அத்தியாயம் 11_1 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்
Post Views:1,535
அத்தியாயம் 11
ஒரே குடையின் கீழ் நிகழ்ந்த
மழைப் பயணம் நம் வாழ்வின்
நீங்காத நினைவுச் சின்னம்!!!
காயத்ரி வீட்டுக்கு விக்ரமும் ரேகாவும் சென்றதும் அவர்களை மாதவியும் தரணியும் பாசமாக வரவேற்றார்கள்.
அவர்களைக் கண்ட காயத்ரி “ரொம்ப சீக்கிரம் ரெண்டு பேரும் வந்துட்டீங்க? நான் கூட மாப்பிள்ளை வீட்டுக்காரங்க உஷாவைப் பாத்துட்டு போன அப்புறம் தான் வருவீங்கன்னு நினைச்சேன்”, என்று சிரித்தாள்.
“சாரி அண்ணி, நான் தான் ஆஃபிஸ்ல இருந்த்து வர நேரம் ஆச்சு. ரேகா கிளம்பித் தான் இருந்தா. என்னால தான் லேட்”, என்றான் விக்ரம்.
“இரு இரு நான் இப்ப உன் பொண்டாட்டியை எதுவுமே சொல்லலையே? எதுக்கு இவ்வளவு பாஞ்சிக்கிட்டு அவளுக்கு சப்போர்ட் பண்ணுற? நான் ரேகாவை ஒண்ணும் சொல்லலை போதுமா?”, என்று சிரித்தாள் காயத்ரி. அதில் விக்ரம் அசடு வழிய சிரிக்க அவனை ரசித்துப் பார்த்தாள் ரேகா.
அப்போது அங்கே வந்த உஷா “வாங்க அத்தான், வாங்க ரேகா அக்கா”, என்று அவர்களை வரவேற்றாள். அவளைப் பார்த்து ரேகா நட்புடன் சிரிக்க, விக்ரமோ “என்ன மா கல்யாணப் பொண்ணு உன்னைப் பாக்க மாப்பிள்ளை ஏழு கடல் தாண்டி, ஆறு மலை தாண்டி வந்துட்டு இருக்காராம். ஆனா நீ என்ன இன்னும் கிளம்பாம நைட்டியோட சுத்திக்கிட்டு இருக்க? சும்மா ஜம்முன்னு கிளம்பி அவருக்காக வழி மேல விழி வச்சு காத்துட்டு இருக்க வேண்டாமா? என்ன மா நீ?”, என்றான்.
“அவர் வரும் போது பிரஷா கிளம்பலாம்னு தான் இப்ப கிளம்பாம இருக்கேன் அத்தான். இவ்வளவு சீக்கிரமே கிளம்பிட்டா மாப்பிளை என்னைப் பாக்க வரும் போது என் மேக்கப் கலைஞ்சீரக் கூடாதுள்ள? அதுக்கு தான். எப்படி என் ஐடியா?”, என்று சொல்லி உஷா சிரிக்கவும் “அது என்னமோ சரி தான். மேக்கப் போட்டா இருக்குற உன் அதிகமான அழகு இன்னும் தூக்கலா இருக்குமே? மாப்பிள்ளை கண்டிப்பா மயங்கிருவார், என்றான்.
“ஏன் அத்தான் உங்க பேச்சுல கொஞ்சம் பொறாமை வெளிப்படுற மாதிரி இருக்கே? என்னை மிஸ் பண்ணிட்டோமோன்னு கவலையா இருக்கா? பேசாம ரேகா அக்காவை கழட்டி விட்டுட்டு என்னைக் கட்டிக்கிறீங்களா?”, என்று உஷா சிரிக்க ரேகாவும் புன்னகைத்தாள். காயத்ரியோ “உஷா என்ன பேச்சு இது?”, என்று கண்டிப்பான குரலில் சொன்னாள். அவள் சொன்னதை யாருமே காதில் வாங்க வில்லை.
புன்னகைத்துக் கொண்டிருந்த ரேகாவை ஒரு பார்வை பார்த்த விக்ரம் “கண்டிப்பா மாட்டேன் பா. நானே நல்லதா போச்சு உன் கிட்ட இருந்து தப்பிச்சிட்டேன்னு இருக்கேன். உன் கிட்ட இருந்து என்னைத் தப்பிக்க வச்ச ரேகா தான் என்னோட குல தெய்வம். அவளுக்கு தான் நான் தினமும் பூஜை செய்யணும்”, என்றான்.
“எதுக்கு அத்தான் இப்படி ஒரு டயலாக்? நான் அந்த அளவுக்கு மோசமாவா இருக்கேன்?”, என்று பாவமாக கேட்டாள் உஷா.
“மோசமா எல்லாம் இல்லை. ஆனா உன்னைக் கட்டிக்கிட்டா யாரு மேக்கப் ஐட்டமா வாங்கிக் குவிக்கிறது? ஏற்கனவே பார்லர் வச்சிருக்குற உங்க அக்கா மேக்கப் ஐட்டமா வாங்கி என் அண்ணன் பர்சை காலி பண்ணுறாங்க. எனக்கும் அந்த நிலைமை வரணுமா? அண்ணியாவது அடுத்தவங்களுக்கு தான் மேக்கப் போடுறாங்க. ஆனா நீ உன் முகத்துல அப்பிக்கிரியே. உனக்கு வர புருஷன் பாவம். நான் எஸ்கேப் பா”, என்று சொல்லி விக்ரமும் சிரித்தான்.
அவனை முறைத்த காயத்ரி “என் வீட்டுக்காரர் எனக்கு வாங்கிக் கொடுக்குறதுல உனக்கு எதுக்கு விக்ரம் பொறாமை? நீயும் உன் பொண்டாட்டிக்கு வாங்கிக் கொடு. யாரு வேண்டாம்னு சொன்னா”, என்று அவனிடம் சொல்லி விட்டு ரேகா புறம் திரும்பி “நீயும் இவன் கிட்ட அது வேணும் இது வேணும்னு கேளு ரேகா. அப்ப தான் இவனுக்கு இருக்குற கொழுப்பு அடங்கும்”, என்றாள். .
“அதானே நம்மளை மட்டும் சொல்றதை பாருக்கா. ஏன் அத்தான், ரேகா அக்கா மட்டும் மேக்கப் போடலையோ?”, என்று கேட்டாள் உஷா.
“அவ முகம் கழுவி பவுடர் மட்டும் தான் பூசினா. நீ அப்படியா? இன்னும் நாலு இன்ச்க்கு உன் முகத்துல லோட் ஏத்துவ? போ போ, கிளம்பு போ. நேரம் ஆச்சு. அப்புறம் உன்னை இப்படியே மாப்பிள்ளை பாத்துட்டா பாவம் அவரை ஐ சி யுல தான் நாங்க சேக்கணும். அப்படியே ஷாக் ஆகிறுவார்”, என்று அவளிடம் சொன்னவன் காயத்ரி புறம் திரும்பி “அண்ணி, அண்ணா எங்க? ஆளையே காணும்? மச்சினிச்சியை பொண்ணு பாக்க வராங்கன்னு அழுதுட்டு இருக்கானா?”, என்று கேட்டான்.
“யாரையும் விட்டு வைக்காத என்ன? அவங்க குளிக்கிறாங்க விக்ரம். இப்ப வந்துருவாங்க. சரி நீ உக்காரு. அம்மா விக்ரம்க்கு டீ கொடுங்க. சுகர் மீடியமா இருக்கட்டும். நீ வா ரேகா, நாம ரெண்டு பேரும் தான் உஷாவை ரெடி பண்ணனும்”, என்று சொல்லி ரேகா கை பிடித்து அழைத்துச் சென்றாள் காயத்ரி.
போகும் போது “உஷா பேசுறதை எல்லாம் பெருசா எடுத்துக்காத ரேகா. அவ எப்பவுமே இப்படி தான் விளையாடுவா. ஆனா அவ மனசுல எதுவும் இருக்காது. ஆதியையும் அவ விட்டு வைக்க மாட்டா”, என்று சொன்னாள் காயத்ரி. தன்னுடைய தங்கையை தவறாக நினைத்து விடுவாளோ என்று எண்ணி தான் காயத்ரி அப்படிச் சொன்னாள்.
ஆனால் ரேகாவோ “இதுல என்னக்கா இருக்கு? உஷாவும் விக்ரமும் பேசினது ரசிக்கும் படியா தான் இருந்தது. தப்பா நினைக்கிற மாதிரி அங்க எதுவுமே நடக்கலை. அவங்க அப்படி உரிமையா கிண்டல் அடிச்சிக்கிட்டது அழகா இருந்துச்சு. உங்க தங்கை, உங்க வீடு, உங்க அம்மா அப்பா, இந்த அட்மாஸ்பியர் எல்லாமே எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு”, என்றாள்.
“அது என்ன உங்க வீடுன்னு சொல்ற? இனி நம்ம வீடுன்னு சொல்லு. எனக்கு உஷா வேற நீ வேற இல்லை ரேகா. சரி சரி வா”, என்று அவளிடம் சொன்ன காயத்ரி “ஏய் அருந்தவாலு இன்னும் என்ன டி அங்க பண்ணிட்டு இருக்க? சீக்கிரம் வா, நேரம் ஆச்சு. உன்னை ரெடி பண்ணனும்”, என்று உஷாவை அழைத்தாள்.
அதன் பின் உஷாவுக்கு இருவரும் சேர்ந்து அலங்காரம் செய்ய ஆரம்பிக்க குளித்து கிளம்பி வந்த ஆதி விக்ரமுடன் சேர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தான். அவர்களுடன் தரணியும் சேர்ந்து கொண்டார்.
மாதவியோ பரபரப்பாக வடையும் பஜ்ஜியும் சுட்டுக் கொண்டிருந்தாள்.
அதன் பின் உஷாவுக்கு அலங்காரத்தை முடித்து விட்டு அவளுக்கு மேக்கப் கலையாமல் இருக்க ஏசியை கூட்டி வைத்து விட்டு கீழே வந்தார்கள் ரேகாவும் காயத்ரியும்.
காயத்ரியும் ரேகாவும் சமையல் அறைக்கு சென்று மாதவிக்கு உதவி செய்ய ஆரம்பிக்க அவர்கள் இருவரையும் பூஜை அறையை ரெடி பண்ண சொன்னாள் மாதவி. உடனே அங்கே சென்றார்கள் இருவரும்.
ரேகா அங்கே இங்க நடமாடுவதை விக்ரம் பார்த்த படியே தான் இருந்தான். அவன் கண்கள் அவளையே சுற்றி வந்தது. அடுத்தவர்களின் வீடு என்று தயங்கி ஒதுங்கி இருக்காமல் இயல்பாக வேலை செய்து கொண்டிருந்தவளின் மேல் அவன் காதல் பெருக்கெடுத்தது.
ஆதியின் மொக்கையில் இருந்து தப்பித்து பூஜை அறைக்குச் சென்றான். விளக்குகளைத் துடித்து கொண்டிருந்த ரேகா மற்றும் காயத்ரி அவனை நிமிர்ந்து பார்த்தார்கள்.
“என்ன விக்ரம் காத்து இந்த பக்கம் வீசுது? உன்னை இழுக்கும் காந்தம் இங்க இருக்குறதுனாலயா?”, என்று கிண்டலுடன் கேட்டாள் காயத்ரி.
அதைக் கேட்டு வெட்கத்துடன் ரேகா தலை குனிய “அதெல்லாம் ஒண்ணும் இல்லை. எங்க அண்ணி ரொம்ப கஷ்டப் பட்டு வேலை செய்றீங்களேன்னு நினைச்சு உங்களுக்கு ஏதாவது உதவி செய்யனுமான்னு கேக்க தான் வந்தேன் அண்ணி. ஏதாவது உங்களுக்கு உதவி செய்யனுமா?”, என்று கேட்டான். அவன் கேள்வி காயத்ரியிடம் என்றாலும் பார்வை ரேகாவிடமே இருந்தது.
“நம்பிட்டேன் கொழுந்தனாரே… நீங்க எனக்கு தான் உதவி செய்ய வந்தேன்னு நம்பிட்டேன். நீங்க கொஞ்சம் அந்த பக்கம் போய் உக்காந்து உங்க அண்ணன் கிட்ட கதை பேசுங்க. போங்க. கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்”, என்று சொல்லி அவனை விரட்டி விட்டாள் காயத்ரி.
அசடு வழிந்தவாறு அங்கிருந்து சென்றாலும் சிறிது நேரம் கழித்து மீண்டும் அங்கே வந்து “அண்ணி, நான் வேணும்னா மாதவி அத்தைக் கிட்ட சொல்லி உங்க ரெண்டு பேருக்கும் ஜூஸ் கொண்டு வரவா? பாருங்க ரொம்ப வேர்க்குது”, என்றான். இப்போதும் அவன் பார்வை ரேகா மேல் தான் இருந்தது.
ரேகா நெற்றியில் ஒரு துளி வேர்வையும் துளிர்த்திருந்தது. காயத்ரி அவளைப் பார்க்க ரேகாவுக்கோ அவன் அலப்பறையில் வெட்கம் வந்தது.
இருவரையும் நமட்டுச் சிரிப்புடன் பார்த்த காயத்ரி “உன் பொண்டாட்டிக்கு ஒரு துளி வேர்வை வந்துச்சுன்னா ஒண்ணும் கரைஞ்சிற மாட்டா. வேலை அவ்வளவு தான் முடிஞ்சிருச்சு. நீங்க கிளம்புங்க சார். என்னங்க விக்ரமை அங்க கூப்பிடுங்க. எங்களை வேலை செய்ய விடாம தொல்லை பண்ணுறான்”, என்று சத்தமாக ஆதியிடம் போட்டுக் கொடுத்ததும் அங்கிருந்து ஓடியே விட்டான்.
விடலைப் பையன் போன்ற அவன் செய்கையை பார்த்து ரசித்து சிரித்தாள் ரேகா.;
“அம்மாடியோ இருந்தாலும் இன்னைக்கு உன் ஆள் ரொம்ப தான் உன் கிட்ட வழியுறான் ரேகா. அப்படி என்ன சொக்கு பொடி அவனுக்கு போட்ட?”, என்று சிரித்தபடி கேட்டாள் காயத்ரி.
“ஐயோ அக்கா நீங்க வேற, சும்மா இருங்க”, என்று வெட்கத்தோடு சொன்னாள் ரேகா.
“ஆகான், நீ சொன்னா நான் விட்டுருவேனா? என் கொழுந்தனார் உன்னைப் பாக்க தான் உள்ளேயும் வெளியேயும் அலைஞ்சிட்டு இருக்கான் ரேகா. அவன் ஏன் இப்படி பண்ணுறான்னு உனக்கு புரியுதா இல்லையா? நான் அப்ப இருந்தே அவனைத் தான் நோட் பண்ணிட்டு இருக்கேன். என் கிட்ட ஏதாவது கேட்டா கூட அவன் கண் உன்னைத் தான் சுத்துது. என்ன நடக்குது இங்க?”, என்று கேட்டாள் காயத்ரி.
விளக்கைத் துடைத்துக் கொண்டே “அதெல்லாம் ஒண்ணும் இல்லைக்கா. உங்களுக்கு தான் அப்படி தோணுது. அவர் உங்க கிட்ட தான் பேசுறார். என்னை எல்லாம் பாக்கலை”, என்று புன்னகையுடன் சொன்னாள் ரேகா.
அவளுக்கும் அவனுடைய செய்கை புரிந்து தான் இருந்தது. கூடவே “நானா அவனை விலகி இருக்கச் சொன்னேன்? இப்படி ஆசையை வச்சிக்கிட்டு விலகி இருந்து தவிச்சா நான் என்ன செய்ய முடியும்?”, என்று மனதில் எண்ணிக் கொண்டாள்.
“இல்லை ரேகா, அவன் உன்னை தான் சைட் அடிக்கிறான். அது உனக்கும் தெரியும்னு எனக்கு தெரியுமே?”, என்று காயத்ரி சொன்னதும் புன்னகைத்த ரேகா “எனக்கும் தெரியும் அக்கா”, என்றாள்.
அவன் பார்வையை அவளும் உணர்ந்தே தான் இருந்தாள். அதனால் ஒப்புக் கொண்டாள். “ஒருத்தொருக்கொருத்தர் இவ்வளவு அன்பு வச்சிட்டு அப்புறம் எதுக்கு ரேகா இன்னும் ரெண்டு பேரும் தனித் தனியா இருக்கணும்?”, என்று ஆழ்ந்த குரலில் காயத்ரி கேட்க அதிர்ந்து அவளைப் பார்த்தாள் ரேகா.
“அக்கா நீங்க என்ன சொல்றீங்க?”, என்று அதிர்வாக கேட்ட ரேகா காயத்ரியின் கூர்மையான பார்வையில் தலை குனிந்து கொண்டாள்.
“எனக்கும் ஆதிக்கும் எல்லாம் தெரியும் ரேகா”, என்றாள் காயத்ரி.
“அக்கா”, என்று சொல்லும் போதே தன்னுடைய வாழ்க்கையை எண்ணி கண் கலங்கியது ரேகாவுக்கு.
“சே சே இது என்ன சின்ன பிள்ளை மாதிரி கண்ணு கலங்கிக்கிட்டு? நாம டெல்லி போறதுக்கு முன்னாடி விக்ரம் ஒரு மாதிரி சுத்திட்டு இருக்கவும் உங்க அத்தான் தான் அவன் கிட்ட விசாரிச்சிருக்காரு. அப்ப தான் அவன் எல்லாம் சொன்னான். நம்ம வீட்ல எல்லார் கிட்டயும் நீயும் அவனும் காலேஜ் படிக்கும் போதுல இருந்து ரொம்ப லவ் பண்ணுறீங்கன்னு சொன்னான். அது மட்டுமில்லாம கட்டினா உன்னைத் தான் கட்டுவேன்னும் சொன்னான். பொண்ணு பாக்க போவோமான்னு ஒரு நாள் கேட்டதுக்கு அவ வீட்ல கொஞ்சம் பிரச்சனை. அதனால கொஞ்ச நாள் ஆகட்டும்னு சொன்னான். அப்புறம் தீடீர்னு கல்யாணத்துக்கு நாள் குறிங்கன்னு சொன்னான். நாங்க பொண்ணைப் பாக்கணும்னு அத்தை சொன்னாங்க. அதுக்கு அவன் என்ன என்னமோ சொல்லி எங்க எல்லாரையும் சமாளிச்சான். உங்க கல்யாணத்துக்கு அப்புறம் தான் ஆதி கிட்ட எல்லா உண்மையையும் சொல்லிருக்கான்”
….
“நீ அவனை இதுக்கு முன்னாடி பாத்தது கூட இல்லைன்னு அப்ப தான் எங்களுக்கே தெரிஞ்சது. எதுக்கு இவ்வளவு பொய் சொன்னான்னு தெரியலை. அத்தை மாமாவுக்கு இன்னும் அவன் சொன்ன பொய் தெரியாது. அத்தை இவனை பச்ச புள்ளைன்னு நம்பிட்டு இருக்காங்க. விஷயம் தெரிஞ்சதோ இவனை கைமா பண்ணிருவாங்க. ஆனா அவன் உன்னை ரொம்ப தீவிரமா விரும்பினான் ரேகா”
“அக்கா இவங்க நான் படிச்ச காலேஜ்ல தான் படிச்சாங்களா?”
“ஆமா அதைக் கூட இவன் உன் கிட்ட சொல்லலையா? அவன் கடைசி வருஷம் படிக்கும் போது நீ அங்க ஜாயின் பண்ணினன்னு நினைக்கிறேன். அப்புறம் உன்னைப் பாக்க அடிக்கடி சென்னை வருவான். ஆனா உனக்கு அவனைத் தெரியவே தெரியாதுன்னு இப்ப தான் எனக்கு தெரியும்”
“எனக்கு எதுவுமே தெரியாதுக்கா. என் கிட்ட எதுவுமே பேச மாட்டிக்காங்க. அன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா?”
“தெரியும் ரேகா. அன்னைக்கு உன்னை அவன் கூப்பிட வரும் போது நீ அவனை ஆசையா காதலா பாத்தியாம்? ஆனா அவன் உன் கிட்ட காதலைச் சொல்ல வரும் போது நீ அவனை பேச விடாம எங்க மாமா பாத்த மாப்பிள்ளையை தான் கட்டிக்குவேன்னு சொல்லிட்டீயாம்? அதான் அவனுக்கு கோபம்னு உன் அத்தான் கிட்ட சொல்லிருக்கான்”, என்றாள் காயத்ரி.
“அப்பாடி, முத்தம் கொடுத்ததை எல்லாம் அவன் சொல்லலை”, என்று நிம்மதியான ரேகா “நீங்களும் என்னை தப்பா நினைக்கிறீங்களா அக்கா?”, என்று கேட்டாள்.