Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

58. Shahiabi - தென்றலாய் என் காதல்

தென்றலாய் என் காதல் – 10

அத்தியாயம் – 10

“ஏய் சிந்து, ஏன் டி இப்படி வர வர ரொம்ப கோபப்படற?”

“பாரு, இப்போ எவ்வளோ பெரிய பிரச்சனை ஆயிடுச்சு,” என்றாள் ரஞ்சிதா.



Advertisement

“நீ சும்மா இரு ரஞ்சி.

உனக்கு ஒன்னும் தெரியாது.

அவன் தப்பான ரூட்டுல வந்துட்டு நம்மள குறை சொல்றான். எப்படி பார்த்துட்டு சும்மா இருக்க முடியும்? அதான் லைட்டா ஒரு காட்டு காட்டி விட்டேன்,” என்றாள் சிந்து.

Advertisement

“அம்மா தாயே! நீ இந்த ஊரை விட்டு போறதுக்குள்ள என்ன ஒரு வழியாக்காம விடமாட்டப்போல இருக்கே?” என்று கிண்டலாக கூறினாள் ரஞ்சி.

Advertisement

அதை காதில் வாங்கிக் கொள்ளாமல், “ரஞ்சிதமே… ரஞ்சிதமே…” என்று பாடிக்கொண்டே வண்டியை ஓட்டினாள் சிந்து.

“ஹ்ம்ம்… இவ என்ன திருந்தவா போறா?” என்று பெருமூச்சு விட்டாள் ரஞ்சிதா.

சிறிது நேரத்தில், விக்ரமின் வீட்டு வாசலில் சிந்துவை இறக்கிவிட்டு, தன் அலுவலகத்திற்கு சென்றாள்.

Advertisement

வீட்டின் கேட்டில் அமர்ந்து இருந்த வாட்ச்மேனை வம்பு செய்து விட்டு உள்ளே நுழைந்தாள் சிந்து.

“குட் மார்னிங் கீதா அக்கா,” என்று உற்சாகத்துடன் கூறினாள்.

அவரோ சற்று சோர்வுடன், “குட் மார்னிங் சிந்து,” என்றார்.

“ஐயோ அக்கா, என்ன ஆச்சு உங்களுக்கு? வாய்ஸ் இவ்வளவு டல்லா இருக்கு?” என்றாள்.

“என்னம்மா சொல்ல சொல்ற? எல்லாம் என் விதி. காலையிலேயே அதை ஏன் பேசிக்கிட்டு… நீ போய் அம்மாவைப் பார்,” என்றார்.

“அட கீதா அக்கா, முதல்ல உங்களுக்கு என்ன பிரச்சனை என்று சொல்லுங்க.

அம்மா தூங்கிட்டு தானே இருக்காங்க?” என்றாள் சிந்து.

“வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லையாம் சிந்து.

அங்கே பார்த்துக்க கூட ஆள் இல்லாமல் தனியா கஷ்டப்படுறாரு.

நானோ இங்கே இருக்கேன். அவர் நிலையை யோசித்தால் வருத்தமா இருக்கு,” என்றார் கீதா.

“ஏன் அக்கா, நீங்க போய் பார்த்துக்க வேண்டியது தானே?

ஒரு one week leave போட்டுட்டு ஊருக்கு போயிட்டு வாங்க,” என்றாள்.

“அட நீ வேற சிந்து… விக்ரம் தம்பியைப் பற்றி உனக்குத் தெரியாது.

அவர் பார்க்கத்தான் சாது. ஆனால் கோபம் வந்துவிட்டால் யார் என்ன என்பதெல்லாம் பார்க்க மாட்டார்.

தயா தாட்சிண்யம் பாராமல் பேசி விடுவார். நமக்கு சங்கடமாக போயிடும்.

அதனால் தான் நான் அவரிடம் இதைப் பற்றி சொல்லவும் இல்லை, leave கேட்கவும் இல்லை. இனி எல்லாம் கடவுள் பார்த்துக்கொள்வான்,” என்று பெருமூச்சு விட்டார்.

“சரி, அதை விடு. நீ போய் அம்மாவைப் பார்.

அவர் காலையிலிருந்து கதவைத் திறக்கவே இல்லை,” என்றார் கீதா.

“எப்போதும் வெளியே தானே தாள் போட்டு இருக்கும். பின்னேன்னா இன்று?” என்று சந்தேகத்துடன் கேட்டாள் சிந்து.

“நேத்து என்ன ஆச்சுன்னு தெரியலம்மா. நீ போனதுக்குப் பிறகு அறைக்கு தாள் போட்டுக்கிட்டாங்க.

எவ்வளோ சொல்லியும் கதவை திறக்கவே இல்லை. நானும் ரொம்ப நேரமா முயற்சி பண்ணி விட்டுட்டேன்,” என்றார் கீதா.

“என்ன அக்கா சொல்றீங்க? அவங்க இருக்குற நிலைமையில் ஏன் அவங்களை இப்படி தனியா விட்டீங்க?” என்று பதறியடித்துக்கொண்டு அறை நோக்கி ஓடினாள் சிந்து.

“அம்மா, கதவைத் திறங்க! அம்மா!” என்று கதவைத் தட்டினாள்.

உள்ளிருந்து எந்த சத்தமும் இல்லை.

சிந்து மனம் பதட்டமடைந்தது.

“ஐயோ… சுசிலா அம்மா! உங்களுக்கு என்ன ஆச்சு? தயவு செய்து கதவைத் திறங்க… எனக்கு பயமா இருக்கு!” என்று வேகமாகத் தட்டினாள்.

உள்ளிருந்து அழுகுரல் கேட்டது.

“என்னை காப்பாத்து இனியா… எனக்கு பயமா இருக்கு… என்ன காப்பாத்து…” என்ற சுசிலாவின் குரல் சிறு துவாரம் வழியே கேட்டது.

அதை கேட்டவுடன் சிந்துவிற்கு பதட்டம் அதிகமானது.

“அம்மா… அம்மா…” என்று அழுதபடி தட்டினாள்.

அப்போது தான் புரிந்தது — அவருக்கு தாளைத் திறக்கத் தெரியவில்லை.

ஏதோ ஒரு கோபத்தில் தாள் போட்டுக்கொண்டவர், அதைத் திறக்கத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

பாவம்… இரவு முழுவதும் தவித்திருக்கிறார்.

“அம்மா, அழாதீங்க… நான் வர்றேன்… பயப்படாதீங்க…” என்று சமாதானப்படுத்தினாள்.

அப்போது சற்று அழுகையை நிறுத்தி, “கதவைத் திறந்து விடு…” என்று குழந்தை போல கெஞ்சினார்.

“என்ன சிந்து, என்ன ஆச்சு?” என்று சாதாரணமாக கேட்டுக் கொண்டே கீதா வர, சிந்துவிற்கு கோபம் வந்தது.

“உங்களை நான் வந்து பேசுகிறேன்,” என்று கோபமாக கூறிவிட்டு வெளியே சென்றாள் சிந்து.

வாட்ச்மேனிடம் சென்று, “சீக்கிரம் வாங்க,” என்று அழைத்தாள்.

“என்னம்மா சிந்து? என்ன ஆச்சு?” என்றார் அவர்.

“வாங்க சொல்றேன்,” என்று அழைத்துச் சென்றவள்,

“இதோ இந்த பைப்பைப் பிடிச்சுக்கிட்டு மேல ஏறி, சுசிலா அம்மா ரூம் ஜன்னல் வழியா போய் கதவைத் திறந்து விடுங்க. கதவு லாக் ஆயிடுச்சு. பாவம் அவரால திறக்க முடியல,” என்றாள்.

வாட்ச்மேன் மேலே பார்த்தார்.

“ம்… சீக்கிரம்,” என்றவளை நோக்கி,

“தாயி… உனக்கு கொஞ்சமாச்சும் இரக்கம் இருக்கா?” என்றார்.

“ஏன்? என்ன ஆச்சு? எதனால் இப்படி கேக்குறீங்க?” என்றாள் சிந்து.

“கொஞ்சம் நீயே மேலப் பாரும்மா… எவ்வளவு உயரம். எனக்கு வயசு அறுபது. இந்த வயசுல நான் நடக்கறதே பெரிய விஷயம். இந்த நிலைமையில் நீ என்னை இவ்வளவு உயரமான இடத்துல ஏற சொல்லுற?” என்றார்.

“நான் உனக்கு என்ன பாவம் செய்தேன்? இது உனக்கே நியாயமா இருக்கா?” என்றார்.

“நீங்க சொல்றதும் சரிதான். நான் அதை பற்றி யோசிக்கவே இல்ல. சரி, தள்ளுங்க… நானே மேல ஏறுறேன்,” என்றாள் சிந்து.

“வேண்டாம் தாயி… உன்னால முடியாது. ரொம்ப உயரமா இருக்கு,” என்றார்.

“ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேனா, அப்புறம் என் பேச்சை நானே கேக்க மாட்டேன்,” என்றாள் சிந்து.

“ஓ… அப்படியா? அப்போ சரி தாயி, நீ ஏறு. நான் தடுக்கல,” என்றார் வாட்ச்மேன் கிண்டலாக.

உள்ளுக்குள், “எதற்கும் ஒரு ஆம்புலன்ஸ் வரவழைக்கலாமா?” என்று நினைத்தார்.

“என்ன பெரியவரே, ஆம்புலன்ஸ் நம்பர் எல்லாம் இருக்குல?” என்றாள் சிந்து.

“ஹான்… இருக்கு. ஒன்றுக்கு ரெண்டு இருக்கு,” என்றார்.

“அப்போ சரி… ஜெய் ஆஞ்சநேயா!” என்று சொல்லி, பைப்பைப் பிடித்து குரங்கு போல சரசரவென ஏறினாள்.

“பரவாயில்லை… பாப்பாவுக்கு ரொம்ப தைரியம் தான். பொம்பளை பிள்ளைனா இப்படித்தான் இருக்கணும்,” என்று கீழே இருந்து மெச்சினார்.

“ஹுக்கும்… இந்த மனுஷன் வேற என் நிலைமையே தெரியாம பேசிக்கிட்டு இருக்கார்… நான் உசுர கையில பிடிச்சிட்டு ஏறிக்கிட்டு இருக்கேன்!” என்று உள்ளுக்குள் முணுமுணுத்தாள்.

“சூப்பர் தாயி! இன்னும் கொஞ்சம் தான். இப்போ நீ எவ்வளவு உயரத்துல இருக்க தெரியுமா?” என்று கையைத் தட்டினார்.

அதை கேட்டவுடன் கீழே பார்த்தாள் சிந்து.

“ஆ… இவ்வளவு உயரமா!” என்று பயந்து கை நழுவ விட்டாள்.

“சண்டாளா! உன்னை நம்பி வந்ததுக்கு என்ன ஆகணுமோ அதை ஆகிட்டே!” என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டாள்.

“ஆண்டவராகிய ஏசு கிறிஸ்துவே… அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை மன்னித்து அருள்வாயாக… ஆமென்…” என்று மனதில் ஜெபம் ஓடியது.

“என்ன ஆகணுமோ அது ஆகட்டும்,” என்று கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்.

தரையை அடைந்தவள் மெதுவாக கண்களைத் திறந்தாள்.

“என்ன வலிக்கவே இல்லையே… ஒருவேளை நாம செத்து சொர்க்கத்துக்கா வந்துட்டோமா?” என்று யோசித்து கண்களை தேய்த்தாள்.

“ஐயோ… யார் நீங்க?” என்று பதறினாள்.

ஆமாம்… சிந்து ஆதவின் கைகளில் இருந்தாள்.

அலுவலகத்துக்கு சம்பந்தமான முக்கியமான ஒரு கோப்பை மறந்து விட்டதால், அதை எடுக்கவே ஆதவ் வீட்டுக்கு வந்திருந்தான்.

அப்போது மேலிருந்து விழும் சிந்துவை பார்த்து அதிர்ந்தான்.

உடனே ஓடி வந்து, சரியான நேரத்தில் அவளை கையில் ஏந்தி காப்பாற்றினான்.

“யோவ்… யாருயா நீ? முதல்ல கீழே என்னை இறக்கி விடுயா!” என்றாள் சிந்து.

“அது சரி… பாவம்னு காப்பாத்தினா, ஓவரா பண்ற!” என்றான் ஆதவ்.

“உன்ன யாருடா காப்பாத்த சொன்னா? எனக்கே என்னை காப்பாத்திக்கத் தெரியும்!” என்றாள்.

“வந்துட்டான்… பெரிய ஹீரோ!” என்று அவனை திட்டினாள்.

“காப்பாத்தினதுக்கு பரிசா டா இது?” என்று உள்ளுக்குள் முணுமுணுத்தான் ஆதவ்.

“சே… சாரி,” என்றாள் சிந்து திடீரென.

“எதுக்கு?” என்றான்.

“நீ என்ன தொட்டு தூக்குனதுக்கு,” என்றாள்.

“ஓ… நான் உன்னை காப்பாத்தினதுக்கா? அதுக்கு சாரி வேண்டாம்பா,” என்றான் சிரித்தபடி.

“நீ என்ன சொன்னாலும் நான் ஒத்துக்க மாட்டேன். எல்லா ஆம்பளைகளும் இப்படித்தான்… சந்தர்ப்பம் கிடைக்கும்னு காத்துக்கிட்டு இருப்பாங்க!” என்று கோபமாகச் சென்றாள்.

“என்ன பொண்ணு இவ…

சரி, இவ அந்த பச்ச மிளகாய்த் தானே? இவளுக்கு இங்க என்ன வேலை?” என்று அவளை பார்த்து சிரித்தான்.

“கியூட்…” என்று மெதுவாக அவனுக்குள்ளே சொல்லிக்கொண்டான் ஆதவ்.

தென்றல் மீண்டும் வீசும்… ✨

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!