மறுநாள் நேற்றைய வழக்கம் போலவே, வசீகரன் சீக்கிரமே எழுந்து தயாராக, பொன்னமாவும் கொஞ்சம் முன்னதாகவே வந்து, அவனுக்காக காலை உணவை தயாரிக்க ஆரம்பித்திருந்தார்.
உணவு உண்டு, மதியம் என்ன சமைக்க வேண்டும் என்று அறிவுறுத்திவிட்டு அலுவலகம் சென்றவன் அன்றாட பணிகளில் மூழ்கினான்.
புதிதாக வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிடம் இருந்து, அவர்களுக்காக மருந்து தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை கையெழுத்தாக்கும் பெரும் முயற்சியில் இறங்கி இருந்தனர் நண்பர்கள்.
இது அவர்களின் கனவான இந்த தொழிலை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதால், தீவிரமாக அதற்கு செய்ய வேண்டியவைகளை பற்றி, மூவரும் கிருஷ்ணாவின் அறையில் விவாதித்து கொண்டு இருந்தனர்.
நண்பர்கள் மூவருக்குமான, தொழில் தொடர்பான முக்கியமான விவாதங்கள் எல்லாம் எப்போதும் கிருஷ்ணாவின் அறையில் நடைபெறுவது தான் வழக்கம்.
[the_ad id=”6605″]
அதன்படி கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக, அந்த வெளிநாட்டு நிறுவனத்திற்கு, இவர்கள் சார்பில் அனுப்ப வேண்டிய, இவர்களின் தொழிற்சாலை சம்பந்தமான தகவல்களை தொகுத்து கொண்டு இருந்தனர்.
அதோடு அவர்கள் குறிப்பிட்டு இருக்கும் மருந்து தயாரிக்க தேவையான, அதன் மூலப்பொருளில் இருந்து, விற்பனை செய்ய தயாராகும் நிலை வரை ஆகும் செலவையும், இரண்டு நிறுவனங்களுக்கும் இலாபம் தரும் வகையில் ஒரு அட்டவணையும் தயார் செய்தனர்.
இவர்களின் அறிக்கையில், அந்த வெளிநாட்டு நிறுவனம் திருப்தி கொள்ளும் பட்சத்தில், அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேரில் இங்கு வந்து, தொழிற்சாலையின் செயல்பாடுகள், கடைபிடிக்கும் வழிமுறைகள், சுகாதாரங்கள் என எல்லாவற்றையும் ஆராய்ந்து விட்டு, அதுவும் அவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில் மருந்து தயாரிக்கும் ஒப்பந்தம் இவர்களுக்கு கிடைக்கும்.
தொழிற்சாலையின் வளர்ச்சியில் நிச்சயம், இது ஒரு முக்கியமான கட்டம் என்பதில் நண்பர்கள் மூவருக்கும் ஐயமில்லை.
ஒரு வழியாக அறிக்கையை தயார் செய்து, நண்பர்கள் நிமிரவும், சரியாக அதே நேரத்தில் வசீகரனுக்கு கைபேசியில் அழைப்பு வரவும் சரியாக இருந்தது.
அழைப்பை ஏற்றவன்,
“வசீகரன் ஹியர்”
“…………..”
“ஓகே, தேங்க்ஸ்”
அழைப்பை பேசிமுடித்தவன் நேரத்தை பார்க்க, அதுவோ பதினொன்று என்று காட்ட, மனதிற்குள் ஏதோ கணக்குகளை போட்டவனாக, நண்பர்களை பார்த்து,
“சரிடா, எனக்கு இன்னைக்கு கொஞ்சம் வெளிய போற வேலை இருக்கு, நான் அதை முடிச்சிட்டு அப்படியே லன்ச்கும் வீட்டுக்கு போய்ட்டு வந்துடுறேன்” என பொதுவாக சொன்னான்.
கிருஷ்ணா வசீகரனை ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்தவன், மறுநிமிடம் கணிணிக்கு பார்வையை திருப்பி ஒப்புதலையாய் தலையை அசைத்தான்.
கிருஷ்ணா எப்போதுமே அதிகம் பேச மாட்டான் என்பதாலும், அடுத்தவர் விஷயத்தில் தலையிட மாட்டான் என்பதாலும், நண்பர்கள் இருவருக்கும் அவனின் செயல் வித்தியாசமாக தெரியவில்லை போலும்.
பாலா தான் கிண்டலாக, “நீ நடத்து மச்சான் நடத்து” என, வசீகரனோ அவனின் கிண்டல் மொழி தன் செவிகளை வந்து சேரவே இல்லை என்பது போல, ஒரு சிரிப்புடன் இருவரிடமும் விடைபெற்று கிளம்பினான்.
வசீகரன் செய்ய சொல்லி இருந்தது, தயராக இருப்பதாக தகவல் வந்து இருக்க, அதை வாங்க தான் அந்த கடைக்கு சென்றான்.
தான் சொல்லியபடி தான் செய்திருக்கிறார்களா என்பதை கண்ணால் கண்டு உறுதி செய்து கொண்டு, வாங்க வேண்டிய இன்ன பிறவற்றையும் வாங்கி கொண்டான்.
அவற்றை எல்லாம் ஒரு குட்டி யானையில் ஏற்றிவிட்டு, தன் காரை பின்தொடர்ந்து வருமாறு சொல்லிவிட்டு, வீடு நோக்கி செல்ல ஆரம்பித்தான்.
[the_ad id=”6605″]
வீட்டுக்கு வெளியே வந்ததும், வீட்டிற்குள்ளே அழைப்பெடுத்து, பொன்னம்மாவிடம் இன்னும் பாப்பு அவள் அறையை விட்டு வெளியே வரவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு வீட்டிற்குள்ளே நுழைந்தான்.
வசீகரனின் பின்னாடியே வேலையாட்கள், “அதை” தூக்கிக்கொண்டு வர, அந்த “அதை” வரவேற்பறையின் ஒரு மூலையில், வைக்குமாறு அவர்களுக்கு உத்தரவிட்டவன், அவர்கள் சென்றதும், தன் வீட்டு வேலையாட்களை அழைத்து, அதை சுத்தமான நீரால் நிரப்ப சொன்னான்.
வேலையாட்கள் அதை நீரால் நிரப்பும் வரை காத்திருந்தவன், அவர்கள் வேலையை முடித்து நகர்ந்ததும், அதில் இருந்த ஒயரை மின்சாரத்தோடு இணைத்து, அதில் இருந்த விளக்கையும், மோட்டாரையும் வேலை செய்ய வைத்தான்.
பின்பு தான் வாங்கி வந்திருந்தவற்றை எடுத்து பொறுமையாக அந்த நீரில் விட ஆரம்பித்தான்.
எல்லாமே தயாரானதும் அவனின் பாப்புவின் அறைக்கு செல்ல, அவளோ குளியலறையில் இருந்தான்.
வசீகரன் அவனின் பாப்புவின் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்திருந்தான். குளித்து முடித்து வெளியே வந்தவள், வசீகரனை பார்த்ததும் முகம் மலர்ந்து அவனின் அருகில் வர, இவன் அப்படியே அவள் கண்களை பின்புறமாக மூடி,
“வா பாப்பு வா, உனக்கு ஒரு சர்பரைஸ் இருக்கு” என்றபடியே அவள் பேசவே வாய்ப்பே கொடுக்காமல், அவளை வெளியே நடத்திகூட்டி வந்து, வரவேற்பறையின் மூலைக்கு அழைத்து வந்தவன்,
“சர்பரைஸ்” என்றவாறே அவளின் கண்களை மறைத்த கைகளை எடுத்துவிட்டு, அவளின் முகம் காட்டும் வர்ணஜாலங்களை ரசிக்க தயாராக நின்றான்.
கண்களை திறந்த உமையாள் தன் கண் முன்னே பெரிய அளவில் இருந்த மீன் தொட்டியையும், அதில் நிறப்ப பட்டு இருந்த பலவண்ண கற்களையும், நடுவில் ஒய்யாரமாக நின்ற கடற்கொள்ளையர்கள் கப்பலையும், அதில் நீந்தி கொண்டிருந்த இருபதுக்கும் மேற்பட்ட தங்க மீன்களையும் பார்த்து மலைத்து நின்றாள்.
“ஹே சூப்பர் அஹ இருக்குடா கரன், செமயா இருக்கு பிஷ் டேன்க், எனக்கு என்னமோ மிஸ் ஆகுதுன்னு தான் தோணுச்சே தவிர, மிஸ் ஆகுறது மீன் தொட்டினு கிளிக் ஆகவே இல்லைடா” என விசைப்பந்தென மகிழ்ச்சியில் குதித்துக்கொண்டே கூறினாள்.
நமக்கு பிடித்தவர்களுக்கு, பிடித்ததை செய்து அவர்களின் புன்னகையில், நாம் மகிழ்வது என்பது ஒருவகை அலாதியான இன்பம்.
வசீகரனும் இப்போது அந்த மனநிலையில் தான் இருந்தான். அவனின் பாப்புவின் மகிழ்ச்சியை, இவன் முழுதாக உணர்ந்து கொண்டு இருந்தான்.
எல்லாருக்கும் நாய், பூனை என இன்னும் பலவகை உயிரினங்களை செல்ல பிராணிகளாக வளர்க்க பிடிப்பது போல, உமையாளுக்கு எப்போதுமே மீன்கள் என்றால் கொள்ளை விருப்பம்.
வருடத்தில் ஒரு முறை வரும் இவளுக்காகவே வசீகரனின் அந்த வீட்டிலும், இவ்வளவு பெரிய மீன் தொட்டி உண்டு.
அந்த மீன்களுக்கு உணவு அளித்தவள், அவர்கள் உணவு உண்டு முடிக்கும் வரையிலும் மீன்களை பற்றியே வாய் ஓயாமல் பேசி கொண்டு இருக்க, வசீகரனும் அதரங்களில் உறைந்த புன்னகையுடனே அவளின் கதைகளுக்கு செவிமடுத்து கொண்டிருந்தான்.
பிறகு வசீகரன் அலுவலகம் சென்று வீடு திரும்ப, அவனின் பாப்புவோ இன்னும் மீன் தொட்டியின் முன்பு தான்.
அவள் மீன்களை ரசித்து கொண்டிருக்கிறாள் என நினைத்து, ஒரு புன்னகையுடனே தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்தவன், அவனின் பாப்பு அருகில் அமரந்தான்.
அவனின் பாப்புவோ, அருகில் அமர்ந்து அவனை திரும்பி கூட பார்க்காமல், ஏதோ சிந்தனை வயப்பட்டவளாக மீன் தொட்டியை வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருக்க அப்போது தான் வசீகரன் கொஞ்சம் துணுக்குற்றான்.
என்னதான் அவனின் பாப்பு, வெளியே கலக்கப்பாக தன்னை காட்டிக்கொண்டாலும், புன்னகையோடு வலம் வந்தாலும், ஒருவேளை இன்னும் தாயின் இழப்பில் இருந்து அவள் மீளவே இல்லையோ????
தன் தாயிக்கான ஏக்கத்தை காட்டாமல், தான் நலமுடன் இருப்பதாக காட்டி கொள்ள தான் வழக்கத்தை விட அதீத குறும்பாக இருக்கிறாளோ?????
வந்த அன்று தாயை பற்றி பேசியதோடு சரி, அதன்பிறகு பேசவே இல்லையே, அன்றைக்கே ஏதோ கோழை என்றெல்லாம் பேசினாலே, ஒருவேளை அதானால் தான் மறுபடியும் அந்த பேச்சையே எடுக்க வில்லையோ????
இப்படி சிந்தனைகள் எட்டுதிக்கும் பறக்க, தன் பாப்புவின் பார்வையும், அவள் அமர்ந்திருந்த விதத்தையும் பார்த்த வசீகரனுக்கு தான் மனதிற்குள் பாரம் ஏறிய உணர்வு.
அவனின் பாப்பு, மனது சரி இல்லாமல் ஊரில் இருந்து இங்கு வந்து இருக்க, வீட்டில் பெரியவர்களும் இல்லாத போது அவளை பார்த்துகொள்ள வேண்டியது அவனின் பொறுப்பு அல்லவா.
இந்த ஒரு வாரம் தவிர்க்க முடியாத வேலைகள் உள்ளது அலுவலகத்தில், எல்லாமே அந்த வெளிநாட்டு நிறுவனம் தொடர்பான வேலைகள் தான்.
அவன் மட்டும் சம்பந்தப்பட்ட வேலையாக இருந்தால், அவனின் பாப்புக்காக தள்ளிவைக்க முடியும்.
ஆனால் இது, அவனை தவிர்த்து மற்ற இருவரின் உழைப்பு. இவனால் மற்ற இருவரும் எந்தவிதத்திலும் பாதிக்கப்படுவதை இவனால் ஏற்கமுடியாது அல்லவா.
இந்த ஒரு வாரம் சமாளித்து, அந்த வேலைகளை முடித்துவிட்டால், அடுத்த ஒரு வாரம் அலுவலகம் செல்லாமல், விடுமுறை சொல்லிவிட்டு, அவனின் பாப்புவோடு எங்காவது வெளியிலே சென்று வரலாம் என்று மனது அதன்போக்கில் கணக்குபோடலானது.
அதுவரை எதையாவது செய்து, அவளுக்கு பிடித்த ஒன்றில் அவள் மூழ்கி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் தனிமை, அவளின் தாயின் நினைவுகளை கிளறிவிட கூடும், கீறிவிட கூடும். என்ன செய்வது, என்ன செய்வது, என்று யோசிக்க ஆரம்பித்தவன் முகம் மலர,
கண்களை மட்டும் மீன்களில் நிலைக்கவிட்டு, மனதளவில் எங்கோ சஞ்சரித்து கொண்டிருந்தவளை தரையிறக்கும் விதமாக, உலுக்கி,
[the_ad id=”6605″]
“பாப்பு, பாப்பு” என்று அழைக்க, அவனின் அழைப்பிலும், அவன் உலுக்கியதிலும் ஒரு சிறு திடுக்கிடலுடன் அவனை திரும்பி பார்த்தாள் அவனின் பாப்பு.
அடுத்த நொடி தன் முகத்தை, அதில் இருந்த உணர்வுகளை அப்படியே மாற்றியவள், ஒரு புன்னககையை முகத்தில் பொருத்திக் கொண்டவள், வசீகரனை பார்த்து,
“ஏன்டா இப்படி காதுகிட்ட வந்து கத்துற, எருமை, எருமை” என தான் நலமாக இருப்பதை அவனுக்கு அறிவிக்கும் விதமாக சற்று அதட்டலாகவே கேட்க,
சடுதியில் உமையாள் தன் முகத்தில் இருந்த உணர்வுகளை அப்படியே தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டதையும், நொடியில் அதை மாற்றியதையும் கவனமாக உள்வாங்கிக் கொண்ட வசீகரன், அவளின் உணர்வுகளை தான் படித்ததை கிஞ்சித்தும் வெளிகாட்டிக் கொள்ளமல், ஒரு வித அவசரத்தோடு,
“குயிக், குயிக், கெட் ரெடி, நாம இப்போ வெளியே போக போறோம்” என, அவனின் பாப்புவோ,
“எங்க போக போறோம்னு சொல்லுடா, அப்போ தானே அதுக்கு ஏத்த மாதிரி கிளம்ப முடியும்” என அவனின் பரபரப்பு அவளையும் தொற்றிக்கொள்ள, அவளும் படபடக்க,
அவனின் பாப்புவை மேலும், கீழும் பார்த்த வசீகரன், அவளின் உடையையும் ஒரு முறை பார்த்துவிட்டு,
“இந்த ட்ரெஸ் அஹ ஓகே தான், சரி வா, போலாம்” என அவளின் கையை பிடித்து எழுப்பியவன், ஒரு முறை மணியை பார்த்துவிட்டு, தனது கைபேசியை எடுத்துக்கொண்டு அவளோடு கிளம்பினான்.
வசீகரனும், உமையாளும் வீட்டில் அணியும் உடையே அணிந்து இருந்தாலும், எங்கோ வெளியே செல்லும் தோரணையில் வாசலுக்கு வர, அதேநேரம் எங்கிருந்து வந்தார் என்று கணிக்கவே முடியாத வகையில், வானத்தில் இருந்து வந்து குதித்தவர் போல இவர்களின் முன்னால் வந்து நின்றார் மைக்கேல்.
தங்களோடு வர எத்தனித்த மைக்கேலை, ஒரே கை அசைவில் தடுத்து நிறுத்திய வசீகரன், காரையும் எடுக்காமல், காலணிகளை மட்டும் அணிந்துகொண்டு அவனின் பாப்பு உடன் வர வீட்டை விட்டு வெளியே வந்தவன், மெதுவாக தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.
தெருவிளக்கின் ஒளியில், உற்சாக பந்தாக வசீகரனோடு ஒரு துள்ளளான நடையுடன், நடந்து வந்த அவனின் பாப்பு,
“எங்கடா போறோம்” என கேள்விகளால் அவனை துளைக்க, “வெளியே செல்கிறோம்” என்றதும் நொடியில் மாறிய அவளின் முகபாவத்தை அளவெடுத்தவாறே, அவளின் கேள்விக்கு பதிலே சொல்லாமல் அவன் அழைத்து வந்து நிறுத்திய இடம், பக்கத்துவீடு.
உமையாள் புரியாமல் வசீகரனை பார்க்க, அவன்,
“நம்ப கிருஷ்ணா வீடுடா” என சொல்ல, அவளோ,
“அதான் எனக்கு தெரியுமே, ஆனா இப்போ ஏன் இங்க வந்து இருக்கோம் கரன்” என கேள்வி கேட்க,
“உனக்கு புக்ஸ் பிடிக்கும் இல்ல, இந்த வீட்டுல பெரிய சைஸ் பிரைவேட் லைப்ரரியே இருக்கு, அதான் உனக்கு காட்டலாம்னு கூட்டிகிட்டு வந்தேன்” என சொல்ல, அவனை சந்தேகமாக பார்த்த பாப்பு,
“கிருஷ்ணா புக் படிப்பாங்களா, உன்னோட பிரின்ட்க்கு இப்படிபட்ட நல்ல பழக்கம் எல்லாம் இருக்க வாய்ப்பே இல்லையே ராஜா, அதுபோக உங்க மூஞ்சில எல்லாம் புக் படிக்கிறதுக்கான ஒரே ஒரு பொருத்தம் இருக்குற மாதிரி கூட தெரியலையே” என அவனின் முகத்தை பற்றி, இப்படியும் அப்படியும் திருப்பி பார்த்தவாறே அவனை நக்கலடிக்க, வசீகரனோ,
“ஓய் என்ன, எங்களை பார்த்தா எப்படி இருக்கு, நாங்களும் புக் எல்லாம் படிப்போம், தெரியுமில்ல” என ரோஷத்துடன் சொல்ல, அவனை மேலும், கீழும் பார்த்த அவனின் பாப்பு,
“எது நீ இப்போ படிச்சனு சொன்னது, உன்னோட சப்ஜெக்ட் புக்ஸ் அஹ தானே, அதை தவிர வேற எந்த புக்கையாவது தொட்டு இருக்கியா நீ, புக்ஸ் படிக்காம லைப் அஹ வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்குடா நீ” என,
உமையாள் உண்மையை கண்டுபிடித்துவிட, கொஞ்சம் அசடு வழிந்த வசீகரன், அதை வெளிக்காட்டாமல்,
“அது என்ன, என்னை கூட கணக்கில் எடுக்க வேண்டாம், சின்ன வயசுல இருந்தே, என்னை இப்படி மரியாதையா தான் கூப்பிடுவ, ஆனா பாலாவை கூட அப்பப்போ வாடா, போடானு சொல்ற, கிருஷ்ணாவை மட்டும் அவர், இவர்னு மரியாதையா சொல்ற, என்ன விஷயம்” என புருவம் தூக்கி கேள்விகேட்டான்.
வசீகரன் அவளை திசை திருப்ப தான் கேள்வி கேட்டாலும், இரண்டு நாட்களில் தான் கவனித்ததை வைத்து, ஏன் இப்படி என தெரிந்து கொள்ள கொஞ்சம் ஆர்வத்தோடு கேட்க, உமையாளோ கொஞ்சம் கூட யோசிக்காமல்,
“பாலா அண்ணா, நல்லா பேசறாங்க அதனால் சில சமயம் இயல்பா அப்படி வந்துடுது, ஆனா கிருஷ்ணாவை பத்தி நான் சொல்லி தான் உனக்கு தெரியனுமா என்ன, கிருஷ்ணாவை மரியாதையா தான் கூப்பிட வருதுடா, நான் என்ன பண்ண சொல்லு” என திருப்பி அவனையே கேள்வி கேட்க,
தன் பாப்பு சொன்னதை தலையாட்டி அங்கீகரித்த வசீகரன், பேசியபடியே இருவரும் வீட்டின் வாசலுக்கு வந்திருப்பதை உணர்ந்தவன், உள்ளே போகும் முன் அவனின் பாப்புக்கு விளக்க வேண்டும் என்பதால்,
“பாப்பு நம்ப அங்கிள், அதான் கிருஷ்ணா அப்பா, அவரு நிறைய படிப்பாரு, அவர் கிட்ட ஹீயூஜ் கலெக்ஷன் அண்ட் வெரைட்டி ஆப் புக்ஸ் இருக்கு, அதான் உன்னை கூட்டிகிட்டு வந்தேன்” என்றான் வசீகரன்.
அவன் வீட்டின் உள்ளே செல்ல, அவனை பின்தொடர்ந்து சென்றாள் உமையாள். கிருஷ்ணாவின் வீட்டில் பாதுகாப்பு அதிகமாக இருந்த போதிலும்,வசீகரனை யாருமே அங்கே தடை செய்யவோ, கேள்வி கேட்கவோ இல்லை என்பதை பார்த்து கொண்டே உள்ளே சென்றாள் உமையாள்.
வசீகரனோடு, பேசியபடியே உள்ளே நடந்து வந்திருந்தாலும், உமையாள் தோட்டம் பராமரிக்கபட்டு இருந்த விதத்தையும், அதன் அழகிலும் கவரப்பட்டு வியந்தவாறே தான் உள்ளே சென்றாள்.
உள்ளே நுழைந்த வசீகரன், அங்கிருந்த சோபாவில் சௌகரியமாக அமர்ந்தவன், அருகிலே அவனின் பாப்புவையும் அமர வைத்தவன், இவனை வரவேற்ற மருதுவிடம், பெரிய அய்யாவை பார்க்க வேண்டும் என சொல்ல, அவர் உள்ளே அழைக்க சென்றார்.
வீட்டை சுற்றி பார்வையை ஓட்டிய உமையாள், வீட்டின் நேர்த்தியையும், கலை நயத்தையும் ரசித்தவாறு அமர்ந்திருந்தாள்.
அப்போது கிட்டத்தட்ட ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர், அப்படியே கிருஷ்ணாவின் சாயலில் வர, வசீகரன் எழுந்து நிற்க, உடன் உமையாளும் எழுந்து நின்றாள்.
இளம் சிரிப்புடன் வந்தவர், எழுந்து நின்றிருந்த வசீகரனை தோளோடு அணைத்து விடுத்தவர், இருக்கையில் அமர, வசீகரனும் அமர்ந்தான்.
அவனின் அருகில் அமர்ந்த உமையாளை அவர் கேள்வியாய் பார்க்க, வசீகரன்,
“அங்கிள், இது உமையாள், என்னோட அத்தை பொண்ணு, ஊருல இருந்து வந்து இருக்கா” என்று அவருக்கு அறிமுகபடுத்தியவன், உமையாளை நோக்கி திரும்பி,
“பாப்பு, இது ஜெயவர்மன் அங்கிள்டா, நம்ப கிருஷ்ணாவோட அப்பா” என பரஸ்பரம் அறிமுகபடுத்த, உமையாள், வணக்கம் வைக்க, அவரும் பதிலுக்கு புன்னகை சிந்தினார்.
வசீகரனே மீண்டும்,” அங்கிள் இவளுக்கும் புக்ஸ் பிடிக்கும்,நீங்க நிறைய புக் வச்சி இருக்கீங்கன்னு சொன்னேன், உடனே பார்க்கணும்னு ஒரே அடம், அதான் கூட்டிகிட்டு வந்தேன்” என அவனின் பாப்புவை ஓர கண்ணால் பார்த்தவாறே சொல்ல, அவளோ,
“அடப்பாவி” என்பது போல கண்களை விரித்து அவனை பார்க்க, இருவரின் விளையாட்டையும் பார்த்த ஜெயவர்மன் கம்பீரமாக சிரிக்க, உமையாளோ மீண்டும் கண்களை விரித்து அவரை பார்க்க, அவளின் பார்வையில் மீண்டும் சிரித்தவர்,
“என்னமா, எதுக்கு இப்படி பார்க்கிற” என அவளோ,
[the_ad id=”6605″]
“இல்லை அங்கிள், நீங்க சிரிக்கும் போது செம ஹண்ட்ஸம் அஹ இருக்கீங்களா, பார்க்க கிருஷ்ணாக்கு அண்ணா மாதிரி இருக்கீங்களா, அதான் நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்” என கண்களில் அபிநயம் பிடித்து சொல்ல, அவள் சொல்லிய விதத்தில் மீண்டும் சிரித்தவர்,
“சரியான வாலு, சரி வா, நான் என்னோட புக் கலெக்ஷன் அஹ காட்டுறேன்” என அவளை உள்ளே அழைத்து செல்ல, செல்லும் அவளையே ஒரு சிரிப்புடன் பார்த்திருந்த வசீகரன், அப்போது தான் படியில் இறங்கி வந்து கொண்டு இருந்த கிருஷ்ணாவை பார்த்தான்.
“ஹே வாடா, நானே உன்னை கூப்பிட சொல்லலாம்னு இருந்தேன், அதுக்குள்ள நீயே வந்துட்டா, வா” என அவனை அழைத்து, அருகில் அமர வைத்து பேச ஆரம்பித்தான்.
வசீகரனின் அருகில் அமர்ந்த கிருஷ்ணா, அவனின் பேச்சுக்கு தன் காதை கொடுத்தாலும், மனமோ ஒரு போர்களமாக இருந்தது.
இன்றும் வேலைவிட்டு வந்த கிருஷ்ணா, கையில் காபியோடு அதே சாளரத்தின் அருகில் செல்ல துடித்த கால்களை கட்டுப்படுத்தி கொள்ள முயல, கால்களோ அவன் பேச்சை கேட்காமல் அதற்குள் அந்த சாரளத்தை நெருங்கி இருந்தது.
பார்க்க துடித்த கண்களை மட்டும் அரும்பாடுபட்டு, தன் கட்டுப்பாட்டில் வைத்தவன், அந்த சாரளத்தை மூடி, திரைசீலையையும் இழுத்துவிட்டவன், மன கதவையும் சேர்ந்தே அடைத்தான்.
தன் உணர்வுகளை இன்னதென்று இனம் காணும் முன்பே, அதை மனதின் ஆழத்தில் அடக்கி ஆள முயலும் அவனுக்கு உணர்வுகளை பற்றி தெரியவில்லை.
உணர்வுகள் எந்த கட்டுக்கும் அடங்காதவை என்றும், எந்த அளவுக்கு அதை அழுத்தி வைக்கிறோமோ, அது அதைவிட மும்மடங்கு வேகத்தோடு விஸ்வரூபம் எடுத்து வெளிவரும் என்றும்…..….
இன்று தனது மனதை கட்டுப்படுத்திய சிறு நிம்மதியோடு கிருஷ்ணா கிழே இறங்கி வர நினைத்து முதல் படியில் கால் வைக்கவும், வாசலில் வசீகரனுடன் உமையாள் இவன் வீட்டின் வாயிற்படியில் கால் வைக்கவும் சரியா இருந்தது.
உமையாள் இவன் வீட்டில், ஆனால் வசீகரனுடன். அதே இன்னதென்ற புரியாத உணர்வு நெஞ்சை வியாபிக்க அப்படியே நின்றிருந்தான்.
அவர்கள் உள்ளே வந்ததும், அவனின் தந்தையுடன் பேசியதையும், அதற்கு அவரின் சிரிப்பு என எதுவுமே அவனின் நிலையில் எந்த மாற்றத்தையும் விளைவிக்கவில்லை, அதே உறைந்த நிலை தான்.
நேற்று அவளை தூரத்தில் பார்த்தே மனது நிலைகொள்ளாமல் தவிக்க, இன்று இவனின் வீட்டிலே பார்க்க, என்ன சொல்வதென்றே தெரியாமல் இவன் அப்படியே நின்றான்.
தன் தந்தையின் சிரிப்பையும், அவரும் அவளிடம் வெகு இயல்பாக பேசியபடியே அவரின் தனிப்பட்ட நூலகத்திற்கு அவளை அழைத்து செல்லவும் தான், இவன் தன் மோன நிலையில் இருந்து கலைந்து படியிறங்க ஆரம்பித்தான்.
இதுதான் என்று வரையறுக்கும் முன்பே அவனை அலைகழிக்கும் இந்த உணர்வு அலைகள், இது தான் என்று உறுதியாகும் போது அவனை அப்படியே சுருட்டி தனக்குள் இழுத்து கொள்ளும் என்று அறியாத அப்பாவியாய் இருக்கும் இந்த கிருஷ்ணா, பார்க்க வேண்டியது இன்னும் எவ்வளவோ உள்ளதே.
காதல் கொள்வோம்………..