நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்
உனது தோளில் நான் பிள்ளை போலே
உறங்க வேண்டும் கண்ணா வா
ஹிமாச்சல் மலைமுகட்டில் பணிப் போர்வை சுற்றிய மலைகளை அவன் கை அணைப்பில் கட்டுண்டு ரசித்துக் கொண்டிருந்தாள் , ஏன் என்றே தெரியாமல் விழியில் நீர் நிறைந்தது.
இயற்க்கைக்கு நம்மை அமைதிப்படுத்தும் குணம் இருக்கிறது என்பது எத்தனை உண்மை, இங்கு வந்த நொடியில் இருந்து மனம் லேசாக இருக்கிறது.
அங்கு வீசும் பனிக்காற்றை போல உடலும் மணமும் குளிர்ந்து கிடக்கிறது “தும்பிமா” என்று அழைத்தவன் “இன்னும் ரெண்டு வாரம் இங்கதான் இருக்க போறோம் கொஞ்ச நாள் சேர்ந்து இருப்போம் , கொஞ்ச நாள் தனியா இருக்கனும் ”.
“நான் எங்க இருந்தாலும் என் மனசு உன்கூடவே இருக்கும் உன்னைவிட்டு எப்போவும் எங்கயும் நான் போகல போகவும் மாட்டேன்” என்க அவனிடம் இன்னும் ஒன்றியவள் விழிகள் மூடினாள்.
பாரதியை பெண் பார்க்க அவள் வீடிட்டிற்கு சென்றவர்களை அவளுடைய பெற்றோர் வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர் , உறுதி படுத்திக்கொள்ளும் முடிவும் இருந்ததால் பாரதியின் நெருங்கிய சொந்தம் சிலர் மட்டும் அங்கு இருந்தனர்.
அனைவரின் பார்வையும் ஜெகனின் கை பிடித்து உள்ளே வந்த கார்தும்பியில் பதிந்து மீண்டது , அவர்களுடைய திருமணம் அங்கு பேசும்பொருளாக இருந்தது தானே.
பாரதியின் அருகில் நின்ற சொந்தகார பெண் பிள்ளைகள் “அப்பா.. என்ன அழகா இருக்காங்க அந்த அக்கா” என்று சொல்ல , ஒருத்தி “அவங்க கேரளாவாம், அதோடா அந்த அண்ணாவை பாரு என்ன மிடுக்கு சரியான ஜோடிதான் ரெண்டு பேரும்”.
“ஹ்ம்ம் அதுக்கும் ஒரு கொடுப்பினை வேணும்” என்க அதை கேட்டுக்கொண்டு வந்த பாரதியின் தாய் “அடியே கண்ணு வெக்காதீங்கடி” என்று பாரதியின் அருகில் சென்று மாப்பிள்ளை யார் என்பதை கதவின் இடுக்கு வழி அவளுக்கு காண்பித்தார்.
மீண்டும் ஹாலிற்கு அவர் வர பொதுவாக பேசிக்கொண்டிருந்தவர்கள் “பொண்ண வர சொல்லலாமே” என்க.
பாரதி , கையில் காப்பி ட்ரெயுடன் வந்து நின்றாள் அனைவருக்கும் கொடுத்து ராஜீவிடம் ஒரு நொடி நின்று அவனை பார்த்துவிட்டு அருகில் இருந்த ரூபாவுக்கு கொடுக்க.
அவள் எடுத்துக் கொண்டு “எங்க அண்ணனை நல்லா பாத்துக்கோங்க” என்க அவள் சிரித்துக் கொண்டே நகர்ந்து அம்முவிடம் கொடுக்க அவள் அழகாக புன்னகைத்துக் எடுத்துக்கொண்டாள்.
அனைவரையும் துரைசெல்வம் அறிமுகப்படுத்த அமைதியாக கேட்டுக்கொண்டாள் “அப்பறம் பொண்ணும் பையனும் பேசணும்னா பேசட்டும் நீங்க என்ன சொல்றீங்க” என்று கேட்டார் பாரதியின் தந்தையிடம்.
“அதுக்கு என்னங்க பேசட்டும்” என்றவர் மகளை பார்க்க இருவரும் தோட்டத்திற்கு சென்றனர் .
அந்த சிறிய வீட்டை ஒவ்வொரு இடமாக பார்த்துக்கொண்டிருந்தாள் கார்த்தும்பி , அவளை அழைத்த பாரதியின் தாய் “வாம்மா வந்து வீட்டை பாரு” என்க.
அவள் திரும்பி ஜெகனை பார்த்தாள் “போடா” என்க ரூபாவுடன் உள்ளே சென்றாள் .
மிக பெரிய வீடல்ல அனால் கிராமிய பாணியில் இருந்த வீடு அவள் பார்த்த கேரளா வீடுகள் போல் அல்லாமல் வேறு மாதிரி இருக்க அதை ஆர்வமாக பார்த்திருந்தாள்.
பாரதியின் சித்திகள் இருவரும் அங்கு இருந்தனர் அவரில் ஒருவர் “என்னம்மா எங்க வீடுலாம் சின்னதா இருக்குனு பாக்குறியா , நாங்க எல்லாம் சாதாரணமானவங்க உங்க மாதிரி எஸ்டேட் எல்லாம் இங்க யாருக்கும் இல்ல” என்றார்.
அவள் பதறி பார்க்க , தும்பியின் கையை பிடித்த ரூபா “எஸ்டேட் இருந்தா? எல்லாரும் அங்கேயேவா பாய விரிச்சா படுப்பாங்க , அவங்களும் இது மாதிரி வீட்ல தான் தூங்குங்க” என்றாள் நறுக்கென்று.
சில மனிதர்களுக்கு சிலரை பார்க்கையில் அவர்கள் தங்களை விட அழகிலோ பணத்திலோ குணத்திலோ உயர்வாக இருப்பதாக தோன்றினால் காரணம் ஏதும் இன்றி அவர்களை மட்டம் தட்ட என்னணுவர் இவரும் அப்படிதான்.
அதிலும் வந்தது முதல் பார்க்கிறாரே ஜெகனின் பார்வை எங்கு இருந்தாலும் மனைவியின் மீது நொடிக்கொரு முறை பதிந்து மீள்வதை, அவள் உடன் இருந்த அனைவரும் அவளை பார்வையாலே தாங்கி நிற்பதை .
அதாலே தும்பியை பிடிக்கவில்லை , இவள் தான் அந்த வீட்டில் முக்கியமானவள் போல நிச்சயம் திமிர் இருக்கும் , நம் வீட்டு பெண்ணை கஷ்டப்படுத்துவாள் என்று வேண்டாத சீரியல் பார்த்து அவர்களாகவே தங்கள் கற்பனையை தறிகெட்டு ஓட விட்டனர்.
அதோடு சிறிய பெண் தன்னை எப்படி பேசுகிறாள் என்ற கோவமும் உள்ளே புகைய .
இவர்களை கடந்து தள்ளி நின்று வேறு பேசுவதை போல “உனக்கு தெரியுமா கமலா!! என் நாத்தனார் மருமக இருக்காள அவ புருஷன் கடல் கடந்து போய் கஷ்டப்படுறான் , இவ பொழுது விடிஞ்சா சீவி சிங்காரிச்சு எவன் எவன் கூடவோ போறா போல” என்க.
“என்னக்கா சொல்றீங்க அவ வேலைக்குல போறா!”.
“ஆமா ஆமா வேலைக்கு போறா….அப்படினு சொல்லிக்கிறா புருஷன் பக்கத்துல இல்லனா இவளுங்களுக்கு வேற ஆள தேட சொல்லுது , ஏன் நம்ம துரைசெல்வம் அய்யா தங்கச்சி கூட இந்த மாதிரி பிரச்சனைல தான தற்கொலை பண்ணிக்கிச்சு” என்றவள்.
“யாருக்கு தெரியும் தப்பு செய்யலன்னு நிரூபிக்க செத்தாலோ இல்ல தப்பு செஞ்சு மாட்டிகிட்டோம்னு செத்தாலோ , இந்த பையனுக்கும் மாசக்கணக்கா கப்பல்ல இருக்கற வேலையாமே இங்க என்ன கூத்து நடக்கும்னு பாத்தா தெரியும்” என்று பேச.
“அப்படியே நாக்கை இழுத்து வெச்சு அறுத்துடுவேன் , யாரை பத்தி என்ன பேசுறீங்க எங்க வீட்டு பொண்ணுங்கள பேச நீங்க யாரு , கூட இருந்து நாங்க எப்படி என்னனு பாத்தீங்களா”.
“வெளியூர்ல வேலை பாக்குறவன் உத்தமன்!! குடும்பத்துக்காக ஓடா உழைக்கிறான் அவன் சொல்றத எல்லாம் நம்புவீங்க , ஏன்னா அவன் ஆம்பள “.
“ஊரு உறவு சாதி சனம் முன்னாடியே அந்த பொண்ணு வாழுது அவளை தப்பானவள்னு நீங்க பேசுறீங்க ஏன்னா அவ பொம்பள”.
“இன்னும் எத்தனை காலம்தான் இத சொல்லியே பொண்ணுங்கள கேவலப் படுத்த போறீங்க” என்ற மாதவி ரூபாவுக்கு கண் காண்பிக்க அவள் அம்முவை அழைத்துக்கொண்டு வெளியேறினாள்.
“ஒரு நல்ல காரியம் நடுக்குற வீட்ல இப்படி புரளி பேசி பிரச்னை பண்ண வெக்கமா இல்ல , நீங்க பேசுனதுல ஒத்த வார்த்தை ஆம்பளைங்க யார் காதுலயாவது விழுந்திருந்தா இந்த சம்மந்தம் இதோட முடிஞ்சுருக்கும்” என்க.
“ஐயோ அப்படிலாம் சொல்லாதீங்க , இருந்து இருந்து என் பொண்ணுக்கு ஒரு நல்ல வழி பொறந்திருக்கு” என்று வந்த பாரதியின் தாய் “என்ன பண்ணீங்க” என்றார் தன் தங்கைகளிடம் பதட்டமாக.
அதே நேரம் வெளியில் வந்த தும்பியின் முகத்தை பார்த்தே ஏதோ சரி இல்லை என்று கண்டுகொண்டவன் , எழுந்து கைநீட்டி அவளை அழைக்க அவன் கையை பற்றிக்கொண்டவள் இருக்கும் இடம் பற்றிய எந்த உணர்வும் இன்றி அவனில் சாய்ந்து கொண்டாள்.
அவள் கையின் நடுக்கத்தை உணர்ந்து கொண்டவன் நிமிர்ந்து ரூபாவை பார்க்க, அவள் முகத்தின் பதட்டம் உள்ளே ஏதோ தவறாக நடந்ததை சொல்லியது.
சட்டென்று எழுந்த துரைசெல்வம் “என்ன ஆச்சு , அம்மாடி என்னடா” என்க அனைவரும் அங்கே கூடிவிட்டனர் , பாரதியுடன் பேசிக்கொண்டிருந்த ராஜீவும் வந்துவிட , ரூபா ஷ்யாமாவிடம் நடந்ததை சொல்லிக்கொண்டிருந்தாள்.
“அம்மு என்னாச்சு” என்று ராஜீவ் அருகில் வர அனைவரையும் பார்த்த ஜெகன் “ஒண்ணுமில்ல” என்று சொல்லி அவர்கள் இருவரையும் தீர்க்கமாக பார்த்தவன் “தேவ இல்லன்னு தூக்கி போட்டு போக ஒரு நொடி போதும்” என்க பாராதியின் முகத்தில் பதட்டம் தொற்றியது.
ஜெகன் ரூபாவை பார்க்க அவன் பார்வையிலே அவள் அனைத்தையும் கொட்டிவிட்டாள் , பாரதிக்கு அழுகை வந்துவிட்டது கைகள் நடுங்க ராஜீவை நிமிர்ந்து பார்த்தாள்.
இத்தனை வருடம் கழித்து தனக்கு பிடித்த போல வாழ்க்கை என்று நினைக்க , அதில் இப்படி மண்ணை போட்டு விட்டார்களே என்று மனது விம்மியது.
அவன் அவளை பார்க்கவில்லை பார்வை தங்கையிடம் இருந்தது.
“நம்ம வீட்டு பொண்ணுங்களுக்கு மரியாதை இல்லாத எடத்துல நமக்கு என்னய்யா வேல போலாம்” என்றார் துரைசெல்வம்.
தும்பியின் கண்ணீரில் அவன் சட்டை நனைய அவன் சுயம் இழந்தான், இந்த கண்ணீர் எப்பொழுதும் அவனை தடுமாற செய்கிறது , இந்த கண்ணீருக்கு ஒரு முடிவு இல்லையா.
வாழ்வில் ஒருவரை கூட இதுவரை அவள் மனம் நோக பேசியது இல்லை , எவருக்கும் தீங்கு நினைத்ததில்லை , மலரை விட மெல்லிய இதயம் என் தும்பிக்கு அவளை ஏன் அனைவரும் காயப்படுத்துகிறீர்கள்.
விழிமூடி நின்றவன் கை முஷ்டிகள் இறுகியது , அனைத்தையும் விசிறியடித்து அவளை அள்ளிக்கொண்டு சென்றுவிட அவன் மனம் துடித்தது , நிதானித்தான் ஒரு நொடி , தெரிந்தோ தெரியாமலோ இரு முறை ராஜீவின் திருமணம் தன்னால் நின்று விட்டது
அவள் முகத்தை நிமிர்த்தியவன் “உன் அண்ணன் கல்யாணம் நடக்கணுமா” என்க .
முகத்தில் அதிர்ச்சியை காண்பித்தவள் விழிகளை துடைத்துக்கொண்டு “ஆமாம்” என்று தலை அசைத்தாள் “அண்ணா அண்ணி பாவம்” என்றாள் மெல்லிய குரலில்.
பாரதியின் சித்திகளை நிமிர்ந்து பார்த்தவன் “உங்க நினைப்புக்கு எல்லாம் நாங்க பதில் சொல்ல முடியாது சொல்ல வேண்டிய அவசியமும் இல்ல” என்றவன்.
பாரதியின் பெற்றோரை பார்த்து “உங்க பொண்ணு எங்க வீட்டு மருமகளா ஆயிட்டா இவங்களும் எங்க உறவா ஆகுறாங்க , நல்லது கெட்டதுனு எல்லாத்துக்கும் வருவாங்க, ஆனா இன்னும் ஒரு தடவை என் மனைவி இந்த மாதிரி என் முன்னாடி நின்னா நான் மனுஷனா இருக்க மாட்டேன்” என்றவன்.
“நீங்க பேசி உறுதி பண்ணுங்க மாமா நா வெளில நிக்குறேன்” என்று மனைவியை தோளோடு அணைத்துக்கொண்டு வெளியேறினான்.
உள்ளே அனைவரும் அமைதியாக நிற்க ஜெகனும் தும்பியும் இல்லாமல் கல்யாணத்தை உறுதி செய்ய யாருக்கும் மனம் இல்லை.
தங்கையின் மீது விழுந்த பழிச்சொல் இறுதி வரை போகாதா மரித்த பிறகும் அவளின் மேல் ஏன் களங்கம் சுமத்துகிறார்கள் என்று சோர்ந்து அமர்ந்துவிட்டார் துரைசெல்வம்.
அவரிடம் யார் சொல்ல ராமாயணம் பல ஆயிரம் வருடங்களை கடந்தது , ஆனால் இன்றும் அது பேசப்படும் இடங்களில் சீதை மீண்டும் மீண்டும் தீக்குளிக்கிறாள் , இந்த சமூகம் மாறாது நாம் அதை கடந்து போக பழகிக்கொள்ள வேண்டும்.
சிறிது நேரம் அவர்கள் இருவரும் வெளியில் நிற்க “நந்தேட்டா உள்ள போலாம் , நீங்க இல்லாம அப்பா பேசமாட்டாங்க” என்க , அவனும் அறிவான் அவர் அப்படியே தான் அமர்ந்திருப்பார்.
அவளை பார்த்தவன் “இதெல்லாம் தெளிவா பேசு யாரோ ஏதோ சொன்னா அழுவியா நீ” என்றான் கைகளை கட்டிக்கொண்டு.
“இல்ல அவங்க அப்படி பேசியதும் கஷ்டமா ஆயிடுச்சு இனிமே அழ மாட்டேன் ப்ரோமிஸ்” என்றாள் அவன் கையை எடுத்து தன் கண்ணத்தில் வைத்து , இருவரும் உள்ளே வர அனைவரும் அப்படியே இருந்தனர்.
மாமனின் அருகில் சென்று அமர்ந்தவன் “ம்பச் மாமா என்ன இப்படி.. பேசுங்க , உறுதி பண்ண வந்துட்டு இப்படி இருந்தா எப்படி” என்றான்.
“நீயும் என் பொண்ணும் இல்லாம எப்படியா பண்ண” என்றவர் “மனசே சரி இல்ல மாப்ள , நம்ம பொண்ணு கண்ணீர் விழுத்திருக்கு ஆரம்பத்திலேயே” என்றார் சங்கடமாக.
“மாமா என்ன நீங்க , அப்படிலாம் ஏதும் இல்ல அவ இந்த கல்யாணம் நடக்கணும்னு ரொம்ப ஆசைப்படுறா , நம்ம வீட்டுக்கு வரபோறது பாரதி அந்த பொண்ணு நல்ல குணம் மாமா , மத்தவங்கள பத்தி நமக்கு என்ன கவலை நீங்க பேசுங்க” என்க.
தும்பியை அவர் திரும்பி பார்த்தார் அவள் சிரித்த முகமாக அவரிடம் தலை அசைத்தாள் , பேசி உறுதிப்படுத்தி தும்பி கையால் பெண்ணுக்கு பூவும் வைக்கப்பட்டது.
இந்த சடங்குகள் எல்லாம் அவளுக்கு புதுமையாக இருக்க ஆர்வமாக எல்லாவற்றையும் கேட்டு செய்தாள் “கங்கிராட்ஸ் அண்ணி” என்று பாரதியின் கைப்பற்றி குலுக்கியவள் கணவனின் அருகில் சென்று நின்றகொள்ள.
“அவ எங்க குடும்பத்துல ரொம்ப முக்கியம் , எல்லாரும் அவளை தாங்குறாங்கனு உனக்கு ஒரு எண்ணம் தோணுச்சுனா இப்போவே யோசிச்சுக்கோ , நாளைக்கு இது ஒரு பிரச்னையா வர கூடாது” என்றவனை பார்த்த பாரதி.
“அது எனக்கு புரிஞ்சுடுச்சு , உண்மையிலே உங்க தங்கச்சி வரம் வாங்கி பிறந்தவ , பாக்கியசாலி” என்றவளை அவன் அப்படியே பார்த்து .
“என்னாச்சு” என்றாள் பாரதி.
“அவ வரம் வாங்கி பிறந்தவ தான் …உண்மை , அவ வாழ்க்கையோட வரம் அவ பக்கத்துலயே நிக்குறவர் , ஆனா அது கைசேர அவ எவ்வளவு வேதனைகளையும் கண்ணீரையும் கடந்து வந்தானு உனக்கு தெரியாது”.
“வரங்கள் சுலபமா கிடைக்காது , அதுக்கு நிறைய போராடனும் காத்திருக்கணும் அவங்க ரெண்டு பேரோட போராட்டத்தையும் காத்திருப்பயும் நாமெல்லாம் கற்பனையில் கூட யோசிக்க முடியாது” என்றவனை அவள் கேள்வியாய் பார்க்க.
அந்த நிகழ்வை மறந்ததாக காட்டிக்கொண்டு சந்தோஷமாகவே அனைவரும் விடை பெற்றனர் , மூன்று மாதத்திற்கு பிறகு ஒரு வெள்ளிக்கிழமை திருமண நாள் முடிவு செய்யப்பட்டது.
ஜெகனின் குடும்பம் போன உடன் பாரதியின் தந்தை தெளிவாக சொல்லிவிட்டார் “வாய மூட்டிட்டு இருக்க முடியும்னா மட்டும் வாங்க, இல்ல அக்காவை மொத்தமா மறந்துடுங்க “.
“உங்களால என் பொண்ணுக்கு அங்க ஏதும் தப்பா நடந்துச்சு உறவை மொத்தமா முறிச்சுடுவேன்” என்று.
வீட்டிற்கு வந்தவன் ராஜீவை அழைத்துக்கொண்டு நேரே தந்தையிடம் சென்று “அப்பா ராஜீவ் கல்யாணம் முடிவு பண்ணியாச்சு , போட்டோ பாருங்க” என்று புகைப்படங்களை காண்பித்தான் , நன்றாய் இருப்பதாய் கூறி ஆசிர்வதித்து அனுப்பினார்.
ராஜீவ் சென்றபிறகு “அப்பா நானும் உங்க மருமகளும் கொஞ்ச நாள் வெளியூர் போறோம் , நீங்க நேரத்துக்கு சாப்பிடணும் தினமும் போன் பண்றேன் இங்க எல்லாரும் இருப்பாங்க என்ன தேவைனாலும் உடனே கேளுங்க” என்க.
அவனை அருகில் அழைத்தார் “சொல்லுங்கப்பா” என்று அவரின் அருகில் செல்ல “இப்படி வெட்டிக்கதை பேசாம சீக்கிரம் என் பேரப்புள்ளைய கண்ணுல காட்டு” என்றார்.