அவன் போனை எடுத்த வினித் “சொல்லுங்க பையா”, என்றான்.
“இன்னைக்கு ரெட்டி வெளிய வரதா ஏதாவது பிளான் இருக்கா வினித்? ஏதாவது டீல் பேசப் போறானா? இன்னைக்கு இல்லைன்னா என்னைக்கு போறான்?”
“என்னன்னு பாத்துட்டு சொல்றேன் பையா? அப்புறம் என்ன ஆச்சு பையா? உங்க குரலே சரியில்லை. திடீர்னு ஏன் இப்படி கேக்குறீங்க?”
“இதுக்கு மேல அவனை விட்டு வைக்கிறதா இல்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவன் கதையை முடிக்கணும்”
“பையா, முதல்ல அவனோட பிஸ்னஸ் சாம்ராஜியத்தை ஒழிச்சு அவனை ஒண்ணும் இல்லாதவனா ஆக்கி, அதுக்கப்புறம் தானே அவனைக் கொல்லணும்னு பிளான் பண்ணுனோம்”
“அவனுக்கு பாடம் நடத்திட்டு இருந்தா நான் என்னை சுத்தி இருக்குறவங்களை இழந்துருவேன் வினித். உடனே அவன் கதையை முடிக்கணும். அவன் எங்கயாவது வெளிய போறானா?”
“நான் உங்களுக்கு பத்து நிமிஷம் கழிச்சு இன்னைக்கு ரெட்டியோட வேலைகள் என்னன்னு சொல்றேன் பையா. அது படி பிளான் செஞ்சிக்கோங்க”,. என்று சொல்லி விட்டு போனை வைத்தான்.
அவனுடைய போனுக்காக காத்திருந்தான் யுவன். சில நிமிடங்களில் ரெட்டியுடைய அன்றைய பிளான்களை எல்லாம் பிட்டு பிட்டு வைத்து விட்டான் வினித்.
“பையா. இன்னைக்கு ரெட்டி பிளான் இது தான். மத்த நேரத்துல எல்லாம் ஒண்ணும் செய்ய முடியாது. ஆனா நாலு மணிக்கு பீச்
ஹவுஸ்க்கு டீல் பேச போறான். போதைப் பொருள் சப்ளை செய்யுறதுக்கு மீட்டிங் நடக்குது. அப்ப வேணும்னா ஏதாவது செய்ய பாருங்க”, என்று தகவல் கொடுத்தவனுக்கும் இதற்கு ஒரு முடிவு வந்தால் நல்லது தான் என்று தோன்றியது.
“தேங்க்ஸ் வினித். இனி நீ அங்க இருந்தது போதும். நம்ம இடத்துக்கு வந்துரு. அங்க இருக்குற உனக்கு வேண்டிய ஆட்களையும் அங்கிருந்து காப்பாத்த பாரு”, என்று சொல்லி விட்டு போனை வைத்த யுவன் அவனுக்கு தகவல் சொல்லும் இன்னொருவனை அழைத்தான்.
அவனிடம் பேசி ரெட்டி எந்த வழியாக போகிறான் என்று கேட்டு அறிந்து கொண்டான். பின் தன்னுடைய ஆட்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து அவன் சில திட்டங்கள் போட அவனுடைய ஆட்களும் அமைதியாக கேட்டுக் கொண்டார்கள்.
அன்று அவர்கள் திட்டம் போட்டத்தின் விளைவு தன்னுடைய வீட்டை விட்டு கிளம்பிய சிறிது நேரத்தில் ரெட்டியின் காரை யுவனின் ஆட்கள் பாலோ செய்தார்கள்.
மூன்று கார்கள் நிறைய செக்யூரிட்டியுடன் போகும் ரெட்டி கவலையில்லாமல் தான் இருந்தான். சுற்றி தன்னுடைய ஆட்கள் இருக்க தனக்கு என்ன கவலை என்று தான் நினைத்திருந்தான்.
அது மட்டுமில்லாமல் அவனுக்கு இன்றைய பேச்சு வார்த்தை தான் கண் முன் நின்றது. தென்னிந்தியா முழுவதும் போதைப் பொருள் சப்ளை செய்யும் பேச்சு வார்த்தை தான் இன்று நடக்கவிருப்பது.
தென்னிந்தியா முழுவதும் இவன் கையில் இருந்து சரக்கு சென்றால் இவனுக்கு பல கோடிக்கணக்கான பணம் லாபமாக வரும். ரெட்டிக்கு இது மிகப் பெரிய வாய்ப்பு. முன்பானால் இவனுக்கு தான் இந்த காண்ட்ராக்ட் கிடைக்கும் என்று நம்பியிருப்பான். ஆனால் யுவன் அவனுடைய போதை சாம்ராஜியத்தில் செய்த குளறு படியால் ரெட்டி மீதான நம்பிக்கை சிறிது குறைந்திருந்தது.
அதை மீட்டெடுக்க இந்த வாய்ப்பைத் தான் அவன் பயன் படுத்த வேண்டும். அதனால் எப்படி பேசினால் அந்த காண்ட்ராக்ட் தனக்கு கிடைக்கும் என்பதிலே அவன் கவனம் இருக்க சுற்றுப் புறத்தில் அவன் கவனம் இல்லை.
முப்பது பேர் பாதுகாப்பில் ரெட்டி கார் சென்று கொண்டிருக்க எழுபது பேர் கொண்ட யுவனின் குழு ரெட்டியை வளைத்து பிடித்தது.
ரெட்டியின் ஆட்கள் கண் மண் தெரியாமல் சுடப் பட்டார்கள். துப்பாக்கிச் சத்தத்தில் மிரண்டு போன ரெட்டி அவனுடைய டிரைவரை வேகமாக போகச் சொல்ல அவனுமே பயத்தில் வேகமாக சென்று ஒரு மரத்தின் மீது மோதி நின்றான்.
ரெட்டியின் ஆட்கள் அனைவரையும் சுட்டு வீழ்த்தி விட்டு அடி பட்ட நிலையில் ரெட்டி கடத்தப் பட்டான். அதே நேரம் போலிஸ்க்கு போதை பொருள் மீட்டிங் பற்றி தகவல் சொல்லி விட்டான் யுவன்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் கை கால்கள் கட்ட பட்ட நிலையில் யுவனின் கோட்டைக்குள் இருந்த சுரங்க பாதைக்குள் கொண்டு செல்லப் பட்டான் ரெட்டி.
ஒரு இருட்டறையில் கை கால்கள் கட்ட பட்ட நிலையில் கிடந்தான் ரெட்டி. இப்படி ஒரு நிலை வரும் என்று அவன் எதிர் பார்க்கவே இல்லை. அது மட்டுமல்லாமல் அவனைக் கடத்தியவர்கள் யார் என்றும் அவனுக்கு தெரியவில்லை.
அப்போது அவன் இருக்கும் இடத்தில் வெளிச்சம் பரவ, திடீரென்று ஏற்பட்ட வெளிச்சத்தில் அவன் கண்கள் கூசியது. அப்போது தான் அங்கு நின்ற யுவன் ரெட்டியின் கண்களுக்கு தெரிந்தான்.
இரையைக் கண்டவுடன் புலியின் கண்கள் சிவப்பது போன்ற தோற்றத்தில் இருந்தது யுவனின் கண்கள். அவனைக் கண்டு ரெட்டிக்கு பயத்தில் குளிர் பிறந்தது. பயத்துடன் யுவனைப் பார்த்துக் கொண்டிருக்க நிதானமாக ரெட்டியை நெருங்கினான் யுவன் நாயக்.
சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து கண் விழித்து விட்டாள் சுசீலா. நர்ஸ் அவளை சோதனை செய்து விட்டுச் சென்றதும் மாயா மற்றும் சுமன் இருவரும் உள்ளே வந்தார்கள்.
அவளைப் பார்த்து புன்னகைத்த மாயாவைக் கண்டு சோபையாக சிரித்தாள் சுசீலா. சுமனும் மாயாவும் அவளின் நலனை விசாரிக்க அவர்களுக்கு பதில் சொன்னவாறே சுசீலாவின் கண்கள் தன்னாலே யுவனை தேடியது. ஆனால் அவன் மட்டும் அங்கே இல்லை. அவளைப் பார்க்கவும் வர வில்லை. அவனைப் பற்றி மாயாவிடம் எப்படி கேட்க என்று தெரியாமல் மனதுக்குள்ளே தேடலைப் புதைத்தாள். அவனைக் காணாததால் அவன் மீது அவளுக்கு கோபமும் வந்தது.
“என்னை இந்த நிலையில போட்டுட்டு எங்கயோ போய்ட்டானே? அப்ப நிஜமாவே அவனுக்கு என் மேல அன்பு இல்லையா?”, என்று எண்ணி தன்னையே வருத்திக் கொண்டாள் சுசீலா.
அன்று முழுவதும் அவன் அவளைப் பாக்க வரவே இல்லை. மாயா தான் அவளை நன்கு கவனித்துக் கொண்டாள். இருவருக்கும் உணவு வாங்கிக் கொடுப்பது சுமனின் வேலையாக இருந்தது.
தன்னை யார் குத்தியது என்று சுமனிடம் கேட்டு தெரிந்து கொண்ட சுசீலாவுக்கு “இந்த ரெட்டி என்னை விடவே மாட்டானா?”, என்று பயம் தான் வந்தது. கூடவே யுவனும் தன்னுடன் இல்லாதது அவளுடைய தைரியத்தை மொத்தமாக எடுத்து போட்டிருந்தது.
அடுத்த நாள் காலையில் தான் அவளைக் காண ஹாஸ்பிட்டலுக்கு வந்தான் யுவன்.
சுசீலாவின் அறைக்கு வெளியே மாயாவும் சுமனும் எதிர் எதிர் இருக்கையில் அமர்ந்திருக்க “கல்யாணம் முடிஞ்சும் இவங்க இப்படி இருக்காங்களே?”, என்று கவலை வந்தாலும் நிதானமாக அவர்களை நெருங்கி “இப்ப சுசீ எப்படி இருக்கா?”, என்று சுமனிடம் கேட்டான் யுவன்.
“இப்ப நல்லா இருக்காங்க. டாக்டர் ரெண்டு நாள் இங்க இருக்கட்டும்னு சொன்னாங்க பையா”, என்றான் சுமன்.
“சரி சுமன், நீ உடனே வீட்டுக்கு போ. ரெட்டி நம்ம கஷ்டடில இருக்கான். கேசவ் மட்டும் தான் வீட்ல இருக்கான். நீயும் கூட போய் இரு. மாயா இங்க என் கூடவே இருக்கட்டும். நான் கொஞ்ச நேரத்துல வந்துருவேன்”
“என்னது ரெட்டி நம்ம கஷ்டடிலயா? என்ன சொல்றீங்க பையா? அவனை பிடிச்சிட்டீங்களா? எப்படி மாட்டினான்? அதுக்குள்ள எப்படி? என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே?”, என்று சுமன் அவசரமாக கேட்டதும் நடந்ததைச் சொன்னான் யுவன்.
அதில் சுமன் முகம் வாடிப் போனது. “என்ன ஆச்சு சுமன்?”, என்று கேட்டான் யுவன்.
“நீங்க எதுக்கு என்னை கூப்பிடவே இல்லை? என்னை ஒதுக்கிட்டீங்களா பையா?”, என்று கவலையாக கேட்டான். இவ்வளவு பெரிய வேலையில் அவன் இல்லாதது அவனுக்கு உண்மையிலே வருத்தமாக இருந்தது.
“நான் உன்னை ஒதுக்கலை சுமன். நீ எனக்காக உயிரையே கொடுப்பேன்னு எனக்கு தெரியும். ஆனா நான் உன்னை பாதுகாக்க தான் உன்னை அங்க அனுப்பலை. இப்ப உன்னை நம்பி மாயா இருக்குறா. உன்னை அந்த வேலைக்கு அனுப்பினா உனக்கு ஏதாவது ஆச்சுன்னா அவளும் பாதிக்கப் படுவா. இனி நீ தான் அவளுக்கு எல்லாமே. உனக்கு புரியுது தானே?”, என்று சொன்னதும் சுமனுக்கும் புரிந்தது.,
“சரி பையா, நான் வீட்டுக்கு கிளம்புறேன்”, என்று சொன்னவன் மாயாவிடமும் சொல்லி விட்டு வீட்டுக்குச் சென்றான்.
மாயா வெளியே இருந்த சேரில் அமர்ந்ததும் சுசீலாவைக் காண அறைக்குள் சென்றான் யுவன். அவனைப் பார்த்ததும் முகம்
திருப்பிக் கொண்டாள் சுசீலா. அதில் அவனுக்கு புன்னகை தான் வந்தது. அவள் செயல் ஒரு சிறு குழந்தையை அவனுக்கு நினைவு படுத்தியது.
மும்பை நகரம் முழுவதும் பையா பையா என்று அவனை மரியாதையுடன் அழைக்க சுசிலாவோ போ உன் கூட சண்டை என்னும் விதமாய் முகத்தை திருப்பிக் கொண்டிருந்தாள்.
வந்த சிரிப்பைக் அடக்கிக் கொண்டு அவள் அருகே நெருங்கிச் சென்றான். அவள் தலை முதல் கால் வரை அவன் பார்வை பயணித்தது. அவனைப் பார்க்காமல் இருந்தாலும் அவன் பார்வை சுசீலாவை எதுவோ செய்தது. அதனால் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவனை பார்க்கவும் “இப்ப எப்படி இருக்க சுசீ?”, என்று அன்பாக கேட்டான்.
“இவ்வளவு நேரம் இருக்கேனா செத்தேனான்னு கண்டுக்காதவர் இப்ப மட்டும் எதுக்கு வந்தாராம்? விட்டாப் போதும்னு ஆஸ்பத்திரில தள்ளிட்டு ஓடிட்டீங்க, அப்படித் தானே? இப்ப நான் இருந்தா உங்களுக்கு என்ன? இல்லை செத்தா உங்களுக்கு என்ன”, என்று கண்களில் வலியுடன் கேட்டாள்.
அவள் அவனை தேடியிருக்கிறாள் என்று புரிந்து அவனுக்கு இதமாக இருந்தது. அந்த கோபம் கூட அவனுக்கு பிடித்திருந்தது. தன் மீது உரிமையுடன் கோபத்தைக் காட்டும் அவளை ரசித்தான்.
“சாரி சுசீ. கொஞ்சம் வேலை இருந்துச்சு. நீ நல்லா இருக்க தானே? எங்கயும் வலி ரொம்ப இருக்குதா”, என்று சமாதானமாக கேட்டான்.
“வலி என்ன பெரிய வலி? நானே எதுக்கு பொழைச்சேன்னு இருக்கேன். என்னை எதுக்கு காப்பாத்துனீங்க?”, என்று மீண்டும் கேட்டதும் அவன் கண்கள் ரத்தமென சிவந்து போனது. மறுபடி மறுபடி அவள் சாவைப் பற்றி பேசியதால் அவன் பொறுமை எல்லை கடந்தது. அவன் பார்வையில் அவன் கோபத்தை கண்டவளுக்கு இயல்பாகவே பயம் வந்தது.
காதல் தொடரும்.,…..