“இருக்கட்டும் மது. இது எங்க ஆசை. நீ என்ன சொல்கிறாய்? ஏற்கனவே நீ என்கிட்ட யாரை நாங்க கல்யாணம் பண்ணிக்க சொல்கிறோமோ, அவரை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி இருக்க.” என்று அவள் கொடுத்த வாக்கினை அவளுக்கு ஞாபகப்படுத்தினார் சிதம்பரம்.
“ஆமாம் அப்பா……” என்று ஆரம்பித்தவள் முடிக்காமல் தயங்கினாள்.
“என்னமா? என்ன யோசிக்கிற?”
“இல்லப்பா. நீங்க யாரை கல்யாணம் பண்ணிக்க சொன்னாலும் பண்ணிக்கிறேன்.” என்று இறங்கிய குரலில் கூறினாள் மதுமிதா.
“மது உனக்கு பிடிச்சிருந்தா தான் இந்த கல்யாணம் நடக்கும். இல்லைனா, நாம இந்த சம்பந்தத்தை தவிர்த்துவிடலாம். என்ன சொல்ற?” என்று கேட்டார் அப்பா.
“நான் ஒருமுறை மாதவன் கிட்ட பேசணும். அப்புறம் நான் உங்களுக்கு பதில் சொல்கிறேன்.” என்றாள் மகள்.
“சரி மது. நான் அண்ணாமலை கிட்ட இதைப்பற்றி கேட்டு சொல்றேன்.” என்று முடித்தார் சிதம்பரம்.
“அப்பா எனக்கு கொஞ்சம் பிரெண்டு திருச்சியில் இருக்காங்க. அவங்க மூலம் அவரைப்பற்றி விசாரிச்சு சொல்றேன்.” என்றான் மதுசுதன் பொறுப்பான அண்ணனாக.
“சரிப்பா என்னை பொருத்த வரைக்கும் பையன் ரொம்ப தங்கமான பையன்.” என்று முடித்துவிட்டு எழுந்தார் சிதம்பரம்.
வள்ளி மதுமிதாவை தனியாக அவளது அறைக்கு அழைத்து வந்தார்.
“மது நீ மாதவன் கிட்ட என்ன கேட்க போறேன்னு எனக்கு தெரியும்.”. என்றார். அவள் கண்களை கூர்ந்து பார்த்து
“இல்லை அம்மா. நீங்க நினைக்கிற மாதிரி கிடையாது. நான் உங்க கிட்ட சொல்லிட்டேன் இல்லையா. நான் அவரிடம் திருவிழாவில் நடந்ததை பற்றி கேட்கவே மாட்டேன்.”
“ அப்புறம் என்னடி அவர் கிட்ட பேச போகிற?”
“நான் அவர்கிட்ட இதைப்பற்றி நேரடியா கேட்கப் போவது கிடையாது. ஆனால் கீதா அவரைப்பார்த்து அன்னிக்கி திருவிழாவில் பார்த்தவன் இவர் இல்லைன்னு சொல்லனும். அப்பத்தான் நான் அவரை கல்யாணம் பண்ணிக்குவேன். அதுக்காக தான் நான் மாதவன் கிட்ட பேசணும்னு சொன்னேன்.” என்றாள் மகள் உறுதியாக.
“சரி எப்படியோ பண்ணு. நான் சொன்னா கேட்கவா போகிறாய்? உன்னோட பிடிவாதம் தான் எனக்கு தெரியுமே. ஆனால் எனக்கு அந்த தம்பி மேல நம்பிக்கை இருக்கு. கண்டிப்பா அந்த தம்பி எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டார்.”
“சரிமா அப்படி நீங்க சொன்னது உண்மையாய் இருந்தால் நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்வேன்.” என்றாள் மகள்.
சிதம்பரம் மகளிடம் சரியென்று சொல்லி விட்டாரே தவிர அண்ணாமலை இடம் இந்த விஷயத்தை எப்படி சொல்வது என்று தயங்கினார்.
எனவே மனைவியிடம் இதைப் பற்றி பேசினார்.
“வள்ளி நான் இதைப்பற்றி எப்படி அண்ணாமலை கிட்ட சொல்றது.? எங்களுக்கு மாப்பிள்ளையை பிடித்திருக்கு. பெண் பார்க்க வாங்கன்னு சொல்லலாம். ஆனால் இவள் மாதவன் கிட்ட பேசிட்டு முடியாதுன்னு சொல்லிட்டா. நான் எப்படி அந்த பதிலை அவங்ககிட்ட சொல்றது?
“எல்லாவிதத்திலும் மாதவன் நம்ம மதுமிதாவுக்கு பொருத்தமா இருப்பார். அவரது குடும்பமும் மதுமிதாவை நல்லபடியா பார்த்துக்குவாங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு. இவள் ஏதாவது பேசி இந்த சம்பந்தத்தை கெடுத்து விடக்கூடாதே.’ என்று சிறிது வருத்தம் காட்டி கேட்டார் சிதம்பரம்.
“ எனக்கும் அந்தக் கவலை இருந்தது. ஆனால் நான் மதுமிதா விடம் எதுவும் தப்பா கேட்க கூடாதுன்னு சொல்லிட்டு தான் வந்து இருக்கேன். அதனால நீங்க கவலைப் படாம அண்ணாமலை கிட்ட பேசுங்க. மதுமிதா மாதவன் கிட்ட தனியா பேசணும்னு சொன்னானு சொல்லுங்க. அவர் புரிந்து கொள்வார்.”
“சரி வள்ளி” என்றவர் அண்ணாமலை எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார்.
“அண்ணாமலை நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதே. மதுமிதா மாதவன் கிட்ட பேசிட்டு முடிவை சொல்றேன்னு சொல்லி இருக்கா.” என்று தயங்கி தயங்கி சொல்லி முடித்தார்.
“அதுக்கு ஏன் இவ்வளவு தயக்கம்? பொண்ணுக்கு பையனை பிடிக்கணும். பையனுக்கு பெண்ணை பிடிக்கணும். அப்பதான் நாம மேலே பேச முடியும். அவங்க ரெண்டு பேரும் தாராளமா பேசட்டும். நான் மாதவன் கிட்ட சொல்லி அவனை அங்க அனுப்பறேன்.” என்று சாதாரணமாக கூறினார் அண்ணாமலை.
சிதம்பரத்திடம் அப்படி சொல்லிவிட்டாரே தவிர இதனை மாதவனிடம் நேரடியாக பேச தயங்கினார். எனவே மனைவியிடம் சொன்னார்.
“பார்வதி, நீதான் மாதவன் கிட்ட பேசி அவனை சென்னைக்கு மதுமிதாவை பார்க்க அனுப்பனும்.”. என்று அந்த பொறுப்பை பார்வதியிடம் கொடுத்தார் அண்ணாமலை
“சரிங்க நானும் மலரும் அவனிடம் பேசி அவனை சென்னைக்கு அனுப்பி வைக்கிறோம். அவன் மலர் சொன்னால் கேட்பான்.”
“அதுவும் சரிதான் பார்வதி. அவனுக்கு மலர் மீது நல்ல மரியாதை இருக்கு. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பேசி அவனை அனுப்பி வைங்க.” என்று அந்த பொறுப்பிலிருந்து நழுவிக் கொண்டார் அவர்.
இரவு நேர லேசான குளிர் காற்றினை அனுபவித்தவாறு தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தான் மாதவன்.
“மாதவா?” என்று பார்வதி அவனை அழைத்தார்.
அவன் அருகில் வந்தான்.
“மாதவா எங்க எல்லோருக்கும் மதுமிதாவை ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால உனக்கு பெண் கேட்கலாம்னு நினைச்சு மதுமிதா அப்பாகிட்ட பேசினோம்.” என்று பார்வதி கூறவும் மாதவன் ஆச்சரியமாக அவரை பார்த்தான்.
அந்த பார்வையை தவறாக புரிந்து கொண்ட பார்வதி
“மாதவா நீ அவசரப்படாதேன்னு சொல்லிக்கிட்டு தான் இருக்க. ஆனாலும் ஜோசியர் உனக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ண சொல்லி இருக்கார் இல்லையா? அதனால தான் நாங்க பேசினோம்.”. என்றார் மெல்லிய குரலில்
“அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க?” என்று தனக்கு இருந்த பரபரப்பை மறைத்துக் கொண்டு கேட்டான் மாதவன்.
“அது அது வந்து……” என்று தடுமாறினார் பார்வதி.
“மலர் நீ சொல்லு .”என்று மலரின் கையை பிடித்து அழுத்தினார்.
“அது ஒன்னுமில்லை மாதவா. அந்த பொண்ணு மதுமிதா உன்கிட்ட ஏதோ பேசணும்னு சொல்லி இருக்கா. உன்கிட்ட பேசிட்டு தான் முடிவை சொல்லுவாளாம்.” என்றாள் மலர்.
இதனை கேட்டதும் மாதவனுக்கு அவள் என்ன கேட்கப் போகிறாள் என்று புரிந்து விட்டது.
‘மது என்கிட்ட நேராக திருவிழாவுக்கு வந்தது நானான்னு கேட்டா என்னால் அவளோட கண்ணை பார்த்து பொய் சொல்ல முடியாது. உண்மையை சொன்னா, அவள் என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டா. அந்த ஒரு கேள்வி என்னை நேரடியாக கேட்கலைனா இந்த கல்யாணம் நடக்கும்.
கேட்டா கல்யாணம் நடக்காது.’ என்று மாதவன் நினைத்துக்கொண்டு இருக்கும்போதே
பார்வதி “மாதவா மாதவா என்னடா யோசிச்சிட்டு இருக்க?”என்று கேட்டார்.
“ஒன்னும் இல்லைம்மா சொல்லுங்க.” என்று நடப்புக்கு வந்தான் மாதவன்.
“அதனால மாதவா, நீ நாளைக்கு சென்னைக்கு கிளம்பி போய் அவகிட்ட பேசிட்டு வா.” என்றார் பார்வதி.
“சரிமா நான் நாளைக்கு கிளம்புறேன்.” என்றுவிட்டு சென்னைக்கு கிளம்பினான்.
‘தன் வீட்டில் எல்லோரும் மதுமிதாவை இரண்டாவது மருமகளாக ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார்கள் என்பதை எண்ணி சந்தோஷப்படுவதா, இல்லை இப்போது மது மிதாவிடம் மாட்டிக் கொள்ளப் போவதை நினைத்து வருத்தப் படுவதா?’ என்று புரியாமலேயே காரை ஓட்டி சென்றான் மாதவன்.