Skip to content
Post Views: 2,271
அந்த அப்பத்தா சொன்ன இடத்திற்கு சென்று பார்த்தால், அங்கே காடு மண்டி கிடந்தது. இதுக்குள்ள என்ன இருக்குன்னு எப்படி தெரியும் என்று மலைத்து போய் நின்று விட்டனர்.
சௌந்தர் தான் இரண்டு ஜேசிபிகளுக்கு ஏற்பாடு செய்தார். மெதுவாக சுத்தப்படுத்தி பார்க்கையில், அங்கே சிதிலமடைந்த நிலையில் ஒரு சிறு கோவில் இருந்தது.
Advertisement
“என்னப்பா இப்படி விட்டுட்டீங்களே?” என்றார் கந்தசாமி அனைவரையும் பார்த்து.
“நெஞ்சமெல்லாம் பதருதய்யா..”
Advertisement
Advertisement
அதற்குள் இருட்ட தொடங்கவே,
“இருட்டுல பூச்சி பொட்டு இருந்தா கஷ்டம். நாளைக்கு காலையில எல்லாரும் திரும்ப இங்க வந்துடுங்க. மிச்சத்தை நாளைக்கு பார்த்துக்கலாம்” என்றார் சௌந்தர்.
Advertisement
அனைவரும் கனத்த மனதுடன் களைந்து சென்றார்கள்.
பல முறை மாலதி குடும்பத்தினருக்கு நன்றி கூறிவிட்டு, பூம்பாவையும் ஸ்ரீகாந்த்தும் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினார்கள்.
மறுநாள் காலை ஆறு மணிக்கெல்லாம் அனைவரும் அந்த கோவில் இடத்திற்கு வந்து விட்டார்கள். பூம்பாவையும் பிள்ளைகளும் ஸ்ரீகாந்த்துடன் இணைந்து கொண்டார்கள்.
இவர்கள் சென்று இறங்குகையில், ஏற்கனவே அங்கே கந்தசாமியும் சௌந்தரும் நின்றுகொண்டிருந்தார்கள்.
தாங்கள் பொறுப்பேற்ற பணியை முடிப்பதில் அவர்கள் காட்டிய உறுதியும் அர்ப்பணிப்பும் ஸ்ரீகாந்த் மனதை வியப்பில் ஆழ்த்தியது. இப்பொழுது மரியாதையுடன் சௌந்தரை பார்க்க ஆரம்பித்தார்.
மற்ற பங்காளிகளும் சிறிது நேரத்திலே வந்து சேர்ந்தார்கள். சௌந்தர் அந்த இடத்தை சுத்தம் செய்வதற்கு ஆட்களை வர சொல்லி இருந்தார் .
இந்த கோவில் இருக்கும் இடத்தை கூறிய அப்பத்தாவிற்கு தொன்னூரு வயதாகிறது. அவரையும் ஒரு ஆட்டோ பிடித்து அழைத்து வந்து விட்டனர்.
“ஆத்தா.. எங்களை மன்னிச்சிருத்தா..” என்று கூவிக்கொண்டே வந்தார் அந்த மூதாட்டி.
“இப்படி உன்னை இந்த நிலைமையில விட்டுபுட்டோமே” என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டார்.
“இங்க பாரு கிழவி, நிறுத்து உன் ஒப்பாரிய.. எல்லாருமா சேர்ந்து தானே விட்டுட்டீங்க.. இப்ப அவளா, உங்களை காப்பாத்த தன்னை வெளி காட்டி இருக்கா.. ஒழுங்கா எல்லாத்தையும் சீர் செஞ்சு அவளை கும்பிடுங்க.. இனியாவது புத்தியோட பொழைங்க” என்றார் கந்தசாமி கண்டிப்பாக.
ஆட்களோடு ஆட்களாக இவர்களும் சேர்ந்து சுத்த படுத்தவும், வேலை சீக்கிரமாக நடந்தது. அது ஒரு சிறிய கோவில் தான். பத்துக்கு பத்து இடத்தில் கட்டப்பட்டிருந்தது.
கர்பகிரஹத்தில் அம்மன் சிலை இருந்தது. கோவில் வாயிலில் சூலம் ஒன்று இருந்தது. சுவர் எல்லாம் மிகவும் மோசமான நிலைமையில் இருந்தது.
அம்மன் சிலையும் சூலமும் மட்டும் அப்படியே இருந்தது. எந்த சேதாரமும் இல்லை.
மதியத்திற்கு மேல் அனைவரும் அங்கேயே அமர்ந்து பேச ஆரம்பித்தார்கள்.
கோவிலை சீர் படுத்தி கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும் என்று சௌந்தரிடம் கேட்டார் ஸ்ரீகாந்த்.
“சின்ன கோவில் தானே, அஞ்சாறு லட்சத்தில் செஞ்சிடலாம். நீங்க பங்காளிங்க எல்லாம் கலந்து பேசிட்டு சொல்லுங்க”
நாள் கடத்த அங்கே யாருக்கும் விருப்பமில்லை.
“தெரியாம இருந்தப்ப சரி.. இப்ப சாமி இருக்கிறது தெரிஞ்சு சும்மா இருக்க முடியாதே.. படுத்தா தூக்கம் வராதுங்க.. நாம பங்காளிங்க இப்பொழுதைக்கு பன்னெண்டு குடும்பம் இருக்கு.. மத்தவங்க எல்லாம் தொடர்புல இல்லை.. அவங்களை தேடி கண்டுபிடிக்க நேரமுமில்லை.. நாம ஆளுக்கு கொஞ்சம் போட்டு செஞ்சுடலாம்” என்றார் ஒருவர்.
இருக்கும் குடும்பங்களுமே அவ்வளவு செழிப்பாக இருப்பதாக தெரியவில்லை. இருப்பதில் ஸ்ரீகாந்த் குடும்பம் தான் கொஞ்சம் சொல்லி கொள்வதை போல இருந்தார்கள்.
“உங்க ஆத்தாவை இனியாவது கெட்டியா பிடிச்சுக்கோங்க மக்கா.. அவ உங்கள எல்லாம் கரை சேர்த்திடுவா” என்றார் கந்தசாமி.
“ஒவ்வொருத்தரும் எவ்வளவு கொடுக்க முடியும் சொல்லுங்க.. மீதம் ஆகுற செலவை நான் கொடுத்திடறேன்” என்றார் ஸ்ரீகாந்த்.
அதுவே அவர் மீது அனைவர்க்கும் நன்மதிப்பை கொடுத்தது.
கோவிலை சுத்த படுத்துகையிலே எல்லார் குடும்பங்களும் வந்து சேர்ந்து விட்டார்கள்.
ஒரு பெண்மணி தன்னுடைய கம்மலை கொடுத்து, “இதை எங்க பங்கா வச்சுக்கோங்க” என்று முதலில் கொடுத்தார். பின் அவரவர் கையில் உள்ளதை எல்லாம் சேர்த்து மூன்று லட்சம் சேர்ந்தது. “மீதம் ரெண்டு லட்சத்தை நான் ஏற்பாடு பண்ணி தரேன் சார். நீங்க உடனே வேலையை ஆரம்பிங்க” என்றார் ஸ்ரீகாந்த் சௌந்தரிடம்.
ஒரே வாரத்தில் கோவிலை புதுபித்து கொடுத்து விட்டார் சௌந்தர்.
சிறிய அளவில், ஒரு ஹோமம் வைத்து கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்தனர். ஹரிஹரனுக்கு தான் அழைத்து தேதியை குறித்தார்கள்.
பூஜைக்கு இரண்டு நாட்கள் முன்னமே சிவங்கரி, மிருதுளா குடும்பத்துடன் வந்து சேர்ந்தார்.
கோவிலுக்கு பெயர் பலகை ரெடி செய்வதற்காக அந்த அப்பத்தாவிடம் சென்று கேட்டனர். அவரோ ஆத்தான்னு தான் கூப்பிடுவோம் என்றுவிட்டார்.
சௌந்தர் கோவிலின் பழைய மணி, பலகைகள் அனைத்தையும் ஒரு பக்கமாக போட்டிருந்தார்கள். அதில் பாப்போம் என்று கூறினார்.
தூசி படிஞ்சு இருந்து இரு தகர பலகையை எடுத்து அதை சுத்தம் செய்து நீர் ஊற்றி கழுவினார்கள்.
“ஸ்ரீ காந்தலட்சுமி தாயார் “ என்ற பெயர் அதில் தெரிந்தது.
பெயரை படித்ததும் உடம்பெல்லாம் சிலிர்த்துவிட்டது ஸ்ரீகாந்திற்கு…
——————–
error: Content is protected !!