வரம் வாங்கி வந்தவள் நான்
அத்தியாயம் – 4
சுந்தரும் தன் ஈர உடையோடு வெயிலில் நின்றிருந்தான்.. சற்று நேரத்திலேயே பூசாரி கோழி சேவல்களை கருப்பர் சிலைக்கு நேராக வைத்து அதன் மேல் மஞ்சள்நீரை ஊற்ற அவை அப்படியே உடலை ஒரு குலுக்கு குலுக்கவும் தன் கையில் இருந்த அரிவாளால் தலையை தனியாக வெட்டி அதன் துடிக்கும் உடலை அந்த பொங்கல் பானையை மூன்று தரம் சுற்றி சற்று தள்ளி வீச அது துடித்து அடங்கியது..
தெய்வானைக்கு சந்தோசம் தாங்கவில்லை.. “தம்பி கருப்பர் நம்ம காணிக்கையை உடனே ஏத்துக்கிட்டாரு.. இனி பாரு நீ தெட்டதெல்லாம் பொன்னுதாப்பு.. மேலே கையை தூக்கி வேண்டியவர் கருப்பா.. என் மவன் எங்கன போனாலும் கூடவே போயிட்டு கூடவே வாப்பு..” இவர்களை பொருத்தவரை கடவுளுக்கு ஒரு உருவம் கொடுத்து அவர் எப்போதும் தங்களோடு துணைநிற்கும் மனிதனாகவே நினைத்தார்கள்..
மாசிகளரி திருவிழாவின் போது சிலகுடும்பங்கள் பலி கொடுப்பதற்காக கொண்டு வந்திருக்கும் ஆடு ,கோழிகள் மீது எவ்வளவு மஞ்சள் நீரை உற்றினாலும் அவை சிலிர்க்காமல் அப்படியே நிற்கும்..
இரவு முழுவதும் குடும்பத்தார்கள் கடவுள் தங்கள் காணிக்கையை ஏற்று கொள்ளவில்லையே என கவலையோடு நிற்கும் சம்பவங்கள் எல்லாம் நடக்கும்..பூசாரி சாமியாடி குறிகேட்டு பரிகாரம் சொல்லி திறுநீறை எடுத்து போட்டால் உடனே அவை சிலிர்க்க ஆரம்பித்துவிடும்..
ஒவ்வொரு குடும்பமும் அந்த நேரத்தில் அப்படி ஒரு பதைபதைப்போடு கடவுள் தங்கள் காணிக்கையை மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும் என மனம் உருக வேண்டுவார்கள்.. எவ்வளவுதான் அறிவியல் வளர்ந்தாலும் நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறதென அவ்வப்போது இயற்கையும் நமக்கு உணர்த்திக் கொண்டேதான் இருக்கிறது..
அனைவரும் சாமி கும்பிட சுந்தர் தான் இனி செய்ய போகும் எல்லா செயலுக்கு துணை நிற்குமாறு கருப்பனை வேண்டியவன் தர்ஷினியை பார்த்து இந்த பெண்ணிற்கும் வாழ்க்கையில் சந்தோசத்தை கொடு என்றும் சேர்த்து வேண்டிக் கொண்டான்..
[the_ad id=”6605″]
இங்கு அனைவரும் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க அங்கு பார்வதியோ தன் கணவரிடம் சாமியாடிக் கொண்டிருந்தார்.. “நான் அப்பவே சொன்னேன்.. இந்த தரித்திரம் பிடிச்சவள வீட்டுக்கு கூட்டிட்டு வராதிகன்னு.. இப்ப உன்ர மவன் பார்வையே சரியில்ல .. அடை காக்குற கோழி மாதிரி அவளை விட்டு நகராம இருக்கான்.. நாளப்பின்ன அவள இவன் தொட்டுகிட்டு வைச்சு பிரச்சனையானா நாம எல்லாரும் குடும்பமா ஜெயில்ல களிதிங்கனும் சொல்லிட்டேன்.. உங்க மருமகளோட சித்தப்பன் ஒரு போலிஸ்காரன்னு தெரியும்தானே.. ஒரு கம்பிளைண்ட் போதும் நாம ஜெயில்லதான்.. முதல்ல இவள வீட்டவிட்டு விரட்டுங்க சொல்லிட்டேன்..”
“என்ன பார்வதி நீ சொல்றது உனக்கே சரியா இருக்கா.. தர்ஷினி பொண்ணு ரூமை விட்டு வெளியில வந்து நீ பார்த்தியா.. ஆத்தாதான் டிபன் சாப்பாடுக்கூட ரூம்ல கொண்டு போய் கொடுக்கிறாங்க.. உன் பையன் உடம்பு கொழுப்பெடுத்து அலையிறதுக்கு பாவம் அந்த பொண்ணு என்ன பண்ணும்.. கட்டின பொண்டாட்டியோட ஒழுக்கமா குடும்பம் நடத்தாம பாவம் அந்த பொண்ண கழுகு மாதிரி சுத்திக்கிட்டு இருக்கான்.. சரியான பொம்பள பொறுக்கின்னு தெரியும் ஆனா அத வீட்டுக்குள்ளேயே காட்டுறான் பாரு இவனெல்லாம் என்ன மனுசன்..ச்சே..”
ஆங்காரமாய் அவரை முறைத்தவள்,” ஓகோ உன்ர தங்கச்சி மவள பார்த்தவுடன மவன் பொம்பள பொறுக்கியா தெரியிறானா.. அவ அந்த நாட்டுல இருக்கும் போது இவன் அங்க தேடிப் போனானா.. இப்படி கண்ணுக்கு முன்னாடி அரையும் குறையுமா திரிஞ்சா ஆம்பள மனசு அலைபாயத்தான் செய்யும் .. என்ன செய்விங்களோ ஏது செய்விங்களோ தெரியாது.. இன்னும் பத்து நாள்தான் டயம். அதுக்குள்ள அவள கட்டிக் கொடுப்பிங்களோ.. இல்ல கண்காணாத தேசத்துக்கு அனுப்புவிங்களோ அவ இங்கன இருக்க கூடாது…. உங்க ஆத்தா வரவும் கட்டன்ரைட்டா பேசுறிங்க.. அதவிட்டுட்டு பம்மிட்டு திரிஞ்சிங்க அப்புறம் தெரியும் சேதி..”
அவரை முறைத்தபடி உள்ளறைக்குள் நுழைய அதுவரை தாய். தந்தை பேசியதை கேட்டுக் கொண்டிருந்த பாலாவோ,’ இன்னும் பத்து நாள் டயம் இருக்குள்ள அதுக்குள்ள கண்டிப்பா அவள அடைஞ்சே தீரனும்.. இல்ல வேற எதாவது பிளான் செய்யனும்’ அவன் சாக்கடை மனம் பெண்களை ஒரு போதை பொருளாகவே எண்ண வைத்தது..
அங்கு பொங்கலை இலைகளில் வைத்து அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருக்க சுந்தரோ நொடிக்கொருதரம் தர்ஷினியைதான் பார்த்திருந்தான்.. என்னவோ ஒரு வார்த்தையாவது அவளிடம் பேசவேண்டும் போலிருக்க, அவள் துன்பமறிந்து ஆறுதல் வார்த்தைகள் சொல்ல வேண்டும் போல் இருந்தது.. சட்டென போய் பேசவும் மனம் வரவில்லை..
இதுவரை எத்தனையோ பெண்களை பார்த்து அவர்களிடம் பழகியிருந்தவன் அனைவரையும் சகோதரிகள், தோழிகள் என மட்டுமே பார்த்த மனது இப்போது தர்ஷினியிடம் அப்படி தோன்றாமல் அவளுடன் அதையும் தாண்டி பழகி பார்க்க ஆசைக் கொண்டது…. முதலில் அவள் அழகுதான் அவன் கண்ணை கவர்ந்தாலும் இப்போது அது மறைந்து அவள் மனதில் உள்ள கவலையை அறிய ஆசைப்பட்டது..
எல்லாம் முடித்து கிளம்ப அப்பத்தா தர்ஷினியோடு கிளம்ப போனவர் தன் பேத்தியிடம் … “ஆத்தா தங்கம் சுந்தருதான் உன்னை காப்பாத்தினது ஒரு நன்றியாச்சும் சொல்லு..??” அப்படியாவது தன் பேத்தி ஏதாவது வாயத்திறந்து பேசுகிறாளா என நினைத்து சுந்தரை பார்த்தவர் கையால் அருகில் வரும்படி சைகை செய்து..
“ ரெண்டுபேரும் பேசிட்டு இருங்கப்பு.. நான் அந்த ஏழு கன்னிமார கும்பிட்டு வந்திடுறேன்..?”
அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்தவன் பேச்சை எப்படி துவங்குவது என தயங்கி நிற்க,
தர்ஷினியும் சற்று நேரம் அமைதியாய் இருந்தவள், மெதுவான குரலில்,” தேங்க்ஸ்…” அவளை போலவே அவள் குரலும் அவனை மயக்கியது.. ப்பா.. செம.. இப்படி ஒரு வாய்ஸா.. ‘அடப்பாவி தேங்க்ஸ்ன்னு ஒரு வார்த்தைத்தானடா சொன்னாங்க.. அதுக்கே இப்படியா..!!
“உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே..??”
கேள்வியாக அவனை புருவம் உயர்த்தி கேட்க அப்பார்வையில் மயங்கியிருந்தான்.. அடப்போடா பேசினாலும் மயங்குற.. சும்மாதான் பார்க்கிறாங்க.. அதுக்குமா..
“இல்ல தண்ணியில தவறி விழுந்திங்களே உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையேன்னு கேட்டேன்..”
கண்ணை மூடித்திறந்தவள்,” நத்திங்.”.
நான் என்ன ஒன்வேர்ட் கொஸ்டினா கேட்டேன் எல்லாத்துக்கும் ஒரு வார்த்தையிலே பதில் சொல்றாங்க..
[the_ad id=”6605″]
“ஒன்மினிட்..” தன் தோளில் கிடந்த டவலை அவனிடம் கொடுத்தவள் “தேங்க்ஸ்..” துண்டை எடுக்கவும் அவள் மூடிவைத்த அழகு இப்போது அவன் கண்ணில் பளிச்சென பட இந்த பொண்ண யாரு இப்படியெல்லாம் சேலை கட்ட சொன்னது.. முதல்ல போட்டிருந்த டிரஸ்ஸே பரவாயில்ல முழுசா மறைச்சு கால் மட்டும்தான் தெரிஞ்சிச்சு.. இப்ப என்னன்னா இடுப்பு இப்படி பளிச்சின்னு தெரிஞ்சா பார்க்கிறவங்க மனசு என்னாகும்னு யோசிக்க மாட்டாங்களா.. அவன் கண்கள் கள்ளத்தனமாய் அவள் இடுப்பையே பார்வையிட்டது.. அதற்குள் அப்பத்தா அவர்களை நெருங்கியிருக்க,
“சுந்தரு வரவாப்பு..”
“ம்ம் சரிப்பத்தா..”
“வரேன் ஸார் பை..”
தமிழா.. இந்த பொண்ணுக்கு தமிழும் நல்லா பேசத் தெரியுமா.. ஆனால் தர்ஷினி பேசியதுக்கு மாறாக அவள் கண்கள் தன்னிடம் ஏதோகேள்வி கேட்டதோ.. கண்டிப்பாக ஏதோ இருக்க வேண்டும் என்றே தோன்றியது.. கார் அவர்கள் கண்ணைவிட்டு மறையும் வரை அவன் பார்வையில் மாற்றமில்லை..
மேலும் இரண்டு மூன்று நாட்கள் கழிந்திருக்க சுந்தரின் தங்கைகள் மூவரும் அண்ணனை தங்கள் வீட்டுக்கு வரும்படி அழைப்புவிடுத்து ஊருக்கு கிளம்பியிருந்தார்கள்.. சுந்தரும் தன் நிலங்களை பார்வையிட்டவன் உழுவது சம்பந்தமாக தன் தந்தையோடு யாரை பார்ப்பது வேலைக்கு ஆட்களை எங்கு, எப்போது பார்க்கலாம் என விசாரித்துக் கொண்டிருந்தான்..
அங்கு சுப்பையாவின் மூத்த மகன் தன் தந்தையோடு சண்டையிட்டு கொண்டிருந்தான்.. “மரியாதையா போய் அந்த அழகம்மை அப்பத்தா பேத்திய எனக்கு பொண்ணு கேளுங்க.. ஆத்தா.. நீங்களும் கூடப்போங்க..?”
“ஏண்டா உனக்கு வயசு 35 ஆச்சு.. அதோட செவ்வாய்தோசம் வேற இருக்கு அதானே வார பொண்ணெல்லாம் தட்டிட்டு போகுது.. அந்த பொண்ணப்பார்த்தா ரொம்ப சின்னப்பொண்ணாட்டம் இருக்கு.. அவங்க எப்படி கொடுப்பாங்க..”
“அதப்பத்தி உனக்கென்ன கவலை அந்த பார்வதி சின்னத்தாவே வலிய வந்து என்கிட்ட பேசினாங்க.. இத்தன வயசாச்சு ஏன் உனக்கு இன்னும் பொண்ணு அமையல.. உங்க ஆத்தா அப்புவுக்கு பொறுப்பில்லைன்னு.. அப்பத்தான் அந்த பொண்ணப்பத்தியும் சொன்னாங்க.. நானே ரெண்டுமூனுதரம் அந்த பொண்ண பார்த்திருக்கேன்.. அழகுன்னா அழகு அம்புட்டு ஒரு அழகு.. அவ எனக்கு பொண்டாட்டிய வர நான் கொடுத்து வைச்சிருக்கனும்..
அந்த பொண்ண பைசா வரதட்சனை வாங்காம கல்யாணம் பண்ணினா ஜாதகம் ஒன்னும் விசாரிக்க மாட்டாங்களாம்.. அதோட அந்த பொண்ணுக்கு ஜாதகமெல்லாம் இருக்கோ என்னமோ.. நீ போய் நைசியமா அந்த அப்பத்தாக்கிட்ட பேசுற.. ஏதாவது சொதப்பி வைச்ச அப்புறம் வீட்டை விட்டு வெளிய விரட்டிருவேன் பார்த்துகோ…!!” சுப்பையாவிற்கு காலங்கள் திரும்பி கொண்டிருந்தது..
சுப்பையாவிற்கு தெரியும் கண்டிப்பா அழகம்மை ஆத்தா இந்த சம்பந்தத்திற்கு ஒத்துக் கொள்ளாது என்று.. ஒரே ஊரில் இருந்துகொண்டு தன் மகன்களின் குணங்கள்தான் ரொம்பவும் பிரபலமாச்சே.. குடிப்பது, சீட்டாடுவது, பத்தாதற்கு தங்களிடம் கூலி வேலைக்கு வரும் பெண்களை காசுக்கு ஆசைககாட்டி அவர்களை படுக்கைக்கு அழைத்து வருவது என அவர் அந்தமானில் கஷ்டப்பட்டு சம்பாரித்து சேமித்தது எல்லாம் இப்போது தண்ணீராய் கரைந்து கொண்டிருந்தது..
இவர்கள் வண்டவாளம் தெரிந்துதான் சுற்றுவட்டாரத்தில் யாரும் இவர்களுக்கு பெண் கொடுக்க முன்வரவில்லை.. அதிலும் அந்த பாலாவும் இவனும் சேர்ந்து கொண்டு போடும் ஆட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.. அதற்கு ஏற்ப இவன் ஜாதகத்திற்கு எந்த பெண்ணும் பொருந்தாமல் திருமணம் தள்ளிப்போக இவன் ஆட்டமும் அதிகமாயிற்று..
[the_ad id=”6605″]
இப்போது திடிருன்னு இப்படி சொல்றான்னு அந்த பாலாப்பயலும் இவனும் ஏதாச்சும் கூடிப்பேசியிருப்பாங்களோ.. அவனும் கெட்ட ரோக்காச்சே.. ரெண்டு பயலும் சேர்ந்து ஒரு நல்ல பொண்ணோட வாழ்க்கையை சீரழிக்க முடிவு பண்ணிட்டாங்க.. நம்மள வீட்டவிட்டு வெளிய அனுப்பினாலும் பரவாயில்ல கல்யாணத்தை பத்தி நாம போய் பேசக்கூடாது என்ற முடிவுக்கு வந்தவர் துண்டை உதறி தோளில் போட்டபடி டீக்கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்..
நாட்கள் அதன் போக்கில் செல்ல சுந்தருக்கு இருந்த வேலையில் அவன் மெல்ல தர்ஷினியை மறந்து தன் எதிர்காலத்தை வளமாக்கும் முயற்சியில் இறங்கிவிட்டான்.. 24 மணி நேரமும் விவசாயத்தை பற்றிய சிந்தனை மட்டுமே.. புத்தகங்களில், இண்டர்நெட், யூடியூப் என தேடித் தேடி அதைப்பற்றியே படித்து கொண்டிருந்தான்.. அதுபோக விவசாயத்தில் இறங்கியிருக்கும் தன் நண்பர்களிடமும் பேச ஆரம்பித்திருந்தான்.. தன் சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை சேமிப்பாகவே இதற்கென்று வைத்திருந்தவன் எதையும் திட்டமிடுவதில் வல்லவனாகவும் இருந்தான்.. எப்போது வேண்டுமானாலும் தங்கள் நிறுவனத்திற்கு வேலைக்கு வரலாம் என ஆஸ்திரேலியா நிறுவனமும் சொல்லியிருந்தது..