நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மனைவியின் பிரச்சனையை தன் பிரச்சனையாக எடுத்துக்கொண்டு பேசிக்கொண்டு இருப்பவனை பெருமிதமாக பார்த்துக்கொண்டிருந்தாள் மதுமிதா.
முருகையன் சிறிது நேரம் யோசித்த பிறகு “வா மா” என்று மதுமிதாவை பார்த்து அழைத்தார்.
அவர் அழைத்ததை பார்த்ததும் ஈஸ்வரி மதுமிதாவின் கையைப்பிடித்து “அதான் தாத்தா நீ ஆசைப்பட்ட மாதிரி உன்னை க கூப்பிட்டு விட்டார் இல்லையா? வா.” என்று வாயெல்லாம் பல்லாக அழைத்தார்.
மதுமிதா, மாதவன் இருவரும் உள்ளே சென்றனர்.
“தாத்தா, பாட்டி அண்ணாமலை ஸ்டோர்ஸ் நாலாவது மாடியில் புதுசா ஒரு கடை கட்டி இருக்கிறோம். அந்த கடையில் கிரகப்பிரவேசம் செய்யப்போகிறோம். அதுக்கு உங்க ரெண்டு பேரையும் அழைக்க வந்திருக்கிறோம்.” என்றாள் மதுமிதா.
“அப்படியா ரொம்ப சந்தோஷம்.” என்றார் ஈஸ்வரி.
“அந்த கடையில் என்ன பண்ண போறீங்க?” என்று மாதவனை பார்த்து கேட்டார் முருகையன்.
“அந்த கடையில் மதுமிதா டெய்லரிங் பண்ணப் போகிறாள்.” என்றான் மாதவன்.
“அப்படியா? மதுமிதா உனக்கு டெய்லரிங் தெரியுமா?” என்று கேட்டார் ஈஸ்வரி.
“என்ன பாட்டி அப்படி கேட்டுட்டீங்க. உங்களுக்கு தெரியாதா? எனக்கு எம்பிராய்டரிங், டிசைனிங் எல்லாமே தெரியும்.”
“அப்படின்னா?” என்று கேட்டார் ஈஸ்வரி.
“ எம்ராய்டரி, மணி எல்லாம் வச்சு கிராண்டா கல்யாண பொண்ணுங்க பிளவுஸ் போடுவாங்க இல்லையா அந்த மாதிரி பிளவுஸ் நான் தைத்துத் தருவேன்.”
“அப்படியா? அது மட்டும் இல்லை பாட்டி. சல்வார், புடவையிலும் நான் டிசைன் பண்ணுவேன். சென்னையில் வீட்ல பண்ணி கொடுத்துட்டு இருந்தேன் . இங்கே நம்ம கடையில தொடர்ந்து பண்ண போகிறேன்.” என்று மதுமிதா விலக்கினாள்.
“ரொம்ப சந்தோஷம் மதுமிதா. நல்லா பண்ணு. உன்னோட நல்ல மனசுக்கு நீ நல்லா வருவ.” என்று ஆசிர்வதித்தார்.
முருகையன் அமைதியாகவே இருந்தார்.
“தாத்தா நான் உங்களுக்கு புத்தி சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. இவ்வளவு நாளா என் மாமனார், மாமியாரை தள்ளிவைத்து வாழ்ந்தீர்கள். சரி அது போகட்டும். அது முடிஞ்சு போன கதை. இனி மேலாவது அவங்களை நீங்க சேர்த்துக்கலாம் இல்லையா? அவங்க கூட பழையபடி பாசமா இருக்கலாம் இல்லையா?” என்று கேட்டான்.
அவர் யோசித்தார்
“தாத்தா, அப்பா உங்களை மதிக்காமல் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்துவிட்டதா நீங்க சொல்றீங்க. ஆனால் அப்பா உங்களை பத்தி எப்பவுமே பெருமையா தான் சொல்லுவார். உங்க கூட இருக்க முடியலன்னு எவ்வளவு வருத்தப்படுவார் தெரியுமா? அப்பா மட்டும் கிடையாது அம்மாவும் அப்படித்தான். உங்க மேல ரொம்ப பாசமும் மரியாதையும் வச்சிருக்காங்க. இது எல்லாத்துக்கும் மேல எனக்கும் அண்ணனுக்கும் அப்பா அம்மாவை தவிர தாய்வீட்டு சொந்தம்னு பார்த்தா நீங்களும் பாட்டியும் மட்டும்தான். அது உங்களுக்கே தெரியும். அப்படி இருக்கும் போது நீங்க எங்க கிட்ட பேசாம இருக்கறது சரியா? ப்ளீஸ் தாத்தா. பழசெல்லாம் மறந்து எங்க அப்பா அம்மா கூட பேசுங்கள். நானும் என் அண்ணனும் சின்ன வயசுல இருந்தே அப்பா அம்மாவை மட்டும் தான் பார்த்து வளர்ந்திருக்கிறோம். இனிமேலாவது தாத்தா பாட்டி உறவு எங்களுக்கு வேணும் ப்ளீஸ்.” என்று கண்களில் நீர் வழிய மதுமிதா கேட்டதும் முருகையன் மனம் இறங்கினார்.
“நீ அழாதே என் தங்கம். நீ எப்பவும் அழக்கூடாது. சந்தோஷமா இருக்கணும். அதுதான் இந்த தாத்தா பாட்டிக்கு சந்தோஷம். நான் இந்த விழாவுக்கு வரேன். அங்க வச்சி உன் அப்பன்காரன் கிட்ட பேசறேன். உங்க எல்லாரையும் கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வர்றேன்.” என்றார் முருகையன் கண்கலங்கியபடி.
“தாத்தா” என்று அவரது தோளில் சாய்ந்து கொண்டாள் மதுமிதா.
“அப்பா சொன்னது உண்மை தான். உங்க மனசல எப்பவுமே எங்க மேல பாசம் இருந்திருக்கு. அதனாலதான் நான் கேட்டதும் நீங்க ஒத்துக் கொண்டீர்கள். ரொம்ப தேங்க்ஸ் தாத்தா.” என்றாள்.
ஈஸ்வரிக்கும் மகிழ்ச்சிதான். கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு
“வாங்க முதல் தடவை வீட்டுக்கு வந்து இருக்கீங்க. சாப்பிட்டுட்டு தான் போகணும்.” என்று இருவரையும் சாப்பிட வைத்தார்.
“என்னடா சொல்ற? நிஜமாவா?” என்று நம்ப முடியாமல் கேட்டுக்கொண்டிருந்தார் அண்ணாமலை.
“ஆமாம் மாமா. தாத்தா எங்கள் எல்லோரையும் ஏற்றுக்கொண்டார்.” என்று அங்கு நடந்ததை சொன்னாள் மதுமிதா.
“ரொம்ப சந்தோஷம் மதுமிதா. நீங்க அங்க போறேன்னு சொன்னதும் நானே கொஞ்சம் தயங்கினேன். ஆனால் நீ நல்ல முடிவுதான் எடுத்திருக்க. சிதம்பரத்துக்கு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவான்.” என்றார் அண்ணாமலை.
“இப்ப சொல்ல வேண்டாம் மாமா. அப்பாவுக்கு பங்க்ஷன்ல வெச்சு சர்ப்ரைஸ் கொடுப்போம்.” என்றாள் மதுமிதா.
“சரிம்மா. உன் இஷ்டம். அப்படியே செய்யுங்கள்.” என்றார் அண்ணாமலை .
“கடை வேலை எல்லாம் முடிஞ்சுதா மாதவா ?”என்று கேட்டார் அண்ணமலை.
“முடிஞ்சிருச்சு பா நா.ம பங்க்ஷன் வேலையை பார்க்கலாம்.” என்றான் மாதவன்.
“ நீயும் ஆறுமுகமும் கடைக்கு போய் புரோகிதர் சொன்ன பொருளையெல்லாம் வாங்கி வந்து வச்சுடுங்க.” என்றார்.
“சரிப்பா நான் பார்த்துக்கொள்கிறேன்.” என்று விட்டு சென்றான் மாதவன்.
விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
விழாவிற்கு 1 நாள் மட்டுமே இருந்தது .
ஆதித்யா மாதவன் அறையில் பந்து விளையாடிக் கொண்டிருக்கிறான்.பந்து அங்கேயும் இங்கேயும் அடித்தது. இதை கவனித்த மதுமிதா
“ஆதி வெளிய போய் பந்து விளையாடு. கண்ணாடியில் பட்டா கண்ணாடி உடைந்து விடும்.” என்றாள்.
“சரி சித்தி. ஒரே ஒரு தடவை மட்டும் தூக்கிப்போட்டு விளையாடிட்டு போயிடறேன்.” என்றுவிட்டு அவள் பதிலை எதிர்பார்க்காமல் வேகமாக பந்தை தூக்கி போட்டான்.
பந்து அலமாரியின் மேல் போய் விழுந்தது.
“ஆதி அதுக்குதான் நான் அப்பவே சொன்னேன். நீ கேட்கவே இல்லை. இப்போ அந்த பந்து மேல மாட்டிகிச்சு.” என்றாள் மதுமிதா.
“ஆ” என்று அழ ஆரம்பித்து விட்டான் ஆதித்யா.
“எனக்கு அந்த பந்து வேணும். எடுத்துக் கொடுங்க.” என்று குரலெடுத்து அழுதான்.
“சரி சரி இருடா.” என்று அவனிடம் சொல்லிவிட்டு ஒரு நாற்காலியை போட்டு அதன் மீது ஏறி பந்தை எடுத்தாள்.
பந்தை எடுத்துக் கொண்டு கீழே இறங்கும் போது பக்கத்தில் இருந்த ஒரு பெரிய பை கீழே விழுந்தது. மதுமிதா கையில் இருந்த பந்தை ஆதி இடம் கொடுத்து
“ஆதி இனிமேலாவது வெளியே போய் விளையாடு. “என்று சொல்லிவிட்டு அந்த பையை எடுத்தாள்.
“ஏதோ ஜென்ட்ஸ் பேக் மாதிரி இருக்கு. மாதவன் பேக்னு நினைக்கிறேன்.” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு அதை மீண்டும் மேலே தூக்கிப் போட்டாள்.
அப்போது அந்த பையிலிருந்து நெக்லஸ் கீழே விழுந்தது .அதை எடுத்துப் பார்த்த மதுமிதாவால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அந்த நகையை கையிலெடுத்து இப்படியும் அப்படியும் திருப்பி பார்த்தாள். அதே நகை தான் அதே மகாலட்சுமி வடிவில் வைரக்கல் வைத்த நெக்லஸ் தான்.
“இது எப்படி இங்க வந்தது?” என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள்.
‘அதுவும் இந்த தூசு படிந்த பையில் இருக்கு. எப்படி எப்படி?’ என்று யோசித்தாள். ஆனால் எப்படி என்று அவளுக்கு புரியவில்லை.
‘ஒருவேளை நாம முதலில் சந்தேகப்பட்டது போல இவன்தான் திருவிழாவில் பார்த்த அவனா?’ என்று யோசித்தான்.
ஆனால் ஏற்கனவே இரண்டு முறை அவனை தவறாக நினைத்து மன்னிப்பு கேட்க நேர்ந்தது ஞாபகம் வந்து அவளை குழப்பியது.
‘ஒருவேளை மாதவன் இந்த நெக்லஸை கண்டுபிடித்து விட்டாரோ? அப்படி கண்டுபிடித்து இருந்தால் என்கிட்ட கொடுத்திருக்கலாமே! ஒருவேளை கடையை சர்ப்ரைஸா வச்சிருந்த மாதிரி இதையும் சர்ப்ரைஸா வைத்திருந்தாரோ?’ என்று யோசித்தாள்.
‘அப்படி வைத்திருந்தாள் இப்படியா தூசு படிந்த பையில் வச்சிருப்பாங்க?’ என்று இன்னொரு கேள்வி அவள் மனதில் தோன்றி மேலும் குழப்பியது. விடை புரியாமல் தவித்தாள்.
‘சரி நாம திருவிழாவுக்கு இவன் வந்திருக்கானான்னு அக்கா கிட்ட கேட்டுப் பார்ப்போம்.’ என்று நினைத்தவள் அந்த நகையை எடுத்து ஒரு பெட்டியில் வைத்து பத்திரப் படுத்தி விட்டு கீழே இறங்கி வந்தாள்.
மலர் தோட்டத்தில் கொத்துக் கொத்தாக பூத்திருந்த ரோஜா பூக்களை பறித்துக் கொண்டிருந்தாள்.
மலரிடம் வந்த மதுமிதா
“அக்கா இந்த மஞ்சள் கலர் பூ எவ்வளவு அழகா இருக்கு இல்லக்கா!” என்று சாதாரணமாக பேசுவது போல பேச்சை ஆரம்பித்தாள்.
“ஆமாம் மது எனக்கு மஞ்சள் ரோஜா ரொம்ப பிடிக்கும்னு தெரிந்து மாதவன் இந்த பூவை வாங்கிட்டு வந்து இங்கே வைத்தான்.”
“ஓ அப்படியா அக்கா ! நீங்க திருவிழாவுக்கு போய் இருக்கீங்களா?”
“இது என்ன கேள்வி மது? நான் நிறைய தடவை திருவிழாவுக்கு போயிருக்கிறேன்.”
“ஓ அப்படியா ?”
“ஆனால் நான் ஒரே ஒரு தடவைதான் திருவிழா பார்த்திருக்கிறேன். என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தி தேனியில் இருந்தாள். அப்போ அந்த ஊருக்கு அவளோட கல்யாணத்துக்கு போய் இருந்தப்போ அந்த ஊர்ல நடந்த திருவிழாவை பார்த்தேன். சென்னையில் நாங்க இருந்த ஏரியாவில் திருவிழா பெருசா நடக்காது. ஆனால் வேறு சில ஏரியாவில் நடக்கும். ஆனால் நாங்க பார்த்தது கிடையாது.”
“உனக்கு திருவிழாவை பார்க்கணும் போல ஆசையா இருக்கா ?
நம்ம கிராமத்தில் வருஷாவருஷம் திருவிழா நடக்கும். நாம இந்த வருஷம் பார்க்கலாம்.” என்றாள் மலர்.