அத்தியாயம் 11_2 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்
Post Views:1,579
“சே சே அப்படி எல்லாம் இல்லை ரேகா”
“நிஜமாவே எனக்கு விக்ரமை பாத்த உடனே பிடிச்சது அக்கா. இப்படி ஒருத்தரை கல்யாணம் பண்ண கொடுத்து வச்சிருக்கணும்னு நினைச்சு தான் அவரைப் பாத்தேன். என்னையே அறியாம அவர் மேல காதல் வந்துருச்சு. இப்ப வரை அது எப்படின்னு எனக்கு புரியலை”
“எனக்கு புரியுது ரேகா, ஆதி என்னை பொண்ணு பாக்க வந்தப்ப அஞ்சே அஞ்சு நிமிஷம் தான் தனியா பேசினோம். அதுலயே நான் அவர் கிட்ட என் மனசை பரி கொடுத்துட்டேன். ஆனா நீங்க கிட்டதட்ட ஒரு மணி நேரம் ஒண்ணா இருந்துருக்கீங்க? அதனால நீ அவனை லவ் பண்ணினது பெரிய விஷயம் இல்லை”
“ஆமா அக்கா. ஆனா நான் அதை உணரவே இல்லை. வீட்டுக்கு போன அப்புறம் தான் என்னால இவரைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ண முடியாதுன்னு தோணுச்சு. உடனே கல்யாணத்தை நிறுத்த நினைச்சேன். ஆனா நீங்களும் மஞ்சு அண்ணியும் விக்ரம் போட்டோ காட்டின அப்புறம் தான் எனக்கு அவர் தான் மாப்பிள்ளைன்னு தெரிஞ்சது. இல்லைன்னா கண்டிப்பா கல்யாணத்தை நிறுத்திருப்பேன் தெரியுமா? ஆனா விக்ரம் என்னை நம்பலை. நான் ஒரு சுயநலவாதின்னு சொல்லி என்னை விலக்கி வச்சிருக்கார். கூடவே அவர் என் மேல வச்சிருக்குற அதிகப்படியான காதலையும் என் கிட்ட சொல்றார். எனக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியலைக்கா. அவரோட வெறுப்பையும் காதலையும் என்னால ஒரே நேரத்துல தாங்க முடியலை. எல்லாம் என் விதி”, என்றாள் ரேகா.
அவன் கையை ஆறுதலாக அழுத்திக் கொடுத்த காயத்ரி “புரியுது ரேகா. ஆனா அதுக்காக நீ அவனை விட்டு விலகி இருந்தா எல்லாம் ஆச்சா? அவன் கூட சேந்து வாழ ஆரம்பி ரேகா. அப்புறம் எல்லாம் மாறிரும். உனக்கு புரியுது தானே?”, என்று கேட்டாள்.
“வேலை முடிஞ்ச உடனே ரெண்டு பேரும் கதை பேச ஆரம்பிச்சாச்சா? மாப்பிள்ளை வீட்ல இருந்து எல்லாரும் கிட்ட வந்துட்டாங்க போல? வீடு எந்த தெருவுன்னு போன்ல கேட்டுட்டு இருக்காங்க. ரெண்டு பேரும் வாங்க வாங்க”, என்று சொல்லிக் கொண்டே அங்கு வந்தாள் மாதவி. அதனால் இவர்கள் பேச்சும் தடை பட்டது.
அதன் பின் அங்கே அனைவருக்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை அனைவரும் வரவேற்று அமர வைத்தார்கள். மாப்பிள்ளை முகிலன், அவனது அம்மா அப்பா மூவரும் தான் வந்திருந்தார்கள்.
அதன் பின் அவர்களுக்கு காபி டிபன் கொடுப்பது என்று நேரம் சென்றது. ரேகாவும் காயத்ரியும் தான் அனைவருக்கும் டிபனும் காபியும் கொடுத்தார்கள்.. மாப்பிள்ளை முகில் அழகாக இருந்தான். ஆதிக்கும் விக்ரமுக்கும் அவனை பிடித்திருந்தது. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் நட்புடன் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
ஆனாலும் அவன் கண்கள் எப்போதடா பெண்ணைக் கண்ணில் காட்டுவார்கள் என்று தவிப்புடன் அலசியது.
“பொண்ணைக் கூட்டிட்டு வாங்க”, என்று முகிலனின் அம்மா சொன்னதும் “காயத்ரி உஷாவை கூட்டிட்டு வா மா”, என்றாள் மாதவி.
“இதோ மா”, என்று சொன்ன காயத்ரி உஷா அறைக்கு சென்று “வா உஷா உன்னைக் கூப்பிடுறாங்க. மாப்பிள்ளை ரொம்ப அழகா இருக்கார். உனக்கு பெர்பெக்ட் பொருத்தம். நீயும் நல்லா பாத்து உன் முடிவைச் சொல்லு சரியா?”, என்றாள்.
“அக்கா எனக்கு வெக்கமா இருக்கு, அங்க வர பயமாவும் இருக்கு”, என்றாள் உஷா.
“என்னை உன் அத்தான் பொண்ணு பாக்க வந்தப்ப நீ என்னை எப்படி எல்லாம் கிண்டல் பண்ணின? அதெல்லாம் ஒண்ணும் இல்லை. வா உஷா. சும்மா ஒரு வணக்கம் சொல்லப் போற? அவ்வளவு தானே? அவங்க வீட்ல எல்லாருமே நல்லா தான் பேசுறாங்க. பயம் வேண்டாம் வா”, என்று சொல்லி அவள் கை பற்றி அழைத்துச் சென்றாள்.
காயத்ரி உஷாவை அழைத்து வருவதைப் பார்த்த ரேகாவுக்கு “இவ தான் கொஞ்ச நேரம் முன்னாடி இருந்த உஷாவா?”, என்ற நினைப்பு தான் வந்தது. இவ்வளவு நேரம் அவள் அடித்த அரட்டை என்ன? இப்போது தலை குனிந்து வெட்கத்தை முகத்தில் சுமந்த படியே வருவது என்ன? ரேகாவுக்கு வியப்பாக இருந்தது.
சினிமாவில் பார்த்த நிகழ்வெல்லாம் கண் முன் நடக்கவும் ரேகாவின் ஆர்வம் அதிகமானது.
உஷா அங்கே வந்து கரம் குவித்து அனைவருக்கும் வணக்கம் சொன்னாள். முகில் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவளும் அடி கண்ணால் அவனைப் பார்த்தாள்.
இதையெல்லாம் பார்த்த ரேகா விக்ரமைத் தான் பார்த்தாள். அவனும் அந்த நேரம் அவளைப் பார்த்தான். அப்போது அவனுக்கு அவள் காலையில் பேசியது எல்லாம் நினைவில் வந்தது.
“இந்த பொண்ணு பாக்குற விஷயம் எல்லாம் எதுக்கு நமக்கு நடக்கலை?”, என்று கண்களால் கேள்வி எழுப்பினாள் ரேகா அவளுடைய விழி பேசும் மொழிகளுக்கு பதில் சொல்ல தெரியாமல் தடுமாறினான் விக்ரம்.
ஆனால் அவன் தடுமாற்றம் ஒரு நொடி தான். அடுத்த நொடி இப்போது தான் அவளை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை போல பார்க்க ஆரம்பித்து விட்டான். அவன் பார்வை மாறிப் போனதும் திணறிப் போனாள் அவள்.
”இவன் என்ன இப்படி ஒரு பார்வை பாக்குறான்?”, என்று வெட்கத்துடன் எண்ணிக் கொண்டாள். நேரம் ஆக ஆக ரேகா மேல் இருந்த காதல் விக்ரமுக்கு அதிகமானது. அவன் கவனம் முழுவதும் அவள் மேலேயே இருந்தது. முகிலன் உஷாவை சைட் அடிக்க இவனோ ரேகாவைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வையில் ரேகா தான் தவித்துப் போனாள்.
ஜீப்பில் நடந்த நிகழ்வு போல பார்வை பரிமாற்றம் இப்போதும் நடந்தது. அவன் பார்வையால் எழுந்த வெட்கம் ஒரு புறம், அவனை திருப்பி பார்க்க வேண்டும் என்ற தவிப்பு ஒரு புறம் என தடுமாறினாள்.
அவனை நிமிர்ந்து பார்ப்பதும், பின் அவன் பார்வையைத் தாங்க முடியாமல் தலை குனிவதும், பின் மீண்டும் அவன் தன்னை பார்க்கிறானா என்று பார்ப்பதுமாக தனக்குள் போராடிக் கொண்டிருந்தாள்.
விக்ரமோ அதிக தாபத்தாலும் அவள் வெட்கத்தாலும் நிலை தடுமாறிக் கொண்டிருந்தான். தனக்குள் எழுந்த காதல் தீ அவனையே எரித்து விடுமோ என்று பயந்து போனான். ஏற்கனவே அவள் மேல் பைத்தியமாக இருப்பவனுக்கு இன்று அவளது அழகு அதிகமானது போல பட்டது.
எல்லாரும் காபி குடித்து முடித்ததும் டம்ளர்களை எல்லாம் எடுத்துக் கொண்டிருந்தாள் ரேகா. அவன் பார்வையால் எழுந்த பதட்டத்தில் நெற்றி வியர்வை வழிய சேலையை இழுத்து சொருகிக் கொண்டு அவள் வேலை செய்து கொண்டிருக்க லேசாக விலகிய சேலை வழியாக தெரிந்த அவள் இடையில் அவன் பார்வை பதிந்து பதிந்து மீண்டது.
அவன் கையில் இருந்த தட்டை வாங்க அவன் அருகே வந்த ரேகா “பிளீஸ் கண்ணை அந்த பக்கம் திருப்புங்க. காயத்ரி அக்கா பாத்தா கிண்டல் பண்ணுவாங்க”, என்று அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில் முணுமுணுத்து விட்டு சென்று விட்டாள்.
அதன் பின்னர் தான் அவள் பக்கம் சென்ற பார்வையை அடக்கினான் விக்ரம். ஆனால் இன்றைய இரவை எப்படி அவளோடு கடத்துவது என்று மிகப் பெரிய கேள்விக்குறி அவனுக்குள் எழுந்தது.
அப்போது முகிலன் மற்றும் உஷாவை தனியே பேச அனுப்பினார்கள் அனைவரும்.
சிறிது நேரம் பேசி விட்டு அவர்கள் வெளியே வந்ததும் அவன் முகத்தைப் பார்த்து விட்டு “எங்களுக்கு பொண்ணை ரொம்ப புடிச்சிருக்கு டா தரணி. உங்களுக்கும் முகிலைப் புடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்”, என்று முகிலின் தந்தை சொன்னார்.
“உனக்கு புடிச்சா போதுமா? என் மருமகளுக்கு பிடிக்க வேண்டாமா? என்ன மா உஷா என் மகனை உனக்கு புடிச்சிருக்கா? மேற்கொண்டு பேசலாமா?”, என்று கேட்டார் முகிலின் தந்தை.
முகிலைப் பார்த்துக் கொண்டே தன்னுடைய சம்மதத்தை வெட்கத்துடன் சொன்னாள் உஷா.
அதன் பின் அனைவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். எட்டு மணி போல் சீக்கிரம் நாள் குறிக்கலாம் என்று சொல்லி விட்டு முகில் குடும்பம் கிளம்பிச் சென்றது.
அதன் பின் ரேகாவும் விக்ரமும் இரவு உணவை அங்கேயே முடித்து விட்டு கிளம்ப ஆதியும் காயத்ரியும் அன்று அங்கேயே தங்க போவதாக சொன்னார்கள்.
கிளம்பும் போது “அவன் கூட வாழ ஆரம்பி ரேகா. இவ்வளவு நாள் வீணாக்குனது போதும். ஆல் தி பெஸ்ட்”, என்று அவள் காதில் சொன்னாள் காயத்ரி.
அதைக் கேட்டு ரேகா முகம் சிவக்க அவர்கள் இருவரையும் விசித்திரமாக பார்த்தான் விக்ரம். போகும் போது அவளிடம் கேட்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு காரை எடுத்தான். அவனை பார்த்து சிரித்துக் கொண்டே அவன் அருகில் ஏறி அமர்ந்தாள் ரேகா.
பின் காரில் போகும் போது விக்ரம் மற்றும் ரேகா இருவருக்குள்ளும் மௌனமே நிலவியது. அழகான உணர்வுத் தளைகளால் பிணைக்கப் பட்டிருந்தனர் இருவரும்.
அங்கிருந்த மௌனத்தை தாங்க முடியாமல் பாட்டைப் போட்டு விட்டான் விக்ரம். மௌனமான நேரம்… இளம் மனதில் என்ன பாரம்… என்று அதுவும் அவன் மனதைப் போலவே பாடி வைத்தது.
அவள் அந்த பாட்டையும் அதனால் அவன் முகம் போன போக்கையும் பார்த்துச் சிரிக்க அவளை திரும்பி பார்த்தான் விக்ரம். அவளும் அந்த நேரம் தலையை சரித்து அவனைப் பார்த்தாள். அவளின் அந்த பார்வையில் கவரப் பட்டான்.
அவள் அழகை அவன் கண்கள் மீண்டும் அளவிட்டது. வீட்டில் இருந்து கிளம்பும் போது இருவருக்குள்ளும் நிகழ்ந்த நெருக்கம் நினைவில் வந்து அவனைச் சூடாக்கியது.
அவள் பாடலை ரசித்த படியே வர அவளை ஓரக்கண்ணால் அடிக்கடி ரசித்த படியே காரை செலுத்தினான் விக்ரம். வீட்டுக்கு வந்ததும் காரை அதன் இடத்தில் விட்டுவிட்டு அவன் உள்ளே செல்லும் போது ரேகா சாரதாவிடம் முகில் புகைப்படம் மற்றும் அங்கே எடுத்த மற்ற போட்டோக்களைக் காட்டி கதை சொல்லிக் கொண்டிருந்தாள். சேதுபதியும் அவர்களுடன் தான் பேசிக் கொண்டு இருந்தார்.
இவனைக் கண்டதும் “முதல்ல ரெண்டு பேரும் சாப்பிடுங்க. சாப்பிட வா விக்ரம்”, என்று சாரதா சொல்ல “நாங்க அங்கயே சாப்பிட்டோம் அத்தை”, என்றாள் ரேகா.
“ஆமாம்மா, அத்தை சாப்பிட்டு தான் போகணும்னு சொல்லிட்டாங்க. அதனால அங்க சாப்பிட்டோம் சரி நான் ரூமுக்கு போறேன். குட் நைட் மா, குட் நைட் பா”, என்று சொல்லி விட்டு அறைக்குச் சென்றான்.
“நீயும் போய் தூங்கு மா. நேரம் ஆச்சு பாரு”, என்று சொல்லி ரேகாவையும் அறைக்கு அனுப்பி வைத்தாள் சாரதா.
ரேகாவுக்கு மேலே செல்வதற்கே தயக்கமாக இருந்தது. இன்று முழுவதும் இருந்த அவனுடைய பார்வை மாற்றம் அவளுக்குள் பல எதிர்பார்ப்புக்ளை உருவாக்கியிருந்தது.
அதனால் லேசாக எழுந்த தடுமாற்றத்துடன் தான் அறைக்குள் சென்றாள். அவள் உள்ளே சென்ற போது அவன் குளிக்கச் சென்றிருந்தான். குளியல் அறைக்குள் இருந்த விக்ரமுக்கோ இன்று அவனது மனம் அவளை அதிகமாக நாடுவது புரிந்தது.
அவன் குளித்து முடித்து வெளியே வந்த போது அவள் அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் குளியல் அறைக்குள் செல்லப் பார்த்தாள். அவளது குனிந்த தலையைக் கண்டதும் தான் காயத்ரி அவளிடம் எதுவோ சொன்னது அவனுக்கு நினைவில் வந்தது.
அதை அறிய எண்ணி “ரேகா”, என்று அழைத்தான்.
“ம்ம்”, என்று சொல்லி அவனைத் திரும்பி பார்த்தாள்.
“உன் கிட்ட ஒண்ணு கேக்கணும்”
“என்ன கேக்கணும்?”
“நாம அண்ணி வீட்ல இருந்து கிளம்பும் போது அண்ணி உன் கிட்ட என்ன சொன்னாங்க? அப்ப உன் முகம் வித்தியாசமா மாறுச்சு ஏன்?”, என்று அவன் கேட்டதும் இப்போதும் அவள் முகம் சிவந்து விட்டது.
“இதோ அப்பவும் இப்படி தான் உன் முகம் மாறுச்சு. இப்பவும் அப்படி தான் இருக்கு. அப்படி என்ன சொன்னாங்க, உன் கிட்ட?”, என்று மீன்றும் ஆர்வமாக கேட்டான்.
தன்னை நிலைப் படுத்த முடியாமல் போராடியவள் “பாத்து போங்கன்னு தான் சொன்னாங்க. வேற ஒண்ணுமே சொல்லலை”, என்று வெட்கத்தோடு முணுமுணுத்தாள்.
அவள் வெட்கத்துடன் நிற்க அவனால் அவள் சொன்னதை சத்தியமாக நம்பத் தான் முடியவில்லை. அவள் அங்கிருந்து நகரப் பார்க்க அவன் அவள் கரத்தை பற்றினான்.
“நீ எதுவோ பொய் சொல்ற? என்ன சொன்னாங்கன்னு சொல்லு ரேகா, பிளீஸ்”, என்றதும் அவன் கையை விட்டு விலகி அவனுக்கு முதுகு காட்டி நின்றாள். அவன் அவளை நெருங்கி நின்று “ரேகா, என்னைப் பார்”, என்று சொல்லி அவள் தோள்களில் கையை வைத்து திருப்பினான். அவனை திரும்பி பார்த்து விட்டு தடுமாற்றத்துடன் பின்னால் நகர்ந்தாள். சுவரில் சாய்ந்த படி அவள் நிற்க அவனோ அவளுக்கு இரு புறமும் கையை நீட்டி அவளை தன்னுடைய கைக்குள் சிறை பிடித்தான்.
“என்ன?.. என்ன பண்ணுறீங்க? நான் குளிக்கணும்., நகருங்க”, என்று மெதுவான குரலில் சொன்னாள் ரேகா.
“அப்படின்னா அண்ணி என்ன சொன்னாங்கன்னு சொல்லு”, என்று சிரிப்புடன் கேட்டான் விக்ரம்.
“அதான் சொல்லிட்டேனே? பிளீஸ் நகருங்க”
“அது உண்மை இல்லைன்னு உன் முகத்தைப் பாத்தாலே தெரியுது. என்னன்னு சொல்லு ரேகா”
“ஒண்ணுமே இல்லை விக்ரம். பிளீஸ் நகருங்க. எனக்கு என்னவோ போல இருக்கு”
“நீ சொல்லாம உன்னை விட மாட்டேன். ஆமா என்னவோ போல இருக்குனு சொன்னீயே? எப்படி இருக்கு? அதையாவது சொல்லு பிளீஸ்”, என்று அவன் அவளை இன்னும் நெருங்கி நின்று கேட்க அவனுடைய மூச்சு காற்று அவள் முகத்தில் வந்து மோதியது.
அவன் நெஞ்சில் சாயச் சொல்லி அவள் உணர்வுகள் கெஞ்ச அவன் அருகாமை அவளுக்கு அவஸ்தையாக இருந்தது.