கணவன் சுதாரித்தான். “அந்த மாரியப்பன் தான்னு எல்லாரும் பேசிக்கிறாங்க” எனச் சொல்லிச் சமாளித்தான்.
“அவனா? அவன் தானே இப்ப செத்தது? அந்த டிராவல்ஸ் நியூஸ்… அவன்தானே?” என்றாள் யோசித்தபடி. அவன் போலீஸில் மாட்டியதிலிருந்து, இறந்தது வரை… ஊருக்குள் அவன் தானே தலைப்பு செய்தி. ஆகையால் அனைத்து விஷயங்களும் செந்தாமரைக்கும் தெரிந்தது.
மனைவியின் தெளிவில், இப்பொழுது முழுதாக சுதாரித்திருந்தான் கணவன். “ஹ்ம்ம் அவன் தான். சரி விடு வேற பேசுவோம்” என சொல்லி பேச்சை மாற்ற முயன்றான்.
செந்தாமரைக்கும் கணவனின் குற்றவுணர்வு குறைந்தால் போதும் என்னும் நிலை. மேற்கொண்டு எதுவும் அதுகுறித்து பேசவில்லை.
அதன்பிறகு அவனே கூறினான். “அப்பாவோட ஆசைக்காக… அவரு நினைச்சது பாதியில நிக்குதேன்னு தான் சேலம் வந்தேன். அங்க எல்லாம் சரியானதும், நாம பஞ்சாப் வந்துடுவோம். உன்னை பிடிச்சதால மட்டும் தான் கல்யாணம். இல்லாட்டி அப்பா சொன்னதுக்காகன்னா… உன்னைத் தேடி முன்னாடியே நானே வந்திருக்கணும் தானே?” என்றான் அவளிடம்.
‘அப்படித்தானே!’ என அவளுக்கும் தெளிவானது.
மிகவும் மகிழ்வாக உணர்ந்தாள் இந்த வார்த்தைகளில். தன்னவன், தன்னை தனக்காக நேசித்தான். மனம் பெருமிதம் கொண்டது.
அடுத்த நாளே, மணமக்கள் சிம்லாவிற்குக் கிளம்ப, மற்றவர்கள் எல்லாம் சொந்த ஊருக்குப் பயணம் செய்தார்கள்.
சிம்லாவின் அழகில் லயித்த மனைவியை, கணவன் ரசித்துக் கொண்டிருந்தான். பனியில் நனைந்த இடங்களைப் பார்க்கப் பார்க்க தெவிட்டவில்லை அவளுக்கு. ஆனால், அத்தனை குளிர் அவளுக்குப் பழக்கமில்லாததால் வெடவெடத்தாள். ‘ரிட்ஜ்’, ‘குப்ரி’ இரண்டு இடங்களும் ஏதோ பனியில் குளித்தது போல இருந்தது.
“சிம்லா இப்படித்தான் இருக்குமா?” குளிர் தாங்காமல் கேட்க,
சிரித்தபடியே, “மாஹி, வர வழியெல்லாம் நல்லா தானே இருந்தது. இந்த பிளேசஸ் மட்டும் இப்படி இருக்கும்…” என்றான்.
[the_ad id=”6605″]
“முதல் தடவையா… அதான்…” என்றாள் தந்தியடித்தபடி. குளிர் அவளை வாட்டியது.
“நம்ம பஞ்சாப் வந்துட்டா இங்க அடிக்கடி விசிட் பண்ணலாம். சிக்ஸ் ஹவர்ஸ் ஜெர்னி தான்… அப்போ உனக்குக் குளிர் பழகிடும்…” என்றான் கணவன். அவனது இந்த பதிலை அவள் எதிர்பார்க்கவில்லை போலும். மனம் சற்று சுணங்கினாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
சொல்லப்படாத சுணக்கங்கள் எல்லாம் சண்டையின் போது தானே வெளிப்படும்! அவளது சுணக்கங்களும் சண்டைக்காகப் பதுங்கிக் கொண்டது.
“ஹாஹாஹா… என்னமோ பஞ்சாப்’க்கு கூட்டிட்டு வர மாதிரி… உங்களுக்கு போஸ்டிங் எங்க கிடைக்குதோ அங்க தானே இருக்க போறோம்…” என்றாள் சிரித்தபடி.
“அதுவும் சரி தான்…” எனக் கூட சேர்ந்து சிரித்தான்.
“ஆனா, அதிகம் குளிருங்க…” முழுதாக கவர் செய்யப்பட்ட விண்டர் கோட்டில் கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி சொல்ல, முகமே வெளிறிப் போயிருந்தது.
“சரி வா… ரூமுக்கு போயிடுவோம்” என்று அழைத்து சென்றவன், மறு நாளிலிருந்து… கிரீன் வேலி, ஜாக்கூ ஹில், ஹிமாலயன் பேர்ட் பார்க், குத்தார் போர்ட், சத்விக் வாட்டர்பால்ஸ் என பனிப்பொழிவு இல்லாத இடங்களைச் சுற்றிக் காட்ட அழைத்து போனான். அவ்விடங்களில் எல்லாம் குளிர் சற்று குறைவாகத் தான் இருந்தது.
அவள் சிம்லாவை லயித்துப் பார்க்கிறாள் என்பதாலா, இல்லை அவன் வேறு சிந்தனையில் இருப்பதாலா எனத் தெரியவில்லை… ஆனால், நெருக்கம் என்பது வழக்கம்போல இரவினில் மட்டும் தான்… இரவு பகல் பாராத நெருக்கமெல்லாம் அவர்களுக்கிடையே இருக்கவில்லை.
அடுத்த நாள் அவர்கள் பஞ்சாபிற்கு கிளம்புவதாக இருந்தது. “சரி நாளைக்கு காலையில ஷாப்பிங் செய்வோம். மதியம் ஊருக்கு கிளம்பணும்…” என வெற்றி திட்டத்தைக் கூறினான். அவளும் தலையசைத்துக் கொண்டாள்.
அடுத்த நாள் நேரமே எழுந்து இருவரும் கிளம்பி, புறப்பட ஏதுவாக அனைத்தையும் பேக் செய்து வைத்தார்கள். காலை உணவை முடித்ததும், ‘சிம்லா மால் ரோடிற்கு’ வெற்றி அழைத்துச் சென்றான். கைவினை பொருட்கள், அலங்கார பொருட்கள் எனப் பார்ப்பதற்கு அனைத்தும் அழகாக இருந்தது. உடைகள், அணிகலன்கள் கூட. ஆனால், என்ன வாங்க என்று தான் அவளுக்கு விளங்கவில்லை.
இதுபோன்ற ஊசிமணி, பாசிமணி வகை அணிகலன்கள் எல்லாம் அவளுக்குப் பழக்கமில்லை. ஒரு குர்தியும், வளையல்களும் வாங்கிக் கொண்டாள்.
வேறு என்ன வாங்க என யோசித்து, யோசித்து… சரி எதுவும் வாங்காமலா போவது என்று… வீட்டு அலங்காரப் பொருட்களை வாங்கினாள். மரவேலைப்பாட்டில் செய்த கடிகாரம், விளக்கைச் சுற்றி அலங்காரமாகத் தொங்க விடும் உறைகள், மேலும் சில கைவினை பொருட்கள் என வெகு சில பொருட்களோடு பர்சேஸை முடித்தாள்.
“அவ்வளவு தானா?” வெற்றி வியப்பாகக் கேட்க,
[the_ad id=”6605″]
“இங்க வேற என்னங்க வாங்கறது? எனக்குத் தெரியலையே!” என உதடு பிதுக்கினாள்.
சிரிப்போடே, “அதோ அங்க புடவை எல்லாம் இருக்கு பாரு எடுத்துக்கிறயா?”
“இல்லைங்க வேணாம். நம்ம ஊருலயே புடவைங்க நல்லா தான் இருக்கும்” என மறுத்து விட்டாள்.
“மதியம் தான் ஊருக்கு போலாம் நினச்சேன். சரி வா. எதுவும் சாப்பிடுவியாம். சாப்பிட்டு ரூமுக்கு கிளம்புவோம்” எனச் சொல்லியவன், போகும் வழியிலிருந்த ஒரு புகழ்பெற்ற உணவகத்திற்கு அழைத்துச் சென்று, சாப்பிட வாங்கி தந்தான்.
“இந்நேரத்துக்கு என்ன சாப்பிட?” என அலுத்துக் கொண்டே உணவு உண்டுவிட்டு வெளியே வர, ஒருவர் தெரிந்த முகமாய் தெரிந்தார்.
யோசித்தவள், எதுவோ பிடிபட, “ஏங்க, அவரு நம்ம கல்யாணத்துக்கு வந்தவர் தானே?” என கை காட்ட,
வெற்றி பார்க்கும் போது, அங்கு யாரோ வெளியேறுவது போலத் தெரிந்தது.
“தெரியலையே மாஹி…”
“என்ன நீங்க… அவரு கல்யாணத்துக்கு வந்திருந்தாரு. நீங்க வேணும்ன்னே கவனிக்காம தெரியலை சொல்லறீங்க…”
“கவனிக்கலை மாஹி… இதுக்கு எதுக்கு சிணுங்கிற…” என்ன புதிதாய் நடந்து கொள்கிறாள் என்பது போல அவனுக்கு இருந்தது.
“போங்க… அதெப்படி எனக்கே தெரியுது… உங்களுக்கு தெரியாம இருக்கும்…” என நம்ப மாட்டாமல் கேட்டாள்.
உண்மையிலேயே வெற்றி யாரையும் கவனிக்கவில்லை. ஆனால், செந்தாமரைக்கு வேறொரு எரிச்சல். சற்று முன்பு வெளியேறிவரை தான், இவள் திருமணத்தன்று பார்த்து… தெரிந்தவர் போல இருக்கிறாரே எனக் குழம்பியது. மீண்டும் இன்று பார்க்கும் வரையிலும் அவர் நினைவு வரவில்லை. இப்பொழுது மீண்டும் பார்த்ததும், ‘அவரை இதற்கு முன்பு எங்குப் பார்த்திருக்கிறோம்?’ என்னும் யோசனை வந்துவிட்டது. ஆனாலும் சட்டென்று நினைவு வரவில்லை.
அந்த எரிச்சலைக் கணவன் மீது காட்டினாள். “இதென்ன சின்ன பிள்ளை தனமா?” என்று வெற்றி அதட்டலாகக் கேட்டான்.
“சும்மா நீங்க என்னையவே சொல்லாதீங்க… உங்களுக்கு இங்க மனசே இல்லை. நானும் கவனிச்சுட்டே தானே இருக்கேன். ஏதோ யோசனையிலேயே சுத்தறீங்க?” எனக் குற்றம் சாட்டினாள் மனையாள்.
[the_ad id=”6605″]
அவள் சொல்வது உண்மை தான். அவனும் முயன்று இங்கு ஒட்டப் பார்க்கிறான். ஆனால் கவனம் எப்படியும்… சொன்ன வேலைகள் எப்படிச் செல்கிறதோ என்னும் சிந்தனைக்குச் சென்று விடுகிறது. இவன் சேலத்திற்கு செல்லும் முன்பு, சந்தன பாண்டியர் விஷயத்தில், இவன் சொன்ன வேலைகள் எல்லாம் முடிந்திருக்க வேண்டும் என்பதிலேயே இவன் யோசனை சுழன்றது.
அதை அப்படியேவா அவளிடம் ஒப்புக் கொள்ள முடியும். “அதெல்லாம் இல்லை… வீணா கண்டதையும் உளறாத…” என்றான் மனைவியிடம்.
“அப்படித்தான்… இல்லாட்டி குளிருதுன்னு சொல்லறேன்னு… இங்க அடிக்கடி வந்தா சரியா போகும்ன்னு சொல்லுவீங்களா?” என அன்று நடந்ததை இன்று சொல்லிப் புலம்பினாள்.
இவன் யோசனையாகப் பார்க்க, “என்னை ஒட்டிட்டே திரிஞ்சிருப்பீங்க. ஆனா, என்னவோ இங்க அடிக்கடி வந்தா சரியா போகும்ன்னு சொல்லறீங்க. அடுத்த நாளிலிருந்து பனி விழாத இடமா கூட்டிட்டு போறீங்க… அப்பறம் எதுக்கு ஹனிமூன்னு சொல்லிட்டு… டூர் வந்தோம்ன்னு சொல்ல வேண்டியது தானே….” எனப் பொரிந்து தள்ளினாள்.
‘இவள் இத்தனை யோசிப்பாளா?’ என்று மலைத்தே போனான் கணவன். ஒவ்வொரு சிறு சிறு அசைவையும் எத்தனை நுணுக்கமாகக் கவனிக்கிறாள் என்று பிரமிப்பாக இருந்தது.
சமாளிக்க வேண்டுமே என யோசித்து, “இல்லைடா… இங்க நீ ஆர்வமா சுத்தி பார்த்த, அதான் உன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்ன்னு… நீ என் வைப்… உன்னைக் கவனிக்க எனக்கு நேரம் கிடைக்காமயேவா போயிட போகுது…”
அவள் பார்த்த பார்வையிலேயே, ‘உன்னை நம்பவில்லை…’ என்னும் பாவனை பொதிந்திருந்து அவனை வாட்டியது.
“இல்லைடா… அப்படி இல்லைடா… நம்பு மாஹி…” அது… இதுவென பேசி கரைக்கவே திணறி திண்டாடிப் போனான் கணவன். மனைவி வெகு அழுத்தம் எனப் புரிந்தது. அவளிடம் அவ்வளவு எளிதில் எதையும் மறைக்க முடியாது எனப் புரிந்தது. கணவனுக்குத் தலை சுற்றி போனது. அவளைச் சமாளித்து, அவளுக்கு மறைத்துச் செய்ய வேண்டியவைகளை நினைத்து.