அத்தியாயம் 10
ஓடும் தண்ணீரில்
உன் பெயர் எழுதினேன்
கலைந்து மாயமாவாய்
என்று தெரிந்தும்!!!
அன்று மாலை வீட்டுக்கு வந்த முருகேசனுக்கு வீட்டில் இருந்த அமைதி திகைப்பைக் கொடுத்தது. எப்போதுமே அவர் வரும் போது அவரின் இரண்டு மகள்களும் அவருக்காக காத்திருப்பார்கள்.
ஒரு வேளை அவர்கள் அறையில் இருந்தால் கூட கலாவதி அவருக்காக காத்திருப்பாள். ஆனால் இன்றோ மகள்களின் அரவமும் இல்லை. மனைவியின் காத்திருப்பும் இல்லை.
வீட்டின் இந்த நிலை அவரை புருவம் தூக்க வைத்தது. புருவ சுளிப்புடன் உள்ளே வந்தார். அவருக்கு வீட்டின் இந்த நிலை சுத்தமாக பிடிக்க வில்லை.
அவருக்கு உயிர்ப்பைத் தருவதே அவரது வீடு தான். செங்கலும் மணலும் கொண்டு கட்டப் பட்ட அந்த வீட்டுக்கு உயிர்ப்பைத் தருவதே அவருடைய மகள்களும் மனைவியும் தான்.
ஏதாவது சண்டை அவர்களுக்குள் வந்தாலும் கூட முருகேசன் வந்ததும் அவரிடம் கோல் மூட்டவாவது யாராவது இருப்பார்கள். ஆனால் இப்போது இருக்கும் அமைதி அவருக்கு சிறு கலவரத்தைக் கொடுத்தது நிஜம்.
அடுப்படியில் கலாவதி இருக்கிறாளா என்று பார்த்தாள். கலாவதி அங்கே இல்லை. இந்நேரம் டீ போட்டு ஏதாவது பண்டம் செய்து கொண்டு மகள்களிடம் செல்ல சண்டை போடும் மனைவியும் அங்கு இல்லை. பிள்ளைகளின் அறையும் மூடியே இருந்தது.
குழப்பத்துடனே தங்களின் அறைக்கு சென்றார். அங்கே தலையில் கை வைத்து அமர்ந்திருந்த கலாவதியைப் பார்த்தவர் “கலா என்ன ஆச்சு?”, என்ற ஒற்றை வார்த்தை தான் கேட்டார்.
கண்களில் கலக்கத்துடன் அவரை நிமிர்ந்து பார்த்தாள். தங்களின் திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதிக்க வில்லை என்ற போது தான் கலாவதி இப்படி ஒரு மனநிலையில் இருந்தாள்.
அதன் பின் இத்தனை வருஷத்தில் அவள் சோர்ந்திருந்து முருகேசன் பார்த்ததே இல்லை.
“கலா, ஏதாவது பெரிய பிரச்சனையா?”
“பெரிய பிரச்சனையா, சின்ன பிரச்சனையான்னு தெரியலைங்க”
“அப்ப பிரச்சனை இருக்கு அப்படி தானே? என்ன ஆச்சு டா?”
“பிள்ளைங்க ரெண்டு பேரும் வளந்துட்டாங்கன்னு தெரியும். ஆனா அவங்க கூட திருட்டுதனமும் சேத்து வளந்துருக்குனு இன்னைக்கு தாங்க தெரியும்”
“என்ன ஆச்சு மா?”,
“உங்க மக, அன்னைக்கு நீங்க தீபக்னு ஒரு பையனைப் பத்தி சொன்னீங்களே? அவன் கூட தினமும் போன் பேசுறா. அதுவும் என்னோட போன்ல இருந்து”, என்று ஆரம்பித்து இன்று நடந்த அனைத்தையும் சொன்னாள்.
அனைத்தையும் பொறுமையாக கேட்டவர் அமைதியாக அமர்ந்து விட்டார். “என்னங்க அமைதியாகிட்டீங்க? இந்த விஷயத்தை நாம எப்படி எடுத்துக்குறது?”
“என்ன செய்ய சொல்ற கலா?”
“என்னங்க இப்படி பொறுப்பில்லாம கேக்குறீங்க?”
“அவளைக் கூப்பிட்டு கண்டிக்க சொல்றியா? அவங்க ரெண்டு பேரும் நல்ல பிரண்ட்ஸா இருக்கலாம் தானே?”
“நான் அந்த பையன் கிட்ட பேசினதை தப்பு சொல்லலைங்க. அதை எதுக்கு திருட்டு தனமா செய்யனும்? இதுக்கு இந்த சின்னக் கழுதையும் சப்போர்ட். கேம் விளையாடப் போறேன்னு சொல்லி போனை தூக்கிட்டு போய் காயத்ரிக்கு கொடுத்துருக்கா”, என்று கலாவதி சொன்னதும் சிரித்தார் முருகேசன்.
“என்னங்க சிரிக்கிறீங்க?”
“நம்ம காயத்ரி மக வந்து அம்மா எனக்கு ஒரு பையன் பிரண்டா கிடைச்சிருக்கான். அவன் கிட்ட நான் போன் பேசட்டுமான்னு கேட்டிருந்தா நீ பேசுன்னு சொல்லிருப்பியா கலா?””
“அது எப்படிங்க முடியும்?”
“இப்ப தானே சொன்ன? அந்த பையன் கிட்ட பேசினது தப்பு இல்லை. திருட்டு தனம் பண்ணினது தான் தப்புன்னு”
“ஆன்.. அது..,.”
“திணறாத கலா, என்னைக் கேட்டா ரெண்டு பேரும் செஞ்சது தப்பு இல்லை. ஒரு அம்மாவா கவலைப் படுற நீ தான் முன்னாடி உங்க வீட்டுக்கு தெரியாம என்னைப் பாக்க கோயிலுக்கு வருவ?”, என்று சொன்னதும் கலாவதி நே என்று விழித்தாள்.
அவர் சிரிக்கவும் “இப்ப நம்மளோட காதல் கதை தேவையா?”, என்று கோபமாக கேட்டாள்.
“இங்க பாரு கலா, ஒரு அம்மாவா நீ யோசிக்கிறதும் தப்பு இல்லை. பிள்ளைங்க தப்பான பாதைல போக எந்த அம்மா அப்பா தான் விடுவாங்க. ஆனா அதே நேரம் அவங்களையும் நாம புரிஞ்சிக்கணும். நம்ம அம்மா அப்பா பண்ணின அதே தப்பை நீயும் செய்யாதேன்னு சொல்றேன். பிள்ளைங்களை புரிஞ்சிக்க முயற்சி பண்ணு. இப்படி நீ முகத்தை தூக்கிட்டு இருந்தா அவங்க உடைஞ்சு போயிர மாட்டாங்களா?”
“இப்ப என்ன தான் செய்ய சொல்றீங்க? யார் கிட்டனாலும் பேசிக்கோங்கன்னு என்னை அப்படியே விடச் சொல்றீங்களா?”
“நான் அப்படிச் சொல்லலை. அவங்களுக்கு தெரியாமலே உன்னோட கண்காணிப்பை அதிகப் படுத்து. காயத்ரி அந்த பையன் கிட்ட பேசினானா நீயும் போனை வாங்கி அவன் கிட்ட பேசு. பிள்ளைங்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடு”
“நீங்க சொல்றது எனக்கு சரியாப் படலை. நம்ம கொடுக்குற சுதந்திரத்தை அவங்க தப்பா பயன்படுத்திக்கிட்டாங்கன்னா என்ன செய்ய?”
“அப்படி நடந்தாலும் நாம ஏத்துகிட்டு தான் ஆகணும். அவங்களுக்கு நல்லது கெட்டது சொல்ல வேண்டியது நம்ம கடமை. அதை மீறி வேற ஏதாவது நடந்தா அதுக்கு அந்த கடவுள் தான் பொறுப்பு. ஆனா எனக்கு என் பொண்ணுங்க மேல நம்பிக்கை முழுமையா இருக்கு. தேவையில்லாம அவங்களை யோசிக்க வைக்க வேண்டாம். அவங்க கிட்ட சாதாரணமா பேசு. உனக்கு முடியலைன்னா அவங்க பண்ணின திருட்டு தனத்துக்கு நாலு திட்டு திட்டிட்டு அவங்க கிட்ட சாதாரணமா பழகு கலா. இப்படி முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்காத”
“ஹிம்”
“எந்திரி, போய் டீ போடு. நான் டிரெஸ் மாத்திட்டு அவங்களை கூட்டிட்டு வரேன்”, என்று சொன்னதும் கலாவதி எழுந்து போனாள்.
அதே நேரம் இன்று நடந்த கதையை காயத்ரி சொன்னதும் பீதியாகிப் போய் அமர்ந்திருந்தாள் சௌமி.
“ஐயோ நிஜமாவே அம்மாவுக்கு தெரிஞ்சுருச்சா?”, என்று கேட்டாள் சௌமி.
“ஆமா டி, எனக்கு பயமா இருக்கு. அம்மா இன்னும் ஒரு வார்த்தை கூட பேசலை. நாம சாரி கேக்கலாமா?”
“தெரிஞ்சே தப்பு பண்ணிட்டு சாரி கேக்குறது அபத்தமா இருக்கும்கா”
“ஆனா, கேக்க வேண்டியது நம்ம கடமை”
“ஆமா, இன்னைக்கு அம்மா உன் கூட ஹாஸ்பிட்டலுக்கு எல்லாம் வந்தாங்கல்ல? அதனால வா போய் நாம பேசுவோம்”, என்று சௌமி சொன்னதும் இருவரும் வெளியே சென்றார்கள்.
பூனை போல் பதுங்கி பதுங்கி வந்து நின்ற மகள்களைக் கண்டு புன்னகை வந்தாலும் அதை மறைத்துக் கொண்டு நடமாடினாள் கலாவதி.
“அம்மா சாரி மா, தப்பு என் மேல தான்”, என்று காயத்ரி சொன்னதும் அவளை நிமிர்ந்து பார்த்தாள் கலாவதி. அந்த பார்வை நீ மட்டும் தப்பு பண்ணுனியா? சௌமி பண்ணலையா?”, என்று கேள்வி கேட்பது போல இருந்தது.
“சரி சரி, எங்க ரெண்டு பேரோட தப்பு தான். சாரி மா”, என்றாள் சௌமி.
“இப்ப நான் என்ன செய்யணும்?”, என்று கேட்டாள் கலாவதி.
அப்போது அங்கே முருகேசனும் வந்து விட்டார். அவரைப் பார்த்ததும் பிள்ளைகள் இருவரும் குற்றவுணர்வுடன் தலை குனிந்தனர்.
“என்ன ஆச்சு ரெண்டு பேருக்கும்?”, என்று கேட்டார் முருகேசன்.
“அப்பா முதல் நாள் சீனியர் ரேகிங்க் செஞ்சப்ப, தீபக் தான் என்னை வந்து சொந்தகாரப் பொண்ணுன்னு சொல்லி காப்பாத்துனான். என்னோட பேர் எல்லாம் சரியா சொன்னான். அதான் அவன் யாருன்னு எனக்கு குழப்பம். அதைக் கேக்க தான் போன் பண்ணுனோம். அப்புறம் ஸ்டடிஸ் பத்தி பேசி ஃபிரண்ட் ஆகிட்டோம். உங்க ரெண்டு பேர் கிட்டயும் மறைச்சது தப்பு தான். வேற எந்த தப்பும் பண்ணலைப்பா. நீங்க முன்னாடியே உங்க கிளாஸ்ல தீபக்னு ஒரு பையன் படிக்கிறான்னு என்கிட்ட சொல்லிருந்தீங்கன்னா அவன் கிட்ட நான் பேசிருக்கவே மாட்டேன்”, என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள் காயத்ரி.
“ஆமாப்பா, எனக்கும் அந்த அண்ணனுக்கு எப்படி நம்ம அக்காவை தெரியும்னு குழப்பமா இருந்துச்சு. அதனால நான் தான் அம்மா போனை சுட்டு அக்காவை பேசச் சொன்னேன்”, என்று சௌமி சொன்னதும் அவர்கள் இருவரின் காதையும் திருகிய கலாவதி “செய்யுறதையும் செஞ்சிட்டு மாத்தி மாத்தி விளக்கம் சொல்லிட்டு இருக்கீங்களா?”, என்று கேட்டாள்.
“அப்ப அப்பாவோட காதையும் நீ திருகனும் மா. ஏன்னா அவர் தான் உண்மை தெரிஞ்சும் சொல்லலை”, என்று சௌமி சொன்னதும் கலாவதி முருகேசனை முறைத்தாள்.
“கவுன்சிலிங்க்ல வச்சு அந்த பையன் கிட்ட பேசினதையே நான் மறந்துட்டேன் கலா. சாரி தப்பு என் மேல தான்”, என்று அவர் ஒத்துக் கொண்டதும் அனைவரும் சமாதானம் ஆகி விட்டார்கள்.
ஆனால் அதன் பிறகு காயத்ரி தீபக்க்கு போன் செய்யவே இல்லை. அவன் எவ்வளவோ காத்திருந்து பார்த்து விட்டான். கூடவே அவளுடைய அம்மா அவளை திட்டியிருப்பார்களோ என்ற பயமும் அவனுக்கு இருந்தது.
அடுத்த நாளும் அவளிடம் இருந்து போனோ மெஸ்ஸேஜோ வர வில்லை என்றதும் கடுப்பானவன் கலாவதி நம்பருக்கு போனை போட்டான்.
கலாவதி தான் போனை எடுத்தாள். “ஹலோ”, என்றாள் கலாவதி.
“ஆண்ட்டி, நான் தீபக் பேசுறேன். நேத்து பாத்தோமே”
“ஆன், தெரியுது சொல்லுப்பா. குழந்தை எபப்டி இருக்கு. உன் அக்கா எப்படி இருக்கா?”
“ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க ஆன்ட்டி. தேங்க்ஸ். எனக்கு சப்போர்டிவா இருந்ததுக்கு”
“பரவால்லப்பா”
“ஆண்ட்டி”
“சொல்லு தீபக்”
“காயுவை ரொம்ப திட்டிட்டீங்களா? தப்பு என் மேல தான். அன்னைக்கு காயு சூப்பரா பாட்டு பாடினா. அதுக்கு பாராட்டணும்னு தோணுச்சு. அதுக்கு நான் தான் போன் நம்பர் கொடுத்தேன். நீங்க அவளை திட்டுறதை விட என்னை திட்டிருங்க. நான் செஞ்சது தப்பு தான். என்னை மன்னிச்சிருங்க”
“இப்ப நான் உன்னை திட்டனுமா, மன்னிக்கணுமா?”, என்று கலாவதி கேட்டதும் நே என்று விழித்த தீபக் “ஆன்ட்டி”, என்று குழப்பமாக அழைத்தான்.
“முடிஞ்சதை விடுப்பா. காயத்ரியும் செஞ்ச தப்பை ஒத்துக்கிட்டா. உனக்கும் புரிஞ்சிருச்சு, அது போதும்”
“நீங்க தப்பா நினைக்கலைன்னா நான் அவ கிட்ட பேசலாமா?”, என்று தயக்கத்துடன் தான் கேட்டான்.
“இரு அவ கிட்ட கொடுக்குறேன்”, என்று சொன்னதும் ஆனந்தமாக அதிர்ந்தான்.
“காய்த்ரி, இந்தா”, என்று அவள் கையில் போனைக் கொடுத்தாள் கலாவதி.
“யாருமா?”, என்று கேட்டுக் கொண்டே அதை வாங்கிப் பார்த்த காயத்ரி அன்னையை அதிர்வாக பார்த்தாள்.
“எனக்கு உங்க ரெண்டு பேர் மேலயும் நம்பிக்கை இருக்கு. பேசு”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் கலாவதி.
அதைக் கேட்டு காயத்ரி புன்னகைத்தவாறே போனை காதில் வைத்தாள். ஆனால் தீபக்கின் முகமோ தொங்கிப் போனது.
ஏற்கனவே இருவருக்கும் இடையில் இருந்த நட்பை வைத்துக் கொண்டு அவனால் அவளிடம் காதலைச் சொல்ல முடியவில்லை. இதில் கலாவதி வேறு நம்பிக்கை என்ற அஸ்திவாரத்தைப் போட்டால் அவன் எப்போது தான் அவளிடம் காதலைச் சொல்வதாம்.
“ஹலோ, ஹலோ, தீபக் ஏன் அமைதியா இருக்க?”, என்று காயத்ரியின் குரலில் நடப்புக்கு வந்தவன் “ஆன் ஒண்ணும் இல்லை”, என்றான்.
“என்ன ஆச்சு? ஒரு மாதிரி இருக்கு குரல்”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நீ ஏன் மெஸ்ஸேஜ் கூட பண்ணலை. எனக்கு பயமா இருந்துச்சு. அதான் பண்னினேன்”
“அம்மா என்ன சொல்வாங்களோன்னு பயத்துல தான் பண்ணலை. இப்ப அம்மாவே போனைக் கொடுத்துட்டு போயிட்டாங்க. உன் மேல அம்மா அப்பா ரெண்டு பேருக்கும் அவ்வளவு நம்பிக்கை. நீ ரொம்ப நல்ல பையனாம். பொறுப்பான பையனாம். உனக்கு ஒரே பாராட்டு தான் போ”, என்று சொல்லி சிரித்தாள் காயத்ரி.
“இந்த பாராட்டு யாருக்கு வேணும். என்னை இவ்வளவு நல்லவனா நீங்க நினைச்சா நான் எப்படி என் காதலை உன்கிட்ட சொல்றது?”, என்று மனதுக்குள் புழுங்கினான்.