ஒன்றில் நில்லாயோ? – 2
“மீனு…மீனும்மா.. பைக் சாவி பார்த்தியா? எங்க வச்சேன்னே தெரியலை” என மாடியில் இருந்து பார்த்திபனின் குரல் எதிரொலித்தது. அவ்வளவாக பொருட்கள் இல்லாத காரணத்தினால் பார்த்தியின் அழைப்பு பன்மடங்கு அதிகமாகவே ஒலித்திருக்க வேண்டும்.
ஏனென்றால், அந்த டியூப்லெக்ஸ் வீட்டின் மாடியைக் கடந்து இடையில் தென்பட்ட சிறிய செடிச் சுற்றுச்சுவற்றின் மீது தாவி ஏறிய பார்த்தியின் குரல், பக்கத்து வீட்டின் பால்கனி வழியே உட்புகுந்து, திறந்திருந்த ஃப்ரெஞ்ச் விண்டோஸைத் தாண்டி, அழகிய வெள்ளை திரைசீலையை விலக்கி, மஞ்சத்தில் அசந்து உறங்கிக் கொண்டிருந்த அவந்திகாவை தட்டி எழுப்பியிருந்தது.
“ச்ச்ச்ச்…. ஆரம்பிச்சுட்டானா?…. கொஞ்சம் மெதுவா கூப்பிட்டாதான் என்னவாம் இப்போ?” என முகம் பார்த்திராத பார்த்திபனை சில ஆங்கில வசவுகளால் திட்டியவள், பஞ்சுப் பொதி போன்ற தலையணையை முகத்தின் மேல் வைத்து முடிந்த அளவு காதுகளை மூடிக் கொண்டு புரண்டு படுத்தாள்.
ஆன போதும், நொடிக்கொரு தரம், “மீனு… மீனும்மா” என்ற குரல் கேட்பது போலவே பிரமை தட்ட, “சாந்தி…. ஏ சாந்திமா” என தன் வீட்டின் பணிப்பெண்ணை அழைத்தாள்.
“அம்மா… கூப்பிட்டீங்களா?” என பவ்யமாக அறையினுள் நுழைந்த அந்த பணிப்பெண் சாந்தியிடம் அனல் பார்வை வீசியவள், “விண்டோஸை எதுக்கு மூடாம போன… அறிவில்லை உனக்கு.. எத்தனை தடவை சொல்லறது?” என எரிந்து விழுந்தாள்.
“ஜன்னலை மூடினதுக்கு மூடவேண்டாம்னு நீங்க தானேம்மா ஒரு வாரம் முன்னாடி திட்டுனீங்க…” என மனது நினைத்த போதும், பணிப்பெண்ணின் வாயில் அவ்வார்த்தைகள் எழவில்லை. ஏனென்றால் அவந்திகாவிடம் பேசி ஜெயிப்பது என்பது முடியாது காரியம் என நன்கு அறிந்திருந்தாள் சாந்தி. அதனால் அமைதியாக மெளனம் சாதித்தாள்.
அந்த வீட்டில் வேலைக்குச் சேரும் போது அவளுக்கு சொல்லப்பட்ட விஷயம் ஒன்றே ஒன்று தான். “சம்பளம் பத்தி எந்த பிரச்சனையும் இல்லை. பத்தலைன்னா கேட்டு வாங்கிக்கலாம். குழந்தைங்க ஸ்கூல் ஃபீஸ் நாங்க கட்டிருவோம். ஒரே கண்டிஷன் என்னன்னா அவந்திகா மேமோட மனசு கோணாதபடிக்கு நடந்துக்கணும். திட்டுவாங்க… அதட்டலா தான் பேசுவாங்க. ஆனா அள்ளி அள்ளிக் குடுப்பாங்க… மான ரோஷம் சூடு சுரனைன்னு பார்க்கற மாதிரின்னா உனக்கு இந்த வீடு தோதுபடாது. சொல்லிட்டேன்” என வேலைக்கு சேர்ந்த முதல் தினமே வீட்டில் உடன் வேலை புரிந்த மற்றொரு வேலைக்காரியான பார்வதி சொல்லிய விஷயம்.
முதலில் சாந்திக்கு இந்த வேலைப் பளுவெல்லாம் ஒன்றும் தெரியவில்லை. “ஆமா அந்த ஒரு அம்மாக்கும் வாரத்தில ஒண்ணு ரெண்டு நாள் வந்து போற பெரியய்யாக்கும் சமைக்க, வேலை செய்ய என்ன பிரச்சனையாம். பழைய முதலாளியம்மா போடாத அதட்டலா, திட்டாத வசவா… அதெல்லாம் சமாளிச்சுக்குவேன் பார்வதிக்கா..” என பெருமையாகத் தான் மொழிந்தாள்.
ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவந்திகாவிடம் வேலைப் பார்ப்பது எவ்வளவு கடினம் என்று புலப்பட்டது. “சூடாக காபி வேண்டும்” என்பாள், சுடச் சுடச் கொண்டு சென்றால், “நாக்கு வெந்து நா சாகறதுக்கா?” என முகத்தில் விட்டெறியாத குறையாக காபிக் கோப்பையை நீட்டுவாள். அவளாகவே தாமதப்படுத்தி, கொண்டு சென்ற காபி ஆறிப் போய்விட்டால் அவ்வளவே. அவந்திகா பார்க்கும் பார்வையும், பேசும் சொற்களும் அப்போதே தூக்கில் தொங்கிவிட்டால் என்ன என்ற ரீதியில் மனதை தைக்குமாறு குத்தும்.
இத்தனையும் மீறி அவளிடம் வேலைக்கு இருக்க காரணம் அவளது தாராள குணம். ஐம்பது ரூபாய் வேண்டும் என யாசிக்கும் இடத்தில் சர்வ சாதாரணமாக ஐந்நூறு ரூபாய்கள் கிடைக்கும். அதற்காக கணக்கு பார்க்காமல் கொடுக்கிறாள், சுலபமாக ஏமாற்றி விடலாம் என்ற ரகமும் அல்ல அவந்திகா. முதலாளித்துவம் என்பது பிறப்பிலிருந்தே வாய்க்கப் பெற்றிருந்த வரம் அவளது. யாரை எங்கே அடித்தால் எங்கே என்ன சாதிக்கலாம் என பாலபாடம் பயின்றவள். அந்த திறமையினால் மட்டுமே தன் தந்தைக்கு இணையாக நிர்வாகம் செய்ய முடிகிறது.
சாந்திக்குப் பணத்தேவைகள் இருந்தன. அதனை அவந்திகா உபயோகப்படுத்தி சாந்தியை தன் பணிப்பெண்ணாக தக்கவைத்துக் கொண்டாள் அவ்வளவே.
இதோ இப்போதும் கூட, ஜன்னல் திரைசீலையை மூடிய போது, கண்ணாடி ஜன்னலை ஏன் மூடவில்லை என அவந்திகா காட்டமாக கத்திக் கொண்டிருந்தாள். “அறிவிருக்கா இல்லையா உனக்கு? எத்தனை தடவை ஒரு விஷயத்தை சொல்லணும்? மூனு வேளை கொட்டிக் தெரியுதுல்ல… அதுலை ஏதாச்சும் குறையா போயிடுச்சா? பையனுக்கு ஸ்கூல் ஃபீல் கட்டறப்போ ஈஈஈஈன்னு இளிச்சிட்டு வாங்கத் தெரியுதில்லை… அப்போ இனிக்குதுல்ல… அதுக்காக கொஞ்சம் ஆடி அசஞ்சு வேலை பார்த்தா என்ன?” என பாதி உறக்கத்தில் எழுந்து கொண்ட எரிச்சல் தீர சாந்தியைத் திட்டினாள்.
இதே அவந்திகா தான் இரு தினங்களுக்கு முன்னர், “ஜன்னல் ஏன் இப்படி இறுக்கமா இரும்பு பெட்டியாட்டம் மூடியிருக்கு? மூச்சடிச்சு நான் செத்துப் போகவா? வெளிக்காத்து படணும்னு தானே கோடி கோடியா கொட்டி இவளோ இன்டீரியர் டெக்ரேஷன் செஞ்சிருக்கேன். உன் அப்பன் வீட்டு காசா என்ன? ஜன்னலை எதுக்கு திறக்காம மூடி வச்ச நீ? அறிவு கெட்ட முண்டம்…” என ஜன்னலை திறக்கவில்லை என்று சரமாரியாக திட்டியவள்.
சாந்தி எதுவும் பேசாமல் அமைதியாகவே நின்றிருந்தாள். செய்தாலும் தப்பு, செய்யாவிடினும் குற்றம் என தன் பேச்சு தனக்கே புரிபடாமல் இருப்பவர்களுக்கு எப்படிபட்ட வேலையாள் கிடைத்தாலும் அது போதாது தான். சாந்தியின் அந்த மெளனத்திற்கும் அடுத்த வசவு தயாராக இருந்தது.
“அப்படியே ஊமைக்கோட்டான் மாதிரி திருதிருன்னு ஏன் முழிக்கற? ஜன்னலை சாத்தாம உன்னை யார் போகச் சொன்னா? வரட் வரட்னு யார் இப்படி காலங்காத்தால கத்தறது?” என எரிச்சல் மண்ட வினவினாள்.
நல்ல வேளையாக அவந்திகாவிற்கு இன்னமும் முழு உறக்கமும் விட்டபாடில்லை. “மசமசன்னு நிக்காம ஜன்னலை சாத்திட்டு போ…” என திரும்ப வெண்பொதி தலையணையில் சாய்ந்து கொண்டாள். சாந்தி, விட்டால் போதும் என ஜன்னலை இறுக்கமாக இழுத்துப் பூட்டி திரைசீலைகளை வெளிச்சம் உட்புகா வண்ணம் சரி செய்துவிட்டு வேகமாக அவந்திகாவின் அறையில் இருந்து வெளியேறினாள்.
மாடிப்படியின் கீழே சாந்தியின் வருகைக்காக காத்திருந்த பார்வதி கண்களாலேயே “என்னவாம்?”என ஜாடை செய்ய, அடுக்களைக்குள் ஓடிய சாந்தி குளிர்ந்த நீரை இருமடக்கு குடித்த பின்னரே சாதாரணமானாள்.
“பொண்ணா பார்வதிக்கா அது? அய்யோ அம்மா? ஜன்னலை ஏன் திறந்து விட்டன்னு அப்படி கத்துது… ஒரு வாரம் முன்னாடி, ஜன்னலை ஏன் மூடிவச்சன்னு இதே மாதிரி கத்துச்சு… இன்னைக்கு இப்படி கத்துது… எப்படித்தான் வேலை பார்க்கறதோ?”
“மெதுவா பேசு சாந்தி… நம்ம கெட்ட நேரம் ..தோட்டக்காரன், டிரைவர்னு யார் காதுலையாவது விழுகப் போகுது. அப்பறம் தோதா அந்தம்மாட்ட நம்மளை போட்டுக்குடுத்து அவனுக நல்ல பேர் வாங்கிட்டுப் போயிருவானுக…”
“அத சொல்லுங்க… சரி வாங்க மதிய சமையலை கவனிப்போம்..” என அவந்திகாவைப் பற்றி பேசிக் கொண்டே அவளுக்கான மதிய சமையலை செய்யத் துவங்கினர்.
அதே நேரம், நிரஞ்சனாவின் வீட்டில், ஒருவேளையாக பார்த்திபனின் பைக் சாவியினை தேடிக் கண்டுபிடித்து அவனிடம் சேர்ப்பித்த நிரஞ்சனா, பள்ளிக்குத் தயாராகி சீருடையுடன் அமர்ந்திருந்த மகளை வண்டியின் முன்னால் அமர்த்தி கையசைத்து இருவரையும் அனுப்பிவைத்து விட்டிருந்தாள்.
கண்களை விட்டு வண்டி மறையும் வரை வாயிலின் அருகேயே நின்றிருந்தவள், தான் புதிதாக குடிபுகுந்திருந்த அந்த வீட்டை வெளிகேட்டில் இருந்து நோட்டம் விட்டாள்.
பெரிய வீடு..வீட்டைச் சுற்றி அரை ஆள் உயரத்தில் செடிகளால் ஆன தடுப்புச் சுவர். ஒருவேளை இருவீடும் ஒருவருடையதோ என்ற கேள்வியும் உடன் கண்டிப்பாக எழும். மற்ற வீடுகளைப் போல் தனியாக சுற்றுச்சுவர் இல்லாமல், இந்த இரு வீடுகளுக்கும் பொதுவாக, குட்டைச் செடியால் ஆன சுவர். இரண்டும் ஒருவருடைய வீடுகளாகவோ அல்லது பெரிய வீட்டின் அவுட் ஹவுஸாகவோ இருக்கக் கூடும்.
நிரஞ்சனாவின் வீட்டின் முன்னர் சிறிய அளவிலான புள்வெளி. அதனை ஒட்டி வெள்ளை சரலைக் கற்கள் பதித்த நடைபாதை. பாதையின் முடிவில் மூன்று படிகளைக் கடந்தால் வீட்டின் நிலைக்கதவு. அடுத்த வீட்டைக் காட்டிலும் நிரஞ்சனாவின் வீடு சிறியதாக தென்பட்ட போதும், அந்த வீதியில் இருந்த மற்ற வீடுகளுக்கு எந்த வகையிலும் குறைந்து போய்விடவில்லை என்பதையும் கவனித்தாள்.
“இதெல்லாம் அஸ்மத்தும், ஜெனியும் பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவாங்க… அவங்களும் இங்க பக்கத்து வீட்டுக்காரங்களா இருந்தா எவளோ நல்லா இருந்திருக்கும்… இங்க பக்கத்தில யார் இருக்கா? என்ன ஏதுன்னு கூடத் தெரியலை…” என நினைத்தவள் கணவனின் வண்டி சென்ற திசையினைப் பார்த்து பெருமூச்சு விட்டாள்.
[the_ad id=”6605″]சிறிய சிறிய பங்களாக்களாக தென்பட்ட வீதியில், சீராக நேர்த்தியாக வீடுகள் இடம்பெற்றிருந்தன. பெரும்பாலான வீடுகளில் பெரிய பெரிய படகு கார்கள் வாயிலை அலங்கரித்தன.
“அனேகமா இந்த வீதியில பைக் வைச்சிருக்கற ஒரே வீடு என்னோடதா தான் இருக்கும்.. “என முனுமுனுத்தவள் அவளது பக்கத்து வீட்டின் வசதி செழிப்பை ஏறிட்டாள். வெள்ளை மாளிகை போன்று வென் சலவைக்கல்லால் இழைத்திருந்த வீடு காலைக் கதிரவனின் ஒளியில் சுடர்விட்டது.
“இந்த வீட்டில யார் இருக்கா? நாம வந்து ரெண்டு வாரமாகப் போகுது. ஆனா பக்கத்து வீட்டில ஒருத்தரைக் கூட பார்க்க முடியலையே… வேலைக்காரங்க ரெண்டு மூனு பேர் இருக்காங்க போல. அப்போ அப்போ அவங்க தான் கண்ணுல படறாங்க…” என எண்ணவோட்டம் செல்ல,
சரியாக அந்த நேரம் பார்த்து, பக்கத்து வீட்டின் இரும்புக் கதவுகளைத் தாண்டிக் கொண்டு அந்த கரும்பு நிற கார் உள்ளே நுழைந்தது. யார் இறங்குகிறார்கள் எனத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்த நிரஞ்சனா வாசல் படிகளில் ஏறி நிற்கும் முன்னர், காரில் வந்திறங்கிய நபர் உள்ளே சென்று விட்டிருந்தார்.
இன்னமும் அங்கேயே நின்று வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க நிரஞ்சனா விரும்பவில்லை. உள்ளே வீட்டில நிறைய வேலைகள் காத்திருந்தன. பொருட்களை முழுவதுமாக அடுக்கி முடிக்கவில்லை. அப்போதைய தேவைக்கு சமையல் பொருட்களையும், படுக்கை அறையையும் தயார் செய்திருந்தனர்.
“இன்னைக்கு என்னோட பொயிண்டிங்க் பொருட்களை அடுக்கறதுக்கான நாள்” என முன்னரே தீர்மானித்திருந்த நிரஞ்சனா அந்த வேலையில் ஈடுபடத்துவங்கினாள்.
நிரஞ்சாவிற்கு சிறு வயது முதலே படம் வரைவதில் ஆர்வம் அதிகம். நடுத்தரக் குடும்பத்து பெற்றோரின் இரண்டாம் மகளான நிரஞ்சாவின் தூரிகைத் திறமை வாசல் கோலத்திலும், ரெக்கார்ட் நோட்டின் கரப்பான், தவளையிலும் நின்று போய்விட்டிருந்தன. அதனை வெளிக்கொணர்ந்த பெருமை பார்த்திபனையேச் சாரும்.
“ஏ… சூப்பரா வரையற மீனு…. கோலம் கலர் காம்பினேஷன் சூப்பர் மீனு” என அந்த சிறிய வீட்டின் முற்றத்தில் பொங்கல், தீபாவளி என பண்டிகை நாட்களில் மட்டுமே கோலமிடும் போதும், அதை வெகுவாகப் பாராட்டுவான். அவன் கேட்டுக் கொண்டதன் பேரில் தான் முதல் முதலில் சார்ட்டில் வரையத் துவங்கினாள் நிரஞ்சனா.
சாதாரண இயற்கைக் காட்சி தான், ஆனால் படம் பிடித்தது போல் அத்தனை நேர்த்தியாக வரைந்திருந்தவளின் திறமை பார்த்திபனுக்குப் புரிந்தது. அதனை ஊக்குவித்ததோடு மட்டுமன்றி படங்களை சந்தைப் படுத்தவும் கற்றுக் கொடுத்தான்.
இவள் வரைந்த எட்டு பத்து படங்களை, எடுத்துக் கொண்டு, தெரிந்தவர் மூலமாக ஆர்ட் கேலரி ஒன்றில் சென்று காட்டினான். அவர்களுக்கும் படங்கள் பிடித்திருந்தன. “நல்ல வரையறாங்க… பட், நாங்க சொல்லற ஜெனர்ல வரைய முடியுதான்னு பார்க்க சொல்லுங்க…. இங்க வெளிநாட்டு டூரிஸ்ட் அதிகம். ஹேண்ட் பெயிண்டிங்கஸ் வாங்கறவங்களும் அவங்க தான். சோ, மாமல்லபுரம் கோவில், சிற்பம், பண்டைய கால காட்சின்னு வரைய முடியுதான்னு பாருங்க…” என ஊக்குவிப்பாகவே பேசினர்.
காட்சியகம், மகாபலிபுரத்தில் அமைந்திருந்த காரணத்தினால் அவர்களது எண்ணம் நியாயமாகப் பட, அதை நிரஞ்சனாவிடம் உரிய முறையில் சேர்ப்பித்தான். “எதுக்கு பார்த்தி இதெல்லாம். நான் ஏதோ கோலம் கிறுக்கீட்டு போயிருப்பேன்… இதெல்லாம் ஒரு தடவை ஒத்துகிட்டா சரியா செஞ்சு குடுக்கணும்.. என்னால அதெல்லாம் முடியுமா பார்த்தி” எனத் துணுக்குற்றவளை சமாதாப்படுத்தி சம்மதிக்க வைத்தான்.
பார்த்தியின் நச்சரிப்பால் அவளும் “செய்து தான் பார்ப்போமே…” என விளையாட்டாக ஆரம்பித்தாள். முதலில் சிற்சில இயற்கை காட்சிகள், கடலுடன் கூடிய கோவில் கோபுரம், பகாசூரன் சிலை, ஒற்றை யானை, ஐந்து குதிரைகள் கொண்ட ரதம் என தேடித் தேடி, சிற்பங்களின் வரலாறு அறிந்து வரைய முற்பட்டாள். அவளே, ஏன் பார்ப்பதிபனே எதிர்பாராதது போல் இந்த தூரிகைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. உழைப்பிற்கான அங்கீகாரம் பாராட்டாக, ஊதியமாக கையில் கிடைக்கப் பெற நிரஞ்சனா அகமகிழ்ந்து போனாள்.
என்ன பழைய வீட்டில் அவ்வளவாக அவளுக்கு இடவசதி வாய்க்கப் பெறவில்லை. கணவனும் குழந்தையும் காலையில் சென்ற பின்னர், கூடத்தில் தன் தூரிகை வண்ணங்களை கடைபரப்புவாள். மாலைக்குள் அனைத்தையும் திரும்ப எடுத்து கட்டி பத்திரப்படுத்த வேண்டும். ஆனால் புதிய வீட்டில் அந்தத் தொல்லை இல்லை.
“இது உன்னோட பெயிண்டிங்க் ரூம்” என அகன்ற, காற்றோட்டமான, வெளிச்சம் முழுவதுமாக உள்விழுந்த அந்த அறையைக் கண்டதுமே நிரஞ்சனாவிற்கு மிகவும் பிடித்துப் போயிற்று. அந்த தூரிகை அறையில் உரிய பொருட்களை அடுக்கும் வேலையை, ஒரு வேலையாகக் கூடக் கருதாமல் ஆனந்தமாக செய்தாள் அவள்.
நிரஞ்சனா தன் தனித்துவத்தில் தன்னை தொலைத்துவிட்டிருக்க, அவளது அடுத்த வீடான அவந்திகாவின் வீட்டில் அந்த வாரத்தின் வரவு செலவு கணக்கை சரிபார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள் அவந்திகா.
பால்கனியில் வீற்றிருந்த அந்த அழகிய காட்டன் க்ரே வண்ண இறக்குமதி நாற்காலியில் சாய்ந்திருந்தவளின் எதிரில் அவளது பர்சனல் காரியதரிசி கீர்த்திகா நின்றிருந்தாள்.
கையில் மடிக்கணிணியுடன் நின்றிருந்த கீர்த்திகாவை மறந்தும் கூட அவந்திகா, “உட்கார்” எனச் சொல்லவில்லை. கீர்த்திக்கு இது பழகிப் போனவிஷயம் என்பதால் அவள் அதை எதிர்பார்க்கவுமில்லை.
“இன்னைக்கு ஃபேக்டரில வர்கர்ஸ்க்கு சம்பளம் குடுக்கற நாள்.”
“செக் ரெடியா இருக்கு மேம். நீங்க பார்த்துட்டு சைன் பண்ணிட்டா, பேங்க் போயிட்டு வந்திருவேன்…”
“ம்ம்ம்.. அந்த ரெண்டு பேர் ஸ்டைரைக் பண்ணுவேன்னு கொஞ்சம் ஓவர பேசினாங்களே….. அவங்க பேர் என்ன?”
“விசாரிக்கறேன் மேம். அவங்க சாலரிய ஹோல்ட் பண்ணனுமா மேம்?”
“ஸ்டூபிட்… அப்படி நான் ஏதாச்சும் சொன்னேனா? டோண்ட் கெட் ராங்க் ஐடியாஸ். நான் சொல்லறதை எக்ஸிகியூட் பண்ணறது மட்டும் தான் உன் வேலை… உன்னை யோசிக்கவோ, ஜட்ஜ்மெண்ட் குடுக்கவோ நான் சொல்லலை… புரிஞ்சதா?” என சுள்ளென்று எரிந்து விழுந்த அவந்திகாவை பதிலேதும் பேசாமல் ஏறிட்டாள் கீர்த்திகா.
“சீ கீர்த்தி… திஸ் இஸ் நாட் எ எனிமிட்டி திங்க்… அவனுக எல்லாம் என் ரேஞ்சுக்கு ஒரு விஷயமே இல்லை. நான் நினைச்சா, அவனுக பேசினப்போவே சீட்டை கிழிச்சு வெளிய துரத்தி, காமர்ஸ் சேம்பர்ல சொல்லி, வேற எந்த கம்பெனியிலையும் சேர முடியாத அளவுக்கு செஞ்சிருக்க முடியும்… இல்லையா கீர்த்தி..”
“முடியும் மேம்…”
“பட் அப்படி ஏன் நான் செய்யலை சொல்லு…”
“அவங்க குடும்பம், ஃப்யூச்சர்ன்னு””என கீர்த்தி மொழியும் முன்னர்,
“மை ஃபூட்… அவனுகளைப் பத்தி நான் அவளோ அக்கறைப் படுவேன்னு நினைச்சிருக்கியா என்ன? நோ வே… அவனுகளை நான் அப்போ வெளிய அனுப்பினா, அவனுகளைப் பார்த்து இன்னும் ரெண்டு பேர் பேசுவாங்க… என்னை எதிர்த்துப் பேசி காரியம் சாதிக்கலாம்னு நினைப்பாங்க.. அதுக்கு நான் ரியாக்ட் பண்ணறபோ அவன் பக்கம் நியாயம்னு ஆகிடும்… சிம்பதி க்ரியேட் ஆகிடும்…. ஹீரோ ஆகிடுவானுக….இல்லையா..””
“சான்ஸ் இருக்கு மேம்…”
“சோ, அனாவசியமா தகுதி இல்லாத ஒருந்தன் கிட்ட மோதி அவனை பெரியாள் ஆக்கக் கூடாது. இப்போ அவனுக்கு சம்பளத்தில, அவனுக்கு மட்டும் ஒரு 1000, 2000 ரூவாய் சேர்த்தி சாலரி போடு.. அவன் நிட்சயமா வெளிய சொல்லமாட்டான். அதே நேரம் நமக்கு எதிரா பேசறதையும் குறைச்சிருவான்… டூ இட் அண்ட் சீ… இட் கிவ்ஸ் ரிசல்ட்…”
“எஸ் மேம்…” என கீர்த்தியின் வாய் முனுமுனுத்த பின்னர், அவந்திகா மேலும் தொடர்ந்தாள். “எப்பவும் எதிரிகளை வளர்த்துட்டுப் போறது நல்லதில்லை. எதிரின்னு தெரிஞ்சுட்டா ஒண்ணு அழிச்சிடனும் இல்லைன்னா நம்ம பக்கம் இழுத்துக்கணும். இது என் டாடி சொல்லிக் குடுத்த டெக்னிக்…அண்ட் தட் இஸ் த சீக்ரெட் ஆல்சோ…”
அவந்தி பேசுவதை எந்த அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள எனத் தெரியாத கீர்த்தி எந்த பதிலும் சொல்லவில்லை. சில மனிதர்களிடம் பல நேரங்களில் பலவிஷயங்களில் பதில் சொல்லத் தேவையில்லை. மெளனமே சிறந்த பதிலாகக் கொள்ளப்படும் என கீர்த்தி அறிந்திருந்தாள். அதிலும் அவந்திகாவிடம் வேலைக்குச் சேர்ந்த பிறகு சிறிதும் ஐயமின்றி தெளியப் பெற்றிருந்தாள்.
[the_ad id=”6605”]“எனிதிங்க் எல்ஸ் மேம்?” என சில நொடி மெளனத்தின் பின் கீர்த்தி வினவ, “நத்திங்க்” என கைகளால் சைகை செய்த அவந்திகா, கீர்த்தி திரும்பி உள்ளே செல்ல எத்தனிக்க, அவளை சொடுக்கிட்டு நிற்கவைத்தாள்.
“எஸ் மேம்….” என கீர்த்தியும் சற்றும் துணுக்குறாது வினவினாள்.
“பக்கத்துவீடு இருக்கில்ல, நம்ம மிதுன் அங்கிள் வீடு… அதுல யார் புதுசா குடிவந்திருக்கா? எனி டீடெயில்ஸ்?”
“ஐ டோண்ட் நோ மேம். ஹாஃப் எ நவர்ல விசாரிச்சு சொல்லறேன் மேம்…”
“யு டு தட்…சரியான நியூசென்ஸா இருக்கு டெய்லி காலையில… இடியட்ஸ்” எனச் சொன்னவள், திரும்ப தன் மடிக்கணிணியுள் மூழ்கிப் போக, கீர்த்திகா தன் அன்றைய பணிகளை மேற்கொள்ள எத்தனித்தாள். அவளது அன்றாடப் பணிகளுள் அன்று பக்கத்து வீட்டு புதுக் குடித்தனக்காரர்கள் யார் என்ன என்று தெரிந்து கொள்ளும் வேலையும் சேர்ந்து கொண்டது.
தொடரும்…
தனக்கு இது வேண்டும் என்ற அறிவுத் தெளிவு அனைவருக்கும் வாய்க்கப் பெருவதில்லை. எது வேண்டும் என்பதை விடவும் எது வேண்டாம், அது நமக்கு அவசியமில்லை என்ற புரிதல் நம்மில் பல பேருக்கு இல்லை எனலாம். அப்படி பகுத்தறிந்து, தன் தேவை இதுவெனப் புரிந்து கொண்டு, அத்தேவைக்கு ஏற்ப தன் வாழ்வு நிலையை மாற்றியமைக்க நினைக்கும் மனிதர்களுக்கு, தேவை நிறைவு பெற்றவுடன் அவர்களது மனம் ஒன்றில் நின்றுவிடக் கூடும்.