“நீங்க சாரு அக்கா கிட்ட பேசினாலே உங்க கிட்ட சண்டை போடுவா. இப்ப நீங்க சாரு அக்காவை வீட்டுக்கே கூப்பிட்டா சும்மா இருப்பாளா?”
“ஹா ஹா, அது தான் கோபமா? சாருவும் இவளும் ஒண்ணா?”
“எனக்கும் அந்த சந்தேகம் கொஞ்சம் இருக்கு”
“என்ன சந்தேகம்?”
“சரி நேரடியா கேக்குறேன். நீங்க என் அக்காவை லவ் பண்ணுறீங்களா?”
“ஏன், என்னை உன்னோட மாமாவா ஏத்துக்க மாட்டியா?”, என்று உல்லாசமாக கேட்டான்.
“இப்படி ஒரு சூப்பர் டூப்பர் மாமாவுக்கு கொழுந்தியாவா இருக்க யாருக்கு தான் பிடிக்காது. ஆனா நீங்க முதல்ல எங்க அக்கா கிட்ட தான் அனுமதி கேக்கணும்”, என்று சிரித்தாள் சௌமி.
“அதுக்கு தான் நானும் பல நாளா முயற்சி பண்ணுறேன். ஆனா உங்க அக்கா என்னை பிரண்டா நினைக்கிறாளா லவ் பண்ணுறாளான்னு தான் தெரியலை. இந்த சாரு விசயத்துல தான் கொஞ்சம் பொறாமை வெளிப் படுது”
“நானும் அப்படித் தான் நினைச்சேன். பேசாம அவ கிட்டயே கேளுங்க. ஆனா நீங்க ஏன் உங்க மத்த பிரண்ட்ஸை எல்லாம் கூப்பிடாம அக்காவையும் சாரு அக்காவையும் மட்டும் வீட்டுக்கு கூப்பிட்டுருக்கீங்க?”
“நான் ஃபிரண்ட் அப்படீங்குற முறையில் யாரையும் கூப்பிடலை சௌமி. என்ன புரியலையா? என்னைப் பொறுத்த வரை உங்க அக்கா எங்க வீட்டுப் பொண்ணு”
“அது இப்ப புரியுது. ஆனா சாரு அக்காவை எதுக்கு வரச் சொன்னீங்க?”
“சாரு, என்னோட அத்தை பொண்ணு சௌமி”
:
“என்னது?”
“ஆமா, சொந்த அத்தை பொண்ணு தான். இன்னைக்கு அவங்களுக்கு வேற பங்ஷன் இருக்குறதுனால தான் சீக்கிரம் கிளம்பிட்டாங்க. இல்லைன்னா இங்க தான் தங்கிருப்பாங்க”
“ஓ, சரி சரி, இதை அப்படியே உங்க ஆள் கிட்டயும் சொல்லிருங்க. இல்லைன்னா பொறாமைல வெந்துருவா”
“சரி சரி, நீ கொஞ்சம் யாரும் வராம பாத்துகோ. அவ கிட்ட பேசிட்டு வரேன்”
“ஐயோ மாமா, இந்த வேலைக்கு பேர் என்ன தெரியுமா?”, என்று சௌமி கேட்டதும் “நீ இப்ப சொன்னீயே, அது தான் பேர்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான் தீபக்.
மொட்டை மாடியில் வானத்து நிலவை ரசித்த படி நின்றாள் காயத்ரி. தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில் அவள் நின்ற கோலம் அவனை பித்தம் கொள்ள வைத்தது. புன்னகையுடன் அவளை நெருங்கினான். அவனைக் கண்டதும் அவள் முறைத்தாள்.
“என்ன ஆச்சு காயு?”, என்று ஒன்றும் அறியாதவனைப் போல கேட்டான் தீபக்.
“அவளை எதுக்கு நீ இன்வைட் பண்ணின?”
‘யாரை?”
“அதான் அந்த சாருவை”
“ஏய் அதுக்கு தான் கோபமா? அவளை நான் கூப்பிடலை”
“பொய் சொல்லாத. அவ கிட்ட உங்க அம்மா அப்பா எல்லாம் நல்லா பேசுறாங்க. நீ கூப்பிடாம அவ எப்படி வருவா?”
“ஐயோ காயு, நிஜமாவே அவளை அம்மா தான் கூப்பிட்டாங்க”
“உங்க அம்மாவுக்கு அவளை எப்படி தெரியும்?”
“அவ என்னோட அத்தை பொண்ணு டி”
“என்னது?”, என்று சந்தோஷமாக அதிர்ந்தவளுக்கு அவன் சொன்ன டி கவனத்தில் பதிய வில்லை.
“ஆமா, சாரு என்னோட அத்தை பொண்ணு தான். ஆனா எனக்கு சின்ன வயசுல இருந்து நல்ல ஃபிரண்ட்,. ஃபிரண்ட் மட்டும் இல்ல. எனக்கு குட்டித் தங்கை மாதிரி”
“என்னது?”
“ஆமா தங்கை தான். இப்ப சந்தோஷமா இருக்கா?”
“எனக்கு என்ன சந்தோஷம்? சும்மா தெரிஞ்சிக்க தான் கேட்டேன்”, என்று அவள் சாதாரணமாக சொன்னாலும் அவளுடைய குரலில் சிறிது துள்ளல் வெளிப்படத் தான் செய்தது.
“உனக்கு நிஜமாவே சந்தோஷம் இல்லையா?”, என்று நக்கலாக கேட்டான் தீபக்.
“எனக்கு என்ன சந்தோஷம்?”
“உண்மைலே உனக்கு சந்தோஷம் இல்லை அப்படித் தானே? நான் சாரு கூட பேசுறது உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையா? இப்ப நான் அவ என்னோட தங்கச்சி மாதிரின்னு சொன்னதுக்கு அப்புறம் உனக்கு எந்த சந்தோஷமும் வரலை அப்படித் தானே?”, என்று ஆழ்ந்த குரலில் கேட்டான் தீபக்.
பதில் சொல்லத் தெரியாமல் அவனை பார்த்து திணறினாள் காயத்ரி. “உனக்கு நான் சாரு கூட பேசுறது பிடிக்கலைன்னா என்ன அர்த்தம் காயு? நான் ஏன் அவ கூட பேசக் கூடாதுன்னு பல தடவை நினைச்ச? அப்ப என்னை உனக்கு பிடிச்சிருக்குன்னு தானே அர்த்தம்?”, என்று அவன் கேட்டதும் “தீபு”, என்று அதிர்ந்து போய் அழைத்தாள் காயத்ரி. அவள் அப்படி அழைத்ததும் அவன் கண்கள் மின்னியது.
“இது வரைக்கும் என்னை யாரும் இப்படி கூப்பிட்டதில்லை. நீ வித்தியாசமா கூப்பிடுற. அந்த அளவுக்கு என் மேல உரிமை எடுத்துக்குற நீ, எனக்கு யாரு காயு?”, என்று கேட்டவனின் கண்களில் காதல் சொட்டியது.
அவனுடைய பேச்சைக் கேட்டு உறைந்து போய் நின்ற காய்த்ரிக்கு அவன் கண்களில் இருந்த காதல் நடுக்கத்தைக் கொடுத்தது.
மூச்சுக் காற்று தேவை இருப்பது போல திணறினாள். அவளுக்கு யோசிக்க வேண்டும். ஏற்கனவே இந்த விஷயத்தை சௌமி அடிக் கோடிட்டு காட்டியிருந்தாலும் அவள் முழுதாக ஒரு முடிவுக்கு வரவில்லை. அதனால் அவனுக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் திணறினாள்.
அவளுடைய திணறலை ரசித்தான் தீபக். பதில் சொல்ல முடியாமல் அவள் தடுமாறுவதும், அவன் கண்களை சந்திக்க முடியாமல் வெட்கத்துடன் தலை குனிவதும் இருந்தவளை ரசித்தான். அவளுடைய இந்த நிலையை தனக்கு சாதகமாக்கியவன் அவளை நெருங்கினான்.
நெஞ்சம் துடிக்க அவனையே பார்த்த படி நின்றாள் காயத்ரி. அவனது ஊடுருவும் பார்வை அவளுக்கு புதிதாக இருந்தது. இது வரை அவன் அப்படி பார்த்ததில்லை.
நட்பு என்ற எல்லைக் கோட்டில் இருக்கும் போது கண்ணியம் தவறாதவன் இன்று முதல் முறையாக காதலுடன் அவளை நெருங்கினான். அவன் பார்வையில் அங்கிருந்து ஓட வேண்டும் என்ற உணர்வு அவளுக்கு வந்தது. ஆனால் அவளால் அதை செயல் படுத்த தான் முடியவில்லை.
சுற்றி இருள் சூழ்ந்திருந்த அந்த வேளையில் மிதமான அலங்காரத்தில் தேவதையாக இருந்தவளின் அழகு அவனை ஊமத்தம் கொள்ள வைத்தது.
அவன் பார்வை புரிந்தும் புரியாமலும் அவள் அதிர்ந்து நிற்கையிலே அவளை நெருங்கியவன் அவள் தோள் மீது கை வைத்தான்.
“என்ன?… என்ன தீபக்?…”, என்று குளறலாக வந்தது அவள் குரல்.
“நான் உனக்கு யாரு காயு? நான் உனக்கு வெறும் ஃபிரண்ட் தானா? வேற யாராவும் தெரியலையா?”
“தெரியலை….”, என்று திக்கித் திணறி வந்தது அவள் குரல்.
“யாருன்னு தெரியாம தான் நான் சாரு கிட்ட பேசினதுக்கு அவ்வளவு தவிச்சியா?”, என்று கேட்டவன் அவள் என்னவென்று உணரும் முன்பே அவளை நோக்கி குனிந்து விட்டான்.
அவன் செய்கையை அவள் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவளின் இதழ் மீது இதழ் பதித்தான் தீபக்.
அவனை தடுக்க கூட தோன்றாமல் நிற்க முடியாமல் சரிய ஆரம்பித்தாள் காயத்ரி. தோய்ந்து சரிந்தவளை தாங்கிக் கொண்டவன் அவளை தழுவிக் கொண்டான். காதலை உணர்த்தும் விதமாக கட்டியணைத்தவன் சிறிது நேரத்தில் அவள் எலும்புகள் உடையும் அளவுக்கு கட்டியணைத்தான்.
அவளுடைய இதழ்களில் புதைந்திருந்த தன்னுடைய இதழ்களை அவன் அகற்றவே இல்லை. அவன் ஏற்படுத்திய உணர்வலைகளில் மந்திரித்து விட்டது போல இருந்தவள் அவன் இதழ் முத்தத்தில் தொலைந்து காணாமல் போனாள்.
பெண்களுக்குரிய எச்சரிக்கை உணர்வில் சிறிது நேரத்தில் தன்னிலை உணர்ந்தாள் காயத்ரி. தான் இருக்கும் நிலை, இருக்கும் இடம் என அனைத்தும் அவளுக்கு பீதியைக் கொடுத்தது. யாராவது இந்நேரம் இங்கே வந்தால் என்ன நினைப்பார்கள் என்ற கேள்வி அவளுக்கு பதட்டத்தைக் கொடுத்தது.
ஆனால் அவனோ இந்த உலகத்திலே இல்லை. முதல் முதலாக உணர்ந்த ஒரு பெண்ணின் அருகாமை அவனை நிலை குலைய வைத்தது. அவளது வாசனை அவனை வேறு உலகுக்கு அழைத்து சென்றது.
காதலை சொல்ல சந்தர்பம் தேடிக் கொண்டிருந்தவனுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் விடுவானா? அவள் உடலின் மீது அவனது தேடல் துவங்கியிருந்தது.
“தீபு, இது தப்பு. என்னை விடுங்க”, என்று முணுமுணுத்தாள் காயத்ரி. அவள் குரல் அவன் காதில் கேட்கவே இல்லை. அவன் செய்கையில் அவளோ நடுங்கிக் கொண்டிருந்தாள்.
அப்போது “சௌமி கிளம்பலாமா, அக்காவை கூட்டிட்டு வா”, என்ற கலாவதியின் குரலும் “இதோ வரோம் மா”, என்ற சௌமியும் குரலும் காயத்ரிக்கு கேட்டது.
“இவனை எப்படி சரி செய்ய?”, என்று யோசித்தவள் அது முடியாமல் அவன் ஏற்படுத்திய உணர்வுகளில் இருந்து விடுபட முடியாமல் துவண்டாள். அவளுள் மூழ்கிக் கொண்டிருந்தவனை அவள் எப்படி விலக்கவாம்?
“அக்கா”, என்ற சௌமியின் குரல் அருகில் கேட்க “இப்ப நீங்க என்னை விடலைன்னா கண்டிப்பா நான் உயிரோடே இருக்க மாட்டேன்”, என்று தீபக்கின் காதில் முணுமுணுத்தாள் காயத்ரி.
அடுத்த நொடி அவளிடம் இருந்து தீச்சுட்டாற் போன்று விலகி விட்டான் தீபக். அவனால் காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியவில்லை.
தன்னுடைய மொத்தக் காதலையும் அவளிடம் கொட்டியிருக்கும் இந்த அற்புதமான நொடியை அவள் பெரிதாக எண்ண வில்லையா? என்ன வார்த்தை சொல்லி விட்டாள் என்று அதிர்ந்து போனான்.
அவன் கண்களில் இருந்த அதிர்ச்சியைப் பார்த்து அவள் எதுவோ சொல்ல வர அவளை கை நீட்டித் தடுத்தான் தீபக்.
“தப்பு தான். எல்லாமே தப்பு தான். உன்னை லவ் பண்ணது, உன் மேல பைத்தியமா திரிஞ்சது. உன்னோட காதல் கிடைக்காட்டியும், உன் நட்பாவது கிடைக்கணும்னு ஆசைபட்டது தப்பு தான். ஒவ்வொரு நிமிசமும் உன்னையே நினைச்சு வாழ்ந்த என்னைக் கொன்னுட்டல்ல? தேங்க்ஸ். நான் உன்னை என்னோட பொண்டாட்டியா நினைச்சு தான் தொட்டேன். என்னோட உணர்வுகளை நான் உன்கிட்ட தானே காட்ட முடியும்? அது தப்புன்னு சொல்லிட்டல்ல? தேங்க்ஸ்”
“தீபு”
“என்னை அப்படி சொல்லாத டி. இனி நான் உனக்கு தீபக் மட்டும் தான். அது கூட இல்லை. ஜஸ்ட் உன் கிளாஸ் மேட் அவ்வளவு தான். போ இங்க இருந்து. என் கண்ணு முன்னால வராத போ”, என்று அவன் கத்தியதும் அங்கிருந்து சென்றாள் காயத்ரி.
அவளைத் தேடி அப்போது சௌமியும் வர திரும்பி திரும்பி பார்த்த படியே அங்கிருந்து சென்றாள்.
அவள் கால்களில் அணிந்திருந்த கொலுசின் ஒலி அங்கிருந்து மறையும் வரை அசையாமல் அதே இடத்தில் நின்றிருந்தான் தீபக்.
அதன் பின் தீபக்கைத் தவிர அனைவரிடமும் சொல்லி விட்டு கிளம்பி விட்டார்கள். தீபக் கீழே செல்லவே இல்லை. அவளை எதிர் நோக்க அவனுக்கு எந்த சக்தியும் இல்லை.
காயத்ரி முகம் ஒரு மாதிரி இருக்கவும் வீட்டுக்கு வந்ததும் அவளிடம் என்னவென்று விசாரித்தாள் சௌமி. ஆனால் ஒரு அக்காவாக அவளிடம் எதையும் அவளால் சொல்ல முடியவில்லை.
அடுத்த நாள் காலை பஸ்ஸில் அவனைப் பார்க்கலாம் என்று நினைக்க அவன் அன்று காலேஜுக்கே வர வில்லை.
நந்தினி என்னவென்று கேட்க அனைத்தையும் ஒப்பித்து கதறித் தீர்த்து விட்டாள். சகோதரியிடம் சொல்ல முடியாததை தோழியிடம் பகிர்ந்து கொண்டாள் காயத்ரி.
அனைத்தையும் கேட்ட நந்தினிக்கு தன்னுடைய தோழி பக்கம் இருக்கும் நியாயம் புரிய அதே நேரம் தீபக்கின் உணர்வுகளையும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
ஆனால் இது அவர்களின் பெர்ச்னல் விஷயம் என்பதால் அவளால் காய்த்ரிக்கு “கூடிய சீக்கிரம் சரியாகிரும். பீல் பண்ணாத”, என்று அறிவுரை மட்டுமே வழங்க முடிந்தது.
அதன் பின் வந்த நாட்கள் காயத்ரியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தவிர்த்தான். அவள் தான் தவித்துப் போனாள். அவள் போன் செய்தாலும் அதை அவன் எடுக்க வில்லை. இப்போது அவனுக்கென்று போன் இருப்பதால் அவள் போன் செய்யும் போது அவனால் அதை எளிதாக புறக்கணிக்க முடிந்தது. அவள் முகத்தையும் அவன் ஏறிட்டுப் பார்ப்பதில்லை.
கிளாசில் வைத்து அவர்கள் அதிகம் பேசியதில்லை என்பதால் கிளாசில் வைத்தும் அவளால் அவனிடம் பேச முடியவில்லை.
ஏற்கனவே தீபக்கும் காயத்ரியும் லவ் பண்ணிக்கிறார்களோ என்று யூகித்திருந்த சாருவுக்கு கூட இருவரின் அமைதி வியப்பைக் கொடுத்தது.
நாட்கள் அப்படியே கடக்க இரண்டாம் ஆண்டு முடியும் தருவாயில் இண்டஸ்ட்ரி விசிட் செல்ல ஏற்பாடானது. தீபக் தான் அனைத்து ஸ்டாப்களிடம் அனுமதி வாங்கி எங்கே செல்லலாம் என்று கிளாசில் வைத்து விவாதம் நடத்தி அதன் பின் ஹெச்.ஓ.டி யிடம் அனுமதி வாங்குவது வரை அவன் தான் எல்லாம் செய்தான்.
காதல் தொடரும்!!!