அந்த கொடுங்கனவிலிருந்து பதறி விழித்தெழுந்தான் அமிழ்தினியன்!! முகமெல்லாம் வியர்வை முத்துக்கள் அரும்பியிருக்க, இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது!! தலையை யாரோ சுத்தியலை வைத்து அடிப்பது போல் வலித்தது!!
நிதானத்துக்கு வர முழுதாய் அரை மணி நேரம் தேவைப்பட்டது. இத்தனை வருடங்கள் கழித்தும் இந்த கனவு நிதம் தன்னை பின்தொடர்ந்து வருவது ஒரு வித பயத்தை அவனுக்குள் உண்டு செய்தது. நாள்தோறும் அந்த கனவின் மீட்சி தன்னை கொல்லாமல் கொன்றுக் கொண்டிருப்பது புரிந்தது.
அதிலிருந்து வெளி வரும் நோக்கில் தலையை இப்புறமும் அப்புறமும் உலுக்கியவன் எழுந்து அன்றாட அலுவலுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டான்.
அமிழ்தினியன் பெற்றவர்களுக்கு ஒரே பையன். பொறுப்பானவன். பெங்களூரு இஸ்ரோ தலைமையகத்தில் விஞ்ஞானியாய் பணிபுரிபவன்! ஆறடி, ஆஜானுபாகுவான உடல், கம்பீரமான தோற்றம் இப்படி எல்லா கதையின் நாயகர்களை போல் இருப்பானா என்று சொல்ல முடியாது, ஆனால் நிச்சயம் அவன் தோற்றத்தில் ஒரு தெளிவு உண்டு; கண்களில் ஒரு கனிவு உண்டு; செயலில் ஒரு அழுத்தம் உண்டு!!!
வேலைக்கு கிளம்பிச் சென்றவன் நேரே திரிபுரசுந்தரியின் வீட்டில் வண்டியை நிறுத்தினான். இதுவும் அவன் அன்றாட அலுவலில் ஒன்று. சுந்தரியை அவள் காலேஜில் கொண்டுச் சென்று விட, கூட்டிக் கொண்டு வர, அவள் ஷாப்பிங் செல்ல, நண்பர்களை காணச் செல்ல அவள் வேலைக்கு அமர்த்தியிருக்கும் சம்பளமில்லா ஓலா கேப் அவன்!!
வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் டாப்ஸ், நீல ஜீன்ஸ், காதில் வளையல் அளவுக்கு ஒரு பெரிய கம்மல், கர்ல் செய்து விரித்து விடப்பட்ட கூந்தல், ஒரு அடி உயரத்துக்கு ஹை ஹீல்ஸ் சப்தமிக்க வந்தவள், தன்னை முறைத்துக் கொண்டு காரில் அமர்ந்திருந்தவனை காணவும் குனிந்து தன் உடையை ஒரு தடவை பார்த்தாள்.
“அதிப்பா! வாட்சப்? வொய் முறைச்சிபையிங்? இன்னைக்கு எல்லாமே கரெக்டா தானே இருக்குது? நோ ஷார்ட் ஸ்கர்ட்(short skirt), நோ டியுப் டாப்(tube top)? அப்புறம் என்ன?”
“நீ முதல்ல வண்டியில ஏறு”
விசிலடித்துக் கொண்டே ஏறியவள், காரில் ஏறியதும் யேசுதாசை வழிய விட்டாள். “ராஜ ராஜசோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் பூவே காதல் தீவே” என யேசுதாஸ் காரையும் மனதையும் நிறைக்க, கூட சேர்ந்து விசிலிலேயே ஹம் செய்தபடி வந்தாள். அமிழ்தினியன் அவளை திரும்பி திரும்பி பார்த்து முறைத்தபடி வந்தான். ஓரக்கண்ணால் அவனை பார்த்தும் பார்க்காதபடி அவள் விசிலடிக்க, பட்டென்று பாட்டை நிறுத்தினான்.
“என்னாச்சு அதிப்பா?”
“இன்னும் அந்த ஷேடோ கூட கான்டாக்ட்ல தான் இருக்கியா?”
“அச்சச்சோ! மறந்தே போயிட்டேன்” தன் பேன்ட் பாக்கேட்டிலிருந்து ஆப்பிள் போனை எடுத்தவள், கேமராவை ஆன் செய்து உதடுகளை குவித்து வெற்றிக்குறி காட்டி ஒரு செல்பியை எடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை திறந்து அதில் தன் போட்டோவை ‘On the way to College’ என்று இடுகையிட்டவள் அடுத்து ரீல்ஸ் எடுக்கத் தயாராக அவள் கையிலிருந்த போனை அமிழ்தினியன் பறித்தான்.
“அதிப்பா!!”
“நான் கேட்டது உனக்கு கேட்கலை இல்லை?”
“கேட்டுச்சு கேட்டுச்சு! நீ ஏதோ கள்ளக் காதல் மாதிரி கேட்குற? இந்த மாதிரி சில்லி க்வெஸ்டீன்க்கு என்னால ஆன்சர் பண்ண முடியாது”
“ஓ சில்லி க்வெஸ்டீனா? சரி ஒகே விடு”
“பின்ன என்ன?நான் பல தடவை கேட்டாச்சு. நான் ஷேடோ கூட பேசுறதுல உனக்கு என்ன பிரச்சனை?”
“நானும் பல தடவை உன் கிட்ட சொல்லியாச்சு. அவன் யாரு எவன்னே தெரியாது”
“அவன் இல்லை. அவள். ப்ரோபைல்ல அப்படி தான் போட்டிருக்குது”
“அது உண்மைன்னு உனக்கு தெரியுமா? கண்டிப்பா இது ஃபேக் ஐடி தான்”
“அதிப்பா! நான் ஷேடோ கிட்ட பேச ஆரம்பிச்சு கிட்டத்தட்ட பத்து வருஷம் மேல ஆக போகுது. மெயில்ல பேச ஆரம்பிச்சது. இப்போ பேஸ்புக்ல பேசிக்கிறோம். அப்போ விளையாட்டா தான் செஞ்சிட்டிருந்தேன். ஆனால் இப்போ அப்படி இல்லை! அவங்களுக்கு என்னோட இன் அண்ட் அவுட் எல்லாமே தெரியும். அவங்க பேர் போலவே அவங்க என் ஷேடோ தான். எனக்கு அவங்க மேல முழு நம்பிக்கை இருக்குது”
ஒரு நொடி அழுத்தமாக கண்களை மூடி திறந்தவன் “நீ என்ன செஞ்சிட்டிருக்கேன்னு உனக்கு புரியுதா இல்லையா? இருட்டுல நிஜத்தோட நிழலை தேடுற!! நீ காத்துல வரைஞ்சிட்டிருக்கிற கோட்டைக்கு வாசல் இல்லை, வடிவம் கூட கிடையாது”
“அதிப்பா! நீ சூப்பரா கவிதை மாதிரி பேசுற தெரியுமா? பேசாம நீ ஒரு ரைட்டர் ஆயிடேன்”
“ரிபு! முதல்ல அந்த ஷேடோ கூட பேசுறதை நிறுத்து. இல்லைனா உங்க அம்மா கிட்ட சொல்லிடுவேன்”
அவள் சிரித்தாள். அவன் சொல்ல மாட்டான் என்று அவள் அறிவாள்.
“உனக்கு ஒரு வாரம் டைம் தரேன். அதுக்குள்ள நீ நிறுத்தலேனா அந்த ஷேடோ யாருன்னு நான் ட்ரெஸ் பண்ண ஆரம்பிச்சுடுவேன். அப்போவாது உனக்கு உண்மை தெரிய வரும்”
அவன் குரலின் அளவு அடங்கி அமைதியாய் ஒலித்தாலும், அதில் ஒரு அழுத்தம் இருந்தது. அந்த அழுத்தம் தான் திரிபுரசுந்தரியை அடக்கும் திருமந்திரம். குரலை உயர்த்தி பேசினாலோ, கோபப்பட்டாலோ பதிலுக்கு தானும் கோபப்பட்டு அவனை வென்றிட முடியும். ஆனால் அவனின் இந்த அழுத்தம் மட்டுமே அவளால் கடந்து வர முடியாத ஒன்று.
மறுமொழி ஏதும் கூறாமல் அமர்ந்திருந்தவள் காலேஜை நெருங்குவதற்கு முன்பே வண்டியை நிறுத்தக் கோரினாள்.
“போன வாரம் நீ வராதப்போ, நான் பஸ் ஸ்டாப்லேர்ந்து நடந்து போயிட்டே “மை மார்னிங் வாக் டு காலேஜ் #stayfit” னு ஒரு ரீல்ஸ் போட்டேன் பாரு. 600 பிளஸ் லைக்ஸ் தெரியுமா ? அதான் இன்னைக்கும் போடப் போறேன்”
அவன் பதில் பேச வருவதற்குள் முந்திக்கொண்டு, “எனக்கு காலேஜ் டைம் ஆச்சு. பை அதிப்பா” என்றபடி சுருள் முடி காற்றில் பறக்க ஓடிச் சென்றாள்.
அவள் செல்வதை பார்த்துக்கொண்டிருந்தவன் சிரித்தபடி காரை கிளப்பினான்.
வேலை பார்க்கும் இடத்தில், வாழ்க்கையில் பல்வேறு காலகட்டத்தில் எத்தனையோ சவால்களை சந்தித்தவனுக்கு ரிபுவை சமாளிப்பது மட்டுமே ஆக பெரிய சவாலாக இருந்தது. இருந்தும் ‘ரிஸ்க் எடுக்கிறது எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி’ என்று அதில் தான் அவனுக்கு ஈடுபாடு அதிகம்.
திரிபுரசுந்தரி இந்த உலகத்தில் உதயமான முதல் நாளிலிருந்து அவளை பார்த்துக்கொண்டிருக்கிறான். அவள் பிறந்த அன்று நடந்தது இன்றும் அவன் நினைவு புத்தகத்தில் மயிலிறகாய் குட்டி போட்டு வளர்ந்து வருகிறது !
அன்று அவனுக்கு பிறந்தநாள். புதுத் துணி போட்டு கோவிலுக்குச் சென்று வந்த பின் மிட்டாய் எடுத்துக் கொண்டு அவன் பள்ளிக்கு சென்ற பத்தாவது நிமிடம் அவன் தந்தை பள்ளிக்கு வந்து அவனை அழைத்துச் சென்றார். பாகீரதி அம்மாவுக்கு குழந்தை பிறக்க போகிறதென்றும், அவனும் அந்த நேரத்தில் அங்கிருக்க வேண்டுமென்றும் அமிழ்தினியனின் அப்பா கேட்டுக்கொண்டார்.
அமிழ்தினியனுக்கு சரியான கோபம்! தன் பிறந்தநாளை நண்பர்களுக்கு மிட்டாய் கொடுத்துக் கொண்டாட முடியாமல் போனதேயென்ற கோபம்!! அந்த கோபத்திலேயே அமர்ந்திருந்தவன் கையில் கொண்டு வந்து வெள்ளை துணியில் சுற்றப்பட்ட ஒரு பஞ்சு பொதியை அவன் அப்பா வைக்க, மெய்மறந்து போனான் அமிழ்தினியன்! குட்டி கை, காலுடன் குட்டியாய் கொட்டாவி விட்டபடி இருக்கும் அந்த வெள்ளை எலிக்குட்டியை ஆர்வத்துடன் தொட்டுப் பார்த்தான். வீட்டிற்கு ஒரே பிள்ளையாதலால் ஒரு குட்டி குழந்தையின் ஸ்பரிசம் அவனுக்கு புதிது. அந்த ஸ்பரிசம் அவனுக்குள் அளவிட முடியாத ஆனந்தத்தை அள்ளிக் கொடுத்தது!
“இவ இனிமே உன் பொறுப்பு. நீ பெரிய புள்ளை தானே? நீ தான் இனிமே இவளை பத்திரமா பார்த்துக்கணும் சரியா?” தந்தையின் சொற்கள் அவன் அடிமனம் வரை சென்று கல்லிலிட்ட சிற்பமாய் பதிந்துவிட்டது.
அன்று அவள் விரலை பிடித்தவன் அதன் பின் என்றும் அவள் கை பிடித்தே நடந்தான். சிறு வயதில் குழந்தைத்தனமாய் ஓட்டி உறவாடினாலும், ஒரு பிராயம் வந்த பின் நட்பையும் தாண்டி அவள் மீதான தன் வரையறை தெரிந்தே நடந்தான். அவளாக வந்து அவனிடம் ஒட்டிக்கொண்டு பேசினாலும் நாசுக்காய் அதை தவிர்த்து விடுவான். தங்கள் நட்பை யாரும் தவறாய் எடுத்துக் கொள்ள கூடாதென்று நினைத்தான். தன்னால் அவள் மீது ஒரு இழி சொல் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தவன், அவளின் அந்தரங்கத்துக்குள் (Personal space) நுழையாமல் அதே சமயம் அவளுக்கு எல்லாமுமாய் இருந்து வந்தான். அவளும் இவனிடம் சொல்லாமல் இவனை கேட்காமல் எந்த முடிவும் எடுக்க மாட்டாள், அந்த ஷேடோ தவிர….
ஷேடோ…..ஷேடோ….
நினைக்க நினைக்க அமிழ்தினியனுக்கு கோபமே மிஞ்சியது, ஆனால் கோபத்தை காட்டுவது அவன் இயல்பல்ல. அவளை அவள் வழியில் சென்று தான் சரிக்கட்ட வேண்டுமென்பது அவன் கற்றுக்கொண்ட ஒன்று.
இந்த ஷேடோவுக்கு சீக்கிரம் ஒரு தீர்வுக் காண வேண்டும். முதலில் ஏதோ விளையாட்டுத்தனமாய் அவள் அந்த ஷேடோவுடன் பேசிக்கொண்டிருப்பதாய் எண்ணினான். அவள் ஷேடோவுக்கு அனுப்பும் மெயில்களை அவனும் பார்த்திருக்கிறான். அந்த அளவுக்கு அவள் ஒன்றும் மறைத்து வைப்பதில்லை தான். ஒரு நாள் விளையாட்டாய் அவளின் மெயிலை பாஸ்வார்ட் போட்டு அவன் லாக் செய்துவிட, திரிபுரசுந்தரி திணறி விட்டாள். சில முறை அவனிடம் பாஸ்வேர்ட் கேட்டவள் அவன் கூறவில்லை என்றவுடன் கையில் கிடைத்ததை தூக்கிப் போட்டு உடைத்து, அழுது, கத்தி கூப்பாடு போட ஆரம்பித்து விட்டாள்.
அரண்டு விட்டான் அமிழ்தினியன்!!
அன்று தான் இந்த பிரச்சனையின் தீவிரத்தை அவன் உணர்ந்தான். அவள் எந்த அளவுக்கு இந்த பழக்கத்துக்கு அடிமையாய் மாறியுள்ளாள் என்பது புரிந்தாலும் இதை அவள் அன்னையிடம் தெரியப்படுத்த தயங்கினான். இவன் மீதுள்ள நம்பிக்கையே அவள் இவனிடம் ஒளிவு மறைவின்றி இருப்பது. பாகீரதியிடம் இதை தெரியப்படுத்தினால் எங்கே அந்த நம்பிக்கை அவநம்பிக்கையின் ஆரம்ப புள்ளியாய் மாறி, அவனிடமும் அவள் காரியங்களை மறைக்க ஆரம்பித்து விட்டால்??
இந்த பயம் ஒன்றே அவள் அன்னையிடம் இது பற்றி பேசாதிருந்தான். இந்த பயம் ஒன்றிற்கே அவன் ஷேடோ பற்றிய ஆணிவேரை ஆராயாமல் இருந்ததற்கும் காரணம்!
ஷேடோ…..அடேய்……மனதிற்குள் அந்த ஷேடோவை வறுத்தெடுத்தவன் வண்டியை நிறுத்திவிட்டு அலுவலகத்துக்குள் நுழைந்தான். தன் போனை எடுத்து பார்த்துக் கொண்டேச் சென்றவன், ‘ரிபு ராக்ஸ்’ என்ற ரீல்ஸ் அறிவிப்பு பார்க்கவும் அதை சொடுக்கினான்.
“Excuses don’t burn calories” என்று தலைப்பிட்ட ரீல்சில் ஒரு ஹாய் சொல்லிவிட்டு முனைப்புடன் நடந்துக் கொண்டிருந்தவளை காண முடிந்தது. அதன் கீழே அத்தனை விருப்ப குறியீடுகள், கருத்துக்கள். அவளின் செய்கையை சிரித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தவன் அந்த ரீல்ஸ்க்கு வந்திருந்த கருத்துகளை பார்க்கவும் அவன் சிரிப்பு கோபமாய் மாறியது
அதில் ஒருவன் “What a feature U have!!” என்று இரண்டு இதயத்துடன் கருத்திட்டிருக்க, அதற்கு திரிபுரசுந்தரி நன்றியுரைத்திருந்தாள் வெட்க ஸ்மைலியுடன் (??).
இல்லாத தூணை கை முஷ்ட்டி இறுகக் குத்தியவன், தன் அலுவலை கவனிக்கச் சென்றான், மாலையில் அவளை கவனித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன்….
தன் லேப்டாப்பை திறந்து அதை உயிர்பித்தவன் தன் அலுவலக மின்னஞ்ல்களை படித்துவிட்டு, தன் தனிப்பட்ட முகவரிக்கு வந்திருக்கும் மின்னஞ்ல்களை படிக்க ஆரம்பித்தான். அதில் ஷேடோ என்ற அஞ்சல் முகவரியை பார்த்ததும் அவனுக்குள் பரபரப்பு தொற்றிக்கொண்டது!! இது எப்படி சாத்தியம்?! அவனது அஞ்சல் முகவரி எப்படி கிடைத்தது??
அந்த மின்னஞ்லை திறப்பதற்குள் அந்த ஏசி அறையிலும் வியர்த்து விட்டது.அதிலிருந்தது ஒரே வரி தான்!!!
“ரிபுவை பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம். அவளை நான் பார்த்துக் கொள்கிறேன்”