்னொரு முதிர்ச்சியான பக்கத்தை காண்பித்தது என்றால் அவளது தினசரி நடவடிக்கைகள் அவளது குழந்தைத்தனத்தை நினைத்து வயிறு வலிக்க சிரிக்க வைத்தது. அவன் அடிக்கடி சந்தியாவின் பாட்டியுடன் பேசுவதற்காக அவர்களின் வீட்டுக்குச் செல்வான். ஒவ்வொரு முறையும் சந்தியா ஏதாவது குறும்புத்தனம் செய்து வீட்டை அதகளம் செய்வாள்.
இப்போது சில நாட்களாக ஸ்கூட்டி ஓட்டப் போகிறேன் என்று அந்த தெருவில் காய்கறி விற்க வரும் தள்ளுவண்டிக்காரருக்கு அவ்வபோது உயிர்பயத்தைக் காட்டிக் கொண்டிருந்தாள்.
சூரியாவும் ஸ்கூட்டி ஓட்ட பயிலுகிறேன் பேர்வழியாக அவள் நடத்திய கூத்தை பார்த்துக் கொண்டு தான் இருந்தான். அவனுக்கு தெரிந்தவரை அவள் எதிரில் வருபவரைப் பற்றிக் கவலைப்படாமல் ஓட்டுவது அவளுக்கு பாதுகாப்பில்லை என்று எத்தனை முறையோ அறிவுறுத்தியும் அவள் அதை காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.
“லுக் மிஸ்டர் மார்ஸ்மாலோ எனக்கு இருக்கிற டேலண்டுக்கு நான் ஃபிளைட்டை கூட டிரெயினிங் இல்லாம ஓட்டுவேனாக்கும். இது ஆஃப்டர் ஆல் ஸ்கூட்டி தானே” என்று வாய்ச்சவடால் பேசுபவளை அவன் என்ன தான் செய்ய முடியும்?
இப்படி மேலகரம் முழுவதும் சுற்றியவளுக்கு திடீரென்று ஒரு விபரீத ஆசை வந்தது. அன்று கோமதியம்மாள் ரேவதியிடம் இரும்பு வாணலி ஒன்று வாங்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்க ரேவதி “ஆனா அதுக்கு செங்கோட்டைக்கு போகணும். இப்போ யாரு இங்கே இருக்கா? உங்க மாப்பிள்ளை தான் மூனு நாள் சேட்டு கூட திண்டுக்கல் போறேனு சொல்லிட்டுப் போயிட்டாரே! அவர் வரட்டும்” என்று மறுத்துவிட சந்தியாவின் காதில் செங்கோட்டை என்ற வார்த்தை விழவும் அவர்களிடம் வந்துவிட்டாள்.
“பெரியம்மா நான் ஒருத்தி இருக்கிறப்போ நீங்க ஏன் வெயிட் பண்ணனும்? நானே பட்டறைக்கு போய் வாங்கிட்டு வர்றேன்” என்று கூறியவள் ஹெல்மெட் ஸ்கூட்டி சாவியுடன் தான் அவர்களுடன் பேசவே ஆரம்பித்தாள்.
ரேவதி மறுக்க மறுக்க கோமதியம்மாள் “உன் கிட்ட லைசென்ஸ் வேற இல்ல. இப்போ போக வேண்டாம்” என்று தலைதலையாக அடித்தும் அனைவரின் பேச்சையும் புறந்தள்ளிவிட்டு தலைக்கவசத்துடன் ஸ்கூட்டியில் அமர்ந்தவள் “பெரியம்மா இங்க இருக்க செங்கோட்டைக்கு தானே போறேன். நான் ஏதோ அமெரிக்காக்கு போற மாதிரி ஃபீல் பண்ணுறிங்க. சீக்கிரமா வந்துடுவேன். நான் வர்ற வரைக்கும் பத்திரமா இருங்க” என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துவிட்டு கிளம்பினாள்.
போகும் போது எந்த பிரச்சனையும் இல்லை. நல்லபடியாக கொல்லன் பட்டறைக்கு சென்றவள் அவர்கள் கேட்ட இரும்பு வாணலியை வாங்கிக் கொண்டு ஸ்கூட்டியை மிதித்து வழக்கம் போல எதிரில் வரும் வண்டியை பற்றிய கவலையின்றி வேடிக்கை பார்த்தபடி ஓட்ட எதிரில் வந்த கார் அவளது ஸ்கூட்டியை சற்று இடிப்பது போல வர அவள் பதற்றத்தில் வண்டியை ஓரம்கட்ட எண்ணியவளுக்கு பேலன்ஸ் தவறிவிட்டது.
கட்டைப்பையில் இருக்கும் நடுத்தர அளவு இரும்பு வாணலியின் மொத்த எடையும் அவளையும் கீழே தள்ள வண்டி சரிந்து சாலையோரத்தில் ஸ்கூட்டியோடு சரிந்தாள் சந்தியா. அவள் மீதே ஸ்கூட்டியின் மொத்த எடையும் இருக்க காலில் வாணலி பலமாக மோதிவிட்டது. பெரிய அடி எதுவும் இல்லையென்றாலும் முதல்முறை ஒரு வாகனத்திலிருந்து விழுந்த அதிர்ச்சியுடன் கை கால்களில் சிராய்ப்பு வேறு. அதனால் எழும்ப முடியாமல் சிரமப்பட்டவளுக்கு காரில் இருந்து யாரோ இறங்குவது மட்டும் தெரிய அவளால் முயன்றமட்டும் எழும்ப முயற்சித்தாள் சந்தியா.
அந்த காரின் உரிமையாளன் அருகில் வரவும் தான் வந்தவன் சூரியா என்பதே அவள் கண்ணிலும் கருத்திலும் பதிந்தது. ஜித்துவும் அவனுடன் வந்திருக்கவே ஸ்கூட்டியை ஜித்து தூக்கி நிறுத்த சந்தியா எழும்ப கையை கொடுத்தவன் அவள் எழும்ப முடியாமல் சிரமப்படவே குனிந்து அவளைத் தனது கரங்களில் அள்ளிக் கொண்டான்.
அவன் இயல்பாக அவளைத் தூக்கிக் கொள்ள சந்தியாவோ முதல் முறையாக ஒரு ஆண்மகனின் தொடுகையில் விதிர்விதிர்த்தவளாய் சூரியாவின் முகத்தைப் பார்க்க அதில் கோபம் தான் இருந்தது. சிறிது தயக்கத்துடன் “சூரியா என்னை இறக்கிவிடு! நானே நடந்து வந்துக்கிறேன்” என்று கூற அவன் முறைத்த முறைப்பில் அவள் வாய் தானாகவே பூட்டு போட்டுக் கொண்டது.
கீழே விழுந்து விடுவோமோ என்ற அர்த்தமற்ற பயத்தில் அவளது கரங்கள் அவன் கழுத்தை வளைத்துக் கொள்ள வலி உயிர் போகும் நேரத்திலும் அவள் கண்கள் அவன் முகத்தை படம் பிடிக்க தவறவில்லை.
சூரியா அவளை காரில் அமரவைத்தவன் ஜித்துவிடம் ஸ்கூட்டியை ஓட்டிச் செல்லுமாறு கூறிவிட்டு அவளை பக்கத்தில் கிளினிக்குக்கு அழைத்துச் செல்வதற்காக காரில் அமர்ந்தான். கோபத்தில் இறுகியிருந்த தாடைகள் கூட அவனுக்கு அழகு தான் என்று தனது மனதில் கூறிக் கொண்டவள் மெதுவாக “மார்ஸ்மாலோ” என்று ஆரம்பித்தது தான் தாமதம். அவன் வாணலியில் இட்ட கடுகாக வெடிக்கத் தொடங்கினான்.
“அறிவில்ல உனக்கு? எத்தனை தடவை சொல்லிருக்கேன், ஸ்கூட்டியில போறப்போ ஆப்போசிட்ல வர்றவங்க எப்பிடி வர்றாங்கன்னு கவனினு. ஒரு தடவை கூட காது குடுத்து கேக்காம இன்னைக்கு விழுந்து வச்சிருக்க. கடைசி நேரத்துல நான் சடன் பிரேக் போட்டேன். இல்லனா இன்னைக்கு நீ பரலோகபிராப்தி அடைஞ்சிருப்ப” என்று கடுகடுத்த முகத்துடன் பேசிய சூரியா அவளுக்கு முற்றிலும் புதியவன்.
இது வரைக்கும் யார் அவளை திட்டினாலும் அதற்கு பதிலடி கொடுக்காமல் அவள் விட்டதில்லை. முதல்முறையாக அவன் திட்டுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் கண் இமைக்காமல். ஏனோ அவன் உரிமையாய் திட்டுவது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. சற்று முன்னர் அவன் அவளை தனது கரங்களில் தூக்கியது கூட தான்.
சிறிது நேரத்தில் கிளினிக்கும் வந்துவிட அவளை தூக்க அவன் முயல சந்தியா “ஷ்ஷ்! எல்லாரும் பார்ப்பாங்கடா” என்று கண்ணால் ஆங்காங்கே தெரிந்த மனிதத்தலைகளை காட்ட அவனோ ஒரு ஏளன உதட்டுவளைவுடன் குனிந்து அவளைத் தூக்கிக் கொள்ள அவள் மீண்டும் மறுப்பாய் ஏதோ சொல்ல வந்தாள்.
அவள் உதட்டில் கை வைத்தவன் “எதுவும் பேசாதே ஓகே! இன்னைக்கு ஒரு நாளாச்சும் நான் பேசுறதை கேளு” என்று அழுத்தமான குரலில் கூறிவிட்டு உள்ளே அழைத்து சென்றான். சிறிது நேரத்தில் கையில் சிறிய பேண்டேஜுடனும் காலில் சுளுக்குக்கு போட்ட கட்டுடனும் இருந்தவளை அவனது கரத்தில் ஏந்தியபடி காரை நோக்கி சென்றவனை அங்கிருந்த அனைவரின் விழிகளும் அளவிட சந்தியா தலையை குனிந்து கொண்டாள்.
காரின் முன் இருக்கையில் அவளை அமரவைத்தவன் தானும் அமர்ந்து பின் இருக்கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எக்கி எடுத்தவன் அவளிடம் நீட்டிவிட்டு “என் கண்ணு முன்னாடியே டேப்ளட்டை போடு” என்று கட்டளையிடும் குரலில் கூற சந்தியா மறுத்து பேசாமல் மாத்திரையை விழுங்கி வைத்தாள்.
மாத்திரை போட்டதும் அவள் முகம் போன போக்கு அவனுக்கு சிரிப்பை வரவழைத்தாலும் இப்போது தான் சிரித்துவிட்டால் இவளுக்கு இன்றைய விபத்து அவளது கவனக்குறைவால் நடந்தது என்பது புத்தியில் உரைக்காமலே போய் விடும் என்பதை உணர்ந்து சிரிப்பை அடக்கியபடி முகத்தை இன்னும் இறுக்கமாக வைத்துக் கொண்டான்.
சந்தியா முகத்தைச் சுருக்கியபடி “ஏன் மார்ஸ்மாலோ மூஞ்சியை இப்பிடி தூக்கி வச்சிருக்க? ஓகே ஓகே! நீ சொன்னபடி நான் கேர்லெஸ்ஸா வண்டி ஓட்டுனது தப்பு தான். இனிமே இப்பிடி நடக்காது. எங்க குலதெய்வம் மேல சத்தியமா சொல்லுறேன், இனிமே லைசென்ஸ் இல்லாம, நல்லா டிரைவிங் கத்துக்காம நான் வண்டியை தொட மாட்டேன்” என்று அவள் உறுதியளிக்கவும் அவன் முகத்தில் புன்முறுவலின் சாயல் படரத் தொடங்கியது. அதன் பின் அவன் காரை எடுக்க சந்தியாவோ ஓரக்கண்ணால் அவனை பார்த்தபடி சிந்தனையில் ஆழ்ந்துவிட்டாள்.
சந்தியாவுக்கு ஏன் அவனது சிறு முகவாட்டம் கூட தன்னை இவ்வளவு பாதிக்க வேண்டும், அவனது சிரிப்பு தனது முகத்தையும் மலர வைக்க வேண்டும் என்ற யோசனை தான். இதே யோசனையுடன் வீடும் வந்துவிட அவன் இப்போதும் அவளை கரங்களில் ஏந்தி வீட்டுக்குள் கொண்டு செல்லவும் ஏற்கெனவே ஜித்து அவளது ஸ்கூட்டி மற்றும் வாணலி சகிதம் வந்து கூறிவிட்டு சென்ற நிகழ்வுகள் வேறு வீட்டுப்பெண்களின் மனதை கலக்கியிருக்க கோமதியம்மாள் காலில் கட்டுடன் இருக்கும் பேத்தியை கண்டதும் கண்ணீர் சிந்த ஆரம்பித்தார்.
சூரியா அவளது அறைக்கு அவளை தூக்கிச் சென்றவன் சுமித்ராவிடம் ஒரு தலையணையை நிமிர்த்து வைக்குமாறு கூறிவிட்டு அதில் சாய்வாக சந்தியாவை அமர வைத்தான்.
தனது பேண்ட் பாக்கெட்டில் மருத்துவர் கொடுத்த மாத்திரை கவர் இருக்கவே அதை ரேவதி வசம் ஒப்படைத்துவிட்டு கோமதியம்மாளிடம் “ஏன் கிரானி அழுறிங்க? அவளுக்கு ஒன்னும் இல்ல. லைட்டா அடி, கால்ல ஸ்ப்ரெய்ன். சீக்கிரமா சரியா போயிடும்” என்று அவரை சமாதானம் செய்தவனை விழி விரிய பார்த்துக் கொண்டே இருந்தாள் அவள். சிறிது நேரம் அவர்களிடம் பேசிவிட்டு ஒரு சிறிய தலையசைப்புடன் அவன் வெளியேற சந்தியாவுக்கு இவ்வளவு நேரம் இருந்த மோனநிலை கலைந்து போனது.
தலையை உலுக்கி தன்னை சமன் செய்து கொண்டவள் “என்னாச்சு சந்து உனக்கு? ஏன் மார்ஸ்மாலோ பத்தி என்னென்னவோ யோசிக்கிற நீ? இது சரியில்லயே” என்று தனக்கு தானே புத்திமதி கூறிக் கொண்டாள். ஆனால் அவள் மனம் அந்த புத்திமதி எதையும் செவிமடுக்காமல் இன்று நடந்த விபத்தில் அடிப்பட்டவளை அவன் கைகளில் ஏந்தியதையே மீண்டும் மீண்டும் அவளது நினைவுக்கு கொண்டு வர இப்போது நினைத்தாலும் சந்தியாவுக்கு மெய் சிலிர்த்தது.
அவளின் மனம் “சந்து உண்மையை சொல்லு, அவனோட அந்த கியூட் டிம்பிள் சிரிப்பு உன்னை அட்ராக்ட் பண்ணல? இன்னைக்கு அடிப்பட்டதும் உன் கால் தரையில படாம அவன் தாங்குனது உனக்கு பிடிக்கல? அவனோட கோவத்தை கூட நீ கண் இமைக்காம ரசிக்கல? சும்மா பொய் சொல்லாதே” என்று அவளைச் சீண்ட ஒரு கட்டத்தில் சந்தியா வாய்விட்டே கூறிவிட்டாள்.
“ஆமா! மார்ஸ்மாலோவோட ஒவ்வொரு செய்கையும் எனக்கு பிடிச்சிருக்கு. அவனோட சிரிப்பு, கோவம், என் மேல காட்டுற அக்கறை, வீட்டுல ஒவ்வொருத்தர் கிட்டவும் காட்டுற மரியாதைனு அவன் பண்ணுற ஒவ்வொன்னும் என்னை அவன் கிட்ட இழுத்துட்டு போகுது. இந்த ஃபீலிங் சரியா தப்பானு தெரியல. ஆனா எனக்கு அவனை ரொம்ப பிடிச்சிருக்கு” என்று புலம்பியவள் தன் உணர்வு அடைந்ததும் இவ்வளவு சத்தமாகவா பேசிவிட்டோம் என்று தனது தலையில் தட்டிக் கொண்டாள்.
அன்று மட்டும் அல்ல, அவளது கால் குணமாகும் வரை சூரியா அவளுடன் கழித்த பெரும்பாலான நேரத்தில் அவளது கவனம் முன்பு போல் அவனுடன் வார்த்தைக்கு வார்த்தை பதிலடி கொடுப்பதில் இல்லாமல் சூரியா என்றவனை கண்டதும் அவனது ஒவ்வொரு செய்கையையும் படம் பிடிப்பதிலேயே இருந்தது.
சிறிது நாட்களில் காலும் குணமாக கல்லூரி திறக்கும் நாளும் வந்துவிட்டது. மறுநாள் கல்லூரி திறக்கப் போகிறது என்று உற்சாகமாக இருந்த சந்தியா பக்கத்து தெருவிற்கு போன சுமித்ரா அந்த கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் அவளது சீனியர் ஒருத்தியை சந்தித்துவிட்டு வந்தவள் கூறிய செய்தியைக் கேட்டதும் அவளது உற்சாகம் முழுவதுமாக வடிந்துவிட்டது.
வேறு ஒன்றும் இல்லை. அவர்களின் கல்லூரியில் சீருடை தான் அணிந்து வரவேண்டும் என்பது சட்டம். இரு சகோதரிகளும் ஆசையாக ஆசையாக கல்லூரிக்கு அணிந்து செல்லவென்று வாங்கிய புத்தாடைகள் அனைத்தும் அவர்களை கேலி செய்து சிரிக்க இருவருக்குமே சோகம் தாங்கவில்லை. சந்தியாவுக்கோ அம்மா இந்த விஷயத்தை தன்னிடம் மறைத்துவிட்ட வருத்தம்.
சரி சீருடை தைத்து வரும் வரை சாதாரண உடையில் செல்லலாம் என்று எண்ணியவர்களின் நினைப்பிலும் மண்ணள்ளி போட்டார் தையல்காரர். ரேணுகா ஊருக்கு கிளம்பும் போதே சந்தியாவுக்கும், சுமித்ராவுக்கும் துணி எடுத்து தைக்கச் சொல்லிவிட்டார் என்ற செய்தியுடன் சீருடைகளை அவர்கள் வீட்டிலேயே வந்து கொடுத்துவிட்டு இரு பெண்களின் சாபத்தையும் வாங்கிக் கட்டியபடி சென்றார் அவர்.
கன்னத்தில் கை வைத்தபடி இருவரும் சோகமே உருவாய் மாடியில் அமர்ந்திருக்க பக்கத்து மாடியில் நின்ற சூரியா “ஏய் பிரவுனி! யோசனைலாம் என்ன பலமா இருக்கு?” என்று வினவ
அவள் சோகத்துடன் “என்னன்னு சொல்லுவேன் மார்ஸ்மாலோ?” என்று இழுத்தவள் சீருடை விஷயத்தை கூறிவிட்டு “அந்த யூனிபார்ம் போட்டு, ரெட்டை ஜடையும் போட்டேனு வையேன், பார்க்கிறதுக்கு ஸ்கூலுக்கு போற மாதிரியே இருக்கும். என்னோட கலர் கலர் கல்லூரி கனவுகளை இப்பிடி கட்டம் போட்ட கனவுகளா மாத்திட்டாங்களே” என்று புலம்பினாள்.
அவளது புலம்பலை கேட்டு அவன் இன்னும் கேலி செய்ய பதிலுக்கு அவள் அவனை நக்கலடிக்க என்று அன்றைய நாள் கழிந்து மறுநாளும் வந்துவிட்டது.
கல்லூரி திறந்த பிறகு படிப்பில் ஒரு கண்ணையும் சூரியாவை கவனிப்பதில் இன்னொரு கண்ணையும் வைத்தவாறு வலம் வந்தாள் சந்தியா. அவளுக்கு புரியாத பாடங்களைப் பற்றி சுமித்ராவிடம் அவள் புலம்புவதைக் கேட்ட சூரியா பக்கத்து மாடியிலிருந்து விளக்கம் கொடுப்பான். அப்போதெல்லாம் கேலியாக “இதுவே உனக்கு புரியலைனு சொல்லுற. நீயெல்லாம் எங்கே இருந்து சி.ஏ கம்ப்ளீட் பண்ணி ஆடிட்டர் ஆகி…” என்று கூறி கிண்டலடிப்பான் அவன்.
சந்தியா அவன் பேச்சை துச்சமாக ஒதுக்கிவிட்டு “நீ வேணா பாரு மார்ஸ்மாலோ இன்னையில இருந்து ஏழு வருசத்துக்கு அப்புறம் உன் கம்பெனி பேலன்ஸ்ஷீட் என் கையெழுத்துக்காக காத்திருக்கும். இது நடக்கலைனா நான் என் பேரை மாத்திக்கிறேன்” என்று சவால் விடுவாள்.
சூரியாவுக்கும் தெரியும், ஆடிட்டர் ஆக வேண்டுமென்பது அவளது கனவு என்று.
அதற்காக தான் பாடத்தில் சிறு சந்தேகம் வந்தாலும் தோண்டி துருவி கேட்டு அதை நிவர்த்தி செய்து கொள்வாள் சந்தியா. சூரியாவின் மீதான நேசம் எப்போதும் தனது படிப்பை பாதித்து விடக்கூடாது என்பதில் மட்டும் அவள் மிகவும் கவனமாக இருந்தாள்.
இவ்வாறு நாட்கள் வேகமாக ஓட சூரியாவும் ஜித்துவும் வெளிநாடு செல்லும் நாள் அருகில் வந்துவிட்டது. சரியாக அவன் கிளம்புவதற்கு ஔ நாள் முன்னர் ரேணுகாவும் தேவராஜும் வாரவிடுமுறை என்பதால் மகளை காண வந்திருக்க அவர்களிடம் சொல்லிவிட்டுச் செல்ல ஜித்துவுடன் வந்தான் சூரியா.
தேவராஜிடம் “சார் நீங்க தப்பா நினைக்கலைனா நான் உங்க எல்லார் கூடவும் போட்டோ எடுத்துக்கலாமா?” என்று கேட்க அவர் “என்னப்பா நீ இதுக்குலாம் பெர்மிசன் கேக்கணுமா?” என்று மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொண்டவர் அண்ணன், அண்ணி, மனைவி, மகள்கள் மற்றும் மாமியார் என்று முழுகுடும்பத்தையும் அழைத்து புகைப்படம் எடுக்க ஏற்றவாறு அமருமாறு சொல்லிவிட்டார்.
பெரிய இருக்கையின் நடுவில் கோமதியம்மாள் அமர அவரின் இருபுறங்களிலும் மகள்கள் மற்றும் மருமகன்கள் அமர்ந்திருக்க, சுமித்ரா அவரின் காலடியில் சென்று அமர்ந்து கொண்டாள். சந்தியாவும் அவளுடன் அமரச் செல்ல சூரியா “பிரவுனி நீ என் கூட நில்லு” என்று அவள் கரம் பற்றி தடுத்து தன் அருகில் நிறுத்திக் கொண்டான்.
சந்தியா நேசம் நிறைந்த விழிகளுடன் அவனை ஏறிட அவனோ அந்த அழகிய குடும்பத்தில் தனக்கும் ஒரு இடம் கிடைத்த மகிழ்ச்சியில் புன்னகைக்க ஜித்து அந்த அழகிய தருணத்தை புகைப்படமாக்கினான்.
போனை ஸ்டூடியோவுக்கு கொண்டு சென்றவர்கள் சிறிது நேரத்தில் புகைப்படத்துடன் திரும்பினர். ஒரு காப்பியை சந்தியாவிடம் கொடுத்தவன் இன்னொன்று தனக்கு வேண்டுமென்று கொண்டு சென்றுவிட்டான். அவன் சென்றதும் அறைக்குள் வந்த சந்தியா தனது ஆல்பத்தில் அதை பத்திரப்படுத்தினாள்.
பத்திரப்படுத்தும் போதே அவளின் மனம் “சந்து சூரியா நாளைக்கு ஊருக்கு கிளம்புறான். நீ இன்னும் உன் மனசுல இருக்கிறதை அவன் கிட்ட சொல்லாம மறைச்சா என்ன அர்த்தம்? ஒழுங்கா அவன் கிட்ட உன் மனசுல இருக்கிற காதலை சொல்லிடு” என்று அறிவுறுத்த சந்தியா காதலா என்று அதிர்ந்தாள்.
படபடவென்று அடித்த இதயத்துடன் வேகமாக மேஜையின் மீதிருந்த ஜக்கில் இருந்து தண்ணீரை குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் ஒரு நிமிடம் அமைதியாக அமர்ந்து ஒவ்வொன்றாக யோசிக்க ஆரம்பித்தாள்.
யோசித்தவளுக்கு புத்தியில் உரைத்த விஷயம் இது தான். முதல் பார்வையிலேயே அவள் சூரியாவை விரும்ப ஆரம்பித்துவிட்டாள். (Phentermine) ஆனால் அதைப் புரிந்து கொள்ள அவளால் இயலவில்லை. இப்போது காதல் தான் என்று புரிந்துவிட்டது. ஆனால் அவள் காதலித்தவன் இன்னும் இருபத்து நான்கு மணி நேரத்தில் இங்கிருந்து செல்ல போகிறான். இனி அவனை மறுபடியும் சந்திப்பது கூட சந்தேகம் தான் என்ற நிலையில் சந்தியாவின் மனம் வேகமாக சிந்திக்க ஆரம்பித்தது.
எப்படியாவது அவனிடம் தனது மனதை வெளிப்படுத்திவிட வேண்டும் என்று எண்ணியவள் தனது ஆல்பத்தை அலமாரியில் வைக்கச் செல்லும் போது அவன் ஒரு நாள் இருபத்தைந்து காசு கேட்டது நினைவுக்கு வந்தது. இது வரை அதிலிருக்கும் ஒரு நாணயத்தை கூட யாரையும் தொடக் கூட அனுமதிக்காதவள் அவனுக்காக ஒன்றை மட்டும் கையில் எடுத்துக் கொண்டாள்.
வேகமாக படேல் பங்களாவை நோக்கிச் சென்றவள் ஜித்துவுடன் தனது உடைமைகளை அடுக்கி கொண்டிருந்தவனிடம் கொஞ்சம் தனியாக பேசவேண்டும் என்று கூற சூரியாவும் சரியென்று தலையாட்டியவன் தோட்டத்துக்கு அவளை அழைத்துச் சென்றான்.
சாரல் வீசும்….