அத்தியாயம் 10_1 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்
Post Views:1,598
அத்தியாயம் 10
சின்னப் புன்னகையை சிந்தி விட்டுப்
போறவளைக் கண்டு என் மனம்
சிக்கித் திணறுவது தான் காதலா?!!!
டெல்லி சென்று விட்டு திரும்பி வந்ததும் அனைவருக்கும் வாழ்க்கை சாதாரணமாக நகர்ந்தது. ஆதி மற்றும் காயத்ரி போட்ட பிளான் அனைத்தும் சொதப்பலில் தான் முடிந்தது. ரேகாவையும் விக்ரமையும் சேர்த்து வைக்கும் அவர்கள் நோக்கம் கடைசி வரை நிறைவேறவே இல்லை.
நாளையோடு ரேகா எடுத்திருந்த பத்து நாட்கள் லீவ் முடிவடைகிறது. ஆனால் இன்னும் அவள் வேலைக்குச் செல்வதைப் பற்றி வீட்டில் உள்ள யாரிடமும் பேச வில்லை.
அவர்களிடம் எப்படி பேச என்றும் அவளுக்கு தெரிய வில்லை. விக்ரமிடம் கூட அவளால் அதைப் பற்றி பேச முடிய வில்லை. வேறு வழியில்லாமல் விக்ரம் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து தன்னுடைய கம்பெனி ஆஃபிஸ்கே அழைத்து மேலும் ஐந்து நாட்கள் லீவ் கேட்டாள்.
“இங்க பாருங்க ரேகா, நீங்க இது வரைக்கும் எந்த லீவும் எடுத்ததில்லை. அதனால தான் தொடர்ந்து பத்து நாள் உங்களுக்கு லீவ் கொடுத்தோம். இதுக்கு மேலயும் அஞ்சு நாள் லீவ் கேக்குறீங்க? புதுசா மேரேஜ் ஆகிருக்குறதுனால உங்க நிலைமை எனக்கு புரியுது. ஆனா நீங்க இங்க இருக்குற நிலைமையையும் புரிஞ்சிக்கணும். உங்க மாடியூல் புராஜெக்ட் வொர்க் அப்படியே நிக்குது. உங்களுக்கு என் நிலைமை புரியுது தானே? உங்க வொர்க் கம்பிலீட் ஆனா தான் நான் நெக்ஸ்ட் ஸ்டெப் பண்ண முடியும். வர சண்டே வரைக்கும் லீவ் எடுத்துட்டு மண்டே வந்து வொர்க் பாக்க ஆரம்பிங்க. இதுக்கு மேலயும் என்னால உங்களுக்கு எந்த சலுகையும் கொடுக்க முடியாது”, என்று சொன்னார் புராஜெக்ட் மேனேஜர்.
“புரியுது சார். நீங்க இவ்வளவு பண்ணினதுக்கே ரொம்ப தேங்க்ஸ். நான் மண்டே வந்துருவேன்”, என்று சொல்லி போனை வைத்த ரேகாவுக்கு “அப்பாடி அஞ்சு நாள் லீவ் கேட்டதுக்கு நாலு நாளாவது கொடுத்தாரே”, என்று நிம்மதியாக இருந்தது.
இன்று இரவு விக்ரமிடம் பேசி விட்டு நாளை அனைவரிடமும் பேச வேண்டும் என்று முடிவு எடுத்தாள். சென்னைக்கு செல்வதை பற்றி சாரதாவிடம் சொல்ல தான் அவளுக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது.
ஏனென்றால் ரேகா இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து சாரதா தனக்கு ஒரு தோழி துணையாக கிடைத்த சந்தோசத்தில் இருந்தாள். சாரதா பகல் முழுவதும் ரேகாவுடன் பேசிய படியே தான் இருப்பாள். ரேகாவுக்கும் சாரதாவுடன் இருப்பது தனது அன்னையுடன் இருக்கும் நிறைவைத் தான் தரும். சாரதாவின் பேச்சு முழுவதும் விக்ரம் பற்றியே இருக்கும். விக்ரம் சிறு வயதில் செய்த சேட்டைகளைப் பற்றி தான் பேசிக் கொண்டிருப்பாள். சாரதா பேசுவதில் இருந்தே விக்ரம் மீது அவள் உயிரையே வைத்திருக்கிறாள் என்று ரேகா புரிந்து கொண்டாள். கூடவே தன்னுடைய கணவனைப் பற்றிய விசயங்களைக் கேட்பதற்கு ரேகாவுக்கும் பிடிக்கும்.
ஆனாலும் அவளுக்கு வேலை வேண்டுமே. அவள் விக்ரமுடன் வாழ ஆரம்பித்து விட்டால் கூட அவளுக்கு வேலை தேவை இல்லை. ஆனால் சில நேரம் குளிர் நிலவாவும் சில நேரம் சுட்டெரிக்கும் சூரியனாகவும் மாறும் அந்நியன் போன்ற கணவனை வைத்துக் கொண்டு அவள் என்ன செய்வது?
“நீ ஒரு துரோகி, உன்னை எனக்கு பிடிக்கலை. இனி நீ இந்த வீட்டில் இருக்க கூடாது”, என்று சொல்லி அவளை விரட்டி விட்டால் கூட மனதுக்கு வலித்தாலும் அவள் அவள் வேலையை பார்த்துக் கொண்டு சென்று விடுவாள்.
இல்லையென்றால் பழைய விஷயங்கள் அனைத்தையும் மறந்து அவளுடன் வாழ ஆரம்பித்து விட்டால் அவனே தஞ்சம் என்று எண்ணி வேலையை தூக்கிப் போட்டு விட்டு இந்த வீடே கதி என்று இருந்து விடுவாள்.
ஆனால் அவனோ “உன்னைப் பிடிக்கும், நீ தான் உயிர்”, என்றும் சொல்லி அவள் மனதில் காதலை எழுப்புவான். அவள் கொஞ்சம் சந்தோஷப் பட்டால் “ஏண்டி அன்னைக்கு அப்படி பண்ணின?”, என்று கேட்டு அவள் உயிரை எடுப்பான். “இங்கிருந்து போகவா?”, என்று கேட்டால் குடும்ப மானம் பற்றி பேசுவான்.
இப்படி அவன் இரண்டும்கெட்டான் நிலையில் இருந்தால் அவள் என்ன செய்ய முடியும்? அதனால் முடிவு எடுக்க முடியாமல் தடுமாறிய படியே இருந்தாள்.
விக்ரமுக்கோ அவளுடைய வேலையைப் பற்றி எல்லாம் நினைவில் இல்லை. அவனுக்கு அவன் விரும்பிய மனைவி அவன் வீட்டில் அவன் அருகில் இருக்கிறாள். அது போதும் என்று எண்ணி சந்தோஷப் பட்டு தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தான்.
சில நேரம் அவளுடைய அருகாமை அவனுக்குகு மூச்சு மூட்டினாலும் அவள் இந்த வீட்டுக்கு வந்த பின்னர் தான் மனதில் அமைதி என்பது வந்திருந்தது. அவள் இந்த வீட்டில் இருந்து போவாள் என்றோ, தன்னை விட்டும் போவாள் என்றோ அவன் கனவிலும் எண்ண வில்லை.
அதனால் அதைப் பற்றி பேசினால் அந்த அந்நியன் எப்படி மாறுவானோ? அது கடவுள் கையில் தான். அன்றைய இரவில் அவள் அவனிடம் பேசலாம் என்று எண்ண அவன் பால்கனியில் உலாவிட்டு வருவதற்குள் அவள் தூங்கி விட்டாள். அடுத்த நாளும் அழகாக விடிந்து விட்டது.
காலை வேளை பரபரப்பு அனைவரிடத்திலும் இருக்க காயத்ரியின் அன்னை மாதவி காயத்ரியை போனில் அழைத்தாள்.
அதை எடுத்த காயத்ரி “சொல்லு மா, என்ன காலைலே போன் பண்ணிருக்க?”, என்று கேட்டாள்.
“எப்படி இருக்க காயு? மாப்பிள்ளை நல்லா இருக்காரா? அத்தை மாமா, விக்ரம் தம்பி எல்லாரும் நல்லா இருக்காங்களா? ரேகா பொண்ணு உன் கிட்ட நல்லா பேசுறாளா?”
“நல்லா இருக்கேன் மா. இங்க எல்லாருமே நல்லா இருக்கோம். ரேகா நல்ல ஃபிரண்ட் மாதிரி பழகுறா. அப்பா உஷா எல்லாரும் எப்படி இருக்காங்க?”
“நல்லா இருக்காங்க டி. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் பேச தான் கூப்பிட்டேன்”
“என்ன மா?”
“உன் அப்பாவோட ஃபிரண்ட் உங்க அப்பா கிட்ட அவங்க மகனுக்கு பொண்ணு பாக்குற விஷயமா பேசிருக்கார். அப்படியே உஷா பத்தின பேச்சு வந்துருக்கு. உடனே இன்னைக்கு சாயங்காலம் உஷாவை அவங்க வீட்ல இருந்து பொண்ணு பாக்க வறேன்னு சொல்லிருக்காங்க. நேத்து நைட் தான் சொன்னாங்க. நைட் கூப்பிடவான்னு தான் காலைலே கூப்பிடுறேன்”
“நிஜமாவா மா? ரொம்ப சந்தோஷம். கல்யாணப் பொண்ணு என்ன சொல்றா?”, என்று உண்மையான சந்தோசத்துடன் கேட்டாள் காயத்ரி.
“நான் இன்னும் அவ கிட்ட விஷயத்தைச் சொல்லலை டி. நீ கொஞ்சம் வீட்டுக்கு வரியா? நீ வந்தேன்னா அவளைக் கிளப்புறதுக்கும் எனக்கும் ஒத்தாசையா இருக்கும். மாப்பிள்ளை கிட்ட போனைக் கொடு. நான் அவர் கிட்ட சொல்லிட்டு உங்க வீட்ல உள்ள எல்லாரையும் கூப்பிடனும். அது தான் முறை”, என்று மாதவி சொன்னதும் ஆதி அருகில் சென்ற காயத்ரி “இந்தாங்க அம்மா பேசனுமாம்”, என்று சொல்லி போனைக் கொடுத்தாள் காயத்ரி.
அதை வாங்கிய ஆதி “சொல்லுங்க அத்தை. எப்படி இருக்கீங்க? மாமா எப்படி இருக்காங்க? உஷா எப்படி இருக்கா?”, என்று கேட்டான்.
“உஷா நல்லா இருக்கா மாப்பிள்ளை. அப்புறம், இன்னைக்கு சாயங்காலம் நம்ம உஷ்காவை பொண்ணு பாக்க வராங்க. நீங்க எல்லாரும் கண்டிப்பா வரணும். இதோ மாமா பேசனுமாம். அவர் கிட்ட கொடுக்குறேன்”, என்று சொல்லி காயத்ரியின் தந்தை தரணியிடம் போனைக் கொடுத்தாள் மாதவி.
“எப்படி இருக்கீங்க மாப்பிள்ளை?”, என்று கேட்டார் தரணி.
“ஆமா மாப்பிளை. என் ஃபிரண்ட் வீட்ல இருந்து தான் உஷாவை பாக்க வராங்க”
“பையன் எப்படி மாமா? நல்ல குணமா? என்ன வேலை செய்றாப்ல? இன்னைக்கு மாப்பிள்ளையும் வறாரா?”
“ஆமா மாப்பிளை. மாப்பிள்ளை பையன் சென்னைல வேலை பாக்குறாராம். நானும் இன்னும் பாக்கலை. இன்னைக்கு சாயங்காலம் வரும் போது தான் பாக்கணும். நீங்களும் வாங்க. நீங்க இருந்தா கொஞ்சம் தெம்பா இருக்கும். குணம் எல்லாம் இனி தான் விசாரிக்கணும். அந்த பொறுப்பை உங்க கிட்ட தான் விடணும்னு நினைச்சேன். அப்புறம் சம்பந்தியையும் சம்பந்தியம்மாவையும் வீட்டுக்கு கூப்பிடனும். நான் அவங்களுக்கு சொல்லவா?”