“அப்பா இன்னும் ஒரு மணி நேரத்துல கடலூர் பஸ் ஸ்டாண்ட் வந்துடுவேன்” என்றாள் அலைபேசியின் மறுமுனையில் இருந்த தந்தையிடம்.
“சரிம்மா. நான் அண்ணன் இல்ல பெரியப்பா யாரையாவது வந்து உன்னைக் கூப்ட்டுக்க சொல்றேன்” என்று தந்தை சொல்லவும், “சரிப்பா” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் அந்த இளம்பெண்.
சென்னையில் தொடங்கி, கடலூரில் முடியப்போகும் இந்தப் பேருந்துப் பயணத்தில் ஜன்னலோர இருக்கை கிடைத்ததில் அவளுக்கு நிரம்ப சந்தோஷம்.
அருகில் அமர்ந்திருக்கும் யாரையும் கவனிக்கவோ, யாரிடமும் பேச்சுக்கொடுக்கவோ தேவையில்லை. அவளும், செவிபேசி வழியே இசைத்துக்கொண்டிருந்த ரஹ்மானும், வேடிக்கையுமாக ஒரு பயணம். வழக்கமாய் பேருந்தில் ஏறி அமர்ந்ததுமே தன்னை அறியாமல் உறக்கத்தின் பிடியில் சிக்கிக்கொள்ளும் அந்தப் பெண்ணிற்கு முதன் முறையாய் விழித்துக்கொண்டு செய்யும் இந்தப் பயணம் மிகப் பிடித்திருந்தது. ஊரை நெருங்க நெருங்க இன்னுமின்னும் உற்சாகம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் அவளின் உற்சாகத்திற்கு முன் ரஹ்மானால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
மனம் இட்டுக்கொண்டிருந்த ஆனந்தக் கூச்சலுக்கு ஏற்ப, எதையாவது உற்சாகமாக கேட்டே ஆகவேண்டும் போல் இருந்தது. விஜய் ஆண்டனிக்கு தாவினாள்.
புரியா வார்த்தைகள் எனினும், உற்சாகத்திற்கு குறைவே இல்லை. இயல்பிலேயே சாந்தமும், அமைதியுமான இந்தப் பெண் இப்படி மனதிற்குள் குத்தாட்டம் போடும் அளவிற்கு அப்படி என்ன தான் ஆகிவிட்டது?
அவள் அண்ணனிற்கு வரும் வாரத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது. அவள் சென்றுக்கொண்டிருப்பதே அதற்குத்தான் என்பதால் தான் இத்தனை மகிழ்வு.
அவளுக்கு ஒரு அண்ணன் இருந்ததோடு, அவள் பெரியப்பாக்கள் இருவருக்குமே தத்தம் இரண்டு மகன்கள் மட்டுமே இருக்க, குடும்பத்திற்கு ஒரே மகளாக வளர்ந்தவள் அவள். உடன் ஒரு அக்காவோ, தங்கையோ வேண்டும் என்பது நெடுநாள் ஏக்கம். அதற்கு வாய்ப்பில்லாமல் போனதாலேயே அண்ணியின் வரவை நோக்கி காத்திருந்தாள்.
பெரியப்பா மகன்கள் நால்வரில் மூவருக்கு முன்னமே திருமணம் நடந்திருந்தது. இயல்பாகவே அமைதியான, அதிகம் பேசாத இவளுக்கு, அண்ணிகள் மூவரோடு ஒட்டுதல் அதிகம் இல்லை.
ஆனால், இவள் அண்ணன் அரவிந்திற்குப் பார்த்திருக்கும் பெண்ணான மித்ராவை இரண்டு முறை தான் நேரில் பார்த்திருந்தாலும், அலைபேசி மூலம் பேசியதிலேயே அவளோடு மிகவும் நெருங்கியது போன்றொரு உணர்வு.
அவளுடைய சுபாவத்தைப் புரிந்துக்கொண்டு, தானாகவே அவளுக்கு அடிக்கடி தொடர்புகொண்டு பேசி, திருமணத்திற்கு முன்பே தன்னிடம் நெருங்கிவிட்ட அண்ணியை மிகமிகப் பிடித்துப்போனது அவளுக்கு.
தன் வருங்கால அண்ணியைப் பற்றி அவள் யோசித்துக்கொண்டே வரவும், பேருந்து கடலூர் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.
அவள் பேருந்தை விட்டு இறங்கவும், நொடி தாமதம் இல்லாமல், அவள் கையில் வைத்திருந்த பையை வாங்கிக்கொண்டார், அவள் வரவுக்காகக் காத்திருந்த அவளின் மூத்த பெரியப்பா திருவரசன்.
“பெரியப்பா…” என்று அவரைப் பார்த்து பல் தெரிய புன்னகைத்துக்கொண்டு நின்றாள்.
அவள் சிரிப்பின் அளவிலேயே அவள் உற்சாகத்தைப் புரிந்துகொண்ட திருவரசன், “பொண்ணு தோழிக்கு ரொம்ப குஷி போலயே” என்றார் தானும் சிரித்துக்கொண்டு.
“ஆமாம்… ஆமாம்…” என்று சொல்லிக்கொண்டே மேலும் கீழும் தலையாட்டியவளுக்கு வயது இருபத்தி மூன்று. ஆயினும் அவருக்கு என்னவோ, இன்னும் அவளின் மூன்று வயது பிம்பம் தான் கண்முன் நிழலாடியது.
இவளின் தந்தையான தமிழரசனிற்கும், பெரியப்பாக்கள் திருவரசன், மதியரசன் இருவருக்கும் அவ்வப்போது ஏதாவது கருத்துவேறுபாடு, சண்டை சச்சரவு என்று வருவதுண்டு. அப்படி ஒருவருக்கொருவர் முகத்தைத் திருப்பிக்கொண்டு நடந்த காலத்தில் கூட, பெரியப்பாக்கள் இருவரும் இவளைக் காணும் போதெல்லாம் செல்லம் கொஞ்சாமல் விட்டதில்லை.
தந்தை, இரண்டு பெரியப்பாக்கள், ஐந்து அண்ணன்கள் என்று அம்மணிக்கு எக்கச்சக்க செல்லம் தான்.
பெரியம்மாக்கள் இருவரும், ‘ஊருல இல்லாத பொண்ணு வச்சிருக்காங்க’ என்று குடும்பத்தின் ஆண்கள் அனைவரும் இவளைத் தூக்கி வைத்து கொண்டாடுவதைப் பார்த்து சலித்துக்கொண்டாலும், அவளைப் பற்றிக் குறையென்று அவர்கள் எதுவும் கூறிவிட மாட்டார்கள்.
அவளின் தாய்க்கோ, மகள் அனைவருக்கும் செல்லப் பிள்ளையாய் இருப்பதில் சந்தோசத்தோடு பெருமிதமும் தான்.
புன்னகை முகத்தோடே நின்றிருந்த அவளையே பார்த்திருந்தார் திருவரசன். “கிளம்பலாமா பெரியப்பா?” என்று அவளே கேட்கும் வரை.
“சரிங்க பெரியப்பா” என்று மகிழுந்தின் மேல் சாய்ந்துக்கொண்டு அவரோடு காத்திருந்தாள் அவளும்.
பெங்களூர் பேருந்தும் வந்தது. அதிலிருந்து ஒருவன் இறங்கியும் வந்தான். அவனிடம், “வாங்க தம்பி” என்று கூறி வரவேற்கவும் செய்தார்.
“லக்கேஜ உள்ள வச்சிடுங்க தம்பி” என்று அவனிடம் கூறிவிட்டு, மகிழுந்தின் பின்புறம் சென்றுவிட்டார் திருவரசன்.
திருவரசன் நிற்காமல் இயங்கிக்கொண்டுதான் இருந்தார். இந்த மொத்த உலகமும் இயங்கிக்கொண்டு தான் இருந்தது.
ஆனால், அவன் பேருந்திலிருந்து இறங்கிய நொடியிலிருந்து, அவள் இயங்கவில்லை. அவள் மதி இயங்கவில்லை. கண்கள் இமைக்கவில்லை. மூச்சு கூட வருகிறதோ என்னவோ என்று அவளுக்கு ஐயம் தான். ஆனால், இந்த இதயம் மட்டும் வழக்கத்தை விட அதிக சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருப்பது போல் தோன்றியது அவளுக்கு. வேக வேகமாக அடித்துக்கொண்டது.
அழகான அதிர்ச்சி ஒன்று கண் முன் நடந்து வந்தால், எதிர்வினை இப்படித் தான் இருக்கும் போலும்.
ஆனால், அவனிடத்தில் அதிர்ச்சியெல்லாம் இல்லை. எப்படியும் மாப்பிள்ளை இல்லத்தில் அவளைப் பார்ப்பான் என்று அவன் அறிவான். ஆனால், ஊருக்கு வந்ததும் கண்ட முதல் முகம் அவளுடையதாய் இருப்பதில் அவனுக்கு சந்தோஷமே.
அவள் முன் அழகாய் புன்னகைத்து நின்றான். அவன் அதரங்கள் வளைந்தது. மீசை நெளிந்து சிரித்தது.
அழகு ஒன்று அவனைப் பார்த்து அதிர்ந்து நின்றால், அவன் எதிர்வினை இப்படித்தான் இருக்கும் போலும்.
அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே, திருவரசனுக்குக் கேட்காத சின்னக் குரலில், “ரதி” என்று முனுமுனுத்துவிட்டுப் மகிழுந்தின் பின்புறம் சென்றுவிட்டான் அவன். பேருந்து நிலையத்தின் அத்தனைக் கூச்சலுக்கு நடுவிலும் அவன் அழைத்தது அவள் செவிகளில் விழத்தான் செய்தது.
ஆனால், ‘ப்ரித்வி’ என்று அலறிக்கொண்டிருந்த அவள் மனதின் கூக்குரலைக் கேட்டோர் தான் யாருமில்லை.
“ரதிம்மா…. போலாமா…???” என்று திருவரசன் அவள் தோளை உலுக்கியதும் தான், இயங்க மறந்த அவளின் உலகம் இயங்கியது. இயல்பு நிலைக்கு வந்தவள், மகிழுந்தின் பின்னிருக்கையில் அமர்ந்தாள்.
திருவரசன் மகிழுந்தைக் கிளப்ப, அவருக்கு அருகில் அமர்ந்துக்கொண்டான் ப்ரித்வி.
மகிழுந்தின் கண்ணாடி வழியே அவனுக்கு தெரிந்தது அவள் முகம். அவனை இங்கு கண்டதும் கொண்ட குழப்பத்திலிருந்து அவள் இன்னும் வெளிவரவில்லை. விழித்துக்கொண்டிருந்தாள்.
நெடுநாள் கழித்து அவனைக் காண்பதாலோ என்னவோ, அவனைக் கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். கடைசியாய் அவனை நேரில் கண்டதற்கும் இப்போதிற்கும் என்னென்ன மாறியிருக்கிறான் என மனதிற்குள் ஒரு ஆராய்ச்சியே நடத்திக்கொண்டிருந்தாள்.
கல்லூரியில் தாடி எல்லாம் அவன் வைத்திருந்ததில்லை. ஆனால், இப்பொழுது கருகருவென, திருத்தமாய் ட்ரிம் செய்திருந்த தாடி இருந்தது. முன்பை விட, கொஞ்சம் நிறம் கூட கூடிவிட்டது போல் இருந்தது. ‘பெங்களூரின் மகிமை’ என நினைத்துக்கொண்டாள் அவள்.
அவனைக் கண்களால் அளவெடுத்துக்கொண்டிருந்த போது தான் உரைத்தது. திருவரசன் ‘மணப்பெண்ணின் தம்பியை அழைத்துக்கொண்டு செல்லலாம்’ என்று இவளிடம் சொன்னது. ‘இவன் அண்ணியின் தம்பியா….????’ என்று அதிர்ந்தாள்.
‘ஐயையோ’ என்று அவள் மனம் அலறியது. அலறல் என்றெல்லாம் முற்றும் முழுதாக சொல்லிவிட முடியாது. ‘ஆனந்த அலறல்’ என்று ஏதேனும் உண்டெனில், அவள் மனம் சொன்ன ‘ஐயையோ’ அந்த ரகத்தைச் சேர்ந்தது தான்.
அவனைக் கண்டதில் அவளுக்கு அதிர்ச்சியுடன் பேரானந்தம் தான். ஆனால், அதை அவள் ஒப்புக்கொள்ள போவதில்லை. அவனைக் கண்டதும், அவள் ஆனந்தம் அடையக் காரணம்? அதை அவள் மனம் அவளுக்கு எடுத்துரைத்தாலும் அவள் அதை ஒப்புக்கொள்ளப் போவதில்லை.
‘இவனைப் பார்த்துக்கொண்டிருந்தது போதும்’ என்று அவனை விட்டுக் கண்ணெடுக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தாள். அதென்ன, இந்தத் தோல்வியில் மனம் குதூகலிக்கிறது. அவள் மனதின் மீதே கோபம் கோபமாக வந்தது ரதிக்கு.
நொடிக்கு ஒரு பாவனையைத் தத்தெடுக்கும் அவள் முகத்தை, மகிழுந்தின் ரியர் வியு கண்ணாடியில் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டிருந்தான் ப்ரித்வி.
ஆனால், அவன் கண்ணாடியில் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தது எல்லாம், ரதி அவனையே பார்த்துக்கொண்டிருப்பதை திருவரசன் பார்த்துவிடும் வரை தான்.
அவனும் ரதியைத் தான் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று அவர் உணரும் முன், இயல்பாக வேறு திசையில் பார்வையைத் திருப்பிக்கொண்டான்.
ஆனால் ரதியோ, திருவரசன் இரண்டாம் முறை அழைத்ததும் தான் அரண்டு அவர் பக்கம் திரும்பினாள்.
அவள் விழிக்கிறாள் என்று திருவரசனுக்குப் புரிந்தது. அதன் காரணம் புரியாமல், அவராகவே அதற்கான அர்த்தத்தை யூகித்தார்.
அவர்கள் வீட்டுச் செல்லப்பெண், புதியதாய் ஒருவனைக் கண்டதால் விழிக்கிறாள் என்று நினைத்துக்கொண்டார். அவர் கணக்குப்படி, ரதி இதுவரை ப்ரித்வியைப் பார்த்ததில்லை.
பெண் பார்க்கச் சென்றபோது ரதி வரவில்லை. மாப்பிள்ளை பார்க்கப் பெண் வீட்டிலிருந்து வந்தபோது ப்ரித்வி வரவில்லை.
அதன் பின் மாப்பிள்ளை வீட்டிலிருந்து கை நனைக்க வந்தபோது ப்ரித்வி வந்திருந்தான். ஆனால், ரதி சென்னையில் இருந்தாள்.
மித்ராவின் முகூர்த்த சேலை எடுக்கச் சென்றபோதும் அவன் வரவில்லை. அரவிந்திற்குத் திருமண உடைகளை ப்ரித்வியும் அரவிந்தும், அவன் அண்ணன்களுமென இளைய ஆண்மகன்கள் என்று மட்டும் சென்று வாங்கிவந்தனர்.
ஆகவே, ரதிக்கு ப்ரித்வியை அறிமுகப்படுத்தும் பொருட்டு, “ரதிம்மா. இவரு ப்ரித்வி. மித்ராவோட தம்பி. பெங்களூர்ல வேலை பார்க்கிறார்” என்றார்.
“ஓஹ். அப்டியா பெரியப்பா!!!” என்று கேட்டுக்கொண்டாள்.
“தம்பி… இது ரதி” என்று அவர் ப்ரித்வி பக்கம் திரும்பவும், “ஓஹ். தெரியுமே!” என்றான் அவன்.
திருவரசன் அவனைக் கேள்வியாகப் பார்க்க, “நான் காலேஜ் படிக்கும் போது இந்தப் பொண்ணு எனக்கு ஜூனியர்” என்றான் ப்ரித்வி.
“ஓஹ். அப்போவே ரெண்டு பேருக்கும் பழக்கமா?” என்று கேட்ட திருவரசனின் நெற்றி சுருங்கவும், ‘ப்ரித்வி என்ன சொல்வானோ!’ என்று படபடத்தாள் ரதி.
கண்ணாடி வழியே ரதியைப் பார்த்த ப்ரித்வி அவள் தவிப்பைக் கண்டு சிரித்துக்கொண்டான்.
அதற்கு மேல் அவளைச் சோதிக்காமல், “அதெல்லாம் இல்ல அங்கிள். இப்டி ஒரு பொண்ணு இருக்குன்னு தெரியும். பழக்கம்லாம் இல்ல. இந்தப் பொண்ணுக்கு என்னைத் தெரியுமான்னு கூட தெரியல” என்றான் ப்ரித்வி.
அவனின் அந்தப் பதில் திருவரசனை சாந்திப்படுத்தியதில் ரதிக்கு மகிழ்ச்சி தான்.
ஆனால், பயணநேரம் மொத்தத்தையும் ‘எது! எனக்கு இவனைத் தெரியும்ன்னு இவனுக்குத் தெரியாதாமாம்! ஃப்ராடுகார பய’ என்று அவனை மனதுக்குள் திட்டிக்கொண்டே தான் கழித்தாள்.
ப்ரித்வியின் பூர்விகம் கடலூர் தான் என்றாலும், அவனின் தந்தை அவனின் இளவயதிலேயே சென்னைக்குக் குடிப்பெயர்ந்திருந்தார். மித்ராவின் திருமணம் கடலூரில் என்பதால், ப்ரித்வியின் தாத்தா-பாட்டி இல்லத்தில் தான் இரண்டு வாரங்கள் தங்குவதாக முடிவு. பெரியவர்கள் இறந்த பிறகு பூட்டியே இருந்த வீட்டை, ஒரு வாரம் முன்பே ஆள் வைத்து சுத்தம் செய்துவிட்டார் ப்ரித்வியின் தந்தை.
இரண்டு நாட்களுக்கு முன்பு, ப்ரித்வியின் பெற்றோரும், மித்ராவும் வந்து சேர்ந்திருக்க, இப்போது தான் வருகிறான் ப்ரித்வி.
ப்ரித்வியை அந்த இல்லத்தில் இறக்கி விட்டார் திருவரசன். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு இறங்கினான். வெளியில் ஆள் அரவம் கேட்கவும் அவசரமாக வெளியே வந்தார் ப்ரித்வியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி.
திருமண ஏற்பாடுகள் குறித்து ஏதோ பேசுவதற்கென, திருவரசனை உள்ளே அழைத்தார் கிருஷ்ணமூர்த்தி.
“பொண்ணு இருக்குங்க. வீட்ல விட்டுட்டு வரேன்” என கிருஷ்ணமூர்த்தி சொல்லவும், “நீ உள்ள வந்து உக்காரும்மா. ஒரு பத்து நிமிஷம் பெரியப்பா கிட்ட பேசவேண்டியிருக்கு. பேசினதும் கிளம்பலாம். சரிதான?” என்று கிருஷ்ணமூர்த்தி கேட்கவும், புன்னகையுடன் தலையாட்டினாள் ரதி.
“டேய். அந்தப் பொண்ண உள்ள கூப்டுட்டு வாடா…” என்று ப்ரித்வியிடம் சொல்லிவிட்டு, திருவரசனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டார் அவர்.
அவர் சென்றதும் கீழே இறங்கிய ரதி, தனது உடமைகளை எடுத்துக்கொண்டிருந்த ப்ரித்வியைப் பார்த்தாள்.
“எது! இந்தப் பொண்ணை நான் உள்ள கூப்ட்டு வரவா? இது காலேஜ் படிக்கும் போதே என்னை ரிஜெக்ட் பண்ண பொண்ணாச்சே” என்றான் அவளுக்கே கேட்கும்படி.
“இப்போ எதுக்குப் பழைய கதையெல்லாம் பேசிக்கிட்டு” என்றாள் ரதி.
“அதான. எதுக்கு மறந்துபோன பழைய கதையெல்லாம் பேசிக்கிட்டு” என்றான் ப்ரித்வியும்.
‘மறந்துபோன கதையா! உண்மையாகவே மறந்துவிட்டானா’ என யோசித்ததில் சட்டென வாடியது ரதியின் முகம்.
அதை அவன் கவனித்தாலும், கண்டுகொள்ளாதவன் போல், “மேடம் கொஞ்சம் வீட்டுக்குள்ள வந்துடுங்க. இல்லைன்னா எங்க அப்பா, நான் தான் என்னமோ உங்கள வாசல்ல நிக்க வச்சிட்ட மாதிரி பேசுவார்” என்று அவன் சொல்லவும் அவனுடன் உள்ளே நடந்தாள் ரதி.
பகீரென்றானது ரதிக்கு. அவள் சடாரென அவனைத் திரும்பிப்பார்க்க, அவன் இவளைப் பார்த்தால் தானே. அலைபேசியில் பேசிக்கொண்டே வேகமாக உள்ளே சென்றுவிட்டான். இவளைத் திரும்பிப் பார்க்கவும் இல்லை.
வாசலிலேயே நின்றிருந்த ரதியை, மித்ராவும், அவள் அன்னை லக்ஷ்மியும் தான் உள்ளே வரவேற்றனர்.
மித்ரா ரதியைத் தன் அறைக்கு அழைத்துச்சென்று ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாள்.
ஆனால், அவள் பேசும் எதுவுமே ரதியின் செவியை எட்டாதவாறு அவளுள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது அவனின் ‘கீர்த்தி பேபி’ என்ற அழைப்பு.
‘பேபி’ என்று அவன் யாரையோ அழைப்பதே அவளுக்குப் பிடிக்கவில்லை என்றால், அந்த பேபி கீர்த்தியா?
அந்த கீர்த்தி இவள் நினைக்கும் கீர்த்தியாக இருக்கத்தான் வாய்ப்பு அதிகம் எனத் தெரிந்தும், அந்த கீர்த்தியாக இருக்கவே கூடாது என வேண்டிக்கொண்டது அவள் மனம்.
அதே வேண்டுதலோடு தன் அலைபேசியில் இருந்து கீர்த்திக்கு அழைத்தாள். அவள் எண் ‘பிசி’ என வந்தது.