பிரகாஷ் குடும்பத்தினர் வந்த படகு வீட்டின் பின்னே நிற்க, இறங்கும் நேரம் மீண்டும் மழை தொடங்கியது, சங்கரன் குடையோடு நின்றிருந்தார் அனைவரும் விரைந்து வீட்டிற்குள் நுழைந்து கொண்டனர்.
நாலா பக்கமும் அவன் விழிகள் சுழல அவள் மட்டும் இல்லை “அன்டனன்ஸ்ல இல்லாதவங்க எல்லாம் ப்ரெசென்ட் சொல்றாங்க, இவ எங்க போனா” என்று அவன் யோசிக்கும் நேரம், அங்கு அறிமுக படலம் தொடங்கியது.
நாராயணன் லட்சுமிக்குட்டி தம்பதிகளுக்கு மூன்று ஆண் பிள்ளைகள் மூத்தவர் கிருஷ்ணன் நாயர் மனைவி ஷ்யாமளா மகன் ராஜீவ் கிருஷ்ணா மகள் ரெம்யா கிருஷ்ணா, அடுத்தவர் அச்சுதன் நாயர் அம்முவின் தந்தை, இறுதியாக சங்கரன் நாயர் மனைவி ஸ்மிதா இரட்டை பிள்ளைகள் ஹரி பிரசாத், ஜெய பிரசாத், அனைவரையும் அறிமுகப் படுத்திய சங்கரன் அம்முவை பற்றியோ அவள் அன்னையை பற்றியோ ஒன்றும் சொல்லவில்லை.
கிருஷ்ணன் ரப்பர் முந்திரி பலா மிளகு அனைத்தையும் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை பார்த்துக்கொள்ள, அச்சுதன் ரப்பர் எஸ்டேட் மற்றும் முந்திரி மரங்களின் தோட்டத்தை பார்த்துக் கொள்கிறார், சங்கரன் மட்டும் அதில் நாட்டம் இல்லாமல் கஸ்டம்ஸில் சேர்ந்துவிட்டார்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்க “எங்கிருக்கிறாய் அம்மு” என்று அவன் மனம் அழைத்தது கேட்டதோ என்னவோ, முழுதாக நனைந்து கை நிறைய பலா மரத்தின் இலையில் செய்த அழகான பொருட்களோடு வந்து சேர்ந்தாள் அவள்.
“பெரியம்மா நா என்ன செஞ்சிருக்கேன் பாருங்க” என்று ஓடி வந்தவள் இவர்களை பார்த்து தேங்கி நின்று பின் பெரியம்மாவின் பின்னால் ஒளிந்து கொண்டாள்.
“இவ ஏன் இப்படி இருக்கா மா, பாருங்க எப்போவும் மழையில ஆட்டம் புல்லா நனைஞ்சு ஏதோ குப்பை எல்லாம் பொறிக்கிட்டு வந்திருக்கா” என்றாள் ரெம்யா.
லக்ஷ்மி அம்மாவின் முகம் கோவத்தில் சிவந்து விட்டது “உன் பாட்டி வீட்டுக்கு தானே போற கெளம்பு” என்றார் பல்லை கடித்து , அவரை அதிர்ப்தியாக பார்த்தவள் “அம்மா நீங்க எப்போ வருவீங்க பாட்டி வீட்டுக்கு, எங்க கூட வரலாம்ல” என்க “எனக்கு எப்போ தோணுதோ அப்போ வருவேன்” என்ற ஷ்யாமளா அம்முவை தன் மார்போடு அணைத்துக்கொண்டார்.
கோபமாக அண்ணனுடன் அவர்களின் பாட்டி வீட்டிற்கு விடுமுறைக்கு சென்றாள் ரெம்யா.
கிருஷ்ணனும் “நா ரப்பர் எஸ்டேட் போறேன் வர ரெண்டு நாள் ஆகும்” என்றவர் பிரகாஷ் குடும்பத்தை பார்த்து தலை அசைத்து சென்று விட்டார் .
சங்கரன் அவரின் மனைவி மற்றும் மக்களோடு வந்து “சாரி பிரகாஷ் லீவ்க்கு எப்போவும் ஸ்மிதா வீட்டுக்கு போயிடுவோம், இப்போ கிளம்பினா டைம் கரெக்ட்டா இருக்கும், நீங்க பால் காச்சிட்டு ஸ்டே பண்ணிக்கோங்க, நா ஒரு வாரத்துல வந்திறேன்” என்று கூறி செல்ல ஸ்மிதா மாமியார் மற்றும் ஷ்யாமளாவிடம் மட்டும் தலை அசைத்து விடைபெற்றார்.
ஜெகன்நாதன் கவனித்த வரை அவர்களுக்கோ அவர்கள் பிள்ளைகளுக்கோ மரியாதை என்பது மருந்துக்கு கூட இல்லை, அவன் பார்வை அம்முவை தேடி செல்ல.. கடந்து போகும் அனைவரையும் ஏக்கத்தோடு பார்த்திருந்தாள் அவள்.
புடைவை முந்தானையால் அவள் தலை துடைத்த ஷ்யாமா “போய் குளி டா, நாம பால் காச்சுக்கு போலாம்” என்க அனைவரையும் திரும்பி பார்த்தவள் முகத்தில் மெல்ல புன்னகை மலர்ந்தது.
பிரகாஷும் சீதா ராணியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் “என்ன மனிதர்கள் இவர்கள் இத்தனைபேர் போகிறார்களே இந்த குழந்தையையும் அழைத்து சென்றால் என்ன? அவள் விழிகளில் வழியும் ஏக்கத்தை பார்த்த பிறகும் விட்டு செல்ல எப்படி மனம் வருகிறது” என்று உள்ளே புழுங்கினர், அடுத்தவர் வீட்டில் நாம் அபிப்ராயம் சொல்ல முடியாதே அதனால் பேசவில்லை.
ஷ்யாமளாவின் வீட்டில் அவர் அம்முவை மகளை போல பார்த்துக் கொல்வதே பிடிக்க வில்லை , இதில் அவளை அங்கு அழைத்து சென்றால் வார்த்தையால் குத்தி கிழிப்பார்கள் என்பதால் தன் பிள்ளைகளை அனுப்பிவிட்டு இறுதியில் இரண்டு நாட்கள் மட்டும் சென்று வருவார்.
சங்கரனுக்கும் ஸ்மிதாவிற்கும் யாரை பற்றியும் கவலை இல்லை அம்முவை அவர்கள் அருகில் கூட சேர்ப்பதில்லை அதனால் லக்ஷ்மியும் ஷ்யாமாவும் அவளை அவர்களுடன் அனுப்புவதில்லை.
உள்ளே குளிக்க சென்ற அம்முவை பார்த்த லக்ஷ்மி அம்மா “என் அம்முவுக்கு தாய் இல்லை , அவளுக்கு தாய் வீடு தந்தை வீடு இரண்டும் இது தான், எல்லோரும் போறாங்க என் குழந்தைக்கு போக ஒரு இடம் இல்ல” என்றார் குரல் இடற.
“ஏன் இப்படி சொல்றீங்க” என்ற சீதா ஷ்யாமளாவின் அருகில் வந்து “அப்போ இவங்க யாரு” என்க சத்தமிட்டே அழுத்துவிட்டார் ஷ்யாமா.
அம்முவை வயிற்றில் சுமக்காமல் இருக்கலாம் ஆனால் இவரை விட சிறந்த தாய் அவளுக்கு உண்டா?? “ஆமாம்.. ஆமாம்… இவள் தான் அவளின் தாய்” என்ற லக்ஷ்மி மருமகளின் கையை பிடித்துக் கொண்டார்.
ஷ்யாமளாவிற்கு சீதாவை மிகவும் பிடித்துவிட்டது இத்தனை வருடத்தில் மாமியார் லக்ஷ்மியை தவிர யாருமே அம்மு விஷயத்தில் அவரிடம் நல்ல வார்த்தை பேசியதில்லை.
குளித்து முடித்து வந்தவளுக்கு அவள் பாட்டி தலை துவட்டி விட, ராஸ்னாதி சூர்ணம் பொடியை அவள் உச்சியில் தேய்த்துவிட்டார் ஷ்யாமா “இது என்ன?” என்ற சீதாவிடம் “இது உச்சியில் கோர்க்கும் தண்ணீரை உரிந்துவிடும் ஆயுர்வேத பொடி, குளித்தவுடன் உச்சியில் வைத்துக் கொணடால் நீர் கோர்க்காது, தினமும் தலை குளிக்கும் எங்களுக்கு இது மிகவும் தேவை” என்றார்.
“ஓஹ்” என்று ஆச்சர்யமாக கேட்டுக் கொண்டார் சீதா, “இங்க வாடா” என்று அம்முவை அருகில் அழைத்தவர் குளிப்பின்னலை அவளுக்கு போட்டு “பூ வெச்சுக்கிறியா” என்க, அவள் தலையாட்டினாள் நிறைய பூ எடுத்து அவள் அடர்த்தியான கூந்தலில் சூடினார்.
“எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக வந்துவிடுகிறாயா” என்று கேட்க அவன் இதயம் துடிக்க இதழ்கள் வரை வந்துவிட்டது வார்த்தைகள், அதே நொடி “எங்க கூட வந்துடுறியா அம்மு” என்று கேட்டிருந்தான் ஜெகன்நாதனின் தம்பி வாஞ்சிநாதன்.
தன் நெஞ்சில் ஏதோ உராயும் உணர்வில் கண் திறந்தவன் பார்த்தது அவன் மார்பில் முகம் புதைத்து உறங்க முற்படும் அம்முவை தான், இறகை போல மனம் மிதக்க அவளை வாகாக தன் மார்பில் சாய்த்து அனைத்துக் கொண்டான், அழகான ஒரு புன்னகை கூட விரிந்தது அவன் இதழில், அவன் இடையோடு கை கோர்த்து இறுக்கமாக அனைத்துக் கொண்டாள்.
அழிந்துகொண்டிருந்த அவளின் மூளை செல்லில் எங்கோ இன்றும் அழியாமல் இருக்கிறது அவனின் நினைவும் வாசமும்.
“மாமா எவ்ளோ நேரம் நீங்களே ஓட்டுவீங்க, எங்கயாவது நிறுத்துங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு போகலாம்” என்றான் “அட என்ன மாப்ள இது எல்லாம் ஒரு ஓட்டமா, எவ்ளோ கடந்து வந்துட்டோம், புள்ளைங்க வேற நல்லா தூங்குறாங்க,ஒரே அழுத்துல போய்டலாம்” தேனீ மாவட்டத்தில் இருக்கும் உத்தமப்பாளையம் நோக்கி போய்க்கொண்டிருந்தது அவர்களின் கார், அதுதான் வருண் ஜெகந்நாதனின் ஊர்.
முன்பில் அமர்ந்திருந்த ரூபாவும் நல்ல உறக்கத்தில் இருந்தாள், தன்னில் சாய்ந்திருந்தவளை இன்னும் தன்னோடு இறுக்கியவன் நெற்றியில் இதழ் பதித்து, அவள் வலக்கையை பற்றி தன் மார்பில் அழுந்த பதித்துக் கொண்டான்.
மாலையிட்டு மனைவி என்னும் உரிமையோடு அவள் வருகையில், தங்களுக்கான இரவின் ஏகாந்ததையில் அவளிடம் காண்பிக்க மறைத்து வைத்திருந்தான் தன் மார்பில், அவளின் பெயரை தாங்கி நிற்கும் நிழலை.
அவளின் உண்மையான பெயர் கூட இப்பொழுது அவள் நினைவில் இருக்கிறதா தெரியவில்லை “நீ அப்படி தானே அவளை அழைப்பாய் அவள் பெயரை சொல்லி அழைக்கலாமே” என்றது மனச்சாட்சி “இல்லை நந்தேட்டா.. என்னும் அழைப்பை கேட்கும் வரை நானும் அவளை அந்த பேர் சொல்லி அழைக்க போவதில்லை” என்று உறுதியாக இருந்தான்.