காரில் சென்று கொண்டிருக்கும் போது மகேஷ், அழகன் இருவரிடமும் அமைதி மட்டுமே நிலவிக் கொண்டிருந்தது.
மகேஷோ அந்த அமைதியை கலைக்கும் விதமாக, “நீ வாய் திறந்து சொல்ல வேண்டியது தானடா” எனவும்,
“என்னத்த சொல்ல சொல்ற”
“அதான் உன் தம்பி நிக்க வச்சு உன்னைக் கேள்வி கேட்டானே. நீ பார்க்க அசிங்கமா இருக்கிற, எந்த பொண்ணும் உன்னைத் திரும்பி பார்க்க மாட்டா, யாரும் உன்னை கட்டிக்க மாட்டாங்கன்னு அவ்வளவு பேசினானே, அவன்கிட்ட உண்மையை சொல்ல வேண்டியது தானடா. எனக்கு கல்யாணம் முடிஞ்சு நாலு வருஷம் ஆகுதுன்னு நீ வாயை திறந்து சொல்லியிருந்தா அவன் முகத்துல கரியைப் பூசுன மாதிரி ஆகியிருக்கும்ல.”
“நான் அப்படி சொன்னா எங்க உன் பொண்டாட்டியைக் காட்டுன்னு திருப்பி அவன் கேள்வி கேட்க மாட்டானா?”
“இது என்னடா வம்பா இருக்குது, அவன் அப்படி கேட்டா கொண்டு வந்து உன் பொண்டாட்டியை அவங்க முன்னாடி நிறுத்து. அப்ப தானே அவங்க ஒத்துக்குவாங்க”
“ நீ என்ன லூசு மாதிரி பேசுற மகேஷ். ஊரறிய ஒண்ணும் எங்க கல்யாணம் நடக்கலையே. இன்னும் சொன்னா அதைக் கல்யாணம்னு கூட யாரும் சொல்ல மாட்டாங்க டா.”
“எனக்கும் அது தெரியும். ஆனா இவ்வளவு தூரம் அவன் பேசும்போது நீ அமைதியா இருந்ததை நினைச்சா தான்டா எனக்கு இன்னும் மனசே ஆறல. அவங்களுக்காக நீ என்னன்னா இழந்திருக்க, எதையெல்லாம் ஒதுக்கி தள்ளி இருக்கன்னு அவங்களுக்கு தெரிஞ்சுருந்தா இப்படி எல்லாம் உன்னைக் காயப்படுத்துற மாதிரி பேசி இருப்பாங்களா.?”
“உறவுகள்னா என்ன நெனச்ச பண்டமாற்று முறைல வாங்கி வியாபாரம் பண்ற பொருளா? நான் உனக்காக இதை செஞ்சேன், கண்டிப்பா நீ எனக்காக அதை செஞ்சே ஆகணும்னு சொல்றதுக்கு. அவங்க என்னோட தம்பிங்க, அதனால அவங்களுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செஞ்சேன். ஆனா அவங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை வரும் போது அவங்களைப் பொருத்தவரைக்கும் நான் யாரோ மூணாவது மனுஷன் தான் இல்லையா. கல்யாணம் ஆனதுக்கப்புறம் லைஃப் லாங் கூட வரப்போறது அவனை நம்பி வரப்போற பொண்ணு தான் அப்ப அந்த பொண்ணு சொல்ற மாதிரி கேட்குறதுல என்ன தப்பு இருக்குது..”
“ஓஓ. நீ அப்படி வர்றியா? அதே மாதிரி அந்த பொண்ணு சொன்ன மாதிரி கேட்டுக்கிட்டு உன் தம்பி தங்கச்சியை விட்டுட்டு நீயும் போய் இருக்க வேண்டியது தானே. ஏன் நீ மட்டும், நீ விரும்புன பொண்ணு சொன்னதைக் கேட்காம என் தம்பிங்க தங்கச்சி தான் முக்கியம், என் குடும்பம் தான் முக்கியம்னு சொல்லிட்டு விலகி வந்த?” ஆத்திரத்தோடு கேட்டான் மகேஷ்.
“என்னை போலவே எல்லாரும் இருக்கணும்னு அவசியம் இல்ல. அதேபோல அவனைப் போலவே நானும் இருக்கணும்னு அவசியம் இல்லையே. நான் நானா இருக்கேன், அவன் அவனா இருக்கான்.
அதனால தான் அவனுக்கு எது சரின்னு படுதோ அதை அவன் செய்யிறான். அப்ப எனக்கு எது சரின்னு பட்டுச்சோ அதை நான் செஞ்சேன் அவ்வளவு தானே தவிர இதுல எங்க ரெண்டு பேரையும் கம்பேர் பண்றதுக்கு என்ன இருக்குது. இப்ப எனக்கு பிடிக்கிற விஷயம் உனக்கு பிடிக்காம இருக்கலாம், உனக்கு பிடிக்கிறது எனக்கு பிடிக்காம இருக்கலாம் இல்லையா, இது தான் நிதர்சனம் ”
“என்கிட்ட மட்டும் நல்லா பேசு, பேச வேண்டிய இடத்துல பேசாத. அவன் உன்னை அசிங்கமா பேசுனதை எல்லாம் காதுல வாங்கிட்டு அப்படியே ஜடம் மாதிரி நின்னுட்டு அப்புறம் என்கிட்ட வந்து அழுகிற நீ என்னடா மனுஷன். என்னால உன்னைப் புருஞ்சுக்கவே முடியல தெரியுமா. ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு மாதிரி நடந்துக்கிற. ஆனா உன்னோட உழைப்பு எல்லாம் உன் குடும்பத்துக்கானது, உனக்குன்னு பெருசா எதுவும் செஞ்சுக்கிட்டதில்ல. இப்ப கூட உழைச்சு உழைச்சு சம்பாதிச்ச அத்தனையையும் அவங்களுக்கு கொடுத்துட்டு எதுவுமே வேண்டாம்னு சொல்லிட்டு வந்து நிக்கிறியே உன்னால எப்படிடா இப்படி இருக்க முடியுது.”
“இதுக்கு தெரியலைங்கிற வார்த்தையைத் தவிர எதுவுமே எனக்கு சொல்லத் தெரியலடா. அம்மா கடைசியா என்கிட்ட கேட்டது இதுதான், ‘தம்பி தங்கச்சியை விட்டுறாத, அப்பா பாவம் அவருக்கு துணையா இரு’ இந்த வார்த்த மட்டும் தான் என் மைண்டுக்குள்ள சுத்திட்டே இருந்துச்சு அதனால தான் எனக்காக எதுவும் சேர்த்துக்காம அவங்களுக்காக ஓடி ஓடி சேர்த்து வச்சேன். நான் கவனிச்ச வரைக்கும் அகில் பதில் பேசும் போது அவ்வளவு மெச்சூர்டா பேசினான். கேள்வி எல்லாம் அவ்வளவு தெளிவா கேட்டான், கண்டிப்பா அவன் வாழ்க்கையில நல்ல முன்னுக்கு வருவான்டா.” சிலாகித்து சொன்னான் அழகன்.
“ஆமா ஆமா வருவான் வருவான்.. அதான் அவ்வளவு பணத்தை தூக்கி கொடுத்துருக்கிறியே, இதுக்கு மேல கஷ்டப்பட என்ன இருக்குது. நீ சம்பாதிச்ச பணத்தை வச்சு ஜாலியா இருக்க போறாங்க அவ்வளவு தான். கஷ்டப்பட்டு வீடு கட்ட தேவை இல்லை, கஷ்டப்பட்டு உழைக்க தேவையில்லை, ஜாலியா புருசனும் பொண்டாட்டியும் இருப்பாங்க, அதுக்கு நீ வழிவகை செஞ்சுட்டு இப்படி யாரும் இல்லாத அனாதை மாதிரி வந்து நிக்கிறதைப் பார்த்து எனக்கு தான் பிபி ஏறுது. போதும் உன் குடும்பத்தைப் பத்தி பேசாத, அவங்களை நெனச்சாவே எனக்கு கோவம் கோவமா வருது..”
“சரி சரி இதுக்கு மேல பேசல போதுமா. சரி நீ சொல்லு உன்னுடைய ஃபியான்சி எப்படி. அவங்க சொல்றதையாவது நீ கேட்பியா.?”
“அதெப்படி நீ மட்டும் உன் குடும்பத்துக்காக ஒவ்வொண்ணையும் பார்த்து பார்த்து செய்யணும் நான் மட்டும் இப்பவே என் பியான்சி சொல்றதைக் கேட்கணுமோ. அதெல்லாம் முடியாது, நீ எப்படி உனக்கு தோணுறதை செய்யிறியோ அதே மாதிரி எனக்கு தோணுறதை நான் செய்வேன்”
“அடேய் பெரிய மனுஷா போதும் திட்டுறதை நிறுத்து, பர்ஷனல் போதும் பிசினஸ் விஷயமா பேசலாமா, எந்த அளவுக்கு போயிட்டு இருக்குது கம்பெனியோட குரோத்?”
“நல்லா தான் போகுது. யாருமே இங்கிருந்து ஏற்றுமதி செய்யாத பொருட்களை ஏற்றுமதி செய்யணுங்கறதுக்காக தான் நம்மளோட இந்த கம்பெனியை ஸ்டார்ட் பண்ணுனோம் ஓரளவுக்கு அதுல சக்ஸஸ் பண்ணிட்டோம். இன்னும் எனக்கு இருக்கிற ஆசைகள் எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா நிறைவேத்தணும். ரொம்ப பெரிய ஆசை என்னன்னா மலைக்காடுகளை எல்லாம் போய் பார்த்து அலசி ஆராய்ந்து அங்கிருந்து கிடைக்கிற மூலிகைகள், தேன், மருந்து பொருட்கள், அங்கு விழையிற கிழங்குகள்னு எல்லாத்தையும் கொள்முதல் பண்ணிட்டு வந்து அதை வேற என்னன்னவா மாத்த முடியுமோ, அந்த விதத்துல மாத்தி ஏற்றுமதி செய்யணும். அதுக்கு என்ன மாதிரி அட்வர்டைஸ்மென்ட் கொடுத்தா இங்க இருந்து அதையெல்லாம் பை பண்ணிக்குவாங்கன்னு நிறைய விஷயங்கள் யோசிச்சு வச்சிருக்கேன்டா..”
“நீ சொல்றது நல்ல யோசனை தான். ஆனா எனக்கு தெரிஞ்சு மலை மற்றும் காடுகள் சார்ந்த இடங்கள்ல வசிக்கிறவங்களை எல்லாரையும் போய் நாம பாக்கணும். அங்க தங்கி அவங்களைப் பத்தின சில விஷயங்களை ரிசர்ச் பண்ணி டீடைல்ஸ் எல்லாத்தையும் கலெக்ட் பண்ணுனதுக்கு அதுக்கப்புறம் தானே எதுவா இருந்தாலும் செய்ய முடியும். அதுக்கு முதல்ல எங்க எங்க மலை சார்ந்த, காடு சார்ந்த கிராமவாசிகள் வசிக்கிறாங்க, எங்கெங்க போறது சேஃப், எந்தெந்த இடத்துல நம்மளை உள்ள அலோ பண்ணுவாங்கன்னு எல்லாத்தையும் அனலைஸ் பண்ணி டீடைல் எடுத்தோம்னா அதுக்கப்புறம் ஃபர்தரா நம்ம மூவ் பண்றதுக்கு ஈஸியா இருக்குமே.”
“நானும் இதைப் பத்தி யோசிச்சேன். ஆனா யாரை அனுப்புறதுன்னு தான் தெரியல. ஒரு ஒன் டே போகட்டும் இது சம்மந்தமா டீடெயில்ஸ்ஸ கலெக்ட் பண்றதுக்கு நம்ம ஸ்டாஃப்ஸை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கலாம். அவங்க கலெக்ட் பண்ணிட்டு வர்ற டீடெயில்ஸ வச்சு எந்த ஏரியாவுக்கு முதல்ல போலாம்னு முடிவு பண்ணலாம்.”
“ஆள் அனுப்ப அவசியமில்ல, இன்டர்நெட் வழியா தேடலாம், அது ஈசியாவும் இருக்கும், வேலையும் சீக்கிரம் முடியும். அதே மாதிரி முடிவு பண்றது முக்கியம் இல்ல நாமளே நேர்ல போய் பார்த்தா தான் எனக்கு திருப்தியா இருக்கும்னு தோணுது. ஏன்னா ஏற்கனவே மத்தவங்க பண்றதை இங்கிருந்து ஏற்றுமதி பண்றதோ இல்ல அங்க இருக்கிறதை இறக்குமதி பண்ணி இங்க இருக்கிற டிஸ்டிபியூட்டர்ஸூக்கு கொடுக்குறதோ பெரிய விஷயம் கிடையாது.
யாருமே செய்யாத ஒரு விஷயத்தை புதுசா செய்யிறோம்னா அதை ரொம்ப பர்ஃபெக்ட்டா செய்யணும், ரொம்ப பாதுகாப்பாவும் செய்யணும். அதனால நம்மளோட கம்பெனிக்கு எந்த கெட்ட பேரும் வந்துடக் கூடாது, அதே மாதிரி அதனால நமக்கு அதிக அளவு லாபம் இல்லைன்னாலும் கூட நம்ம கம்பெனி நேம் நல்லா ரீச் ஆகுற மாதிரி இருந்தா கூட போதும். சோ ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செய்யணும்டா எதுலையும் அவசரப்படக் கூடாது”
“போடா டேய் இவ்வளவு ஐடியா சொல்றவன் முன்னமே என் கூட வந்து ஜாயின் பண்ணி இருந்தா எப்பவோ நம்ம கம்பெனி அடுத்த லெவல்கு போயிருக்கும். நீ தான் அந்த காய்கறி கடையை கட்டிக்கிட்டு அழுத..”
“ஏய் அப்படி எல்லாம் பேசாதடா. எனக்கு அந்த காய்கறி கடை தான் ரொம்ப முக்கியம். அதால தான் இவ்வளவு தூரம் உழைச்சு முன்னுக்கு வந்திருக்கேன். உன் கூட வர்றதைப் பத்தி எனக்கு ஆட்சேபணை இல்லடா, ஆனா அப்பா, தம்பி, தங்கச்சியை எல்லாம் விட்டுட்டு பிரிஞ்சு வரணுமேன்னு நெனைச்சேன். நானும் அங்கிருந்து வந்துட்டா அவங்களை யார் பார்த்துக்குவாங்கன்னு நினைச்சேன்.
இந்த கோழி குஞ்சு பொரிச்சதும், அந்த குஞ்சுகளை எல்லாம் தன்னோட கூட்டிட்டு அலையுமாம். ஒரு கட்டத்துக்கு மேல அந்த குஞ்சுங்க பெருசா ஆயிடுச்சுன்னாலும் கூட, கூடவே கூட்டிட்டு சுத்துமாம். அந்த மாதிரி என்னோட தம்பி தங்கச்சி எல்லாரும் பெருசா வளர்ந்துட்டாங்க, இதுக்கு மேலே என்னோட உதவி அவங்களுக்கு தேவையில்லை, அவங்கவங்க சொந்தக்காலுல நிக்க நினைக்கிறாங்கனு தெரியாம, குருடன் மாதிரி அவங்களைப் புரிஞ்சுக்காம போயிட்டேன்டா. அகில் பேசுன வார்த்தைகள் தான் செருப்புல அடிச்ச மாதிரி எனக்கு உண்மையை புரிய வச்சுச்சு. அதனால தான் எல்லா பொறுப்புகளையும் அவங்கக்கிட்ட விட்டுட்டு வந்துட்டேன், இன்னும் சொல்லப்போனா நான் இல்லாததுனால அகில் எல்லாரையும் நல்லா பாத்துக்கிட்டாலும் பாத்துக்குவான்.”
“நீ வேணா அப்படி நெனச்சுக்கிட்டே இரு, அகில் உதவி செய்வான்னு. கண்டிப்பா உதவி எல்லாம் அவன் செய்ய மாட்டான், யாரையும் பார்த்துக்கவும் மாட்டான். இந்த உலகம் ரொம்ப சுயநலமான உலகம்டா, நீ ஒருத்தருக்கு பத்து ரூபாய் கொடுத்து ஹெல்ப் பண்ணுனா பதிலுக்கு அவங்க உனக்கு பத்து ரூபாய் கொடுத்து உதவி செய்வாங்கன்னு எதிர்பார்க்காத. ஏன்னா நீ செஞ்சது உதவி, அதனால பதிலுக்கு நீ உதவியை எதிர்பார்க்க கூடாது.
நீ கடனே கொடுத்தாலும் அந்த கடனை திருப்பி வாங்குறதுக்குள்ள உன்னைக் கொலையா கொன்னுடுவாங்க. அப்படி இருக்கும் போது செஞ்ச உதவிக்கான பலனையோ நன்றியையோ இந்த நன்றி கெட்ட உலகத்துல எதிர்பார்க்க முடியாது. வேணும்னா நீ நடந்து போகும் போது உன்னை தட்டி விட்டுட்டு கீழே விழுக வைக்க வேணா ஆள் இருக்கே தவிர, நீ விழுந்து கிடந்தா கை கொடுத்து தூக்கி விடுறதுக்கு இந்த உலகத்துல ஆள் கிடையாது.
உனக்கு கால் இருக்கு, கை இருக்குது சோ நீ கீழ விழுந்தா நீ தான் உன் கையை உன்றி எந்திரிச்சு நிக்கணுமே தவிர யாராவது ஒருத்தர் தூக்கி விடுவாங்கனானு நெனச்சா, நீ விழுந்த மாதிரியே கிடக்க வேண்டியது தான். உன்மேலே ஏறி மிதிச்சுக்கிட்டே போவாங்களே தவிர ஐயோ பாவம்னு தூக்கிவிட மாட்டாங்க. இதுல சொந்த பந்தம், ஃபிரண்ட்ஸ், தெரிஞ்சவங்க, தெரியாதவங்கன்னு எல்லாருமே ஒரே ரகம் தான் சரியா.”
“போதும்டா நீ பேசுறதைக் கேட்டா எனக்கு இப்பவே தலை கிறுகிறுன்னு வருது”. என்று சொல்லிவிட்டு ஜன்னலோரம் நெருங்கி அமர்ந்த அழகன் வெளியே தெரியபவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டே வர, மகேஷுக்கு தாங்கள் இருவரும் முதன்முதலாக சந்தித்ததும், பிறகு இருவரும் இணை பிரியா நண்பர்களாய் மாறிப்போன நிகழ்வும் கண் முன் வந்து நிழலாடியது.
அதோடு அவன் வாழ்வில் நடந்த மறக்க முடியாத சம்பவத்திற்கு தான் மட்டுமே சாட்சியாகிப் போனதும் நினைவுக்கு வந்தது. ஒவ்வொரு சம்பவங்கள் வாழ்நாள் முழுமைக்கும் மறக்க முடியாததாக இருக்கும், அதில் இந்த இரு நிகழ்வுகளும் மகேஷின் மனதிற்கு நெருக்கமானதாகவும், மறக்க முடியாததாகவும் மாறி இருந்தது..
இவர்கள் இருவரும் மகேஷின் வீட்டிற்கு வந்து சேர்கையில் நேரம் நள்ளிரவைத் தொட்டிருந்தது. இவர்களுக்காக உறக்காது காத்திருந்தார் மகேஷின் தாய் கலைவாணி.
காரை நிறுத்தி விட்டு நண்பர்கள் இருவரும் உள்ளே நுழைந்தனர்.
“டேய் அம்மா இன்னும் தூங்காம இருக்காங்கடா” என்ற அழகனின் சொல்லில்,
நிமிர்ந்து தாயைப் பார்த்த மகேஷ்,
“இன்னும் ஏன்மா தூங்காம இருக்கீங்க. இப்படி கண் முழிச்சுருக்கிறது உங்களோட உடம்புக்கு ஒத்துக்காதே”
“இல்லப்பா நீ தான் மகேஷோட வர்றதா சொன்னியே..”
“ஆமாம்மா. ஆனா அதுக்காக உங்களை முழிச்சுருக்க சொல்லலையே கதவைத் தான் பூட்ட வேணாம்னு சொன்னேன்” என்று மகேஷூம்,
”எனக்காக ஏன்மா தூங்காம இருக்கீங்க” என்று அழகனும் கேட்டிட,
“இல்லப்பா உன்னைப் பார்த்து ரொம்ப நாளாச்சா அதான் பார்த்துட்டு போய் தூங்கலாம்னு இருந்தேன். நீ தான் வேலை வேலை ஓடுற, கூப்பிட்டா கூட இங்க வரமாட்டேங்கிற அதனால தான் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். ஆமா எங்க நீ மட்டும் தான் வந்திருக்கிற உன் பொண்டாட்டி வரலையா?” என்ற கலைவாணியின் சொல்லில் அதிர்ந்து மகேஷைத் திரும்பிப் பார்த்தான் அழகன்.
ஆனால் அதற்குள் சுதாரித்த மகேஷோ, “அம்மா உங்கக்கிட்ட ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் பாருங்க, வாங்க உங்க மருமக ஒரு விஷயம் கேட்டா” என்று பேச்சை மாற்றி அவரை உள்ளே அழைத்துச் சென்று விட, பெருமூச்சோடு மகேஷின் அறைக்கு தானாகவே சென்று விட்டான் அழகன்.
தனியாக தாயை அழைத்துச் சென்ற மகேஷ், “அவன்கிட்ட எதைக் கேட்கணும், எதைக் கேட்க கூடாதுன்னு உங்களுக்கு தெரியாதாம்மா?” என்று கடிந்து கொள்ள,
“நீதானடா அன்னைக்கு அவ்வளவு சந்தோஷமா வந்து சொன்ன என்னோட பிரண்டுக்கு கல்யாணம் ஆயிடுச்சும்மா. இங்க பாருங்கன்னு ஒரு போட்டோவைக் கூட காட்டுனியேடா..”
“ஆமாம்மா நான் இல்லைன்னு சொல்லல. அதுக்காக அவன் கிட்ட இப்படி கேட்டு வைப்பீங்களா? கல்யாணம் நடந்ததோட சரி அவங்க ரெண்டு பேருக்குள்ளையும் சின்ன பிரச்சனை வந்து பிரிஞ்சிட்டாங்கம்மா. இப்ப அந்த பொண்ணு எங்க இருக்கான்னு கூட எங்களுக்கு தெரியாது..”
“என்னடா இவ்வளவு அசால்ட்டா சொல்ற. ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி அப்படியே விட்டுட்டு போறது எவ்வளவு பாவம் தெரியுமா..?”
“அம்மா அந்த பொண்ணு தான் இவனை விட்டுட்டு போனா, இவன் ஒண்ணும் துரத்தி விடல. நீங்க ஏன்மா உண்மை தெரியாம இப்படி பேசுறீங்க? அழகனைப் பத்தி உங்களுக்கு தெரியாதாம்மா, என் பிரண்டு அப்படிப்பட்டவனா?”
“உன் பிரண்ட் அப்படிப்பட்டவன் இல்ல தான். ஆனா சண்டையில பிரிஞ்சு போனவங்க, அப்படியே பிரிஞ்சு போகணும்னு ஏதாவது அவசியம் இருக்கா என்ன? எதுவா இருந்தாலும் உட்கார்ந்து பேசியிருக்கலாமே, பேசுனா தீராத பிரச்சனையே இல்லடா. ஒரு தடவை போய் அந்த பொண்ணைப் பார்த்து பேச முயற்சி பண்ணி இருக்கலாம்ல”
“அம்மா, அப்ப அழகன் வீட்டுல பெருசா எந்த வசதியும் இல்லம்மா அதனால தான் அந்த பொண்ணு விட்டுட்டு போயிட்டாங்கிற ஆதங்கம் அவனுக்கு இருந்துச்சு. உழைச்சு முன்னேறி நல்ல நிலைக்கு வந்ததுக்கு அப்புறம் அந்த பொண்ணைத் தேடிப்போய் பேசலாம்னு தான் நினைச்சுட்டு இருந்தான். ஆனா இப்ப அந்த பொண்ணு தான் எங்க இருக்கான்னு கண்டுபிடிக்க முடியல. நான் விசாரிச்ச வரைக்கும் அந்த பொண்ணு எங்க இருக்கான்னே தெரியலம்மா.
ஆனா கண்டிப்பா அந்த பொண்ணு தான் வேணும்னு அழகன் முடிவு பண்ணுனா கண்டிப்பா அந்த பொண்ணைத் தேடி போவான்மா. அதே மாதிரி அவங்க ரெண்டு பேரும் மறுபடியும் சேரணும்னு விதி இருந்தா அந்த விதியே அவங்களை சேர்த்து வைக்கும். இனிமே இதைப் பத்தி அவன்கிட்ட பேசாதீங்கம்மா, அப்பாக்கிட்டையும் சொல்லிடுங்க” என்றான், உறங்கிக் கொண்டிருந்த தந்தையைப் பார்த்து விட்டு.
“சரி உங்களுக்கு சாப்பாடு?”
“நான் இங்கிருந்து போகும் போது சாப்பிட்டுட்டு தான் போனேன், அவனும் சாப்பிட்டு வந்துட்டான்மா நீங்க தூங்குங்க” என்று சொல்லி விட்டு தன் அறைக்கு வந்தான் மகேஷ்.
மல்லாந்து படுத்துக்கொண்டு மெதுவாக சுழன்று கொண்டிருக்கும் சுழல் காற்றாடியைப் பார்த்தவாறு படுத்து கிடந்தான் அழகன்.
அவனது அந்த நிலையைக் கண்டு இவனுக்கு வருத்தமாக இருந்தாலும் கூட பழையவற்றை நினைவு படுத்திவிட்டாரோ தன் தாய் என்ற எண்ணமும் எழுந்தது.
“டேய் அழகா” என்று மகேஷ் அழைத்திட,
“இனிமே அந்த பேரைச் சொல்லி கூப்பிட்ட பல்லைக் கழட்டிடுவேன் ஞாபகம் வச்சுக்கோ” என்று சொன்னான் அழகன். அந்த வார்த்தைகளிலேயே அவன் பழைய நினைவுகளில் தான் உழன்று கொண்டிருக்கிறான் என்பதை புரிந்து கொண்ட மகேஷ் எதுவும் பேசாமல் அவன் அருகில் கவிழ்த்து படுத்துக் கொண்டான்..