அத்தியாயம் 10
அவள் இதழ் கேட்கும்
கேள்விக்கே விடை தெரியாத
நான் அவள் இமை கேட்கும்
கேள்விக்கு எவ்வாறு பதில் அளிப்பது?!!!
சுசீலா சென்ற பிறகு யுவனின் யோசனை முழுவதும் அவள் பேசியதைப் பற்றியே இருந்தது. சில நாட்களாக அவனுக்கு எப்போதும் மாயா பற்றிய கவலைகள் தான் அதிகம் இருந்தது.
அவனுக்கென்று சில கடமைகள் இருக்கிறது தான். அவன் செய்யும் சில வேலைகளில் அவன் உயிருக்கு கூட ஆபத்து இருக்கிறது. நாளைக்கு அவனுக்கே என்ன ஆகும் என்று அவனுக்கு தெரியாது.
அப்படி தனக்கு ஏதாவது நேர்ந்தால் மாயாவை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற கேள்வி ரொம்ப நாளாகவே அவனுக்கு இருக்கிறது. ஆனால் அதற்கு விடை தெரியவில்லை. இப்போது சுசிலாவும் அவனுடைய பொறுப்பில் தான் இருக்கிறாள்.
தனக்கு ஏதாவது நேர்ந்தால் கூட அவர்களை ஹோமிற்க்கு அனுப்பி விடலாம் என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது. ஆனால் ரெட்டி இருக்கும் வரை சுசீலா எங்கு சென்றாலும் அவளுக்கு பாதுகாப்பு இருக்காது. தன்னால் மட்டுமே அவளை காக்க முடியும் என்ற உண்மையும் புரிந்தது.
இப்போதும் சுசீலா விஷயம் குழப்பத்திலே இருக்க மாயாவுக்கு என்ன செய்ய அவனுடைய குழப்பத்திற்கு விடையை தான் சுசீலா கூறி சென்றாள். இனியும் அவனால் அமைதியாக இருக்க முடியுமா? சுமனிடம் பேசுவதற்காக நேரம் காலத்தைக் கூட உணராமல் உடனடியாக கீழே வந்தான்.
யுவன், மாயா, சுசீலா அறை முதல் மாடி என்றால் கேசவ், சுமன் மற்றவர்கள் அறை தரைத்தளத்தில் இருந்தது.
சுமனைத் தேடி கீழே வந்த பின்னர் தான் அவன் தூங்கிருப்பானோ என்ற யோசனையே யுவனுக்கு வந்தது. ஆனால் அவன் அறை திறந்து கிடந்ததிலே அவன் தூங்க வில்லை என்று புரிந்து
அறைக்குள் சென்றான்.
சுமனும் கேசவும் தான் பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த நேரத்தில் வந்த யுவனைக் கண்ட இருவரும் திகைத்து “பையா, ஏதாவது ஆப்பரேசனா? ரெட்டி விஷயம் ஏதாவது சிக்குச்சா?”, என்று ஹிந்தியில் கேட்டார்கள்.
“அதெல்லாம் இல்லை, வேற விஷயம் உன்கிட்ட பெர்சனலா பேசணும் சுமன். நீ இப்ப பிரீயா இருக்கியா? இப்பவே பேசலாமா?”, என்று யுவன் கேட்டதும் கேசவ் எழுந்து வெளியே போக பார்த்தான்.
“உன்னை விட்டுட்டு அவன் கிட்ட மட்டும் தனியா பேசுறேன்னு நினைக்காத கேசவ். இந்த விஷயம் அவனோட கல்யாணத்தைப் பத்தி. நான் பேசின பிறகு சுமனே உன்கிட்ட அதைப் பத்தி சொல்லுவான்”, என்று கேசவிடம் சமாதானம் சொன்னான் யுவன்.
“நான் ஒண்ணுமே நினைக்கலை பையா. நீங்க என்ன செஞ்சாலும்
அதுல ஒரு காரணம் இருக்கும். சுமன் என்கிட்ட சொல்லுற விஷயமா இருந்தா காலைல சொல்லு. வரேன் பையா”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
சுமனும் கேசவும் கிடைக்க தான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். அவர்கள் மட்டும் இல்லை என்றால் என்ன ஆகிருப்பானோ? அவனுக்கு பக்க பலமாக அவன் சாயும் தூணாக இருவரும் இருந்தார்கள்.
கேசவ் சென்றதும் “பையா, இப்ப எதுக்கு தேவையில்லாத கல்யாண பேச்சு. நம்ம வாழுற வாழ்க்கைக்கு இதெல்லாம் தேவையா பையா?”, என்று கேட்டான் சுமன்.
“தேவை தான் சுமன். ஆனா உன்கிட்ட எப்படி இதைப் பத்தி பேசன்னு தான் தெரியலை. நான் சொல்லப் போற விஷயத்தை நீ எப்படி எடுத்துக்குவன்னு தெரியலை”
“என்கிட்ட எதுக்கு தயக்கம் பையா? நீங்க என்ன வேணும்னாலும் என்கிட்ட நீங்க பேசலாம்”
“நீ மாயாவை விரும்புறியா?”, என்று நேரடியாக கேட்டே விட்டான். சுமனுக்கு அதிர்ச்சி, திகைப்பு, ஆச்சர்யம், குழப்பம் என்று விதவிதமான உணர்வுகள் வந்து போனது. கூடவே இனம் புரியாத சந்தோஷமும் அவனுக்கு வந்தது.
என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் “பையா… நான்… மாயாவை”, என்று இழுத்தான் சுமன்.
“என்கிட்ட நீ தயங்காம உண்மையை சொல்லலாம் சுமன். ஆனா எனக்கு உண்மையான பதில் வேணும். உனக்கு மாயா மேல விருப்பம் இருக்குறதா சுசீ என்கிட்ட சொன்னா. அது உண்மையா?”, என்ற யுவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் எதையோ யோசித்துக் கொண்டிருந்தான் சுமன்.
“என்ன சுமன் பதில் சொல்லாம யோசிக்கிற?”
“இல்லை சுசீ மேடம் எப்படி இதைக் கண்டு பிடிச்சாங்கன்னு யோசிக்கிறேன்”, என்று அவன் சொன்னதும் யுவன் முகம் மலர்ந்தது.
“அப்ப உனக்கு மாயாவை நிஜமாவே பிடிக்குமா?”, என்று யுவன் கேட்ட பிறகு தான் தான் உளறியதையே உணர்ந்தான் சுமன்.
யுவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அழகாக வெட்கப் பட்டான் சுமன். அதில் யுவன் முகம் மலர்ந்தே போனது.
“சுமன்… சுமன்.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நிஜமாவே நீ மாயாவை ஏத்துக்க ரெடியா இருக்கியா? அவளோட பழைய விஷயங்கள்…”
“பையா…. வேண்டாம். அதை பத்தின பேச்சே வேண்டாமே பிளீஸ். எனக்கு மாயாவை பிடிக்கும். இப்ப இருந்து இல்லை. முன்னாடி இருந்தே அவங்களை ரொம்ப பிடிக்கும். ஆனா நாளைக்கு ரெட்டிக்கு எதிரா நாம களம் இறங்கும் போது நமக்கு ஆபத்து வரலாம். ஏன், உயிரே கூட போகலாம். அப்படி இருக்கும் போது இந்த நேரத்துல இது தேவையான பேச்சா பையா? நான் மாயா மேல ஆசைப் பட்டாலும் மாயாவுக்கு நான் சரி கிடையாதுன்னு தோணுது பையா. வேற ஏதாவது நல்ல மாப்பிள்ளையை…..”
“அப்படி சொல்லாத சுமன். ரெட்டி என்னோட தனிப்பட்ட விரோதி. அவனை எப்படி முடிக்கணும்னு எனக்கு தெரியும். அதை நான் பாத்துக்குறேன். எனக்கு இப்போதைக்கு மாயா வாழ்க்கை தான் முக்கியம். உனக்கு முழு சம்மதம் தானே?”
“சம்மதம் பையா. ஆனாலும்….”
“ரொம்ப சந்தோஷம். நீ வேற எதையும் யோசிக்காத. உங்க கல்யாண விஷயத்தைப் பத்தி நான் மாயா கிட்ட பேசவா?”
“அவங்க சம்மதிப்பாங்களா?”
“சம்மதிப்பான்னு சுசீலா சொல்றா”
“அப்படியா?”
“ஆமா, நீ எப்படி மாயாவை விரும்புறதை அவ கண்டு பிடிச்சாளோ அதே மாதிரி மாயா மனசுலயும் நீ இருக்குறன்னு சுசீலா சொல்றா. உண்மையா இல்லையான்னு அவ கிட்ட பேசி தான் தெரிஞ்சிக்கணும். ஆனா அவ என்ன சொல்லப் போறான்னு தெரியலை”
“எம்மாடி சுசீலா கண்ணுல இருந்து எதுவுமே தப்பிக்காதா? யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சு வச்சிருந்த என்னோட மனசையே கண்டு பிடிச்சிட்டாங்களே. உங்களுக்கு ஏத்த ஜோடி தான் பையா அவங்க”, என்று சுமன் சொன்னதும் அவனை விழி விரித்துப் பார்த்தான் யுவன்.
“ஏய் சுமன், நீ என்ன சொல்ற?”
“எங்க தலைவனோட காதலி சுசீலான்னு சொல்றேன் போதுமா? பையா, அவங்க ரொம்ப நல்ல பொண்ணு. ஏதாவது சீக்கிரம் முடிவு பண்ணுங்க”
“அப்ப ரெட்டியை என்ன பண்ண சொல்ற? அவனை அப்படியே விட்டுறலாமா?”
“அதெப்படி விட முடியும்? அவனால எத்தனை பொண்ணுங்க….”
“தெரியுதுல்ல? இனி இது போல பேசாத சுமன். உனக்கும் மாயாவுக்கும் கல்யாணம் முடியட்டும் சுசீலாவோட பாதுகாப்புக்கும் ஏதாவது ஏற்பாடு பண்றேன். குட் நைட்”, என்று சொல்லி விட்டு திரும்பினான்.
“நிஜமாவே உங்க மனசுல சுசீலா இல்லையா பையா? நான் கேக்குறது அதிகப் படின்னா சொல்ல வேண்டாம்”
“எப்போதுமே நாம ஆசைப் படுறது எல்லாமே நமக்கு கிடைக்காது சுமன். அதுக்குன்னு ஒரு குடுப்பினை வேணும். என்னோட வாழ்க்கை வேற. அது வாழ்க்கையான்னே தெரியலை. இதுல சுசீலாவை இழுக்க நான் விரும்பலை. இனியொரு தரம் இதைப் பத்தி நினைக்காத. இதை எனக்கும் தான் நான் சொல்றேன்”, என்று சொல்லி விட்டு சென்றவனின் முதுகையே பார்த்துக் கொண்டு நின்றான் சுமன். யுவனின் வலி அவனுக்கு புரிந்தது.
ஒரு பெருமூச்சை வெளியேற்றிய சுமன் மாயாவைப் பற்றிய கனவில் கண்ணயர்ந்தான்.
அடுத்த நாள் காலையிலே மாயா அறைக்கு சென்றான் யுவன். அதே நேரம் யுவன் பேசியதை கேசவிடம் சொல்லிக் கொண்டிருந்த சுமன் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. அவன் சொன்னதைக் கேட்டு கேசவுக்கும் சந்தோசமே.
இங்கே யுவனோ அவளிடம் எப்படி பேசப் போகிறோம் என்ற தவிப்பில் அமர்ந்திருந்தான்.
“பையா, காலைலே என்னை தேடி வந்துருக்கீங்க? என்ன விஷயம்?”, என்று கேட்டாள் மாயா. அவள் முகத்தில் எந்த துறுதுறுப்பும் இல்லாமல் முகம் கல் போல் இறுகி இருந்தது.
“உன் கல்யாணத்தை பத்தி பேசணும் மாயா”, என்று யுவன் சொன்னது தான் தாமதம் மாயா கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது,
“இதைப் பத்தி பேச வேண்டாமே பையா”, என்று அழுது கொண்டே சொன்னாள்.
“இங்க பாரு மாயா, நான் வாழ்க்கைல சில முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டிய நேரம் வந்துருக்கு. இனியும் என்னால காத்திருக்க முடியாது. எனக்கு என்ன வேணும்னாலும் ஆகலாம். அப்ப நான் உன்னோட பாதுகாப்பையும் உறுதி செய்யனும். அது மட்டுமில்ல சுமன் கேசவ் சுசீலா இன்னும் நிறைய பேரோட வாழ்க்கைக்கு நான் ஏதாவது செய்யனும். உனக்கு சுமனை பிடிச்சிருக்கா மாயாம்மா? அவனுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்றான். உன்னை நல்லா புரிஞ்சவன். அவனை கட்டிக்கிறியா டா? நான் அவன் கிட்ட எல்லாம் பேசிட்டேன். அவனுக்கு முழு சம்மதம்”
“என்ன சுமனா?”, என்று கேட்டவளின் கண்கள் விரிந்ததிலே யுவனுக்கு நிம்மதியாக இருந்தது.
“ஆமா, சுமனுக்கு உன்னை தான் பிடிச்சிருக்காம். உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படுறான்”
“என்னைப் பத்தி தான் அவனுக்கு தெரியுமே? அப்படி தெரிஞ்சுமா கல்யாணம் பண்ண நினைக்கிறான்?”
“ஆமா, இந்த கல்யாணத்தை ஏத்துக்கோ டா. உன் வாழ்க்கைக்கு இப்போதைக்கு ஒரு மாறுதல் வேணும். நான் சொன்னா கேப்ப தானே?”
“ஆனா பையா… நான் என்னால… “
“இதுக்கு நீ சுமன் கிட்ட தான் விடை தேடணும் மாயா. அவன் கிட்ட மனசு விட்டு பேசு. எல்லாம் நல்லதே நடக்கும். நான் இப்ப அவனை இங்க வரச் சொல்றேன்”, என்று சொல்லி அவள் தலையில் ஒரு கையை வைத்து அழுத்தி விட்டு எழுந்து கொண்டான்.
பாதி சந்தோஷம் பாதி குழப்பம் பாதி பயம் என்ற மனநிலையில் இருந்த மாயாவை அவளுடைய அறையிலே எதிர்க் கொண்டான் சுமன்.
இருவருக்கும் முதலில் எப்படி பேச்சை ஆரம்பிக்க என்று தடுமாற்றம் வந்திருந்தாலும் சுமனே பேச்சை ஆரம்பித்தான்.
“பையா சொன்னதுக்கு நீங்க என்ன முடிவு எடுத்துருக்கீங்க மாயா?”, என்று கேட்டான் சுமன்.
“அது வந்து நான்.. என்னை… உங்களுக்கு வேற நல்ல பொண்ணு கிடைக்குமே…”, என்று கண்களில் நீருடன் சொன்னாள் மாயா.