கையில் ஒரு பையுடன் உள்ளே வந்த வசீகரன், அந்த பையை அவனின் பாப்புவிடம் நீட்ட, என்னவாக இருக்கும் என்ற யோசனையுடனே அதை வாங்கி பிரித்து பார்த்த உமையாளுக்கு அப்படி ஒரு புன்னகை.
உமையாளின் புன்னகையின் காரணத்தை அறியவேண்டி, அந்த பையை அவளிடம் இருந்து ஏறக்குறைய பிடிங்கி பிரித்து பார்த்த பாலாவின் முகமோ அஷ்டகோணலாக, உமையாள் வாய்விட்டு சிரிக்க, அந்த பையை பிரித்து பார்க்காமலே உள்ளே என்ன இருந்து இருக்கும் என யூகித்த வசீகரனும், உமையாளோடு சிரிப்பில் இணைந்து கொண்டான்.
அப்படி அந்த பையில் இருந்தது தான் என்ன?????
எண்ணெய், ஷாம்பூ, கண்டிஷனர், சீரம் என ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் முடிக்கு பயன்படுத்தும் பொருள்கள் அனைத்தும், அழகாக பரிசு கொடுக்கும் முறையில் ஒரு சிறிய பையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
பாலா தன் முக பாவத்தை மாற்றாமலே வசீகரனை நோக்கி,
“என்னடா உமா அவனை கிண்டல் பண்ணா, அதை அவன் சீரியஸ் எடுத்துகிட்டு பிராடக்ட் எல்லாம் கொடுத்து அனுப்பி இருக்கான்” எனக் கேட்க,
வசீகரனோ அவனுக்கு பதில் சொல்லாமல் அவனின் பாப்புவை பார்க்க, அவனின் பார்வையின் அர்த்தம் புரிந்த உமையாள்,
“இல்ல அண்ணா, நான் அவரை கலாய்த்தது தான் கிண்டல், பட் கேட்ட கேள்வி உண்மையாவே பதில் தெரிஞ்சிக்க நினைச்சி தான் கேட்டேன்” என்றவள் பாலாவின் கையில் இருந்து அந்த பையை வாங்கி அதில் இருப்பதை ஆராய ஆரம்பித்தாள்.
பாலாவோ, “அது சரி, கிருஷ்ணா தான் கண்ணாலே மனச படிச்சிடுவானே, அதான் உமா கேட்டதை கரெக்ட் புரிஞ்சிகிட்டு கொடுத்து அனுப்பி இருக்கான், அப்போ அவனை கிண்டல் பண்ணதும் உமா தானு அவனுக்கு தெரிஞ்சிருக்குமே, பயபுள்ள ஒன்னுமே சொல்லாம போய்ட்டான், ஒரு வேலை கரனுக்காக உமாவை திட்டமா போய்ட்டானோ????” என்று மனதிற்குள் பட்டிமன்றம் நடத்தினான்.
வசீகரன் சிரிப்புடன் அவனின் பாப்புவை பார்த்து, “நீ அவனை உத்து உத்து பார்க்கும் போதே எனக்கு தெரியும், இப்படி தான் அவனை ஏதாவது வம்பு இழுப்பேனு” என்று சொல்ல, அவனின் கூற்றில் கலைந்த பாலா,
“அடேய் அப்போ உமா, கிருஷ்ணாவை பார்த்தது உனக்கு தெரியுமா” என அதிர்ச்சியாக கேட்க,
அவனை வசீகரன் பார்த்த பார்வை,”பாப்பு எங்க இருந்தாலும் என் பார்வை அவள் மேல் தான் இருக்கும்” என சொல்லாமல் சொல்ல, பாலா தான் மானசீகமாக தலையில் கை வைத்து உட்கார்ந்தான்.
[the_ad id=”6605″]“ஒருத்தன் என்னடானா கண்ணை பார்த்து மனசை படிக்கிறான், இன்னொருத்தன் என்னனா எங்க இருந்தாலும், என்ன பண்ணினாலும் பார்வை முழுக்க அவள் மேல் தானு சொல்லாம சொல்லுறான், இவங்களுக்கு நடுவுல இப்படி என்னை மட்டும் கிரீன் சாண்ட் படைச்சி வச்சி இருக்கியே, பரமா” என அங்கலாய்க்கலானான்.
“ஹீ,ஹீ,ஹீ”, யாருடா அது உருண்டு, பிரண்டு சிரிக்கிறது, அட நம்ப எலியார் தான் சிரிச்சிகிட்டு இருக்காரு, அதை பார்த்து நம்மை மாதிரியே பிள்ளையாரும், “என்ன ஆச்சி எலியாரே எதற்கு கிக்கி, கிக்கி னு சிரிக்குறிங்க” என கேட்க,
“இந்த பாலா சொல்லியதை கவனித்தீர்களா பிள்ளையாரே, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க மொத்த பேமிலியும் டேமேஜ் பண்ணாலும் , அட்லீஸ்ட் உங்க பேரையாவது சரியா சொன்னான், இப்போ “பிரம்மா” பேர, சுப்ரமணியம் மூவி எபக்ட்ல “பரமானு” சொல்லுறான்,ஹீ,ஹீ,ஹீ” மறுபடியும் சிரிக்க, பிள்ளையாரோ,
“அவனை இப்படி கன்பியூசின் கொலபரேஷனா படைத்த, அந்த பிரம்மாவுக்கு இதுவும் தேவை, இன்னுமும் தேவை எலியாரே” சற்று முன்பு அவனால் கலாய்க்கபட்ட கடுப்பு, இப்போது பிரம்மாவை பாலா “பரமா” என்றதில் பரமானந்தமாக மாற தானும் சிரிக்க ஆரம்பித்தார்.
பாலாவின் முகமாற்றத்தையோ, எண்ணவோட்டத்தையோ எல்லாம் கணக்கில் கொள்ளாத வசீகரனோ,
“நான் ஏதாவது படம் பார்க்கலாம்னு நினைச்சேன், இப்படி வம்பு பண்ணி அவனை அனுப்பி விட்டுட்டீங்க ரெண்டு பெரும்” என்று கொஞ்சம் முறைப்புடனே அவனின் பாப்பு மற்றும் பாலாவை பார்த்து சொல்ல, கடுப்பான பாலா,
“வேண்டாம் மச்சான், என் வாயில நல்லா வண்ணம், வண்ணமா வந்துரும் சொல்லிட்டேன், கிண்டல் பண்ணது, அவனை சுண்டலா கிண்டுனது எல்லாம் உன்னோட பாப்பு தான், நான் வெறும் ஆடியன்ஸ் தான், அதுக்கே இந்நேரம் அவன் கிட்ட அடி வாங்க திரிஞ்சேன், எல்லா புகழும் உன்னோட பாப்புக்கு தான், எனக்கு அதுல பங்கே வேண்டாம்” என பொரியலானான்.
உமையாளோ அவன் ஏதோ பாராட்டு பத்திரம் வாசித்ததை போல சிரிப்புடன் பாலா பேசுவதை கேட்டு கொண்டு இருந்தவள்,
“இப்போ என்ன உங்க ரெண்டு பேருக்கும் கிருஷ்ணா இருக்கணும் படம் பார்க்க அவ்ளோதானே இருங்க, பக்கத்து வீட்டுக்கு நானே போய் கூட்டிட்டு வரேன்” என்றவள், தென்றால் ஒன்று புயலானதே, என்ற பின்னணி இசை ஒலிக்க கிளம்ப,
பாலா நக்கலுடன், “ஆமா நீ போய் கூப்பிட்டதும், இந்தா வந்துட்டேனு உன் கூட வந்துடுவான் பாரு” என, உமையாளோ அசராமல்,
“சொல்ல வேண்டியதை சொல்லி, கூப்பிட வேண்டிய விதத்தில் கூப்பிட்டா வராமலா போய்டுவாங்க” என ஒரு மாதிரி குரலில் சொல்ல, அவளின் குரலில் நிறையவே உஷாரானா பாலா,
“என்னனு சொல்லி கூப்பிடுவ” என கேட்க, உமையாளோ,
“பாலா அண்ணா இப்போவோ, அப்பாவோனு இருக்காரு, கடைசி ஆசையா உங்களை பார்க்கணும்னு சொல்றாரு, வாங்க அப்படினு சொல்லி கூப்பிட்டா வருவாரு தானே” என அப்பாவியாய் சொல்லி இமை சிமிட்ட,
பாலாவோ, “எது” என ஏக அதிர்ச்சியுடன் இருக்கையில் இருந்து எழுந்தே விட, வசீகரன் அடக்கப்பட்ட சிரிப்புடன்,
“ஏன் பாப்பு, நீ சொல்றதை நம்பி கிருஷ்ணா உன்கூட இங்க வந்து, பாலா இப்படி முழுசா நிக்கிறதை பார்த்தா, உன்னை தப்பா நினைச்சிக்க மாட்டானா, பேசாம நான் ஒரு உருட்டு கட்டைய எடுத்து பாலா மண்டையை உடைச்சிடுறேன், என்ன சொல்ற பாப்பு” என அதிதீவிரத்தோடு சொன்னவன், அதே தீவிரத்தோடு கட்டையும் தேட ஆரம்பிக்க,
ஏற்கனவே இருக்கையில் இருந்து எழுந்திருந்த பாலா, வசீகரன் கொடுத்த அடுத்த அதிர்ச்சியில், நெஞ்சை பிடித்துக்கொண்டு தொப்பென்று மீண்டும் இருக்கையில் அமர்ந்தவன்,
“கொலைகார பாவிங்களா, நான் இன்னும் லைப்ல ஒன்னுமே பார்க்கலடா, அதுக்குள்ள ஒரு உப்புசப்பு இல்லாத விசயத்துக்கு என்னை பலி கொடுத்துடுவிங்க போலவே ” என இருவரையும் பார்த்து புலம்ப, இதுவரை அடக்கப்பட்ட சிரிப்புடன் நின்றிருந்த இருவரும் அடக்கமாட்டாமல் சிரிக்க ஆரம்பித்தனர்.
சிரிப்பினுடே உமையாள், “இப்படி பொசுக்குன்னு எல்லாம் உங்களை அனுப்பிட மாட்டோம், இன்னும் உங்களை வச்சி பண்ண வேண்டியது எவ்வளவோ இருக்கே அண்ணா” கேட்க,
“உமா நான் உன்னோட அண்ணாமா, எது பண்ணாலும் கொஞ்சம் பார்த்து பதமா பண்ணுமா” என பாவம் போல சொன்ன பாலாவும், அவர்களின் வேடிக்கை பேச்சில் தானும் இணைந்து சிரிக்க, அவர்களின் சிரிப்பு சத்தம் அந்த வரவேற்பறையை நிறைக்க, மூவரும் கண்களில் நீர் வரும் வரை சிரித்தனர்.
சிரித்து முடித்தவுடன் வசீகரன் மீண்டும்,” கிருஷ்ணாவை நெஸ்ட் வீக் நம்ப கூட சேர்த்துக்கலாம், இப்போ நாம படம் பார்ப்போம், சரி சொல்லுங்க என்ன படம் பார்க்கலாம்” என கேட்க,
பாலா வேகமாக,”ஆங்கிரி பார்ட்” என, உமையாளும் அதே நேரம், “பியூட்டி அண்ட் தி பீஸ்ட்” என ஏகாலத்தில் சொல்ல, இருவரும் அடுத்த சண்டைக்கு அடிபோட்டு,”நான் சொன்ன படம் தான்” என ஆரவாரத்தோடு ஆர்பரிக்க,கொஞ்சம் பொறுத்து பார்த்த வசீகரன்,
“ஹே என்ன ரெண்டு பேரும் சின்ன பசங்க மாதிரி, ஆங்கிரி பார்ட், பியூட்டி அண்ட் தி பீஸ்ட்னு சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க, கொஞ்சமாவது மெச்சூர்ட் அஹ நடந்துக்கோங்க, வாங்க “லைன் கிங்” பார்க்கலாம்” என,
வசீகரன் பேச ஆரம்பித்தததும், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அமைதியாக நின்ற உமையாளும், பாலாவும், அவன் கடைசியாக சொன்ன படத்தை கேட்டு அவனை காறித்துப்ப, வசீகரன் அசடுவழிய என, ஒருவழியாக மூவரும் “லைன் கிங்” என்ற படத்தை பார்க்க முடிவு செய்து, பாப்கார்ன் சகிதம் அமர்ந்து படத்தில் மூழ்கினர்.
ஒருவழியாக படம் முடிந்ததும், இரவு உணவும் முடித்து பாலா விடைபெற, உமையாளும், வசீகரனும் எதிர் எதிர் இருக்கையில் அமர, வசீகரன்,
“நம்ப பொன்னம்மா அக்காவை உனக்கு நியாபகம் இருக்கு இல்ல, அவங்களை கிளீனிங் ஒர்க்காக கொஞ்ச பேரை நாளைக்கு கூட்டிட்டு வர சொல்லி இருக்கேன், உனக்கு ஒன்னும் பிரச்னை இல்ல இல்ல பாப்பு” என கேட்க,
“சூப்பர் பொன்னம்மா அக்கா வரங்களா, அவங்க கைப்பக்குவமே பக்குவம் தான், இங்க இருக்கிற வரைக்கும் எனக்கு பிடிச்சது மட்டும் தான் செய்ய சொல்ல போறேன், நீயும் அதை தான் சாப்பிடணும்” என அவனுக்கு ஏதோ தண்டனை அளிப்பது போல கொஞ்சம் மிரட்டலோடு தான் சொன்னாள் அவனின் பாப்பு.
ஆனால் உண்மையில், சாப்பாடு விஷயத்தில், எல்லாமே இல்லை என்றாலும், நிறைய உணவு வகைகள் உமையாளுக்கு பிடித்தது, வசீகரனுக்கும் விருப்பமானதே.
இல்லையென்றாலும் வசீகரனுக்காக நிச்சயம் பொன்னம்மா அக்கா அவனுக்கு பிடித்த உணவு வகைகளை தனியாக சமைப்பார்.
எல்லாம் தெரிந்தும் இவனை சீண்டவே அவள் அவ்வாறு சொல்ல, அவனும் ஒரு புன்சிரிப்புடனே அவளை பார்க்க, ஏதோ அப்போது நினைவு வந்தவளாக,
“ஆமா இந்த வீட்டுல வேலைக்குனு யாரையுமே வைக்கலையா, நான் வந்ததுல இருந்து ஒருத்தரை கூட பார்க்கலையே” என மதியம் கூட வசீகரன் சமைத்ததை நினைவு கூர்ந்தவாறே கேட்க,
“பொன்னம்மா அக்கா அவங்க பொண்ணு வீட்டுக்கு போகணும்னு ஒன் வீக் லீவ் கேட்டு இருந்தாங்க, சரின்னு சொல்லி அனுப்பி இருந்தேன், இந்த வீட்டை கிளீன் பண்ண ஆள் எல்லாம் மேனேஜர் அனுப்பி இருந்தாரு, ஆனா எல்லாருமே புது ஆளுங்க, நீ இருக்கப்போ புது ஆளுங்க வேண்டாம்னு தான், மார்னிங் கால் பண்ணி அவங்க யாரையும் இன்னைக்கு அனுப்ப வேண்டாம்னு சொல்லிட்டேன், பொன்னம்மா அக்கா நாளைக்கு வந்துடுவாங்க, அதான் அவங்க கிட்ட, நம்ப அந்த வீட்டுல வேலை பார்க்கிற பழைய நம்பிக்கையான ஆளுங்களை இங்க கூட்டிட்டு வர சொல்லி இருக்கேன், இங்க வேலை பார்த்த புது ஆளுங்களை அங்க போக சொல்லிட்டேன்” என நீண்ட விளக்கம் கொடுக்க,
உமையாளோ அவன் சொல்லிய எல்லாவற்றையும் கேட்டவள், “நாளைக்கு ஆபீஸ் போகணுமா நீ” என அவனை நேர்பார்வையாக பார்த்து கேட்க, அவனும்
“ஆமா பாப்பு, ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் போய்கிட்டு இருக்கு, ஆபீஸ் போகாம இருக்க முடியாது” என சொல்ல, அவன் சொல்லாமல் விட்டதும் புரிந்தது அவனின் பாப்புக்கு.
வசீகரன் அலுவலகம் சென்றால் இவள் இங்கு தனிமையில் தான் இருக்க வேண்டும், இவளின் பாதுகாப்பின் பொருட்டே இந்த பணியாட்கள் மாற்றம் என புரிய அவனின் அக்கறையில் எப்போதும் போலவே உள்ளத்தின் மகிழ்ச்சியின் ஊற்று.
அதன்பிறகு பொதுவான சில பேச்சுகளோடு வெளியே சென்ற இருவரும், நேராக மைக்கேலிடம் சென்று, அவரின் உணவு, இருப்பிடம் என அவரின் வசதிகள் பற்றி அறிந்துகொண்டு, எந்த அசௌகவுரியமும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு, தம் தம் அறைக்கு உறங்க சென்றனர்.
தனது அறைக்கு வந்த உமையாளோ, உறங்காமல் தனது பெட்டியில் இருந்து ஒரு ஓவியம் வரையும் புத்தகத்தை எடுத்தவள், அதில் தன் கைப்பட வரைந்து இருந்த அந்த ஓவியத்தையே, தன்னை மறந்து ரசித்தவாறு இருந்தாள்.
அந்த புத்தகத்தில் இருந்தது எல்லாம் முழு ஓவியம் கூட அல்ல, பத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் தீட்டப்பட்டு இருந்தது எல்லாமே, மேவிய காதல், அதீத கோவம், துள்ளலான மகிழ்ச்சி, கரைபுரண்டு ஓடும் உற்சாகம் என வெவ்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் உமையாளின் வசீ, அவனின் நயனங்கள் மட்டுமே.
[the_ad id=”6605″]அந்த ஓவியத்தை ரசித்து பார்த்திருந்தவள், அந்த கண்களை தன் சுண்டு விரல் கொண்டு, கிடைப்பதற்கறிய பொருளை வருடுவது போல, ஒரு பரவசத்தோடும், மென்மையோடும் வருடியவாறே பேச ஆரம்பித்தாள்,
“என்ன கண்ணுடா உனக்கு, பொதுவா பொண்ணுங்க கண்ணு தான் அப்படியே கட்டி இழுக்கும் சொல்லுவாங்க, ஆனா உன்னோட கண்ணு தான் என்னை அப்படியே உனக்குள்ள இழுத்துக்கும் போல, இந்த கண்ணுல எனக்கான காதலை பார்க்கப்போற நாளுக்காக நான் காத்துக்கிட்டு இருக்கேன் வசீ , நானா வந்து என் காதலை உன்கிட்ட சொல்றதுல எனக்கு எந்த தயக்கமும் இல்லை தான், ஆனா என்னோட ஆசை எல்லாம், என்ன மாதிரியே நீயும் காதலை உணரணும், அதை அனுபவிக்கனும், இது எல்லாம் எப்போடா நடக்கும்” என தன்னை முற்றும் முழுதாக வசீகரித்த தன் வசீயின் நயனங்களோடு ஏக்கத்தோடு பேசியபடியே உறக்கம் கொண்டாள் உமையாள்.
தன் அறைக்கு வந்த வசீகரனின் நினைவு முழுதும் அவனின் பாப்பு மட்டுமே. அவனின் பாப்பு வந்து ஒரே நாள் தான் ஆகிறது. நாளையே அவளை தனியாக விட்டு அலுவலம் செல்ல வேண்டிய கட்டாயம் அவனுக்கு.
வசீகரன் நாளை விடுப்பு எடுத்தாலும் யாரும் அவனை கேள்விகேட்க போவதில்லை தான், ஆனால் இவன் செய்ய வேண்டிய வேலைகள் தடைப்படுமே, இவனின் கனவு அல்லவா இந்த தொழிற்சாலை, எனவே யோசனைகள் நீள, அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தவன்,
“பாப்பு எப்படியும் கொஞ்ச நாளுக்கு காலை நேரம் கழித்து தான் எழுந்திரிப்பாள், அவள் எழுந்த கொஞ்ச நேரத்திலே, மதிய உணவு நேரம் வந்துவிடும், மதிய உணவுக்கென வீட்டுக்கு வந்தால், அவனின் பாப்புவுடன் நேரம் செலவழித்து விட்டு, அலுவலகம் திரும்பினால், மாலை சீக்கிரமே திரும்பி விட வேண்டும், எதேனும் முக்கிய வேலைகள் இருக்கும் பட்சத்தில், வீட்டுக்கு எடுத்து வந்து பார்த்து கொள்ளலாம்” என முடிவுக்கு வந்த பிறகே அவனால் நிம்மதியாக தூங்க முடிந்தது.
கிருஷ்ணா அவன் பங்குக்கு அவன், கொஞ்சம் வித்தியாசமாக மொட்டைமாடியில் நடைபயின்று கொண்டு இருந்தான். இரவின் இனிமையில், நிலவொளியில் காற்று அவனின் குழலை இதமாக வருடிவிட, அந்த இதத்தில் மூழ்காமல் மனது மதியம் நடந்தவற்றை அசைபோட்டு கொண்டிருந்தது.
உமையாள் நண்பர்கள் மூவருக்குமே பொதுவாக தான் உணவு பரிமாறினால், மற்ற இருவரும் இயல்பாக உண்ண, இது வரை யாரும் பரிமாறி உண்டு இல்லாதா இவனுக்கு தான், ஆரம்பத்தில் கொஞ்சம் அசௌகரியமாக இருந்தது.
ஆனால் உமையாள் பார்த்து, பார்த்து, இவன் உண்ணுவதை வைத்து இவனுக்கு பிடித்த உணவு வகைகளை குறைய, குறைய தட்டில் நிரப்ப, அந்த அக்கறையில் மனதும், வயிறும் நிறைய, நிறையவே உண்ட கிருஷ்ணாவுக்கு, இத்தனை நாட்களில் இப்படி திருப்பதியாக உண்ட நினைவே இல்லை.
என்ன தான் உமையாள் இயல்பாக பழகினாலும், இவனுக்கு சட்ரென்று உமையாளோடு, சகஜமாக பழக வரவில்லை. இப்போதும் பாலாவை நினைக்கும் போது இவனுக்கு ஆச்சர்யமே. உமையாள் வந்து முழுதாக ஒரு நாள் கூட முடியாத பட்சத்தில், பாலாவால் எப்படி அவ்வளவு உரிமையாக அவளோடு பேச முடிகிறது என்ற வியப்பே.
அதேமாதிரி தான் பாலாவும், வசீகரனும் அவளுக்கு உணவு பரிமாற போட்டிபோடும் போது அவர்களின் பாசத்தை கண்டு சலித்தவாறே, வரவேற்பறையின் இருக்கையில் அமர்ந்தவன், பின்னோடு வசீகரன் வர இவன் பேச, பதிலுக்கு அவன் பேசவென விருவிருப்பாக பேசிக்கொண்டு இருக்க பாயசத்தோடு வந்தாள் உமையாள்.
பாயசத்தை கொடுத்தவள், அப்படியே அமர்ந்து பார்த்த குறுகுறு பார்வையை இவன் உணர்ந்ததாலும், கண்டுகொள்ளாமல் வசீகரனோடு தொடர்ந்து பேச, பாலாவின் சிரிப்பு சத்ததில் வசீகரன் அவனை என்னவென்று கேட்க, உமையாள் வசமாக பாலாவை மாட்டிவிட்டதையும், அதற்கு பாலாவின் முகமாற்றமும் நினைவு வர வழக்கமான முகத்தின் இறுக்கம் குறைந்து முகம் கனிந்தது.
அதைக்கூட உணராமல், கிருஷ்ணாவின் மனம் அடுத்து நடந்தவைகளை அசைப்போட, இவனுக்கு அவளின் முகமே அவளின் குரும்பை சொல்ல, ஏனோ இவனுக்கு அவளை கடிந்து பேச மனம்வரவில்லை. ஒருவேளை அவள் கையால் உண்டதால் உண்டான தயக்கமோ அவனுக்கே விளங்கவில்லை.
அவளை கடிய மனம் இல்லை என்றாலும், அதேநேரம் அது ஒரு சாதாரண கிண்டல், அதை ஏற்றுக்கொள்ளவோ, அல்லது அவளுக்கு பாலா மாதிரி பதில் அளிக்கவோ விருப்பம் இல்லை அவனுக்கு. இதுவரை அறியாத சூழல் என்பதால், அவனுக்கு கொஞ்சம் திணறலாக இருக்க வசீகரனிடம் விடைபெற்று கிளப்பிவிட்டான்.
அதேநேரம் உமையாளின் கேள்வி உண்மை என்பதால் தான், வீட்டுக்கு வந்து அவளின் கேள்விக்கான பதிலை அனுப்பிவைத்தான். அதற்குப்பிறகு கொஞ்சநேரத்திலே இயல்பு திரும்பிய அவன், அவனின் வேளைகளில் மூழ்கி விட இரவு உணவு உண்ண, உணவு மேசைக்கு வந்தான்.
தன் வழக்கம் போல, தானே தனக்கு தேவையானவற்றை எடுத்து வைத்து உண்ண, இத்தனை வருட பழக்கம் ஏனோ, ஒரே நொடியில் கசந்த உணர்வு.அவனையும் அறியாமல் மதியம் உண்டது நினைவு வர, ஒரு நிமிடம் அப்படியே அமர்ந்து இருந்தான். .
பின்பு இந்த சிந்தனையே தவறு என மனம் எடுத்துரைக்க, தன் தலையை குலுக்கியவாறே தன் உணவை முடித்து எழுந்தான். அவனை வித்தியாசமாக பார்த்த அவனின் தந்தை கூட அவனின் கவனத்தை கவரவில்லை.
இப்பொழுதும் உறக்கம் வராமல் மாடியில் உலாத்திகொண்டு இருப்பது எல்லாம் இவனின் இயல்பே இல்லை. ஏனோ ஏதோ ஒரு விதத்தில் உமையாள், அவனை அலைக்கழிப்பது போலவே இருந்தது இவனுக்கு. ஒரு எரிச்சல் உணர்வு வர, காரணம் அறியா கோவம் கிளர்ந்தது கிருஷ்ணாக்கு.
எல்லா விதத்திலும் உமையாளிடம் இருந்து விலகி இருக்க வேண்டியது அவசியம், என்பது அவனுக்கு நன்கு புரிந்தது. உமையாளை தவிர்க்க வேண்டும் என்று முடிவு எடுத்த பிறகுதான் ஒரு ஆசுவாசம் பிறக்க, இலகுவான மனதோடு தனது அறைக்கு சென்றான் உறங்குவதற்காக.
ஒருத்தி காதலில்…….
ஒருவன் பாசத்தில்……..
ஒருவன் கோவத்தில்………..
காதல் கொள்வோம்………..