இரண்டு வாரம் என்று சொல்லி சென்றவர்கள் மூன்று வாரம் கடந்து உத்தமப்பாளையம் வந்து சேர்ந்திருந்தனர்.
தும்பியின் முகத்தில் தெரிந்த தெளிச்சமும் , எப்பொழுதும் உறைந்திருக்கும் புன்னகையும் பெரியவர்களுக்கு நிம்மதி அளித்தது அங்கிருந்து வந்த பிறகு அவளில் நிறைய மாற்றங்கள்.
தன்னில் இறுகி இருந்தவள் மீண்டும் துடிப்பானாள் , வீட்டின் தோட்டத்தில் புதிதாக தேச்சி பூ (இட்லிப்பூ) இடம் பெற்றது , பூஜை அறையில் புதிதாக கார்முகில் வர்ணன் கம்பீரமாக வீற்றிருந்தார்.
காலை தினமும் அவர் கழுத்துக்கு துளசி மாலை சென்று சேர்ந்தது, தேங்காய் என்னை மனமும் கேரள உணவின் வாசமும் வீட்டை நிறைத்தது, உண்ணியப்பம் , அவியல் , கேரள சாம்பார் இலையடை என்று தினம் ஒரு வகை.
அதில் ஒரு பங்கு அண்ணனின் வழி அண்ணியையும் சென்று சேர்ந்தது, இதை சாக்காக வைத்து தினமும் இருவரும் சந்தித்துக்கொண்டனர் , பாரதி அந்த குடுமபத்தில் தன்னை நன்றாக பொருத்திக் கொண்டாள்.
விடுமுறை நாட்களில் தென்னந்தோப்பில் கூடி பொழுதை கழித்தனர், ஜெகனின் சித்தப்பாவும் மொத்தமாக பெங்களூரு நகரத்தை விட்டு இங்கேயே வந்துவிட்டார் , அவர்களின் குடும்பவீட்டில் அவர்கள் தாங்கிக்கொள்ள பிள்ளைகளும் சேர்ந்ததால் சந்தோஷமாக சென்றது நாட்கள்.
லக்ஷ்மியம்மாவின் கதைகள் இப்பொழுது அனைவருக்கும் சேர்த்தே சொல்லப்பட்டது , மாலையில் வீட்டு வாசலில் விளக்கும் ராமாயணமும் ஒளிர தொடங்கியது .
பகல் எல்லாம் அனைவரின் பின்னேயும் சுற்றினாலும் அவளின் இரவுகளை எல்லாம் அவனே திருடிக்கொள்வான் .
என்னுடன் இருக்கும்போது இந்த உடை மட்டுமே அணிய வேண்டும் என்று அவன் வாங்கி தந்த இரவு உடை ஐந்து வருடங்களுக்கு பிறகு அவள் மேனியை தழுவியது .
அதற்கும் ஆயுள் குறைவு தான் அவனே ஆடையாக மாறிவிட பூமேனியில் அவன் இதழ்கள் தீண்டா இடங்களை தேடி அலைந்தது காற்று.
காலை நேரம் சென்று அவள் எழுவதையோ , பகலில் பாட்டியின் மடியில் அசந்து உறங்குவதையோ அங்கே யாரும் பொருட்படுத்துவதில்லை.
களைத்து அவன் தோளில் சாய்ந்திருந்தவள் “நந்தேட்டா ஊஞ்சல் வேணும்” என்றாள் அந்த இரவில், அவளை பார்த்து புன்னகைத்தவன் ஊஞ்சலை மறக்க வைத்திருந்தான் சில நொடிகளில்.
காலை குளித்து கீழே வந்தவளின் கையில் டீயை வாய்த்த ஷ்யாமா “ஜெகன் தோட்டத்தில் இருக்கார் உன்ன அங்க வர சொன்னார்” என்க.
இவள் கிட்சன் கடந்து அங்கு சென்றாள் சந்தோஷத்தில் விழிகள் விரிந்துவிட்டது , மாமரத்தில் இரண்டு ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தது.
அவளை அழைத்துச்சென்று அதில் அமர்த்தியவன் “ஹாப்பியா” என்க “லவ் யூ சோ மச்” என்று பறக்கும் முத்தம் ஒன்றை அனுப்பினாள், அவன் முகத்தில் வெட்கத்தின் சாயல்.
“மாமா ரூபாவுக்கு வரன் ஏதும் பாத்தீங்களா” என்ற ஜெகனின் கேள்விக்கு, “உன் கிட்ட சொல்லாம யாரை பாக்க போறேன் மாப்பிள”
“போன முறை நீ வந்துட்டு போனப்போ ரெண்டு பசங்க போட்டோ காமிச்சோமே அப்பறம் பாக்கலாம் சொன்னா , இப்போ ஒரு வருஷமா போட்டோ கூட பாக்க மாட்றா , கேட்டா வேணாம் வேணாம் சொல்றா , என்னவோ ஒன்னும் புரியல” என்றவரிடம்.
“நான் சொல்ற மாப்பிளையை காண்பிங்க மாமா , வேண்டாம் சொல்ல மாட்டா” என்று அழுத்தி சொன்னவனை யோசனையாக அவர் பார்க்க.
அவன் பார்வை கிட்சன் மேடையில் அமர்ந்து ஷ்யாமா சுட்டு தரும் நெய் தோசையை சாப்பிட்டுக்கொண்டு இருந்த கிஷோரின் மேல் பதிந்தது.
“என்ன மாப்பிள சொல்ற நிஜமாவா!!” என்றார் அவர்.
நீங்க சொல்லி பாருங்க மாமா , உண்மையா இல்லையானு தெரியும்” என்க.
அவர் யோசனையிலே இருந்தார் “ஏன் மாமா வேற ஆளுங்கன்னு யோசிக்கிறீர்களா” என்க.
“அட அதெல்லாம் இல்ல மாப்பிள , ஒரு பொண்ணு வெச்சுருக்கேன் அவ சந்தோஷம் தான் முக்கியம் , கடமை முடிஞ்சுதுனு எவனுக்காவது புடிச்சு கொடுத்துட்டு நாளைக்கு அவ கண்ணை கசக்குறத பாக்க முடியாது , அந்த தம்பி வீட்ல ஒத்துப்பாங்களா” என்றார்.
“சரியாப்போச்சு , அவங்க அம்மா விட்டா இன்னைக்கே மருமகளை கூட்டிட்டு போய்டுவாங்க , இவன்தான் உங்கள நினச்சு கொஞ்சம் யோசிக்கிறான் , நம்பி வீட்ல விட்டதுக்கு இப்படி பண்ணிட்டானேன்னு நீங்க தப்பா எடுத்துப்பீங்களோனு தயக்கம்” என்க.
“என்ன செய்யலாம் மாப்பிள என்று சிறுபிள்ளையாய் கேட்க” அருகில் சென்று அனைத்துக்கொண்டவன் “எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன் பொண்ணு கல்யாணத்துல என்னலாம் பண்ணனும்னு நீங்களும் அத்தையும் பிளான் போடுங்க” என்று அவரை வீட்டிற்கு அனுப்பினான் .
கிஷோரின் பெற்றறோரிடம் பேச அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி, கிஷோருடன் நேரில் சென்று ராஜீவின் திருமணத்திற்கு அழைத்தவன் இவர்களின் திருமணத்தையும் அப்பொழுது பேசி முடிசெய்யலாம் என்று கூறி வந்தான்.
ராஜீவை தனியே அழைத்த ஜெகன் அவன் கையில் தோப்பு வீட்டோடு சேர்ந்த இரண்டு ஏக்கர் தென்னந்தோப்பை அவன் பெயருக்கு மாற்றிய பத்திரத்தை கொடுத்தான்
“வாங்க மாட்டேன்” என்று பிடிவாதமாக ராஜீவ் நிற்க “இது உனக்காக செய்யல , இது உங்க அம்மாவுக்காக , உனக்குன்னு ஒரு குடும்பம் வர போகுது ஒரு வீடு வேணும் , எனக்கு யாரவது இந்த மாதிரி சும்மா குடுத்தா நான் வாங்க மாட்டேன்”.
“அதுமாதிரி தான் நீயும், எனக்கு தெரியும் இத நான் மொத்தமா பணம் குடுத்து வாங்கியிருக்கேன் , நீ மாசாமாசம் உன் சம்பளத்துல என் கடனை அடைச்சுடு” என்றவன்.
பத்திரத்தை அவன் கையில் வைத்தான். உழைத்து முன்னே வரட்டும் என்ற ஷ்யாமாவின் வார்த்தைக்கு இணங்க தன்னால் முடிந்ததை செய்து கொடுத்தான் , திருமணம் அதிகம் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக முடிந்தது , பாரதியின் பெற்றோர் இத்தனை நாட்களில் இவர்களின் நல்ல குணத்தை பார்த்து புரிந்து கொண்டனர்.
நிறைவாக மகளை புகுந்த வீட்டில் விட்டு சென்றனர்.
அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி அண்ணனின் திருமணத்திற்கு வந்து சேர்ந்தாள் ரெம்யா , திருமணம் முடிந்து இரு தினங்கள் இருந்தவள்.
“என்னை பத்தி கவலைப்படாதீங்க நான் இப்போ ரொம்ப நல்லா இருக்கேன், உங்களை பாக்கணும் தோணுச்சுனா உடனே வந்துடுவேன், நீங்களும் ஒரு தடவ என்கூட வாங்கம்மா” என்று ஷ்யாமாவையும் அழைத்தாள், அனைவரிடமும் அன்பாக பேசி விடைப்பெற்றாள்.
திருமணத்திற்கு முன்பே ராஜீவ் சொல்லிவிட்டான் “தந்தையை பற்றி எதுவும் எதுவும் பேச விரும்பவில்லை , என்னை பொறுத்தவரை அவர் இறந்து விட்டார்” என்று இன்னும் கிருஷ்னன் சிறையில் தான்.
ஒரு வாரம் மட்டும் இங்கு தங்கி இருந்த ராஜீவ் பாரதி அடுத்த வாரம் நல்ல நாளில் பால் காய்ச்சி தங்கள் வீட்டிற்கு சென்றனர் , ஷ்யாமாவை அனுப்ப முடியாது என்று ஜெகன் கூறி விட்டான், அம்முவை விட்டு வரமாட்டேன் என்று அவரும் நின்றுவிட்டார்.
கணவனும் மனையவியும் தினமும் காலை மாலை ஜெகன் வீடு வந்துவிட்டே செல்வார்கள் , அவர்கள் திருமணம் முடிந்த அடுத்த நாளே கிஷோர் ரூபா திருமணம் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டது.
“யாரை கேட்டு பொண்ணு பாக்க வந்து நிச்சயமும் பண்ண , உன்ன பிடிக்கும்னு நான் எப்போ சொன்னேன்” என்று அவனிடம் மல்லுக்கு நின்றாள் ரூபா.
“அப்படியா உனக்கு என்னை பிடிக்காதா நல்லதா போச்சு , நான் அப்போவே சொன்னேன் அண்ணா தான் கேக்கல , அப்பாடா நல்ல அழகான பொண்ண பாத்து உடனே கட்டிக்க்கணும்” என்றவனின் தலையை பிடித்து சுவற்றில் முட்டியவள்.
“வேற அழகான பொண்ணு கேக்குதா” என்று அவன் கழுத்தை நெறிக்க சத்தம் கேட்டு எட்டிப்பார்த்த தும்பி சிரித்துவிட்டு சென்றாள்.
ரூபாவின் வெற்றிடையில் அவன் கை பதிக்க அவள் ஸ்தம்பித்த நொடியில் அழுத்தமாக இதழ் முத்தம் பதித்து விலகி உள்ளே சென்றான்.
திருமணத்தை அடுத்த முறை ஜெகன் வரும்போது வைத்துக்கொள்ளலாம் என்று கிஷோர் கூற ஜெகன் மறுத்தான் “இடையில் நல்ல நாள் இருந்தால் நடத்துங்கள் எனக்காக காத்திருக்க வேண்டாம்” என்று.
ஆனால் அதில் யாருக்குமே சம்மதம் இல்லை அதனால் அவன் வரும் நாளை கணக்கிட்டு அந்த மாதத்தில் நல்ல நாட்களை குறித்து வைத்தனர்.
எதிர்பார்த்திருந்த அழைப்பு வந்து சேர்ந்தது சரியாக எட்டு நாட்கள் , தகவல் அனைவருக்கும் தெரிந்தது தும்பியை தவிர , அவளிடம் எப்படி சொல்ல என்ற சிந்தனையில் அவன் அறைக்கு செல்ல , மிக தீவிரமான சிந்தனையில் அவன் தும்பி நகம் கடித்துக்கொண்டிருந்தாள்.
பின்னால் சென்று இவன் அவளை இறுக்கமாக அணைக்க ஒரு நொடியில் “அச்சோ” என்று விலகி நின்றாள்.
“என்னடா , என்ன ஆச்சு” என்று அவன் அருகில் செல்ல “நந்தேட்டா வயித்துல பேபி இருந்தா இறுக்கமா புடிச்சா வலிக்குமா” என்க அவள் என்ன சொல்கிறாள் என்றே அவனுக்கு சில நொடிகள் புரியவில்லை.
அவன் மூலையில் மின்னல் வெட்டியதும் “தும்பிமா” என்று அவளை அருகில் இழுத்து கைவளைவில் நிறுத்தி அவள் விழிகளை பார்க்க “தெரியல நான் மறந்தே போய்ட்டேன் ரெண்டு மாசமா வரவே இல்ல, பயமா இருக்கு” என்க.
அவள் முகத்தை நெஞ்சில் புதைத்துக்கொண்டான் , அப்படியும் இருக்குமோ தன் உயிர் தன்னவளிடம் அந்த உணர்வே இனித்தது , அவளிடம் கூற வந்த விஷயத்தையே மறந்துவிட்டான்.
“எதுக்கு பயம் நாளைக்கு டாக்டரை போய் பாக்கலாம் , ஒன்னும் இல்ல” என்றவன் அவளுடன் கட்டிலில் சரிந்தான் , இருவருக்கும் உறக்கம் வரவில்லை கதைகள் பேசி பேசி இரவு நீண்டு கொண்டிருந்தது .
காலை ஹாஸ்பிடல் சென்றுவிட்டனர் , உறுதியாகிவிட்டது “அம்பத்திரெண்டு நாள் ஆகுது , மூணு மாசம் வரைக்கும் கொஞ்சம் கவனமா இருக்கணும் , தாம்பத்யம் இப்போ கொஞ்ச நாள் வேண்டாம்” என்க.
அவன் கைகள் அவள் விரல்களை அழுத்தமாக பற்றிக் கொண்டது , அதில் தெரிந்த தவிப்பில் தும்பி அவனை நிமிர்ந்து பார்த்தாள் , அவன் முகத்தில் கூட ஒரு வித இறுக்கம் , அதன் பிறகு மருத்துவர் சொன்ன எதுவும் அவளை சென்று சேரவில்லை.
மருந்துகள் வாங்கிக்கொண்டு காரில் திரும்பி வர சிறிது நேரத்தில் அவன் கைகளை பிடித்துக்கொண்டவள் “நந்தேட்டா என்ன பாருங்க” என்றாள் அவன் வண்டியை நிறுத்திவிட்டான்.
விழிகள் மூடி சீட்டில் சாய்ந்து அமர்ந்தான் , பிறகு அவளின் ஒரு கையை பற்றி தன் நெஞ்சில் வைத்தவன் தன்னுடைய மறு கையை மனைவியின் வயிற்றில் வைத்தான் , பேச்சுக்கள் அற்ற மௌனம் இருவரிடமும்.
“எப்போ போகணும்” என்றவளின் கண்ணீர் குரலில் அவனுக்கு நெஞ்சடைத்தது .
அவன் முகத்தை பிடித்து தன்னை பார்க்க வைத்தவள் “நீங்க இன்னும் ரொம்ப மாசம் என்னை விட்டு தனியா இருப்பீங்க தெரியும் , அதுக்காக அழாம இருக்க மாட்டேன் எனக்கு அழுகை வரும் ரொம்ப கஷ்டமா இருக்கும்… அழுவேன் ஆனா சரி ஆகிடுவேன் , என்னை நினச்சு நீங்க கவலைப்படுற மாதிரி இனிமே எப்போவும் நடக்காது நந்தேட்டா”.
“இங்க நெறய சேர்த்து வெச்சுருக்கேன் அத நினச்சுட்டே இருந்துப்பேன்” என்றாள் தன் இதயத்தை தொட்டுக்காட்டி “வேலை முடிஞ்சதும் வந்துடனும்” என்றவளை காற்று கூட புக முடியாவண்ணம் இறுக்கி அணைத்துக்கொண்டான்.
வீட்டிற்கு வந்தவர்கள் முதலில் லக்ஷ்மியம்மாவின் கையில் இனிப்பை கொடுத்து ஆசி வாங்கினர் , விஷயம் அறிந்து அனைவருக்கும் அத்தனை நிறைவு.
வாழ்த்துக்களும் கட்டி அணைத்தலுமாக நேரம் செல்ல அப்பொழுதே உணவில் கவனம் வைக்க முடிவு செய்துவிட்டார் ஷ்யாமா , மாதவியும் உடன் சேர்ந்து என்ன என்ன கொடுக்கலாம் என்று பலமாக யோசனை செய்ய , பார்த்தவளுக்கு நெஞ்சம் நிறைந்தது.
ப்ரகாஷிடம் சென்று ஆசி பெற்று அவரின் கையை பிடித்து அருகில் அமர்ந்த இருவரும் “பேரப்பிள்ளைய கைல வாங்க ரெடி ஆகுங்க” என்க விழிகள் நிறைந்து ஒழுகியது , அவளிடம் “கவனமா இருக்கணும் நல்லா சாப்பிடணும்” என்க , அனைத்திற்கும் சம்மதமாக தலை அசைத்தாள்.
இரு தினங்களுக்கு பிறகு வீட்டில் அனைவரிடமும் மறுநாள் காலை தயாராக சொன்னான் , ஆண்கள் அனைவரும் அறிந்திருந்தனர் , பெண்கள் மட்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள அவர்களிடம் ஏதும் சொல்லவில்லை.
மறுநாள் பட்டு உடுத்தி அழகாக தயாரி நின்றாள் கார்த்தும்பி , அவனும் தயாராகி வர அனைவரையும் அழைத்துக்கொண்டு பதினைந்து நிமிட பயணத்திற்கு பிறகு மிகப்பெரிய மதில் சுவர் கொண்ட ஒரு இடத்தை அடைந்தனர்
உள்ளே எங்கும் பசுமை சூழ்ந்திருக்க நடுவில் ஒரு கட்டிடடம் , சுற்றிலும் சிறு சிறு நிழற்குடைகள் குடில் போல , வலப்பக்கம் வேறு ஒரு கட்டிடம் இயற்கை சூழ தங்குவதற்கு அறைகளோடு இருந்தது , ஆட்கள் சிலர் மட்டும் அங்கு காத்திருக்க , அனைவரும் வண்டியில் இருந்து இறங்கிய போது கவனித்தனர் அந்த கட்டிடத்தின் திறப்பு விழா என்று.
“என்ன” என்று பார்க்க “ “சுவடுகள்” மிதிக்கப்படவேண்டியவை அல்ல பாதிக்கப்பட வேண்டியவை , புது வாழ்வின் தொடக்கம் இங்கே” “ என்று நின்றது அந்த பெரிய பலகை.
அவள் விழி விரித்து கணவனை பார்க்க , புன்னகையோடு அவளின் அருகில் வந்தவன் அவள் கைபிடித்து அழைத்து சென்று ரிப்பன் கட்செய்ய சொல்ல “நானா? வீட்ல பெரியவங்கள செய்யா சொல்லுங்க நந்தேட்டா” என்றாள்.
“இல்லை நீதான் செய்யணும்” என்றவன் அவளிடம் கொடுக்க அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு திறந்து வைத்தாள் .
உள்ளே வீட்டின் பெண்கள் அனைவரையும் விளக்கு ஏற்ற வைத்து முறையாக தொடங்கி , அங்கு பணியில் இருக்க போகும் அனைவரையும் அறிமுகப்படுத்தி விருந்து உண்டு அனைவருக்கும் கட்டிடத்தை சுற்றி காண்பித்து என்று அனைத்தும் சிறப்பாக செய்தான்.
உடன் கிஷோரும் ராஜீவும் , பெண்களுக்கு ஒன்றும் புரியவில்லை, கிஷோர் மற்றவர்களுக்கு சொல்ல ஜெகன் மனைவிக்கு பழச்சாறு எடுத்துக்கொண்டு அவளை தனியே அழைத்துச்சென்று நிழலில் அமர்ந்து சொல்ல தொடங்கினான்.
தாயின் மரணம் ஒரு பாதிப்பு என்றால் , தும்பி தற்கொலைக்கு முயன்றாள் என்பது அவனுடைய வேதனையை இன்னும் கூட்டியது, அன்றிலிருந்து இது போன்ற எண்ணத்தில் இருப்பவர்களை மீட்டு கொண்டு வரும் ஒரு சேவை மையத்தை இலவசமாக தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தான்.
அதற்க்கான இடத்தை அவன் வாங்கி கிஷோரின் உதவியோடு மாமனிடம் சொல்லி அவரின் மேற்பார்வையில் வேலைகள் இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கியது , ராஜீவ் வந்த பிறகு அவனும் இதில் தன்னை இணைத்துக்கொள்ள அனைவரும் சேர்ந்து உழைத்தனர் .
“என் தங்கச்சிய தான் காப்பாத்த முடியல , மன உளைச்சல்ல தற்கொலை முடிவை தேடிப்போற சில பேரையாவது காப்பாத்த முடிஞ்சா எனக்கும் நிம்மதிய்யா” என்ற துரைசெல்வம் தாராளமாக பண உதவி செய்தார்.
சிறந்த மனநல ஆலோசகர்களை தேர்ந்தெடுத்திருந்தான் , அங்கு மற்ற வேலைகளுக்கும் ஆட்களை அப்பாய்ண்ட் செய்திருந்தான் , வருபவர்களுக்கு அங்கு தங்கும் வசதியும் இருந்தது.
இது அனைத்தும் இலவசம் என்பது இன்னும் சிறப்பு “எல்லாரையும் காப்பாத்த முடியுமா தெரியல பத்துபேர் வந்து , அஞ்சு பேர் வாழற ஆசைல , இல்ல அப்படி என்னதான் இருக்கு வாழ்ந்து பார்த்திடலாம்னு தைரியத்துல திரும்பி போனா அதுவே பெரிய விஷயம்தானே” என்றவனின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் பதித்து அணைத்துக்கொண்டாள்.
இது பெரிய விஷயம் அல்லவா , அனைவருக்குமே அதில் மனநிறைவுதான் ஒருமனதாக தங்களால் முடிந்ததை செய்வதாக வீட்டு பெண்களும் கூறினார்.
தும்பி ஜெகனிடம் “ரப்பர் எஸ்டேல இருந்து வர பணம் அப்படியே கிடக்கு, யாருக்கும் பயன்படாம , நமக்கு அது வேண்டாம் இங்க அத பயன் படுத்தலாமே , அந்த சொத்தால வந்த சாபம் எல்லாம் இல்லாம போகட்டும் , இவங்க மேல அது விழ வேண்டாம்” என்றாள் அவன் கையை தன் வயிற்றில் வைத்து அழுத்தி.
அவனுக்கே ஆச்சர்யம் நொடியில் இந்த முடிவை எப்படி எடுத்திருக்கிறாள் என்று , அவன் மற்றவர்களை பார்க்க அவர்களும் அதையே கூறினர் “அது நல்ல யோசனை” என்றார் துரைசெல்வம் , அவனும் அவளிடம் சம்மதம் கூறினான்.
இரு தினங்கள் கடந்து செல்ல, காலையிலே தலை சுற்றலிலும் வாந்தியிலும் சுருண்டு கிடந்தவள் கவலையாக தன்னை நெருங்கிய கணவனை இழுத்து தன் அருகில் கிடத்தி அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.
“போற வரைக்கும் என்கூடதான் இருக்கணும் , நீங்கதான் சாப்பாடு தரணும் கதை சொல்லணும் தூங்க வெக்கணும்” என்க அனைத்திற்கும் “சரி சரி” என்று அவளுடன் ஒன்றினான்.
“நந்தேட்டா… எனக்கு ஆன்ஞலி சக்க(அயினிப்பலா) சாப்பிடணும்” என்றதும் அதற்கும் “சரி வாங்கலாம்” என்றான்.