Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

46. ஸ்ரீ - பிரியங்களின் நிழலில்

நிழல்-6

இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து

மு.வ விளக்க உரை: இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிபோதலும் அழிதலும் விரைவவில் உள்ளனவாம்.

அன்று ஞாயிறு விடுமுறை என்பதால் தம்பியோடு வெளியே சென்று வீட்டிற்குத் தேவையான பொருட்கள் கோவில் ஹோட்டல் என மாதம் ஒரு முறைக்கான அவர்களின் வழக்கம் இது.

ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் தேவ ரஞ்சனாவிற்கு மிகவும் பிடித்தம்.



Advertisement

அவளின் ஒரு மாத அழுத்தங்களையும் ஒரு நொடியில் போக்கி விடும் மகிமை அவளுக்கே உண்டு.

அன்றும் காலையிலேயே இருவருமாய் கிளம்பி விட்டிருந்தனர். தேவ ரஞ்சனா அமைதியாய் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்க அவினாஷ் எதையாவது சலசலத்தப் படியே பின் அமர்ந்திருந்தான்.

காலை சீக்கிரமே வந்து விட்டதால் கூட்டம் குறைவாக இருக்க பெரும் நிம்மதியோடு உள்ளே நுழைந்தவளின் பார்வை அந்த அம்மனைத் தாண்டி அங்கிங்கு நகரவில்லை.

Advertisement

சில நொடிகளில் வழக்கம் போல் கண்கள் கலங்கத் தயாராக வேகமாய் தன்னை சுதாரித்துக் கொண்டவள் கண்களைத் திறந்த நேரம் ஐயர் கொண்டு வந்த தீபத் தட்டிற்கு மறுபுறம் தனது சக்கர நாற்காலியில் அமர்ந்த படி அவளையே பார்த்திருந்தார் காத்யாயினி.

Advertisement

குங்குமத்தை வாங்கியவள் தம்பிக்கும் வைத்து விட்டு தானும் நெற்றியில் இட்டுக் கொண்டு பிரகாரத்தை சுற்றி வரத் தயாராக அவள் தன்புறம் வந்ததும் காத்யாயினி தானாகவே அவளை அழைத்தார்.

“தேவா..”, என்ற அந்தக் குரல் ஏனோ அந்த மாசாணி அம்மனே அழைத்ததைப் போன்ற உணர்வைக் கொடுத்தது.

திரும்பி பார்த்தவள் தன்முன் தெய்வ கடாட்ஷமாய் அமர்ந்திருந்தவரைப் பார்த்து தன்போல் கை கூப்பினாள்.

Advertisement

“நீங்க?!”

“நாம இதுக்கு முன்னாடி பேசிருக்கோம்..”, என்றதில் அவளுக்கு யாரெனத் தெரியவில்லை.

“மன்னிச்சுருங்க. தெரியலையே!”

“என் பேர் காத்யாயினி நஞ்சுண்டான்.”, என்றதில் நொடியில் புரிந்து கொண்டவளாய் மரியாதையாய் வணக்கம் வைத்தாள்.

“எப்படியிருக்கீங்க மேடம்?”

“நல்லாயிருக்கேன் மா. நீ எப்படியிருக்க? இவன் தான் உன் தம்பியா?”, என்றதில் தம்பிக்கு அவரை அறிமுகப் படுத்த வேகமாய் அவனும் கைக் கூப்பினான்.

“என்ன பெரிய மனுஷா உங்க அக்கா கல்யாணம் வேண்டாம்னு சொல்றா? என்ன பண்ணலாம்னு இருக்க?”

“சொன்ன பேச்சை கேட்குறதே இல்ல மேம். நீங்களாவது அட்வைஸ் பண்ணுங்க.”, என்றதில் தம்பியை அவள் முறைக்க காத்யாயினி சிரித்தார்.

“அவன் ஏதோ விளையாட்டுத் தனமா பண்ணிட்டு இருக்கான் மேம். சாரி உங்களுக்கு தேவையில்லாத..”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. உன் கஷ்டம் அறிஞ்சு அவன் நல்ல நிலைமைக்கு வந்துருவான்.

கவலைப் படாம உன் வாழ்க்கையைப் பத்தியும் நீ யோசி. அக்காவுக்கு எப்பவும் துணையா இருக்கணும். என்ன?”, என்றவர் அவர்களிடம் விடைபெற்று அங்கிருந்து நகர்ந்திருந்தார்.

“ப்பா ராஜ களை இல்ல க்கா? பணமிருந்தா மட்டும் இதெல்லாம் வந்துருமா என்ன?”

“ரொம்ப முக்கியம் வாடா வேலையைப் பார்த்துட்டு..”, என்றவள் தம்பியை இழுத்துக் கொண்டு நகர்ந்திருந்தாள்.

“அக்கா பசிக்குது..”

“அதெப்படி டா.. வீட்டில் இருக்கும் போது மட்டும் பசியே இருக்குறதில்ல..”, என்றவள் அருகில் வந்த உணவகத்தில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றாள்.

வேலைகளை எல்லாம் முடித்த நேரம் அவினாஷின் நண்பனுக்காக வாங்கிய பரிசுப் பொருளை அவன் பிறந்த நாளான இன்று கொடுத்தால் தான் நன்றாக இருக்கும் என்று அக்காவை தாஜா செய்து கல்லூரிக்கு அழைத்துச் சென்றான்.

கல்லூரிக்கு உள்ளேயே வேறு வேறு திசையில் ஆண் பெண் விடுதிகள் இருக்க தேவரஞ்சனா கையிலிருந்த பைகளோடு அங்கிருந்த கேரிடர் வாசலில் அமர்ந்து விட்டாள்.

பல்வேறு சிந்தனைகளில் உழன்றவள் தனது கைப்பேசியின் ஒலியில் உணர்வு பெற்று அதைப் பார்க்க திரையில் ஒளிர்ந்த பெயரில் எரிச்சலாய் கைப்பேசியைப் பார்த்திருந்தாள்.

அழைப்பை ஏற்கவில்லை எனில் வீட்டிற்கே வந்து விடுவார் என்பதால் அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

“என்ன தேவா எப்படியிருக்க?”

“என்ன வேணும்?”

“புதுசா என்ன மா.. எல்லாம் நம்ம கல்யாணம் பத்தி தான்.”, என்றதில் பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“ஒரு தடவை சொன்னா உனக்கெல்லாம் புரியாதா?”

“ஏய்!!”

“வாயை மூடு. வெட்கமே இல்லாம போன் பண்ணிட்டே இருக்க. உங்க சகவாசமே வேணாம்னு தான தனியா வந்து உட்காந்துருக்கேன்.

இன்னொரு தடவை போன் பண்ணின கண்டிப்பா போலீஸ் கம்ப்ளெயிண்ட் பண்ணிடுவேன்.”, என்றவள் கைப்பேசியை சட்டென அணைத்திருந்தாள்.

அவளது தந்தை வழியில் இவளுக்கு மாமா முறை வயது நாற்பதை தொடப் போகிறது.

உறவுகளே வேண்டாம் என்று தள்ளி வந்து இருப்பவளின் கைப்பேசி எண் எங்கிருந்து கிடைத்ததோ இதோடு இது மூன்றாவது அழைப்பு.

முதல் தடவை பேசிய பின்னே அவன் நோக்கம் சரியில்லை என்று அழைப்பை ஏற்காமல் இருக்க ஒரு நாள் வீட்டிற்கே வந்து நின்றிருந்தான்.

வாசலோடு அவனைத் திருப்பி அனுப்புவதற்குள் அவளுக்குத் தான் போதும் போதும் என்றானது.

இது மாதிரியான சூழ்நிலைகளில் எல்லாம் தன்னை தனியே விட்டுச் சென்ற பெற்றோரின் மேல் கோபம் கோபமாய் வரும் அவளுக்கு. தரையை வெறித்திருந்தவளுக்கு மரத்தின் சிறு குச்சி கண்ணுக்குத் தெரிய அதை எடுத்து மரத்தில் ஓங்கி ஓங்கி குத்த ஆரம்பித்திருந்தாள்.

விடுமுறை தினமென்பதால் ஆள் நடமாட்டமே இல்லாமல் இருக்க யாரைப் பற்றிய சிந்தனையுமின்றி ஆத்திரம் தீர குத்தியவள் குச்சியை கீழே போட்ட போது அவளது கை சிவந்து போயிருந்தது.

அனைத்துமே சில நொடிகள் தான் பின் மீண்டுமாய் தனதிடத்தில் ஒன்றுமே நடவாதது போன்று அமர்ந்து விட்டிருந்தாள்.

மனதின் புழுக்கம் கொட்டித் தீர்க்க மடி கிடைக்காத சாபம் சில நேரங்களில் அவளை இப்படி மூர்க்கமாக்கி விடும்.

அவினாஷ் வந்ததும் சாதாரணம் போல் எழுந்து சென்றவளை தனதறையின் ஜன்னல் வழி இமைக்காமல் பார்த்திருந்தான் அதிரன்.

ஞாயிற்று கிழமைகளில் எவ்வித சலசலப்பும் இல்லாமல் இருக்கும் என்பதால் எப்போதுமே காலையில் வந்து ஏதேனும் வேலைகள் இருந்தால் முடித்து விட்டு கல்லூரியை ஒரு முறை பார்த்துச் செல்வது அவன் வழக்கம்.

தனதறையில் இருந்தவனுக்கு பழக்கப்பட்ட குரலாய் தோன்றியதில் எழுந்து ஜன்னல் அருகில் வர தேவ ரஞ்சனாவின் செயல்கள் அவள் மன அழுத்தத்தின் தீவிரத்தை அவனுக்கு உணர்த்தியது.

என்னவோ அவள் அவனுக்குள் அவனறியாமல் நுழைந்து கொண்டே இருக்கிறாள்.

இதன் பின் அலுவலகத்தில் அவ்வப்போது தேவாவை கவனிப்பது அதிரனின் வாடிக்கை ஆனது.

நாட்கள் நகர அன்றைய தினம் நஞ்சுண்டானின் பிறந்த தினத்தையொட்டி ஃபேப்ரிக் உற்பத்திப் பிரிவில் புது யூனிட் தொடங்குவதற்கான விழா ஏற்பாடு செய்யப்ட்டிருந்தது.

தொழிற்சாலை ஊழியர்களோடு மேல்நிலை அலுவலக ஊழியர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. இந்த சோஷியல் கேதரிங் எல்லாம் தேவாவிற்கு பெரும் அலர்ஜி.

முந்தைய தினமே வசந்திடம் சென்று இதற்கெல்லாம் வர வேண்டுமா என்று கேட்க அவனோ உங்கள் விருப்பம் ஆனால் முக்கியமானவர்களுக்கு மட்டுமே அனுமதி அதில் நீங்களும் ஒருவர் என்று நாசூக்காய் கூறியிருந்தான்.

வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாய் மதியத்திற்கு மேல் அலுவலகத்தில் இருந்து கிளம்பியவள் தொழிற்சாலை இருக்கும் பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்திலேயே கிளம்பியிருந்தாள்.

சிறப்பு விருந்தினராய் அமைச்சர் ஒருவர் வந்திருக்க எங்கும் தோரணங்களும் மக்கள் கூட்டமும் என அப்பகுதியே பரபரப்பாய் இருந்தது.

இத்தனை நாட்களில் வசந்தைத் தவிர யாரிடமும் பெரிதாய் பேசிப் பழகியிருக்காதவளுக்கு இன்று தனியாய் நிற்பதைத் தவிர வேறு வழியில்லால் போனது.

வசந்தோ பம்பரமாய் சுழன்று வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தான்.

குறித்த நேரத்தில் விழா ஆரம்பித்திருக்க காத்யாயினியும் வந்திருந்தார்.

விழா முடிந்து அனைவருக்கும் இரவு உணவிற்கும் ஏற்பாடு செய்யப் பட்டிருக்க அனைத்தும் முடிந்து கிளம்பும் போது மணி இரவு ஒன்பதைத் தாண்டியிருந்தது.

அத்தனை நேரமும் அங்கிருந்தது வேறு தலை விண் விண்னென வலியெடுக்க ஒட்டு மொத்த கடுப்போடு வண்டியின் அருகில் சென்றவளுக்கு அடுத்த சோதனையாய் இரு சக்கரமும் பஞ்சராகியிருந்தது.

அதிலும் யாரோ வேண்டுமென்றே செய்திருப்பது தெளிவாய் புரிந்தது. என்ன செய்வதென யோசித்தவளாய் கைப்பேசியை எடுக்க அதுவோ ஒரு சதவிகித ஜார்ஜில் எப்போது வேண்டுமானாலும் உயிரை விடக் காத்திருந்தது.

யாரிடமாவது சென்று உதவிக் கேட்கலாம் என்று சிறிது தூரம் உள்ளே நடந்த போது எதிரில் வந்த கார் அவளருகில் நின்றிருந்தது.

யார் என்பதாய் தேவா அலட்சிய பார்வைப் பார்க்க பின்பக்க ஜன்னல் கதவைத் திறந்து பார்த்த காத்யாயினியை கவனித்தவள் சிநேகமாய் புன்னகைத்து அருகில் வந்தாள்.

“நீ என்ன தேவா இங்கே?”

“நான்.. உங்க கம்பனியில் தான் வேலை பாக்குறேன் மா.”, என்றவளின் பார்வை அப்போது தான் ஓட்டுநர் இருக்கையில் இருந்த அதிரனைக் கவனித்தது.

காத்யாயினியுமே மகனைத் தான் பார்த்திருந்தார். இந்த விஷயத்தை நீ சொல்லவில்லையே என்பதான கேள்வியைத் தாங்கிய பார்வை. அதை தவிர்க்க நினைத்தவனாய்,

“என்ன ப்ராப்ளம்?”

“பைக்கை யாரோ பஞ்சர் பண்ணிருக்காங்க சார். போன் சார்ஜ் இல்ல அதான் உள்ளே யார்கிட்டேயாவது ஹெல்ப் கேட்க போறேன்.”

“ஏற்கனவே நேரமாச்சு நீ வா தேவா. நாங்களே ட்ராப் பண்றோம்.”, என்றதில் அதிரன் தாயை முறைத்தான். அதைக் கண்டு கொள்ளாதவராய்,

“வாம்மா ஒரு பத்து நிமிஷம் அதிகமானால் எங்களுக்கு ஒண்ணுமில்ல.”, என்ற நேரம் முன்னிருக்கை ஜன்னலைத் திறந்தவனாய் சாருகேஷ்,

“ஆமா ஹெச் ஆர் மேம் வாங்க..”, என்றதில் ஒரு நொடி பின் நகர்ந்தவள் அவனது முகத்தை நினைவு கூர்ந்தவளாய் அதிரனின் அனுமதிக்காக அவனைப் பார்த்தாள்.

“கெட் இன்.”, என்ற அவனின் குரலில் காரைச் சுற்றி மறுபுற கதவைத் திறந்த போது நந்தினி வேண்டா வெறுப்பாய் நகர்ந்து அவளுக்கு இடமளித்தாள்.

“அப்பறம் ஹெச் ஆர் மேம் எப்போ காலேஜை விட்டு போனீங்க? சொல்லவேயில்ல.”

“சொல்லியிருந்தா என்ன பண்ணிருப்ப?”, என்றவள் எப்போதும் போல் பேசிவிட்டு சூழ்நிலை உணர்ந்து வாயை மூடிக் கொண்டாள்.

“கம்பெனி முதலாளியவே இப்படி மிரட்டுறீங்க பார்த்தீங்களா?”

“ஐ அம் சாரி.”

“ஐயோ நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். அண்ணா தான் ஓனர் நான் இல்லை.”, என்றவன் புன்னகைக்க கண்ணாடி வழி தனக்கு பின் இருந்தவளை நொடிப் பார்வை பார்த்து சாலையில் கவனம் பதித்தான் அதிரன்.

“ஏன் தேவா சொந்த ஊரே இது தானா?”

“இல்ல மேம் திருப்பூர் பக்கம் கிராமம். அப்பா இங்கே வேலை விஷயமா வந்ததில் இங்கேயே செட்டில் ஆகிட்டோம்.”

“சொந்த பந்தமெல்லாம்?”

“எல்லாருமே அங்கே தான். ஆனால் பெருசா டச்சில் இல்ல.”, என்றவள் பேச்சை முடித்துக் கொள்ள நினைப்பது அதிரனுக்கு நன்றாகவே புரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!