“என்ன அமைதியாகிட்ட? சரி குட்டிப் பையன், ரேவதி அக்கா எல்லாம் எப்படி இருக்காங்க?”
“நல்லா இருக்காங்க. நான் வீட்ல இருக்கேன். அக்கா இன்னும் ஹாஸ்பிட்டல்ல இருந்து வீட்டுக்கு வரலை. வந்த அப்புறம் வீடியோ கால் பண்ணுறேன்”
“சரி தீபக், எக்ஸாம்கு படிக்க ஆரம்பிக்கலையா?”
“படிக்கணும்”
“ஏய் நாம ரெண்டு பேரும் சேந்து படிக்கலாமா? நான் சிலபஸ் எடுக்குறேன். முதல்ல என்ன படிக்கணும்னு முடிவெடுத்து படிப்போம்”, என்று படிப்பு பக்கம் பேச்சு சென்றதும் அவன் கவனமும் படிப்பின் பக்கம் சென்றது.
அதன் பின் நாட்கள் படிப்பு, எக்ஸாம், பின் லீவ் என்று சென்றது.
எக்ஸாம் முடிந்து லீவ் விட்டதும் ரேவதியின் மகனுக்கு பேர் வைக்கும் பங்ஷன் வைத்திருந்தார்கள்.
“அம்மா, அன்னைக்கு எனக்கு சப்போர்ட்டா இருந்தாங்கல்ல? காயத்ரி அப்புறம் அவங்க அம்மா. அவங்களையும் பங்சனுக்கு கூப்பிடு மா. அக்கா சொல்லுக்கா”, என்றான் தீபக்.
“நானே சொல்லணும்னு நினைச்சேன் டா. ஆனா நீ என்ன ஓவர் ஈடுபாடோட இருக்க. எனக்கு எங்கயோ இடிக்குதே”, என்றாள் மீனாட்சி.
அக்காவும் தம்பியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“எனக்கு தோணுச்சு நான் சொன்னேன். நீங்க சொன்னா சொல்லுங்க, சொல்லலைன்னா போங்க”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டான் தீபக்.
“இவன் என்ன டி சின்ன விசயத்துக்கு கோப பட்டுட்டு போறான்”, என்று கேட்டாள் மீனாட்சி.
“அம்மா, அவன் கோப பட்டுட்டு போகலை. இங்க இருந்தா அவன் கிட்ட நீ உண்மையை கரந்துருவியோன்னு தான் போறான்”
“என்ன உண்மை?”
“நாளைய சம்பந்தியை நீ கட்டாயம் விழாவுக்கு கூப்பிடணும்னு அவனுக்கு ஆசை இருக்காதா?”
“என்ன சம்பந்தி, என்ன ரேவதி உளறுற?”
“இன்னுமா உனக்கு புரியலை? அந்த பொண்ணு காயத்ரியை உன் மகனுக்கு ரொம்ப பிடிக்கும்”
“ஐயோ, இது என்ன புதுக்கதை?”
“எல்லாம் உன்னால தான். முதல்ல நீ தான் அவளை பாருன்னு அவன் கிட்ட சொல்லிருக்க. அதான் அவன் பாத்துருக்கான். அப்புறம் அவனுக்கு பிடிச்சிருச்சு”
“என்ன ரேவதி சொல்ற? நான் அந்த பொண்ணை பாக்க சொன்னேனா? அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல வச்சு நான் அவளை பாத்தேன். அப்புறம் எப்படி சொல்லிருப்பேன்?”
“அன்னைக்கு இல்லை. அதுக்கு முன்னாடியே”
“எப்ப டி?”
“கவுன்சிலிங்க் போனப்ப”, என்று ஆரம்பித்து அன்று நடந்ததை மீனாட்சிக்கு நினைவு படுத்தினாள் ரேவதி.
“அடப்பாவி, நான் சும்மா சொன்னதை தான் இவன் இறுக்கமா பிடிச்சிக்கிட்டானா? அது தான் அன்னைக்கு அந்த பொண்ணோட அப்பா கிட்ட அவ்வளவு சந்தோஷமா பேசினானா? ஆனாலும் அந்த பொண்ணு அழகு தான். எனக்கு ஓகே. ஆனா உங்க அப்பா என்ன சொல்லப் போறாரோ?”
“இப்போதைக்கு இதை அப்படியே விடு மா. ஏன்னா அந்த பொண்ணு இவன் கிட்ட பிரண்டா தான் பழகுது. நான் சும்மா உன் காதுல போட்டு வச்சேன். நான் சொன்னேன்னு அவன் கிட்ட சொல்லாத. விஷயம் தெரியாத மாதிரியே இருந்துக்கோ”, என்றாள் ரேவதி.
“சரி டி, நான் அவங்களை பங்சனுக்கு வரச் சொல்றேன். நீ இந்தா பேரனை வச்சிக்கோ”, என்று சொல்லி அவளுடைய போனை வாங்கி கலாவதியை போனில் அழைத்தாள் மீனாட்சி.
சாதாரண நலம் விசாரணைக்கு பிறகு பங்சனுக்கு குடும்பத்துடன் அவர்களை அழைத்தாள் மீனாட்சி.
பங்ஷன் நாளும் வந்தது. மாலை ஏழு மணிக்கு தான் பெயர் சூட்டும் விழா வைத்திருந்தார்கள். கலாவதி, முருகேசனிடம் சொல்லி விட்டு
சௌமி மற்றும் காயத்ரியை அழைத்துக் கொண்டு தீபக் வீட்டுக்கு சென்றாள்.
அவர்கள் வருவார்களா, மாட்டார்களா என்று வழி மேல் விழி வைத்து காத்திருந்த தீபக்க்கு சந்தோஷமாக இருந்தது. அவர்களை ஆவலாக வரவேற்றான். அதன் பின் மொத்த குடும்பமே அவர்களை வரவேற்றது.
முதலில் குழந்தையை பார்க்கச் சென்றார்கள். அதன் பின்னர் கலாவதி மீனாட்சிக்கு உதவி செய்ய சென்று விட்டாள்.
சௌமி முதல் முறையாக இன்று தான் அவனை பார்க்கிறாள் என்பதால் அவனுடன் சற்று அதிகமாக தான் பேசினாள். அவனும் வருங்கால மச்சினிச்சி என்ற முறையில் அவளுடன் ஆவலாக பேசினான். தன்னைக் கண்டு கொள்ளாமல் சௌமியிடம் கதை பேசும் அவனைக் கண்டு உள்ளுக்குள் புகைந்தது காயத்ரிக்கு.
திடீரென்று இருவரும் காயத்ரியை திரும்பி பார்க்கும் போது அவள் முறைத்துக் கொண்டு இருக்கவும் இருவருக்குமே திகைப்பு தான் வந்தது.
அவளுடைய முறைப்பை தீபக் குழப்பமாக பார்த்தான் என்றால் சௌமியோ தன்னுடைய அக்காவை ஆராய்ச்சியாக பார்த்தாள்.
அதன் பின் தீபக்குக்கு வேலை இருக்க அவன் சென்று விட்டான். சௌமியும் காயத்ரியும் ரேவதிக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
சிறிது நேரத்தில் விழா ஆரம்பிக்க குழந்தைக்கு அரவிந்த் என்று பெயர் வைத்தார்கள். அதன் பின் மொட்டை மாடியில் வைத்து உணவு வழங்கப் பட நேரம் ஆனதால் அனைவரிடமும் சொல்லி விட்டு கலாவதி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டாள்.
தன்னுடைய வீட்டுக்கு காயத்ரி வந்தும் அவளுடன் நேரம் செலவழிக்க முடியாதது தீபக்க்கு கஷ்டமாக இருந்தது. அதன் பின் செமஸ்டர் லீவ் முடிந்து காலேஜ் ஆரம்பமானது.
அந்த செமஸ்டரும் சிம்போசியம், ஸ்போர்ட்ஸ் டே, கல்ச்சுரல் என்று இன்னும் சந்தோஷமாக கழிந்தது. கல்ச்சுரலில் முதல் வருட மாணவர்கள் பங்கேற்க கூடாது என்பதால் அவர்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே.
எங்கு பார்த்தாலும் கதை பேசிக்கொண்டு திரியும் மாணவர்கள் கூட்டம், கலர் கலர் உடை அணிந்து வலம் வரும் மாணவிகள் என காலேஜ் களை கட்டியது. அப்படியே அந்த வருடம் முடிவடைந்தது.
முதல் வருட கல்லூரி வாழ்க்கை அனைவருக்கும் பல அனுபவங்களை கற்றுக் கொடுத்தது. அதிகமாகவே அவர்களை பக்குவப் பட வைத்தது. யாரிடம் எப்படி பழகுவது, டிபார்ட்மெண்ட் ஸ்டாப் பற்றி தெரிந்து கொள்வது என அனைத்தும் கற்றுக் கொண்டார்கள். அனைவரிடமும் இருந்த பதட்டமும் குறைந்திருந்தது.
அனைவருக்குள்ளும் நட்பு சந்தோசத்தை மட்டுமே விதைத்தது. தீபக் காயத்ரி நட்பு நன்கு இறுகியிருந்தது. அவளுக்கு அவன் ஒரு நல்ல தோழன். ஆனால் அவனோ அவள் மீதான காதலை மனதுக்குள்ளே வளர்த்துக் கொண்டான்.
இரண்டாம் ஆண்டு ஆரம்பித்து ஒரு மாதம் கடந்த நிலையில் லேட்டரல் என்ட்ரியாக ஏழு பேரு கிளாசுக்கு வந்தார்கள். அதில் ஒருத்தி தான் சாரு. சாரு வேறு யாரும் இல்லை. தீபக்கின் சொந்த அத்தை மகள்.
ஒரு நாள் தீபக் காலேஜ்க்கு கிளம்பிக் கொண்டிருக்கும் போது “தீபக், இன்னைக்கு சாரு உன் காலேஜ்க்கு தான் டா வரப் போரா. கொஞ்சம் பாத்துக்கோ. உன் அத்தை சொல்லச் சொன்னா”, என்றார் அவனின் தந்தை ராகவன்.
“அப்பா, நான் அவளை வேற காலேஜ் தான் எடுக்க சொன்னேன்? யாரும் என் பேச்சைக் கேக்கலை. நான் அவளை எல்லாம் பாத்துக்க மாட்டேன்”, என்றான் தீபக்.
“அவ நீ சொன்ன உடனே வேற காலேஜ் தான் டா எடுக்குறேன்னு சொன்னா. நாங்க தான் நீ அவளுக்கு துணையா இருப்பேனு சொல்லி அங்கேயே எடுக்கச் சொன்னோம். உன்னோட கிளாஸ்ல இருந்தா அவளுக்கு பாதுகாப்பு தானே டா? கொஞ்சம் பாத்துக்கோ”, என்றதும் அவனுக்கு எரிச்சல் தான் வந்தது.
ஏற்கனவே அவன் ரெப்பாக இருப்பதால் பெண்கள் அவனிடம் வந்து பேசினால் அவனுடைய நண்பர்கள் அவனை கிண்டல் அடித்தே சாகடிக்கிறார்கள். அதனால் தான் அவன் காயத்ரியிடம் கூட கிளாசில் வைத்து பேச மாட்டான். இப்போது சாரு அதே கிளாசில் படித்தால், அதுவும் அவள் அவனுடைய அத்தையின் பெண் என்று தெரிந்தால் அவர்கள் கிண்டலுக்கு அளவே இருக்காது என்ற பயம் அவனுக்கு வந்தது.
சாருவைப் பற்றிய யோசனையோடே கிளம்பினான் தீபக். பஸ்ஸில் ஏறி அமர்ந்ததில் இருந்து ஏதோ யோசனையாக இருந்த தீபக்கை பார்த்து புருவம் உயர்த்தினாள் காயத்ரி.
கண்களால் அவள் என்னவென்று கேட்க அவனோ ஒன்னும் இல்லை என்று சைகை செய்தான்.
தினமும் பஸ்ஸில் இருந்து இறங்கியதும் அவளுடனே கிளாசுக்கு நடந்து வருபவன் அன்று அவளுடன் செல்லாமல் அங்கேயே தேங்கி நின்று விட்டான்.
கிளாசுக்கு வந்து அமர்ந்த காயத்ரி “என்ன இன்னும் இந்த தீபக்கை காணும்”, என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.
அதே நேரம் தீபக் சாருவுக்காக தான் காத்திருந்தான். அப்போது அங்கே சாரு அவளுடைய தந்தை விக்னேஷுடன் வந்து இறங்கினாள்.
அவளைப் பார்த்து முறைத்த தீபக் “எப்படி இருக்கீங்க மாமா?”, என்று அவளுடைய தந்தையிடம் நலம் விசாரித்தான்.
“நல்லா இருக்கேன் தீபக். ரேவதியும் குழந்தையும் நல்லா இருக்காங்களா?”
“நல்லா இருக்காங்க”
“சரிப்பா, இவளை கொஞ்சம் பாத்துக்கோ. நான் கிளம்புறேன்”
“சரி மாமா”, என்று தீபக் சொன்னதும் விக்னேஷ் கிளம்பி விட்டார்.
“ஏண்டி, உன்னை நான் இந்த காலேஜா எடுக்க சொன்னேன்? எதுக்கு டி இப்படி என் உயிரை வாங்குற?”, என்று கத்தினான் தீபக்.
“என்னை என்ன டா பண்ண சொல்ற? மாமாவும் அப்பாவும் தான் நீ இங்க இருக்கேன்னு சொல்லியே என்னை இங்க சேத்து விட்டுட்டாங்க. ஆனா நீ எதுக்கு இவ்வளவு பயப்படுற? இங்க ஏதாவது நீ சேட்டைப் பண்ணி நான் வீட்ல சொல்லிருவேன்னு பயப்படுறியா?”, என்று நக்கலாக கேட்டாள் சாரு.
“அப்படின்னு சொல்ல முடியாது”, என்று இழுத்தான் தீபக்.
“அப்படியா? நம்பிட்டேன்”
“சரி சரி, அதுக்கு தான் பயப்படுறேன் போதுமா? இங்க நடக்குரதை வீட்ல போட்டுக் கொடுத்துற மாட்டியே?”
“கவலைப் படாதே, அத்தான். இங்க நடக்குறதை நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்”
“இந்த அத்தான் பொத்தான் எல்லாம் இங்க சொல்லித் தொலையாத டி. அப்புறம் ஓட்ட ஆரம்பிச்சிருவாங்க. கிளாசைப் பொறுத்த வரை நீ யாரோ, நான் யாரோ. ஓகே வா?”
“சரி சரி டீல். இப்ப என்னை கிளாசுக்கு கூட்டிட்டு போ. வா போகலாம்”
“இந்த சேந்து போற கதையே வேண்டாம். நான் முன்னாடி போறேன். நீ என் பின்னாடியே வா”, என்று சொல்லி முன்னே நடந்தான். அவன் பின்னேயே சென்றாள் சாரு.
அவனையே எதிர் பார்த்திருந்த காயத்ரி அவன் உள்ளே வந்ததும் தான் நிம்மதியாக இருந்தது. “இவ்வளவு நேரம் எங்க போனான்? சாயங்காலம் கேக்கணும்”, என்று எண்ணிக் கொண்டாள்.
அப்போது சாரு உள்ளே நுழைய அனைவரின் பார்வையும் அவள் பக்கம் தானாக சென்றது. பார்பி டால் போல், துறுதுருவென்று இருந்த அவளை அனைவருமே ஆர்வமாக பார்த்தார்கள்.
தீபக்கின் நண்பர்களே அவளின் அழகை வியக்க அவர்களை ஒரு முறைப்பு முறைத்து அடக்கினான் தீபக்.
அவள் யாராயிருக்கும் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது. அவளைப் போல இன்னும் நான்கு பேர் கிளாசுக்கு புதிதாக வந்தார்கள்.
அவர்களிடம் விசாரித்து பார்த்த பின்னர் தான் அவர்கள் டிப்ளமோ முடித்து விட்டு நேரடியாக இரண்டாம் வருடத்தில் சேர்ந்திருக்கிறார்கள் என்று புரிந்தது.
அதன் பின் நாட்கள் அப்படியே நகர புதிதாக வந்தவர்களுக்கு லேப் பிரிக்கும் போது சித்ரா, தீபக், தினேஷ், காயத்ரி அவர்கள் குருப்பில் சாருவும் இடம் பெற்றாள்.
அப்படி லேப் பிரிக்கும் போது தான் சாருவுடன் காயத்ரி கொஞ்சம் பேசினாள். ஆனால் அப்போது சாருவின் பார்வை தீபக் மீது அதிகமாக விழுவது போல இருந்தது காயத்ரிக்கு.
கூடவே ஏதாவது டவுட் என்றால் அவனிடம் நேரடியாகவே சாரு கேட்க ஆரம்பித்தாள். அந்த விஷயத்தில் சாரு மீது காயத்ரிக்கு கொஞ்சம் கோபம் வந்தது.
அவனிடம் போனில் பேசும் போது “புதுசா வந்த பொண்ணு என்ன டவுட்னாலும் உன்கிட்ட தான் கேக்குறா போல?”, என்று கோப பட்டாள் காயத்ரி.
அவளிடமாவது சாரு யார் என்ற உண்மையை சொல்லலாம் என்று நினைத்த தீபக் காயத்ரியே ஒரு மாதிரி கேட்கவும் “நான் ரெப் அப்படிங்குறதுனால கேப்பாளா இருக்கும்”, என்று சொல்லி சமாளித்தான்.
ஆனால் காயத்ரியால் சமாதானம் தான் ஆக முடியவில்லை. கிளாசில் ஏதாவது நடந்தால் அன்று மாலை அவனை போனில் வறுத்தெடுப்பாள். அவளுக்கு பொறுமையாக விளக்கம் சொல்லும் தீபக், காயத்ரி மனதில் எழுந்த பொறாமை உணர்வை புரிந்து கொள்ள வில்லை.
காதல் தொடரும்!!!