பாட்டு சத்தமும், விசில் சத்தமும் எட்டுத்திக்கும் அந்த இருளை கிழித்து ஒழிக்க, அதை விட வர்ணம் பூசியது போல் நிறம் மாறி மாறி மிளிர்ந்தது மேகம்.
எண்ணென்ற துன்பங்கள் துயரங்கள் இருந்தாலும் இந்த ஒரு நாளுக்காக தான் உயிரோடு இருக்கின்றோம் என்ற ஆனந்த பூச்சை முகத்தில் ஒட்டி நின்றது அந்த பட்டாளம். சுமார் என்பது வயதுக்கும் மேற்பட்டோர் அவர்கள். முபத்துபேர் இருப்பர்.
கண்களில் ஆசை மின்ன, வாயிலிருந்து ஒரு பக்கம் சிலருக்கு எச்சில் கூட வழிந்தது அவர்கள் கண்ட காட்சியில். அவர்களுக்கு பின்னால் நாற்பது முதல் என்பது வயதுக்கு மேற்பட்டோர் முகத்தை மூடிக்கொண்டும், தலையில் துண்டை போட்டுக்கொண்டும் தங்கள் அடையாளத்தை மறைத்திருக்க, அவர்களை கவனிக்கும் நிலையிலா இருந்தனர் மற்றவர்?
இதில் விசில் சத்தமும், காதை செவிடாக்கும் கச்சேரி சத்தம் என எதுவும் மனதை உற்சாக படுத்த, அத்தனை மனிதருக்கும் முப்பதுகளில் இருந்தது போல் உற்சாகம். இருக்காதா பின்ன? பிறந்ததிலிருந்து ஆடலும் பாடலும் நிகழ்ச்சியை காண்பதற்காகவே தவமிருந்தவர்களின் வரமாய் இப்பொழுது தங்கள் கண் முன்னே விருந்து படைத்திருந்தனர் அவ்வூரின் இளைஞர்கள்.
ஊரில் திருவிழா என்று பேச்சை எடுத்த நாளிலிருந்து எதிர் எதிர் துருவங்களாக மீசையை முறுக்கி சுற்றிவந்த இளவட்டங்கள் தங்களுக்குள் இருந்த பாகுபாட்டை சில நாட்கள் ஒதுக்கி வைத்து, ஊர் பஞ்சாயத்தில் வாதாடி, சண்டையிட்டு பெண்களின் சாபங்களை எல்லாம் தாராளமாய் பெற்று அனுமதி வாங்கிவிட்டனர்.
அதன் பின்னரும் ஊர் மக்கள் விடவில்லை, “இந்தாருங்க காவாலி பசங்களா… இந்த கண்றாவி அம்புட்டும் ஊருக்கு வெளிய வச்சுக்கோங்க” என்றனர்.
“வெளிய தான கெழவி அதுக்கு மேல நாங்க பாத்துக்குறோம்” என்று அடுத்த வேலைகள் மடமடவென வேலைகள் களைகட்டியது ஊர் தலைவரின் தோட்டத்தில் வைத்து.
அது அயன்தென்கரை. மதுரை மாவட்டம் சோழவந்தான் என்னும் சிற்றூரின் அருகே அமைந்துள்ளது அந்த சிறிய கிராமம். எங்கு திரும்பினும் பசுமை நிறைந்த அழகிய வயல்விழிகள், நீண்ட நெடுத்த தென்னை மர தோப்புகள், மேய்ந்து திரியும் மந்தைகள், இயல்பான குணமுடைய மக்கள், சிறிய குட்டைகள், ஒரு பெரிய குளம் என அந்த ஊர் ஒரு அழகியல்.
தூய்மையான காற்றும், சற்று தூரத்தில் சீறிபாரிந்து ஓடும் வைகையாற்று நீரும் வற்றாத வளமையும், செழித்த செல்வமாய் நெற்பயிர் விளையும் அவ்வூரின் அழகை பாடாமல் போனது புலவர்களின் பிழையோ…?
“டேய் இங்க என்னடா பண்றீங்க?” வைக்கோலுக்கு பின்னர் இருந்து எட்டி பார்த்த இரண்டு சிறுவர்களை பிடித்த ராஜா என்றவன் அவர்களை நோக்கி நடக்கும் பொழுதே அவர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிட்டனர்.
“யார்ரா இவிங்க… எலும்பு தங்களை” தனக்குள்ளே புலம்பி ராஜா சிறுநீர் கழிக்க வந்த வேலையை முடித்து கூட்டத்திற்குள் ஒன்றிட நடந்தான்.
தூரத்திலிருந்து பார்க்கும் பொழுது மேடை தெரியவே இல்லை.
? தேகம்எங்கும்தேனூருது காமம்அவன்தேரோடுது
?
ராஜா மேடை பக்கம் சென்ற பொழுது கூட்டத்தை விலக்கிவிட்டு ஆறடி தேகம் ஒன்று நகர்வதை கண்டவன் முகத்தில் சிரிப்பு படர தானும் வேகமாக நடந்து அவனோடு இணைந்துகொண்டான்.
“என்ன மாப்பிள்ளை இம்புட்டு நேரம்?”
நண்பனின் குரலில் திரும்பாமல் மேலே நடந்தவன், “தலைவரை பாத்தாறேன் டா” பதிலோடு நடந்தான். கூட்டத்தை கடந்து சென்றவன் அங்கு அமர்ந்திருந்த பெரியவர்களை கண்டுகொள்ளாமல் மேடையை நெருங்கினான்.
அரைகுறையான ஆடையில் ஒரு ஆணோடு நெருக்கமாக ஆடும் அந்த பெண்ணை சிரிப்போடு ஏறிட்டான்.
இவனை ஏற்கனவே பார்த்துக்கொண்டிருந்தவள் கண்ணடிக்க வெட்க சிரிப்போடு பின்னந்தலையை தேய்த்து மைக்செட்டை நோக்கி நடக்க அவன் பின்னால் வந்த ராஜா மேடையை மட்டுமே கண் சிமிட்டாமல் பார்த்த நேரம்,
முன்னாள் சென்ற அவன் நண்பனோ அசையாமல் நின்று வேட்டியை மடித்து கட்டி மேடையில் மூலையில் நின்று தன்னை பார்த்து கவர்ச்சியான இதழ் அசைப்பை கொடுத்த அந்த பெண்ணுக்கு பறக்கும் முத்தம் கொடுக்க எத்தனித்த நேரம் ராஜா இடிக்க முன்னாள் இருந்த இரும்பு கம்பியை பற்றி நின்றவன் திரும்பி நண்பனை முறைக்க, “சாரி மாப்பிள்ளை” என்றான் ராஜா கண்களை சுருக்கி கெஞ்சலோடு.
மேடையில் காமத்தை தூண்டும் எண்ணத்தோடு ஆடிய அந்த பெண்ணோ இவன் அசிங்கப்பட்டதில் சிரிக்க, இவனும் பார்த்து சிரித்து வைத்தான் சமாளிப்பாக.
“யப்பா போ ப்பா… வழிய விடுடா”
“அளப்பறைய கூட்ட வந்துட்டானுங்க”
“போங்கடா அங்குட்டு” மாறி மாறி பின்னாலிருந்து குரல் கேட்க, அதுவரை அமைதியாகவே செல்ல நினைத்த அவன் எண்ணங்களோ மாறாக செயல்பட துவங்கியது.
பாதி மேடையை தாண்ட இருந்த அவன் கால்கள் அப்படியே நின்று மைக்செட் பக்கம் திரும்பினான் தெனாவெட்டாக.
“தேவா வாடா போவலாம்” ராஜா நண்பனை பிடித்து இழுக்க, ராஜாவின் கையை உதறி அப்படியே நின்றுவிட்டான்.
“என்ன பாக்க முடியாதுன்னு போக சொல்றாய்ங்க பங்கு”
ஆசிரியமாய் கூறியவன் கண்ணில் இருந்த அழுத்தம், அவன் ஏதோ முடிவோடு தான் உள்ளான் என்று உணர்த்த, “இப்ப அதுக்கு என்னங்குற?” என்றான் ராஜா கேள்வியாக.
இடது காலை பின்னால் தூக்கி வேஷ்டியை எடுத்து மடித்தது கட்டியவன், “அப்போ என்ன பாக்க வக்கிறது தான சரியா இருக்கும்?” திமிராக அவன் இதழ்கள் வளைய, அங்கு மைக்செட் பக்கம் அமர்த்தியிருந்த தன்னுடைய ஆளை பார்த்து புருவத்தை உயர்த்தி லேசாக தலையை அசைக்க, அடுத்த பாடல் ஒலித்தது.
பாட்டு துவங்க, மறித்து நின்ற இடத்திலிருந்து நகர்ந்த தேவானந்த், மேடை படியை நோக்கி முன்னேற, அவன் எண்ணத்தை புரிந்த அவன் நண்பர்கள் சிலர் வேகமாக தாங்களும் அவன் பின்னே சென்றனர்.
“டேய் என்னடா பண்றீங்க?” கூட்டத்திலிருந்த ஒரு கிழம் தன்னுடைய சத்தை மீறி கத்தியும் பயன் இல்லை. பத்து பேர் மேடையை அடைந்திருந்தார் அந்த சிறிய நேரத்தில்.
இவர்கள் வருவதை பார்த்த அந்த பெண் தான் ஏற்கனவே ஆடிக்கொண்டிருந்தவனோடு ஆட்டத்தை நிறுத்தி நின்றுவிட்டாள். அதற்குள் மேடையேறிய தேவ் மற்றும் அவன் நண்பர்கள் பாடலின் ராகத்திற்கு ஏற்றார் போல் தங்களுக்குள்ளேயே ஒட்டி உரசி ஆட,
ஒருவன் தன்னையே பெண்களாய் பாவித்து தன்னுடைய கைலியை தலையில் முக்காடை போல போட்டு ஆட, அவனை சுற்றி ஆடியது மற்ற ஆண்கள் கூட்டம். அவர்கள் ஆடியதை பார்த்து கூட்டத்திலிருந்த இளைஞர்கள் சிலர் ஆரவாரம் செய்ய, ஆட்டத்தின் வீரியத்தை கூடவும் நண்பர் கூட்டம் ஆட்டத்தின் சூட்டை ஏற்றியது.
சூடு பறக்க அவர்கள் ஆடியதை பார்த்த அந்த நடன பெண் இவர்களை நெருங்கி வந்து ஆட, அதுவரை ஒரு மயக்க நிலையில் இருந்த ஊர் மக்கள் அத்தனை பேரும் உற்சாகத்தில் எழுந்து ஆட துவங்கினர். தேவா நண்பன் ஒருவன் பாட்டை மாற்றுமாறு சைகை செய்ய அடுத்த பாடலும் ஓடியது.
?
உப்புக்கருவாடு ஊரவெச்சசோறுஏஉப்புக் கருவாடுஊரவெச்சசோறு ஊட்டிவிடநீபோதும்எனக்கு முத்தமிட்டநெத்தியிலமாா்புக்கு மத்தியிலசெத்துவிடத்தோணுதடி எனக்கு
கை கால்கள் வலிக்க அனைவரும் ஆட, கீழே இருந்த சிலர் இதற்காகவே கொண்டு வந்த செய்தித்தாள்களை தூள் தூளாக கிழித்து காற்றில் பறந்து ஆரவாரத்தை கூட்டியது. சிலர் கைபேசியில் வீடியோ எடுக்க, சிறியது முதல் பெரியது வரை அத்தனைக்கும் அடக்க முடியாத இன்பத்தில் கீழிருந்தே ஆட துவங்கினர்.
மேடையின் பின் பகுதியில் அடுத்த பாடல்களுக்காக காத்திருந்த சில நடன பெண்கள் தங்களையும் மறந்து மேடையில் இணைய சில இளைஞர்கள் மேடையில் ஏறி அவர்களோடு ஆட்டத்தில் மிதந்தனர்.
அதில் ஆரம்பத்தில் இருந்தே தேவ் மேல் கண்ணை பதித்திருந்தவள், கூட்டத்தில் மெதுவாக நழுவி அவனோடு சில நிமிடங்கள் ஆடிய பின்னர் எதிர்பாரா சமயம் அவன் கையை பிடிக்க, தீ சுட்டது போல் விலகி, “இந்தா புள்ள என்ன பண்ற நீ?” உறைநிலையில் விக்கித்தான்.
உதட்டை கடித்தவள், “என்ன மாமா நான் தொட்டா சந்தோசப்படுவன்னுல நினைச்சேன்”
“என்னது மாமாவா? போடி அங்குட்டு” எகிறிக்கொண்டு அவளை தீயாய் தேவ் முறைத்தான்.
உதட்டை சுளித்து, “போயா” என அந்த பெண்ணும் மீண்டும் கூட்டத்தில் இணைந்துவிட அப்படியே நின்ற தேவாவை பார்த்து அவன் நண்பன் பாட்டை மாற்ற கூறிவிட அடுத்த பாடல் ஒலிக்கவும் மீண்டும் துள்ளலுடன் களத்தில் இறங்கிவிட்டான்.
பெண் தொடவும் சுட்டது போல் விலகியவன் தான் நம் கதையின் நாயகன். தேவானந்த். இருபத்தி ஏழு வயதுடைய ஆண்மகன். பட்டப்படிப்பு முடித்து அது தொடர்பான வேலையில் போகாமல் இந்த ஊரே கதி என எந்நேரமும் இங்கேயே தங்கிவிடுவான்.
ஊரில் உள்ள முக்கால்வாசி வயது பெண்கள் அவனின் முறைப்பெண்கள் தான், தன்னை கடந்து செல்பவர்கள் அனைவரையும் விசிலடித்து சீண்டிய பிறகு தான் அடுத்த வேலையே துவங்கும்.
கிராமத்தினுள் மாநிறமாய் இருந்தாலும் ஸ்டைலாக, புல்லட்டில் செல்லும் நேரமெல்லாம் கூலிங் கிளாஸ் அணிந்து, தேவைப்படும் நேரத்தில் மட்டும் வேஷ்டி சட்டையோடு தங்களை பார்க்கும் நேரம் அழகாக விரியும் அவன் இதழ்களோடு, கண் சிமிட்டி வசப்படுத்துபவனை தங்கள் பக்கம் ஈர்த்ததில் அந்த பெண்களுக்கும் உள்ளூர குளிர்ச்சியாகவே இருக்கும் ஆனால் வெளியில் முகத்தை திருப்பிக்கொண்டு செல்வார்கள்.
“மாப்பிள்ளை ஊரே நம்மள பாக்குதா?” விக்கி விக்கி தேவ் ஆட, அவன் நண்பன் கை கால்களை வெட்டி ஆடிக்கொண்டே கூட்டத்தை பார்த்து ஒரு முறை சுற்றினான்.
“பங்கு மொத்த கண்ணும் இங்கன தான்” என குணா கூறவும் அப்படியே மூச்சு வாங்க நிற்காமல் இன்னும் சக்தியை திரட்டி ஆடியவனின் ஆட்டத்திற்கு ஈடாக அங்கு எவரும் இல்லாமல் போயினர்.
பரபரப்பும், உற்சாகமும் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம் பதட்டமாக கூட்டத்தினுள்ளே அத்தனை மனிதர்களையும் பிரித்து விட்டு ஓடி வந்த வேலு என்னும் வயதான ஒரு மனிதர் மேடையை நோக்கி பதட்டத்துடன் ஓடி வர, அவரை பார்த்துவிட்ட தேவ் ஆட்டத்தை நிறுத்திவிட்டு நண்பனின் தோளில் இருமுறை தட்டி கீழே இறங்கினான். அவனிடம் வந்து நின்ற மனிதர் முகத்தில் அப்பட்டமான பயம்.
“என்ன ண்ணே ஆச்சு?”
அவர் முகத்தில் வழிந்த வியர்வையை கேள்வியாய் பார்த்து, “ஏன் இந்த பதட்டம்?” நடுங்கிய அவர் கையை பிடித்து கூட்டத்திலிருந்து இழுத்து செல்ல பார்க்க அவர் அவன் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டார்.
“தம்பி… த… தம்பி” தயங்கியவரை பார்த்த பொழுதே புரிந்தது பெரிதாக ஏதோ ஒன்று நடந்துள்ளதென்று. கீழே நடப்பவற்றை பார்த்த நண்பர்களும் அமைதியாக கூட்டத்தை விட்டு நழுவி வந்தனர்.
“அண்ணே இப்போ சொல்ல போறியா இல்லையா?”
தேவ் சற்று குரலை உயர்த்த, “தம்பி நம்ம நம்ம வேந்தனுக்கு எந்த எடுபட்ட பயலோ ஒடம்பு மொத்தமும் வெட்டி போட்ருக்கானுங்க தம்பி” தலையில் அடித்து அவர் அழுகையை துவங்கும் முன்பு புயல் வேகத்தில் அவ்விடத்தை விட்டு ஓடினான் தேவா.
மொத்த உடலும் செயலற்ற உணர்வோடு வாகனத்தை உயிர்பித்தவன் நெற்றி வியர்வையால் நனைந்திருந்தது. அவன் பின்னால் குணா வந்து அமரலாம் என ஓடி வரும் முன்பே தேவாவின் வாகனம் இரவை கிழித்துக்கொண்டு காற்றில் பறந்தது.
“டேய் தேவா… தேவா” என கத்தியும் பயனிமால் போனது. அதற்குள் அந்த பெரியவர் இவனை கடந்து தேவாவை பின் தொடர்ந்து ஓட, ராஜா தன்னுடைய வண்டியை எடுத்து, “ஏற்றா சட்டுனு” வந்து நிற்க, அந்த பெரியவரையும் ஏற்றி தேவாவின் தோட்டத்திற்கு சென்றனர்.
உள்ளே நுழையும் பொழுதே முழுதாய் திறந்து கிடந்த தோட்டத்து கதவும் தாறுமாறாக சரிந்து கிடக்கும் தேவாவின் வாகனம் இன்னும் உயிரோடு இருப்பதாய் பார்த்த ராஜா வேகமாக வாகனத்தை உள்ளே செலுத்த காதை கிழிக்கும் நாய்கள் குரைக்கும் சத்தம் வேறு அவர்கள் அச்சத்தை அதிகரித்தது.
பண்ணை வீட்டை சுற்றி பின்னாலிருந்த மாட்டு தொழுவத்திற்கு விரைந்தனர்.
அவர்களை தடுத்த பெரியவர், “தம்பி மாடு இந்த பக்கம் இருக்குது” என தோட்டத்தினுள் அழைத்து சென்றார்.
“எதுக்கு அந்த பக்கம் போச்சு?”
“அதான் தம்பி எனக்கும் தெரியல காளையன் கத்துற சத்தம் கேட்டுச்சு ஓடி வந்து பாத்தா வேந்தன் ஒடம்புல அருவா வெட்டோட கெடக்குறான்” என்றார் கமறிய குரலில்.
“டேய் டாக்டர் நம்பர் இருந்தா கால் பண்ணு” ராஜாவிற்கு ஆணையிட்டு விரைந்தான் குணா. மருத்துவருக்கு அழைப்பு விடுக்க, ஏற்கனவே தேவா அழைத்துவிட்டதாக சொல்லி தான் பாதி தூரம் வந்துவிட்டதை கூறினார்.
நண்பர்கள் வேகமாக காளைகளின் சத்தம் வந்த திசையில் ஓடிய பொழுது தூரத்தில் தெரிந்த நண்பனையும், காளையையும் பார்த்த ராஜாவுக்கு உடலே நடுங்கியது.