அத்தியாயம் 11
தெம்மாங்கு பாட்டைத்
தான் தூது விட்டேன்
என்னவளின் நிலை அறிய!!!
ஒரு நாள் இங்கிலீஷ் செமினார் கிளாசில் அனைவரும் அமர்ந்திருந்தார்கள். அப்போது அவர்களின் புரபஸர் சயின்ஸ் என்பது வரமா சாபமா என்ற டாபிக்கை போர்டில் எழுதினார்.
“இந்த டாபிக்ல நாம இன்னைக்கு குருப் டிஸ்கஷன் பண்ணப் போறோம். எல்லா குருப்பும் சேந்து அவங்க அவங்க குருப் குள்ள என்ன பேசலாம்னு டிஸ்கஸ் பண்ணுங்க. உங்களுக்கு பிஃப்டீன் மினிட்ஸ் டைம் தரேன். இப்ப நீங்க உங்களை பிரிப்பேர் பண்ணிக்கிறத வச்சு தான் இன்டர்வியூ அப்ப நீங்க எப்படி பேசுவீங்கன்னு உங்களுக்கு தெரியும்”, என்று ஆங்கிலத்தில் சொன்னார் சத்யா சார்.
அதன் பின் இவர்களுக்குள் பேச்சு வார்த்தை ஆரம்பிக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாயிண்ட் சொன்னார்கள். அதிலும் சாரு அதிகமாக சொல்வதும் அந்த பாயிண்ட்க்கு தீபக் ஓகே சொல்வதுமாக இருந்தது. அதைக் கண்ட காயத்ரிக்கு கடுப்பாக இருந்தது.
இன்னொரு கடுப்பு என்னவென்றால் “அந்த பாயிண்ட் நல்லா இல்லை தீபக். நான் சொல்ற பாயிண்ட் சரியா இருக்கும்”, என்று சாரு சொன்னால் “இல்லை இல்லை, இதுவே நல்லா இருக்கும்”, என்று தீபக் சொன்னான்.
அப்போது பேனாவை வைத்து அவனை அடித்தாள் சாரு. அவன் பதிலுக்கு அவளை அடிக்க அதைக் கண்டு காயத்ரி முகத்தில் நெருப்பு பறந்தது. தீபக்கும் காயத்ரியை அப்போது திரும்பி பார்த்தான். அப்போது தான் அவள் முறைப்பு அவன் கண்ணில் பட்டது.
அவள் முறைப்பைக் கண்டதும் யாருக்கும் தெரியாமல் தன்னுடைய காதை பிடித்து மன்னிப்பை வேண்டினான். அவள் மன்னிக்க மாட்டேன் என்னும் விதமாய் பிகு செய்தாள்.
அவள் முறைப்பதை வேறொரு குருப்பில் அமர்ந்திருந்த மதன் பார்த்து விட்டான். “இந்த காயத்ரி எதுக்கு தீபக்கை இப்படி முறைக்கிறா?”, என்ற கேள்வி அவனுக்குள் வந்தது. உடனே தீபக்கை திரும்பி பார்த்தான். அவனோ பார்வையால் அவளிடம் கொஞ்சிக் கொண்டிருந்தான்.
இருவரையும் மாறி மாறி பார்த்த மதனுக்கு எதுவோ புரிவது போல இருந்தது.
“அடப்பாவிகளா பாக்க ரெண்டு பேரும் சாது மாதிரி இருந்துட்டு என்னமா கண்ணால பேசிக்கிறாங்க? கிளாஸ்ல இப்படி ஒரு சீன் ஓடுதுன்னு தெரியாம இருந்துட்டோமே?”, என்று எண்ணிக் கொண்டு நண்பனிடம் விசாரிக்க சரியான தருணத்துக்காக காத்திருந்தான் மதன்.
அன்று முழுவதும் தீபக்குடன் மதனால் பேச முடியவில்லை. வீட்டுக்கு போனதும் போன் செய்து பேசலாம் என்று எண்ணி அவனுக்கு அழைத்தான். ஆனால் அவன் போனோ வெயிட்டிங் என்று வந்தது.
காயத்ரி தான் தீபக்குடன் பேசிக் கொண்டிருந்தாள். “சொல்லு காயு”, என்றான் தீபக்.
“என்னை அப்படி கூப்பிடாத”, என்றவளின் குரலில் கோபம் வெளிப்பட்டது.
“என்ன ஆச்சு காயு? என்ன கோபம்? ஆண்ட்டி ஏதாவது சொல்லிட்டாங்களா?”
“என்னை யாரும் ஒண்ணும் சொல்லலை. என்னோட டென்சனுக்கு காரணம் நீ தான்”
“நானா? நான் என்ன பண்ணுனேன்?”
“அவளுக்கு தான் அறிவில்ல. ஒரு பையன்னு தெரிஞ்சும் உன்னை தொட்டு தொட்டு பேசுறா. உனக்கு எங்க போச்சு அறிவு? அவ கிட்ட என்ன பேச்சு வேண்டி கிடக்கு? இதுல ரெண்டு பேரும் அடிச்சு அடிச்சு விளையாடிக்கிறீங்க?”, என்று அவனை அரட்டினாள்.
“இல்லை காயு, சும்மா விளையாட்டுக்கு….”
“என்ன விளையாட்டுக்கு? இல்லை என்னன்னு கேக்குறேன்? நீ ரொம்ப மாறிட்ட. இப்ப எல்லாம் நீ லேப்ல வச்சு சாரு கூட தான் அதிகம் பேசுற. என் பக்கம் உன் பார்வை கூட திரும்ப மாட்டிக்குது. இப்ப என்னை அம்மா கூப்பிடுறாங்க. இரு உன்னை வந்து வச்சிக்கிறேன்”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டாள்.
அவள் பேசியதைக் கேட்டு தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் தீபக். அந்நேரம் தான் மதன் அவனை அழைத்தான்.
“சொல்லு மச்சான்”, என்றான் தீபக்.
“யார் கிட்ட கடலை டா?”, என்று கேட்டான் மதன்.
“கடலையா, இல்லையே?”
“அதான் அப்ப இருந்து வெயிட்டிங்க்ல வந்துச்சே? எந்த பிகர் கிட்ட கடலை போடுற? சே அப்படிக் கேக்க கூடாது. பிகர் கிட்டயா, இல்லை லவ்வர் கிட்டயா?”
“என்ன டா உளறுற? பிகர் லவ்வருனு”
“நல்லா நடிக்கிற டா. அப்பாவி மாதிரி முகத்தை வச்சிக்கிட்டா நீ பண்ணுறது எனக்கு தெரியாதுன்னு நினைச்சியோ?”
“போடா நீ வேற நானே கடுப்புல இருக்கேன்”
“என்ன லவ்வர் உன் கூட சண்டை போட்டுட்டாளா?”
“மதன்…..”
“காயத்ரியைத் தான் சொன்னேன். உன்னை திட்டிட்டாளா?”
“உனக்கு எப்படி தெரியும்?”, என்று உளறி நாக்கைக் கடித்துக் கொண்டான்.
“ஹா ஹா, அப்ப காயத்ரி கிட்ட தான் பேசிட்டு இருந்த அப்படித் தானே?”
“ஆமா டா, உனக்கு எப்படி தெரியும்?”
“இன்னைக்கு கிளாஸ்ல வச்சு தான் பாத்தேன். நீ சாரு கிட்ட பேசுறதைப் பாத்து காயத்ரி முறைச்சதைப் பாத்து நீ பொசுங்கி போயிருவியோன்னு நினைச்சேன். டீப் லவ்வா டா?”
“இவ்வளவு தெரிஞ்ச அப்புறம் உன்கிட்ட சொல்லாம இருந்தா தப்பா போயிரும். வேற யார் கிட்டயும் உளறிராத மச்சான்”
“அதெல்லாம் சொல்ல மாட்டேன் டா. சொல்லு”
“சொல்லுற அளவுக்கு ஒண்ணும் இல்லை. நான் மட்டும் தான் அவளை லவ் பண்ணுறேன். அவ என்னை பிரண்டா தான் நினைச்சு தொலையுறா. காதலை சொல்ல நினைக்கும் போது இப்ப சாரு வேற இடைல வந்துட்டா. டெய்லி சண்டை தான்”
“ஹா ஹா, காயத்ரி காதலைச் சொல்லவே வேண்டாம்”
“ஏண்டா உனக்கு இந்த கொலை வெறி?”
“ஏற்கனவே அவ காதலை தான் உனக்கு புரிய வச்சிட்டாளே, அப்புறம் என்ன?”
“என்ன மதன் சொல்ற?”
“நீ சாரு கிட்ட பேசுறது காயத்ரிக்கு கோபம் வருதுள்ள? அதுவே காதலோட வெளிப்பாடு தானே?”
“மதன்…..”
“என்ன பல்ப் எரியுதா? இந்த டிராக்லே போ. வொர்க்கவுட் ஆகும்”, என்று சொல்லி போனை வைத்தான் மதன்.
அவன் சொன்னதைக் கேட்டு துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது தீபக்க்கு. அப்போது சாரு அவனை போனில் அழைத்தாள்.
“சொல்லு சாரு”, என்றான் தீபக்.
“என்ன டா சந்தோஷமா இருக்க? என்ன விஷயம்?”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. சும்மா தான். என்ன விஷயமா போன் பண்ணின?”, என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே காயத்ரி அவனை அழைத்தாள்.
“சாரு, நான் உன்கிட்ட அப்புறம் பேசுறேன்”, என்று சொல்லி போனை வைத்த தீபக் காயத்ரியை அழைத்தான்.
“சொல்லு காயு”, என்று அவன் சந்தோஷமாக அழைக்க அவளோ “யார் கிட்ட பேசிட்டு இருந்த?”, என்று கேட்டாள்.
இருந்த சந்தோசத்தில் “சாரு தான் போன் பண்ணினா”, என்று உளறியவன் “ஸ்ஸ்”, என்று நாக்கைக் கடித்துக் கொண்டான்.
“ஓ, நேர்ல பேசுறது பத்தாதுன்னு போன் வேறயா?”
“இல்லை காயு, சாரி”
“என்கிட்ட எதுக்கு சாரி சொல்ற? நான் அந்த அளவுக்கு உனக்கு முக்கியமா? அவ கிட்டயே பேசு. உன் நம்பர் அவளுக்கு எப்படித் தெரியும்? நீ குடுத்தியா? இல்லை அவ நம்பர் கொடுத்தாளா?”
“அப்படி இல்லை காயு. அவ சும்மா ஃபிரண்ட் தான்”
“நம்பிட்டேன்”
“என்ன நீ, நான் நந்து கிட்ட கூட தான் பேசுறேன். அப்ப எல்லாம் நீ இவ்வளவு கோப பட்டதே இல்லையே. சாரு கிட்ட பேசினா மட்டும் என்ன?”, என்று அவன் கேட்டதும் அதிர்ந்தாள் காயத்ரி.
“அது… அது வேற, இவ வேற”, என்று உளறிக் கொட்டியவள் “அதானே நான் ஏன் இப்படி இருக்கேன்?”, என்று சுய அலசலில் இறங்கினாள்.
என்ன யோசித்தும் ஒரு முடிவுக்கு வர முடியாமல் “நான் அப்புறம் பேசுறேன்”, என்று சொல்லி போனை வைத்து விட்டாள். அவனும் சந்தோஷமாக புன்னகைத்துக் கொண்டான்.
தலையில் கை வைத்து யோசித்துக் கொண்டிருந்த காயத்ரியைப் பார்த்து “அக்கா நீ பண்ணுறது டூ மச்”, என்றாள் சௌமி.
“ஏண்டி?”
“இவ்வளவு நேரம் நீ பேசுறதை நான் கேட்டுட்டு தான் இருந்தேன். தீபக்கை நீ ரொம்ப படுத்துற?. உனக்கு நிறைய பிரண்ட்ஸ் இருக்குற மாதிரி அவங்களுக்கும் வேற பிரண்ட்ஸ் இருக்க கூடாதா? அவங்க அந்த சாரு அக்கா கூட பேசினா உனக்கு என்ன?”
அவளுடைய கேள்வியில் காயத்ரிக்கே தன்னைப் பற்றிய குழப்பம் வந்தது. எதனால் இந்த அலைப்புறுதல் என்று அவளுக்கு புரியவே இல்லை. இதற்கு பெயர் தான் உரிமையுடன் கூடிய காதல் என்று அவளுக்கு புரியவே இல்லை. எவ்வளவு யோசித்தும் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தடுமாறியவள் “இனி தீபக் சாரு கிட்ட பேசினா நாம எதுவும் சொல்லக் கூடாது”, என்று முடிவெடுத்தாள்.
அதே நேரம் இதற்கு மேல் காலம் கடத்தாமல் அவளிடம் காதலை சொல்லி விட வேண்டும் என்று முடிவெடுத்தான் தீபக். இன்னும் நான்கு நாளில் ரேவதியின் மகன் அரவிந்த்க்கு முதல் பிறந்த நாள் வரவிருப்பதால் அன்று காயத்ரி குடும்பத்தை வீட்டுக்கு அழைக்கலாம் என்று நினைத்த தீபக் மீனாட்சியிடம் அழைக்க சொன்னான். அன்றே அவளிடம் காதலைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தான்.
மீனாட்சி அழைத்ததும் கலாவதியும் வருகிறோம் என்றாள்.
அன்றைய நாளும் வந்தது. முதலில் காய்த்ரி குடும்பம் தான் அவர்கள் வீட்டுக்கு சென்றது. நலம் விசாரித்த பிறகு அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
காதலைச் சொல்ல தக்க தருணத்துக்காக காத்திருந்தான் தீபக். அப்போது அங்கே சாரு வருவதைக் கண்ட காயத்ரி திகைத்து போனாள்.
அவளுடைய குடும்பத்துடன் வந்த சாரு காயத்ரியிடம் ஒரு ஹாய் சொல்லி விட்டு தீபக் குடும்பத்துடன் கதை பேசிக் கொண்டிருந்தாள்.
அதைக் கண்டு பயங்கர கடுப்பாக இருந்தது காயத்ரிக்கு. அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“என்னையும் வரச் சொல்லிட்டு இந்த சாருவையும் இங்க வரச் சொல்லிருக்கானே? அப்ப அவளை மாதிரி தான் நானுமா:? அவனுக்கு நான் ஸ்பெஷல் இல்லையா?”, என்ற கேள்வி அவளுக்கு எழுந்தது.
“அவனுக்கு எல்லாரும் எப்படியோ அது மாதிரி தானே நீயும்? அப்ப நீ மட்டும் எதுக்கு ஸ்பெஷல்னு யோசிக்கிற?”, என்று மனசாட்சி கேள்வி எழுப்பியது.
அவள் முகத்தில் இருந்த கோபத்தை கண்ட சௌமி “அக்கா, என்ன ஆச்சு? எதுக்கு ஒரு மாதிரி இருக்க? அந்த அக்காவை பாரேன். எவ்வளவு அழகா இருக்காங்க”, என்றாள்.
“ப்ச் கடுப்பைக் கிளப்பாத சௌமி. நான் சொல்லிருக்கேன்ல, சாருன்னு. அவ இவ தான்”
“என்ன? அது இவங்களா?”
“ஆமா, இந்த தீபக் ரொம்ப மோசம். அவளையும் வர வச்சிருக்கான் பாரு”
“பிரண்டுன்னு வர சொல்லிருப்பாங்க. உங்க கிளாஸ்ல இருந்து நீயும் தானே வந்துருக்க?”
“என்னைக் கூப்பிட்டான் சரி, அவளை எதுக்கு கூப்பிடணும்? அவன் மத்த பிரண்ட்ஸ் யாரையும் கூப்பிடலை பாரேன். என்னையும் அவளையும் தான் கூப்பிட்டுருக்கான். அது மட்டுமில்லாம அவளும் குடும்பத்தோட வந்துருக்கா. தீபக் வீட்ல உள்ள எல்லார் கிட்டயும் அவ எப்படி சிரிச்சு பேசுறா பாரு”, என்று சொன்னதும் காயத்ரி மனது துல்லியமாக சௌமிக்கு புரிந்தது.
கூடவே சாருவைப் பற்றிய குழப்பமும் வந்தது. அப்போது பங்ஷன் ஆரம்பிக்க அந்த இடமே ஆரவாரமானது.
கேக் வெட்டி, உணவு பரிமாறியதும் சாரு குடும்பம் கிளம்பிச் சென்றது. பாதி பேர் உணவு உண்டு கொண்டிருக்க காயத்ரியும் சௌமியும் பேசிக் கொண்டு அமர்ந்திருந்தனர். அப்போது அங்கே வந்த தீபக் “என்ன அக்காவும் தங்கையும் சீக்ரட்டா கதை பேசிட்டு இருக்கீங்க?”, என்று புன்னகையுடன் கேட்டான்.
அவனை முறைத்து பார்த்த காயத்ரி “சௌமி, அம்மா கூப்பிடும் போது சொல்லு. நான் வரேன். இப்ப மாடில இருக்கேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
சௌமியை குழப்பமாக பார்த்த தீபக் “என்ன ஆச்சு சௌமி? மேடம் கோபத்துல போறாங்க?”, என்று கேட்டான்.